||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
001. திருவரங்கம்
ஸ்ரீரங்கம் - திருச்சி
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 249 - 6
தொண்டரடிப்பொடி ஆழ்வார்
089. திவ்ய ப்ரபந்தம் - 872 - அரங்கனே! நின் நாமத்தைக் கற்றேன்
திருமாலை - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம் (1)
காவலில் புலனை வைத்துக்* கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து*
நாவலிட்டு உழி தருகின்றோம்* நமன் தமர் தலைகள் மீதே*
மூவுலகு உண்டுமிழ்ந்த* முதல்வ நின் நாமம் கற்ற*
ஆவலிப்புடைமை கண்டாய்* அரங்கமா நகருளானே| (2)
090. திவ்ய ப்ரபந்தம் - 873 - நின் பெயரைச் சொல்வதே பேரின்பம்
திருமாலை - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (2)
பச்சை மாமலை போல் மேனி* பவளவாய் கமலச் செங்கண்*
அச்சுதா! அமரர் ஏறே!* ஆயர் தம் கொழுந்தே! என்னும்*
இச்சுவை தவிர யான் போய்* இந்திர லோகம் ஆளும்*
அச்சுவை பெறினும் வேண்டேன்* அரங்கமா நகருளானே| (2)
091. திவ்ய ப்ரபந்தம் - 874 - பிறப்பே எனக்கு வேண்டாம்
திருமாலை - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் (3)
வேத நூல் பிராயம் நூறு* மனிசர் தாம் புகுவரேலும்*
பாதியும் உறங்கிப் போகும்* நின்றதில் பதினை ஆண்டு*
பேதை பாலகன் அது ஆகும்* பிணி பசி மூப்புத் துன்பம்*
ஆதலால் பிறவி வேண்டேன்* அரங்கமா நகருளானே|
092. திவ்ய ப்ரபந்தம் - 875 - அரங்கனை அடைந்தபின் அல்லலே இல்லை
திருமாலை - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம் (4)
மொய்த்த வல் வினையுள் நின்று* மூன்றெழுத்துடைய பேரால்*
கத்திர பந்தும் அன்றே* பராங்கதி கண்டு கொண்டான்*
இத்தனை அடியர் ஆனார்க்கு* இரங்கும் நம் அரங்கன் ஆய*
பித்தனைப் பெற்றும் அந்தோ!* பிறவியுள் பிணங்கு மாறே|
093. திவ்ய ப்ரபந்தம் - 876 - அரங்கன் அடியராகி ஆடிப் பாடுக
திருமாலை - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (5)
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்* பெரியதோர் இடும்பை பூண்டு*
உண்டிராக் கிடக்கும் போது* உடலுக்கே கரைந்து நைந்து*
தண் துழாய் மாலை மார்பன்* தமர்களாய்ப் பாடியாடி*
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத்* தொழும்பர் சோறு உகக்கு மாறே|
094. திவ்ய ப்ரபந்தம் - 877 - அரங்கனாக்கு அடிமை ஆகுங்கள்
திருமாலை - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (6)
மறம் சுவர் மதிளெடுத்து* மறுமைக்கே வெறுமை பூண்டு,*
புறம் சுவர் ஓட்டை மாடம்* புரளும் போது அறிய மாட்டீர்,*
அறம் சுவராகி நின்ற* அரங்கனார்க்கு ஆட் செய்யாதே*
புறம் சுவர் கோலம் செய்து* புள் கௌவக் கிடக்கின்றீரே|
095. திவ்ய ப்ரபந்தம் - 878 - இலங்கையை அழித்த தேவனே தேவன்
திருமாலை - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (7)
புலை அறம் ஆகி நின்ற* புத்தொடு சமணமெல்லாம்,*
கலையறக் கற்ற மாந்தர்* காண்பரோ கேட்பரோ தாம்*
தலை அறுப்புண்டும் சாவேன்* சத்தியம் காண்மின் ஐயா*
சிலையினால் இலங்கை செற்ற* தேவனே தேவன் ஆவான்|
096. திவ்ய ப்ரபந்தம் - 879 - பகவானைப் பழிப்பவர் அழியத் தான் வேண்டும்
திருமாலை - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம் (8)
வெறுப்பொடு சமணர் முண்டர்* விதி இல் சாக்கியர்கள் நின் பால்*
பொறுப்பரி யனகள் பேசில்* போவதே நோயதாகி*
குறிப்பெனக் கடையுமாகில்* கூடு மேல் தலையை ஆங்கே*
அறுப்பதே கருமம் கண்டாய்* அரங்கமா நகருளானே|
097. திவ்ய ப்ரபந்தம் - 880 - கண்ணன் கழல்களைப் பணிக
திருமாலை - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (9)
மற்றுமோர் தெய்வம் உண்டே* மதியிலா மானிடங்காள்*
உற்ற போதன்றி நீங்கள்* ஒருவனென்று உணர மாட்டீர்*
அற்றம் மேல் ஒன்றறியீர்* அவனல்லால் தெய்வமில்லை*
கற்றினம் மேய்த்த எந்தை* கழலிணை பணிமின் நீரே|
098. திவ்ய ப்ரபந்தம் - 881 - உலகம் உய்யத் திருவரங்கத்தைக் காட்டினான்
திருமாலை - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (10)
நாட்டினான் தெய்வமெங்கும்* நல்லதோர் அருள் தன்னாலே*
காட்டினான் திருவரங்கம்* உய்பவர்க்கு உய்யும் வண்ணம்*
கேட்டிரே நம்பி மீர்காள்* கெருட வாகனனும் நிற்க*
சேட்டை தன் மடியகத்து* செல்வம் பார்த்திருக் கின்றீரே|
099. திவ்ய ப்ரபந்தம் - 882 - காலத்தை வீணாக்காமல் அரங்களை அழையுங்கள்
திருமாலை - இரண்டாம் திருமொழி - முதலாம் பாசுரம் (11)
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து* உலகங்கள் உய்ய*
செருவிலே அரக்கர் கோனைச்* செற்ற நம் சேவகனார்*
மருவிய பெரிய கோயில்* மதில் திருவரங்கம் என்னா*
கருவிலே திருவிலாதீர்!* காலத்தைக் கழிக்கின்றீரே|
100. திவ்ய ப்ரபந்தம் - 883 - அரங்கம் என்னாதவர்க்கு இரங்குகிறேன்
திருமாலை - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் (12)
நமனும் முற்கலனும் பேச* நரகில் நின்றார்கள் கேட்க*
நரகமே சுவர்க்கம் ஆகும்* நாமங்கள் உடையன் நம்பி*
அவனது ஊர் அரங்கம் என்னாது* அயர்த்து வீழ்ந்தளிய மாந்தர்*
கவலையுள் படுகின்றார் என்று* அதனுக்கே கவல்கின்றேனே|
101. திவ்ய ப்ரபந்தம் - 884 - அரங்கனை நினைத்தால் நரகம் அழிந்து விடும்
திருமாலை - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம் (13)
எறியும் நீர் வெறி கொள் வேலை* மாநிலத்து உயிர்கள் எல்லாம்*
வெறி கொள் பூந்துளவ மாலை* விண்ணவர் கோனை ஏத்த*
அறிவிலா மனிசர் எல்லாம்* அரங்கம் என்றழைப்பர் ஆகில்*
பொறியில் வாழ் நரகம் எல்லாம்* புல்லெழுந்து ஒழியும் அன்றே?
102. திவ்ய ப்ரபந்தம் - 885 - கடவுளைத் தொழாதவர்க்குச் சோறு தராதீர்
திருமாலை - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம் (14)
வண்டினம் முரலும் சோலை* மயிலினம் ஆலும் சோலை*
கொண்டல் மீதணவும் சோலை* குயிலினம் கூவும் சோலை*
அண்டர் கோன் அமரும் சோலை* அணி திருவரங்கம் என்னா*
மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி* நாய்க்கு இடுமின் நீரே| (2)
103. திவ்ய ப்ரபந்தம் - 886 - அழகன் வாழும் ஊர் அரங்கம்
திருமாலை - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (15)
மெய்யர்க்கே மெய்யன் ஆகும்* விதியிலா என்னைப் போல*
பொய்யர்க்கே பொய்யன் ஆகும்* புள் கொடியுடைய கோமான்*
உய்யப்போம் உணர்வினார் கட்கு* ஒருவன் என்று உணர்ந்த பின்னை*
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும்* அழகனூர் அரங்கம் அன்றே?
104. திவ்ய ப்ரபந்தம் - 887 - என்னை ஆட்கொண்டவன் அரங்கன்
திருமாலை - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (16)
சூதனாய்க் கள்வனாகித்* தூர்த்தரோடு இசைந்த காலம்*
மாதரார் கயல் கண் என்னும்* வலையுள் பட்டழுந்து வேனை*
போதரே என்று சொல்லி* புந்தியுள் புகுந்து தன்பால்*
ஆதரம் பெருக வைத்த* அழகனூர் அரங்கம் அன்றே?
105. திவ்ய ப்ரபந்தம் - 888 - அரங்கனைக் கண்ட களிப்பே களிப்பு!
திருமாலை - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (17)
விரும்பி நின்றேத்த மாட்டேன்* விதியிலேன் மதி ஒன்றில்லை*
இரும்பு போல் வலிய நெஞ்சம்* இறை இறை உருகும் வண்ணம்*
சுரும்பமர் சோலை சூழ்ந்த* அரங்கமா கோயில் கொண்ட*
கரும்பினைக் கண்டு கொண்டு* என் கண்ணினை களிக்கு மாறே|
106. திவ்ய ப்ரபந்தம் - 889 - ஆனந்தக் கண்ணீர் வருகிறதே!
திருமாலை - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம் (18)
இனி திரைத் திவலை மோத* எறியும் தண் பரவை மீதே*
தனி கிடந்து அரசு செய்யும்* தாமரைக் கண்ணன் எம்மான்*
கனியிருந் தனைய செவ்வாய்க்* கண்ணனைக் கண்ட கண்கள்*
பனியரும்பு உதிருமாலோ* என் செய்கேன் பாவியேனே|
107. திவ்ய ப்ரபந்தம் - 890 - பள்ளி கொண்டானைப் பார்த்தால் உடல் உருகும்
திருமாலை - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19)
குட திசை முடியை வைத்துக்* குண திசை பாதம் நீட்டி*
வட திசை பின்பு காட்டித்* தென் திசை இலங்கை நோக்கி*
கடல் நிறக் கடவுள் எந்தை* அரவணைத் துயிலுமா கண்டு*
உடலெனக்கு உருகுமாலோ* என் செய்கேன் உலகத்தீரே| (2)
108. திவ்ய ப்ரபந்தம் - 891 - பள்ளி கொண்ட காட்சியே காட்சி!
திருமாலை - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (20)
பாயும் நீர் அரங்கம் தன்னுள்* பாம்பணைப் பள்ளி கொண்ட*
மாயனார் திரு நன் மார்வும்* மரகத உருவும் தோளும்*
தூய தாமரைக் கண்களும்* துவர் இதழ் பவள வாயும்*
ஆய சீர் முடியும் தேசும்* அடியரோர்க்கு அகலலாமே?
109. திவ்ய ப்ரபந்தம் - 892 - மனமே! சஞ்சலம் எதற்கு?
திருமாலை - மூன்றாம் திருமொழி - முதலாம் பாசுரம் (21)
பணிவினால் மனமது ஒன்றிப்* பவள வாய் அரங்கனார்க்குத்*
துணிவினால் வாழ மாட்டாத்* தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய்*
அணியனார் செம்பொனாய* அருவரை அனைய கோயில்*
மணியனார் கிடந்தவாற்றை* மனத்தினால் நினைக்கலாமே?
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்