||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
015. திருச்சேறை
பஞ்ச ஸார க்ஷேத்ரம் - கும்பகோணம்
பதினைந்தாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 13
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1578 - சாரநாதனைத் தொழுவாரே என் தலைவர்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்
கண் சோர வெம் குருதி வந்து இழிய* வெம் தழல்போல் கூந்தலாளை*
மண் சேர முலை உண்ட மா மதலாய்* வானவர் தம் கோவே என்று*
விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு* மணி மாடம் மல்கு*
செல்வத் தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்*
காண்மின் என் தலை மேலாரே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1579 - சாரநாதனைத் தொழுவாரே என் மனத்தில் உள்ளார்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
அம் புருவ வரி நெடுங் கண்* அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல்*
கொம்பு உருவ விளங்கனி மேல்*
இளங் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்*
வம்பு அலரும் தண் சோலை* வண் சேறை வான் உந்து கோயில் மேய*
எம் பெருமான் தாள் தொழுவார்* எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1580 - சாரநாதன் அடியார்களே தேவர்களாவர்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
மீது ஓடி வாள் எயிறு மின் இலக* முன் விலகும் உருவினாளை*
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த* கைத்தலத்தா என்று நின்று*
தாதோடு வண்டு அலம்பும்* தண் சேறை எம் பெருமான் தாளை ஏத்தி*
போதோடு புனல் தூவும் புண்ணியரே* விண்ணவரில் பொலிகின்றாரே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1581 - சாரநாதன் பக்தகளுடன் தான் இருப்பேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம்
தேர் ஆளும் வாள் அரக்கன்* தென் இலங்கை வெம் சமத்துப் பொன்றி வீழ*
போர் ஆளும் சிலை அதனால்* பொரு கணைகள் போக்குவித்தாய் என்று*
நாளும் தார் ஆளும் வரை மார்பன்* தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும்*
பேராளன் பேர் ஓதும் பெரியோரை* ஒருகாலும் பிரிகிலேனே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1582 - சாரநாதன் அடியார்களே எனக்கு இனியவர்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
வந்திக்கும் மற்றவர்க்கும்* மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன்*
முந்திச் சென்று அரி உரு ஆய்*
இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்*
சந்தப் பூ மலர்ச் சோலைத்* தண் சேறை எம் பெருமான் தாளை*
நாளும் சிந்திப்பார்க்கு என் உள்ளம்* தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1583 - சாரநாதன் திருவடிகளே எனக்குத் துணை
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம்
பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த* பண்பாளா என்று நின்று*
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால்*
துணை இலேன் சொல்லுகின்றேன்*
வண்டு ஏந்தும் மலர்ப் புறவில்* வண் சேறை எம் பெருமான் அடியார் தம்மை*
கண்டேனுக்கு இது காணீர்* என் நெஞ்சும் கண் இணையும் களிக்கும் ஆறே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1584 - சாரநாதன் அடியார்கட்கே என் அன்பு உரியது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - ஏழாம் பாசுரம்
பை விரியும் வரி அரவில்* படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்*
மை விரியும் மணி வரை போல்* மாயவனே என்று என்றும் வண்டு ஆர் நீலம்**
செய் விரியும் தண் சேறை எம் பெருமான்* திரு வடியைச் சிந்தித்தேற்கு*
என் ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம்* என் அன்பு தானே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1585 - சாரநாதனின் அடியார்க்கு அடியார்க்குத் துன்பமே இல்லை
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - எட்டாம் பாசுரம்
உண்ணாது வெம் கூற்றம்* ஓவாத பாவங்கள் சேரா*
மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்*
மென் தளிர்போல் அடியினானை*
பண் ஆர வண்டு இயம்பும்*
பைம் பொழில் சூழ் தண் சேறை அம்மான் தன்னை*
கண் ஆரக் கண்டு உருகிக்* கை ஆரத் தொழுவாரைக் கருதுங்காலே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1586 - சாரநாதன் பக்தர்கட்கே என் உள்ளம் உருகும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
கள்ளத் தேன் பொய் அகத்தேன் ஆதலால்* போது ஒரு கால் கவலை என்னும்*
வெள்ளத்தேற்கு என் கொலோ?*
விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால் தள்ள*
தேன் மணம் நாறும்* தண் சேறை எம் பெருமான் தாளை*
நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர்* என் உள்ளம் உருகும் ஆறே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1587 - யாவரும் சாரநாதப் பெருமாளையே தொழுமின்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - பத்தாம் பாசுரம்
பூ மாண் சேர் கருங் குழலார் போல் நடந்து* வயல் நின்ற பெடையோடு*
அன்னம் தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்*
தண் சேறை அம்மான் தன்னை*
வா மான் தேர்ப் பரகாலன்* கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்*
தூ மாண் சேர் பொன் அடி மேல் சூட்டுமின்*
நும் துணைக் கையால் தொழுது நின்றே|
011. திவ்ய ப்ரபந்தம் - 1853 - திருச்சேறையும் திருக்குடந்தையும்
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
வானை ஆர் அமுதம்* தந்த வள்ளலை*
தேனை நீள் வயல்* சேறையில் கண்டு போய்*
ஆனை வாட்டி அருளும்* அமரர் தம் கோனை*
யாம் குடந்தைச் சென்று காண்டுமே|
012. திவ்ய ப்ரபந்தம் - 2707 - தலைவி சென்று தேடிய திவ்ய தேசங்கள்
சிறிய திருமடல் - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (35)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்*
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்*
கார் ஆர் குடந்தை கடிகை கடல் மல்லை*
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை*
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்*
013. திவ்ய ப்ரபந்தம் - 2772 - எம்பெருமான் தங்கியிருக்கும் திவ்ய தேசங்களை அவள் புகழ்ந்து வணங்குகிறாள்
பெரிய திருமடல் - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (60)
தாமரை மேல் மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை*
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை*
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை*
மன்னிய தண் சேறை வள்ளலை|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்