||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
027. திருக்காவளம்பாடி (திருநாங்கூர்)
இருபத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10
001. திவ்ய ப்ரபந்தம் - 1298 - கோபால ஸ்வாமி விஷயம்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - முதலாம் பாசுரம்
தா அளந்து உலகம் முற்றும்* தட மலர்ப் பொய்கை புக்கு*
நா வளம் நவின்று அங்கு ஏத்த* நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்*
மா வளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும் நாங்கை*
காவளம்பாடி மேய* கண்ணனே களை கண் நீயே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1299 - மாவலி வேள்வியில் யாசித்தவன் ஊர் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
மண் இடந்து ஏனம் ஆகி* மாவலி வலி தொலைப்பான்*
விண்ணவர் வேண்டச் சென்று* வேள்வியில் குறை இரந்தாய்*
துண் என மாற்றார் தம்மைத்* தொலைத்தவர் நாங்கை மேய*
கண்ணனே காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1300 - சுக்கிரீவனுக்கு அரசு அளித்தவன் இடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
உருத்து எழு வாலி மார்வில்* ஒரு கணை உருவ ஓட்டி*
கருத்து உடைத் தம்பிக்கு* இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய்*
பருத்து எழு பலவும் மாவும்* பழம் விழுந்து ஒழுகும் நாங்கை*
கருத்தனே காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1301 - விபீஷணனுக்கு அரசு அளித்தவன் வாழும் இடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - நான்காம் பாசுரம்
முனை முகத்து அரக்கன் மாள* முடிகள் பத்து அறுத்து வீழ்த்து*
ஆங்கு அனையவற்கு இளையவற்கே* அரசு அளித்து அருளினானே*
சுனைகளில் கயல்கள் பாயச்* சுரும்பு தேன் நுகரும் நாங்கை*
கனை கழல் காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1302 - காளியன் மீது நடனமாடியவன் தங்கும் இடம்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பட அரவு உச்சி தன் மேல்* பாய்ந்து பல் நடங்கள் செய்து*
மடவரல் மங்கை தன்னை* மார்வகத்து இருத்தினானே*
தட வரை தங்கு மாடத்* தகு புகழ் நாங்கை மேய*
கடவுளே காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1303 - பாரதப் போர் முடித்தவன் வாழ்விடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
மல்லரை அட்டு மாளக்* கஞ்சனை மலைந்து கொன்று*
பல் அரசு அவிந்து வீழப்* பாரதப் போர் முடித்தாய்*
நல் அரண் காவின் நீழல்* நறை கமழ் நாங்கை மேய*
கல் அரண் காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1304 - பாண்டவ தூதனானவன் உறைவிடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
மூத்தவற்கு அரசு வேண்டி* முன்பு தூது எழுந்தருளி*
மாத்து அமர் பாகன் வீழ* மத கரி மருப்பு ஒசித்தாய்*
பூத்து அமர் சோலை ஓங்கிப்* புனல் பரந்து ஒழுகும் நாங்கை*
காத்தனே காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1305 - ஸத்ய பாமைக்காகக் கற்பக மரம் கொணர்ந்தவன் ஊர்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
ஏவு இளங் கன்னிக்கு ஆகி* இமையவர் கோனைச் செற்று*
கா வளம் கடிது இறுத்துக்* கற்பகம் கொண்டு போந்தாய்*
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த* புரந்தரன் செய்த நாங்கை*
காவளம்பாடி மேய* கண்ணனே களை கண் நீயே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1306 - திருக்காவளந்தண் பாடியானே நமக்குக் கதி
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
சந்தம் ஆய்ச் சமயம் ஆகிச்* சமய ஐம் பூதம் ஆகி*
அந்தம் ஆய் ஆதி ஆகி* அரு மறை அவையும் ஆனாய்*
மந்தம் ஆர் பொழில்கள்தோறும்* மட மயில் ஆலும் நாங்கை*
கந்தம் ஆர் காவளம் தண் பாடியாய்* களை கண் நீயே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1307 - அரசர்க்கு அரசர் ஆவர்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
மா வளம் பெருகி மன்னும்* மறையவர் வாழும்* நாங்கைக்
காவளம்பாடி மேய* கண்ணனைக் கலியன் சொன்ன*
பா வளம் பத்தும் வல்லார்* பார்மிசை அரசர் ஆகிக்*
கோ இள மன்னர் தாழக்* குடை நிழல் பொலிவர் தாமே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்