||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 9 - நாகணையானைப் பாடு
திருப்பல்லாண்டு - ஒண்பதாம் பாசுரம்
உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை*
உடுத்து கலத்ததுண்டு*
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன*
சூடும் இத்தொண்டர்களோம்*
விடுத்த திசைக் கருமம் திருத்தித்*
திருவோணத் திருவிழவில்*
படுத்த பைந் நாகணைப் பள்ளி கொண்டானுக்குப்*
பல்லாண்டு கூறுதுமே|
இதில் வாழாட்பட்டு பாசுரத்திலே அழைத்து எந்தை தந்தை பாசுரத்திலே வந்து சேர்ந்த பகவத் கைங்கர்யார்த்தியுடன் கூடித் திருப்பல்லாண்டு பாடுகிறார்.
- உடுத்து - தேவரீர் அரையில் சாத்திக் கொண்டு
- களைந்த - கழித்து விட்ட
- நின் பீதக ஆடை - தேவரீருடைய பீதாம்பரத்தை
- உடுத்து - உடுத்திக் கொண்டும்
- கலத்தது - தேவர் அமுது செய்த பாத்திரத்தில் மிகுந்திருப்பதை
- உண்டு - புசித்தும்
- தொடுத்த - தொடுக்கப்பட்டுள்ள
- துழாய் மலர் - திருத்துழாய் மலர் மாலைகளை
- சூடி களைந்தன - தேவர் சாத்திக் கொண்டு களைந்தவைகளான
- சூடும் - சூட்டிக் கொள்ளுகிறவர்களான
- இத்தொண்டர்களோம் - இப்படிப்பட்ட தாஸர்களான நாங்கள்
- விடுத்த திசை - தேவரீர் ஏவியனுப்பிய திசையிலுள்ள;
- கருமம் - ஆக வேண்டிய காரியங்களை
- திருத்தி - ஒழுங்காகச் செய்து;
- திரு ஓணம் திருவிழவில் - ச்ரவணம் என்னும் திருநாளிலே
- படுத்த - கீழே பரப்பிய
- பை நாகம் அணை - படத்தையுடைய பாம்பாகிற படுக்கையில்
- பள்ளி கொண்டானுக்கு - சயனித்திருக்கிற தேவரீருக்கு
- பல்லாண்டு கூறுதுமே - மங்களாசாஸநம் செய்வோம்
இப்பாசுரம் பன்மை சொல்லில் அமைந்துள்ளது. எம்பெருமானிடம் கைங்கர்யம் செய்பவர்கள் எல்லாம் சேர்ந்து எம்பெருமானை குறித்து பல்லாண்டு பாடுகிறார்கள். நாங்கள் உன்னுடைய திருவரையில் உடுத்திக் களைந்த திருப்பீதாம்பரத்தை உடுத்தும், நீ அமுது செய்து மீதம் இருக்கும் உன் ப்ரஸாதத்தை உண்டும், உன்னால் சூடிக் களையப்பட்ட திருத்துழாய் மாலையைச் சூடியும், அடியார்களாக இருப்போம். ஏவின திசையில் உள்ள கார்யங்களை நன்றாகச் செய்யகூடிய, பணைத்த பணங்களை உடைய ஆதிசேஷன் என்னும் படுக்கையிலே சயனித்துக் கொண்டிருக்கும் உனக்கு, திருவோணம் என்னும் திருநாளில் திருப்பல்லாண்டு பாடுவோம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment