About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 26 August 2023

லீலை கண்ணன் கதைகள் - 28

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணனும் தன் நண்பர்களும்|

தம் நண்பர்களைக் காப்பாற்றி விட்டு கிருஷ்ணன் அவர்களை யமுனை நதிக் கரைக்கு அழைத்து வந்தான். அவனுக்கு மிகவும் பசியாக இருந்தது. ஆதலால் அவன் நண்பர்களை பார்த்து, "இதோ பாருங்கள், உச்சிப் பொழுது ஆகி விட்டது. நாம் எல்லோரும் பசியாக இருக்கிறோம். இங்கேயே உட்கார்ந்து நாம் கொண்டு வந்திருக்கும் உணவைச் சாப்பிடுவோம்" என்று சொன்னான். கிருஷ்ணன் சொல்லுக்கு ஏது மறுப்பு! எல்லாச் சிறுவர்களும் அவன் சொன்னதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள். கன்றுகளைத் தண்ணீர் குடிக்க விட்டு பிறகு நல்ல புல் இருந்த இடத்தில் மேய விட்டார்கள். பிறகு கிருஷ்ணன் நடுவில் உட்கார அவனைச் சுற்றி அவனுடைய நண்பர்கள் உட்கார்ந்து கொண்டு, எல்லோரும் தங்கள் உணவுப் பொட்டலங்களைப் பிரித்தார்கள்.


பிறகு ஒருவரை ஒருவர் வேடிக்கையாகப் பரிகசித்து கொண்டு உற்சாகமாகச் சாப்பிட்டார்கள். பார்ப்பதற்கு எவ்வளவு எழிலான காட்சி! நாம் கிருஷ்ணனை படங்களாகவும், விக்கிரங்களாகவும் வடித்து நிவேதனம் செய்கிறோம். ஆனால் இந்தச் சிறுவர்கள் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்! உயிருள்ள கிருஷ்ணனைத் தங்களுடன் உட்கார வைத்துக் கொள்வதற்கு! கிருஷ்ணன் பார்க்க எப்படி இருந்தான்? அவன் தன் இடையில் ஆடைக்கும், வயிற்ருக்கும் நடுவே புல்லாங்குழலை செருகி வைத்திருந்தான். அவன் மஞ்சள் பட்டாடை உடுத்திருந்தான். அவனுடைய இடது கக்கத்தில் கொம்பினாலான ஊதலையும், இடக் கையில் ஒரு சிறு கழியையும் வைத்திருந்தான். வலக் கையில் வெள்ளை வெளேரென்று தயிர் சாத உருண்டைகள் இருந்தன. அவன் தன் பரிகாச வார்த்தைகளால் அங்கிருந்த சிறுவர்களைச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான். கிருஷ்ணனின் பரிகாச வார்த்தைகளைக் கேட்டுச் சிரித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவர்களுக்குத் தங்கள் கன்றுகளைப் பற்றிய நியாபகம் இருக்கவில்லை.


பக்கத்தில் மேய்ந்துக் கொண்டிருந்த கன்றுகள் மெல்ல வெகு தூரம் சென்று விட்டன; அடர்ந்த காட்டை அடைந்து விட்டன. திடீரென்று ஒரு சிறுவன் கன்றுகள் காணவில்லை என்பதைக் கண்டான். "கன்றுகள் எங்கே? அவை அடர்ந்த காட்டுக்குள் சென்று விட்டன என்று தோன்றுகிறது. காட்டு மிருங்கங்கள் அவற்றை விழுங்கி விடுமே!" என்று கத்தினான். இதை கேட்டு எல்லாச் சிறுவர்களும் கவலைப்படத் தொடங்கினார்கள். ஆனால் கிருஷ்ணன் அவர்களைச் சமாதானப் படுத்தினான். "கவலைப்படாதீர்கள் இந்த சிறிய விஷயத்திற்காக, சாப்பிடுவதை நிறுத்தாதீர்கள். நான் போய் நொடியில் கன்றுகளைத் தேடி வருகிறேன்" என்று சொன்னான். கையில் தயிர்ச் சாதத்தை வைத்துக் கொண்டே கிருஷ்ணன் கன்றுகளைத் தேடப் புறப்பட்டான். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 006 - திருப்பேர் நகர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

006. திருப்பேர் நகர் 
கோவிலடி – திருச்சி
ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ அப்பக்குடத்தான் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ இந்திராதேவி தாயார் ஸமேத ஸ்ரீ அப்பக்குடத்தான் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: அப்பக்குடத்தான்

  • பெருமாள் உற்சவர்: அப்பால ரங்கநாதர்
  • தாயார் மூலவர்: இந்திராதேவி
  • தாயார் உற்சவர்: கமலவல்லி
  • திருமுக மண்டலம் திசை: மேற்கு
  • திருக்கோலம்: புஜங்க சயனம்
  • புஷ்கரிணி: இந்திர
  • தீர்த்தம்: திருக்காவேரி, கொள்ளிடம்
  • விமானம்: இந்திர
  • ஸ்தல விருக்ஷம்: புரஷ
  • ப்ரத்யக்ஷம்: உபமன்யு, பராசரர்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 4 ஆழ்வார்கள்
  • பாசுரங்கள்: 33

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

உபமன்யுவிடமிருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு "அப்பக்குடத்தான்' என்ற திருநாமம் ஏற்பட்டது. இப்பெருமாளின் வலது கை ஒரு அப்பக்குடத்தை அணைத்த வண்ணம் உள்ளது. இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்க்கண்டேயருக்கு எம பயம் போக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம், பாவம் போக்கியும் அருளிய தலம். மிகவும் பழமையான இத்தலம் ஸ்ரீரங்கத்திற்கும் முன்னதாக ஏற்பட்டது என்றும், அதனால் தான் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஆதியாக அடியெடுத்து வைத்த தலம் என்பதால் "கோவிலடி' எனப்பட்டது என்றும் கூறுவர். நம்மாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்த தலம் இது. அவர் இப்பெருமாளை பாடி விட்டுத் தான் மோட்சத்திற்கு சென்றார். எனவே இத்தலம் வந்து வழிபடுவோருக்கு வைகுண்ட வாசம் நிச்சயம் என்பது ஐதீகம். பெருமாள் மேற்கு பார்த்தும், தாயார் கிழக்கு பார்த்தும் "தம்பதி ஸமேத பெருமாளாக' அருள் பாலிக்கிறார். 

திருமங்கையாழ்வார் இவரை மங்களாசாசனம் செய்து விட்டு திருவெள்ளறை செல்கிறார். அப்பக்குடத்தான் தொடர்ந்து அங்கும் செல்கிறார். இதைக் கண்ட திருமங்கையாழ்வார், திருவெள்ளறையில் வைத்து மீண்டும் இவரை மங்களாசாசனம் செய்கிறார்.

பெருமாளின் "பஞ்சரங்க தலம்' என்று சொல்லக் கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று.

  • 1. ஆதி ரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்)
  • 2. அப்பால ரங்கம் - திருப்பேர்நகர் (கோவிலடி)
  • 3. மத்திய ரங்கம் - ஸ்ரீரங்கம்
  • 4. சதுர்த்த ரங்கம் - கும்பகோணம்
  • 5. பஞ்ச ரங்கம் - இந்தளூர் (மயிலாடுதுறை)

இந்த பஞ்ச ரங்க வரிசையில் பார்த்தால் கோவிலடி ஸ்ரீரங்கத்திற்கும் முற்பட்டது என விளங்கும்.

உபமன்யு என்ற மன்னன் கோபக்கார துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகி, தன் பலமிழந்தான். தன்னை மன்னித்து சாப விமோசனம் தர வேண்டி துர்வாசரிடம் மன்றாடினான். அதற்கு துர்வாச முனிவர், 'மன்னா! பலசவனம் எனப்படும் இத்தலத்தில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் உனது சாபம் தீரும்', என்றார். இதன்படி மன்னன் கோயிலின் அருகிலேயே ஒரு அரண்மனை கட்டி அன்னதானம் செய்து வந்தான். இந்த அன்னதானம் நீண்ட நாள் நடந்தது. ஒரு நாள் வைகுண்ட நாதனான ஸ்ரீமன் நாராயணன், வயதான அந்தணர் வேடத்தில் இங்கு வந்து அன்னம் கேட்க, அவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. மன்னனை சோதனை செய்ய நினைத்தார் பெருமாள். அன்றைய பொழுது தயாரிக்கப்பட்ட உணவு அனைத்தையும் உண்டு தீர்த்தார். இதனால் ஆச்சரியப்பட்ட மன்னன், 'ஐயா! தங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்,' என கேட்டான். அதற்கு அவர், 'எனக்கு ஒரு குடம் அப்பம் வேண்டும்,'என்றார். அதன்படி அப்பம் செய்து கொண்டு வரப்பட்டது. அந்த அப்பக்குடத்தை பெருமாள் வாங்கியவுடன் உபமன்யுவின் சாபம் தீர்ந்தது என தல வரலாறு கூறுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 22 - பெரியாழ்வார் திருமொழி - 1.1.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 22 - பாவம் பறந்து விடும்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம்

செந்நெலார் வயல் சூழ்* திருக்கோட்டியூர்* 
மன்னு நாரணன்* நம்பி பிறந்தமை*
மின்னு நூல்* விட்டு சித்தன் விரித்த* 
இப்பன்னு பாடல் வல்லார்க்கு* இல்லை பாவமே! (2)

  • செம் நெல் - செந்நெல் தாந்யங்களால்
  • ஆர் - நிறையப் பெற்ற
  • வயல் - கழனிகளாலே
  • சூழ் - சூழப்பட்ட
  • திருக்கோட்டியூர் - திருக்கோட்டியூரிலே
  • மன்னு - நித்யவாஸம் பண்ணுகிற
  • நாரணன் - நாராயணன்
  • நம்பி - ஸர்வகுண பூர்ணனான ஸர்வேச்வரன்
  • பிறந்தமை - திரு அவதரித்த பிரகாரத்தை
  • மின்னு - விளங்கா நின்ற 
  • நூல் - பூணூலை உடைய
  • விட்டுசித்தன் - பெரியாழ்வார்
  • விரித்த - விஸ்தரித்து அருளிச் செய்த
  • பன்னு - ஜ்ஞாநிகள் எப்போதும் அநுஸந்திக்கக் கடவதான
  • இப் பாடல் - இப்பரசுரங்களை
  • வல்லார்க்கு - கற்றவர்களுக்கு
  • பாவமில்லை - பாபமில்லை

திருவாய்ப்பாடியில் திருவவதரித்த கண்ணன்தான், செந்நெல் தானியங்கள் நிரம்பியும், வயல்களால் சூழப்பட்டதுமான, திருக்கோட்டியூரில் ஸ்ரீமந்நாராயணனாக பரிபூர்ணனாய் எழுந்தருளியிருக்கிறான். பூணூலை அணிந்த விஷ்ணுசித்தன் (பெரியாழ்வார்) அருளியதும், ஞானிகள் எப்பொழுதும் அநுஸந்திக்க வல்லதும், நாரணன் கண்ணனாக அவதரித்த விஷயத்தை விஸ்தரிப்பதுமான, இப்பத்து பாசுரங்களை ஓதுபவர்களுக்கு பாவங்கள் அழிந்துபோகும் என்பதில் ஐய்யமில்லை.

அடிவரவு: வண்ணம் ஓடுவார் பேணி* உறி கொண்ட கை* வாய் பத்து கிடக்கில்* செந்நெல் - சீதக் கடலுள்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.22

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.22 

யாவதே³ தாந்நி ரீக்ஷேஹம்
யோத்³து⁴ காமா நவஸ்தி²தாந்|
கைர்மயா ஸஹ யோத்³ த⁴வ்யம்
அஸ்மிந் ரண ஸமுத்³யமே||

  • யாவத்³ - எவ்வளவு நேரம்
  • ஏதாந் - இவர்களையெல்லாம் 
  • நிரீக்ஷே - பார்க்கும்படி 
  • அஹம் - நான் 
  • யோத்³து⁴ காமாந் - சண்டையிட விருப்பம் கொண்டுள்ள 
  • அவஸ்தி²தாந் - போர்க்களத்தில் அணிவகுத்துள்ள 
  • கைர் - யாருடன் 
  • மயா - என்னால் 
  • ஸஹ - இணைந்து 
  • யோத்³ த⁴வ்யம் - சண்டையிட வேண்டும் 
  • அஸ்மிந் - இந்த 
  • ரண - போர் 
  • ஸமுத்³யமே – தொடக்கத்தில்

சண்டையிட விருப்பம் கொண்டு போர்க் களத்தில் அணி வகுத்துள்ள, இந்தப் போர் முயற்சியில் நான் யாருடன் இணைந்து சண்டையிட வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.6

ஸ வை பும்ஸாம் பரோ த⁴ர்மோ
யதோ ப⁴க்தி ரதோ⁴ க்ஷஜே।
அஹை துக்ய ப்ரதி ஹதா
யயாத்மா ஸுப்ர ஸீத³தி॥

  • யதோ - எந்த தர்மத்தால்
  • அஹை துகீ - காரணம் அற்றதும்
  • அப்ரதி ஹதா - விக்நங்களால் கெடுக்கப்படாததுமான
  • அதோ⁴ க்ஷஜே - மகாவிஷ்ணுவினிடத்தில்
  • ப⁴க்திர் - பக்தியானது ஏற்படுகின்றதோ
  • யயா - எந்த பக்தியால்
  • ஆத்மா - மனதானது
  • ஸுப்ர ஸீ த³தி - மலர்ந்து மகிழ்கிறதோ
  • ஸ வை - அந்த நிஷ்காமக் கர்மாவே
  • பும்ஸாம் - மக்களுக்கு
  • பரோ - உத் கிருஷ்டமான
  • த⁴ர்மோ - தர்மம் ஆகும்

மனிதன் செய்யும் மேலான கடமை ஒன்று உண்டு என்றால், அது எவ்விதப் பயனையும் எதிர்பார்க்காது, பகவானிடம் பக்தி செலுத்துவது என்ற ஒரே நோக்குடன், தங்கு தடை இல்லாமல் பக்தி செய்யப்பட வேண்டும். அப்படிப்பட்ட பக்தியால்,  (அந்தராத்மாவான பகவான்) மனம் மிகவும் மகிழ்கிறது. மிகவும் திருப்தியையும் தெளிவையும் அடைகிறது.  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 37

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 7

அக்³ராஹ்ய: ஸா²ஸ்²வத: க்ருஷ்ணோ
லோஹி தாக்ஷ: ப்ரதர் த³ந:|
ப்ரபூ⁴த ஸ்த்ரிக குப்³தா⁴ம 
பவித்ரம் மங்க³ளம் பரம்||

  • 56. அக்³ராஹ் யஸ்² - கிரகிக்க முடியாதவர். தானே காரணமாகவும், கர்த்தாவாகவும் இருப்பவர். மற்றவர்களின் பிடிக்கு அப்பாற்பட்டவர்.
  • 57. ஸா² ஸ்²வதோ - நிரந்தரமாக இருப்பவர். 
  • 58. க்ருஷ்ணோ - மிகுந்த மகிழ்ச்சி உடையவர். நிரந்தரமான பேரின்ப நிலையில் இருக்கிறார்.
  • 59. லோஹி தாக்ஷஃ - செந்தாமரை போன்று சிவந்த கண்கள் உடைய கண்ணன்.
  • 60. ப்ரதர் த³நஹ - பிரளய காலங்களில் எல்லாவற்றையும் அழிப்பவர், தன்னுள் மறைத்து வைத்திருப்பவர்.
  • 61. ப்ரபூ⁴த - நிறைந்தவர். செல்வச் செழிப்பு மிக்கவர். மகத்துவம் மிக்கவர். 
  • 62. ஸ்த்ரிக குப்³தா⁴ம - பரமபதத்தை இருப்பிடமாக உடையவர். மூன்று முகப்புகளை உடைய வராகமாக அவதரித்தவர்.
  • 63. பவித்ரம் - தூய்மையான வடிவினை உடையவர்.
  • 64. மங்க³ளம் பரம் - சிறந்த மங்களமாய் இருப்பவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - முப்பத்தி நான்காவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

034 இடை கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே|

முதலாழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்கள் - பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். இவர்கள் மூவரும் சமகாலத்தவர்கள் மட்டுமல்லாமல், ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். தனித்தனியே பரம்பொருளான ஸ்ரீ நாராயணனுக்கு அடிமை பூண்டு, அவன் புகழ் பாடித் திரிந்த அவர்களை ஓரிடத்தில் சந்திக்க வைக்கும் லீலையை, அற்புதத்தை, தனது ஆசையை ஸ்ரீமன் நாராயணன் நிகழ்த்தினார்!!


மூவரும், தனித்தனியே திருக்கோவலூர் க்ஷேத்திரத்தில் அரசாலும் உலகளந்த பெருமாளை தரிசிக்க வந்தனர். தரிசனம் முடிந்து, இரவுப் பொழுது, பலத்த மழை பெய்ய, மழைக்கு ஒதுங்க எண்ணினார். ஒரு ஆசிரமம் கண்ணில் பட்டது. ஆசிரமத்தின் கதவைத் தட்டினார். அதிலிருந்து 
மிருகண்டு முனிவர் வந்தார்.

"மழை நிற்கும் வரை இங்கு தங்க இடம் உண்டா?" என்றார் பொய்கையாழ்வார்.

இந்த இடைக்கழிதான் உண்டு என்றபடியே ஒரு ரேழியைக் காட்டிவிட்டு போனார்.

சின்ன ரேழி. வெளிச்சமும் இல்லை. ஒருவர் மட்டுமே படுக்க முடியும். சரி, அங்கேயே தங்கிவிட்டு, காலையில் பெருமாளை சேவிக்கலாம் என எண்ணினார். உறங்கிக் கொண்டிருந்த நேரம், யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு விழித்தார்! மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை. பொய்கையாழ்வார் போய்க் கதவைத் திறந்தார். வாசலில் பூதத்தாழ்வார் நின்றிருந்தார். "மழைக்கு தங்க இடம் கிடைக்குமா"? என்று கேட்டார். 


பொய்கையாழ்வார், அதற்கு, “இங்கு ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம்! உள்ளே வாருங்கள்!” என்று கூறி இடமளித்தார். பூதத்தாழ்வார் உள்ளே போனார். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க இயலாமல் இருட்டு. இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி உரையாட ஆரம்பித்தார்கள். கடலை மட்டுமே சேர விரும்பும் இரு மழை துளிகள் போல் அவர்கள் இருவரும் பரமாத்மாவை மட்டும் எண்ணி, அவன் புகழ் பாடி வாழ்பவர்கள் என்பதை அறிந்து, நேரம் போவது அறியா வண்ணம், இருவரும் பகவானின் லீலைகளைப் பற்றி தன்னை மறந்து பேசிக் கொண்டிருந்த நேரம், மீண்டும் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு மீண்டும் இவ்வுலகிற்கு வந்தனர்.


கதவை திறந்து பார்த்த பொழுது, வாசலில் நின்ற பேயாழ்வார், தான் தங்க இடம் கேட்க, “இங்கு ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்!! உள்ளே வாருங்கள்!” என்று கூறி அவ்விருவரும் பேயாழ்வாரை வரவேற்றனர். நெருக்கி நின்று கொண்டு மூவரும், தாங்கள் மூவரும் பரமாத்மாவை மட்டும் எண்ணி, அவன் புகழ் பாடி வாழ்பவர்கள் என்பதை அறிந்து, பேரானந்தத்துடன் இறைவனின் பெருமையை சொல்லியும், பாடியும், கேட்டும் மகிழ்ந்தனர். 


இந்த சந்தோஷ சூழ்நிலையில், அவர்களது பாசுரங்களைக் கேட்க, மூன்று ஆழ்வார்களின் மத்தியில் இருக்க விரும்பி எம்பெருமானும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். அவர்கள் புலன்களுக்கு அகப்படாமல் இடைக்கழியில் வந்து நெருங்கி நின்றார் (இதனாலேயே, இங்கு பெருமாளுக்கு நெருக்கி நின்ற பெருமாள் என்று பெயர்) அவரைத் தொடர்ந்து, பிராட்டியார் இருவரும் அங்கு வந்தனர். அவர்கள் மூவரும் இல்லா இடத்தில் தங்களுக்கு என்ன வேலை என்பது போல், மூவரையும் தொடர்ந்து, ஆதிசேஷனும் கருடாழ்வாரும் அங்கு வந்தனர்! அந்த சிறிய இடத்தில் அனைவரும் வந்து நெருக்க, யார் தங்களை நெருக்குவது என்ற கேள்வி ஆழ்வார்கள் மனத்தில் எழுந்தது. 


நெருக்கத்தின் காரணத்தை அறிய, பொய்கையாழ்வார்: “வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச்  செய்ய, சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடர் ஆழி நீங்குகவே என்று” என்ற பாசுரத்தை பாடினார். “இவ்வுலகை அகழியாக கொண்டு, கடலை நெய்யாகக் கொண்டு, அக்கடற்பரப்பின் ஒரு விளிம்பிலே தோன்றுவது போல் காட்சியளிக்கும் கதிரவனை திரியாகக் கொண்டு விளக்கை ஏற்றி திருமாலின் திருவடிக்கு பாசுரங்களை மாலையாகச் சூட்டினேன். இந்த இருள் நீங்கட்டும்!” என்றார்

அவரைத் தொடர்ந்து, பூதத்தாழ்வார்: அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு ஞானச் தமிழ் புரிந்த நான், என்ற பாசுரத்தை பாடினார். “அன்பை அகழியாகக் கொண்டு, இறைவனையும் அவன் குணங்களையும் அறியும் ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு, அறிவை திரியாகக் கொண்டு திருமாலுக்கு விளக்கேற்றினேன்.” என்றார்

இவர்கள் ஏற்றிய விளக்கின் ஒளியில், இருள் அகல, உலகளந்த பெருமாள்! திருவிக்கிரமன், பரமாத்மாவை கண்ட பேயாழ்வார்: திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன், செருக் கிளரும் பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன் என் ஆழி வண்ணன் பால் இன்று, என்ற பாசுரத்தின் வழியாக, “பரிந்துரை கூறி நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும் பிராட்டியைக் கண்டேன். தாயாருடைய சேர்க்கையின் மூலம் நிறம் பெற்ற திருமாலின் திருமேனியைக் கண்டேன். சூரியன் போன்ற அழகிய நிறத்தையும் கண்டேன். போரில் சீறும் திருச்சக்கரத்தையும், மற்றொரு திருக்கையில் உள்ள திருச்சங்கினையும் சேவிக்கப் பெற்றேன்” என்றார்.

முதலாழ்வார்கள் மூவரும், நெருக்கத்தின் காரணம், திருமாலே என்று உணர்தனர். இறைவனை கண்ட காட்சியில், உள்ளம் உருகி அவனுள்ளமும் கனியும் வண்ணம் பாசுரங்களை பாடினார்கள்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “முதலாழ்வார்கள் போல், அவனருளால் அறியாமை எனும் இருள் நீங்கி அவனைக் காணும் பாக்கியத்தைப் பெற்றேனா?” அப்படிப்படட் எம்பெருமானை இடைக்கழியில் இருட்டில் கண்ட பெருமை எனக்கு இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 27

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அகாசுரன் வதம்|

காட்டுக்குள் சென்று தன் நண்பர்களுடன் வன போஜனம் செய்ய வேண்டுமென்று ஒரு நாள் கிருஷ்ணன் ஆசைப்பட்டான். அதனால் அவன் காலையில் சீக்கிரமே எழுந்து கொம்பை பலமாக ஊதி, தன் நண்பர்களை எழுப்பினான். அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தும், வன போஜனத்தைப் பற்றிய தன் யோசனையைச் சொன்னான். இதைக் கேட்டுச் சிறுவர்கள் சந்தோஷப் பட்டார்கள். கன்றுகள் முன்னே செல்ல, அவர்கள் எல்லாரும் மிக்க குதாகலத்துடன் பின்னால் சென்றார்கள். அவர்கள் தங்களுடன் சித்திரான்னம், தயிர் கூடைகள், கவண்கள், பிரம்புகள், கொம்பு வாத்தியங்கள், புல்லாங்குழல் முதலியவற்றை எடுத்துக் கொண்டு சென்றார்கள். கிருஷ்ணனைத் தங்கள் தலைவனாகக் கொண்டு அவர்கள் பல விளையாட்டுகளை விளையாடினார்கள்.


அப்போது பூதனைக்கும் பகாசுரனுக்கும் தம்பியான அகாசுரன் என்பவன் அங்கே வந்து சேர்ந்தான். சிறுவர்கள் உற்சாகமாக விளையாடுவதைப் பார்க்க அவனுக்கு பொறுக்கவில்லை. "அதோ சிறுவர்களுக்கு நடுவில் புல்லாங்குழலுடன் காணப்படுகிறானே அவன் தான் என் தமக்கையும் என் தமையனையும் கொன்றவன். அவனைக் கொன்று என் பழியைத் தீர்ந்துக் கொள்கிறேன்" என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். இப்படி நினைத்துக் கொண்டே அந்தக் கொடிய அசுரன் ஒரு பெரிய மலைப் பாம்பு போல் உருவம் எடுத்தான். அது எட்டு மைல் நீளம் இருந்ததோடு குறுக்கில் ஒரு பெரிய மலையைப் போல இருந்தது. இந்தப் பூதகரமான வடிவத்தை எடுத்துக் கொண்டு வாயைத் திறந்து கொண்டு வழியில் படுத்து விட்டான். அதன் வாய் ஒரு பெரிய குகையைப் போல இருந்தது. கிருஷ்ணனும் அவனுடைய நண்பர்களும் அதனுடைய வாயைக் குகை என்று நினைத்துக் கொண்டு, உள்ளே நுழைவார்கள் என்று காத்திருந்தான். அவனுடைய கீழ் உதடு பூமியையும் மேல் உதடு வானத்தையும் தொட்டன. வாய் ஒரே இருட்டாக இருந்ததனால் அதன் நாக்கு ஓர் அகன்ற வீதி போல தோற்றமளித்தது. அவனுடைய மூச்சு பெரும் காற்றைப் போல அடிக்க அவனுடைய கண்கள் நெருப்பைப் போல பிரகாசித்தன. 


சிறுவர்கள் தூரத்திலிருந்து அதைப் பார்த்தார்கள். அது ஓர் உயிருள்ள மலைப் பாம்பு என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மலைப்பாம்பு உருவம் கொண்ட ஓர் அழகிய குகை என்று தான் அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் தங்களுக்குள் தர்க்கம் செய்தார்கள். அது என்ன தான் என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு அந்தக் குகை வாயிலுக்குள் நுழைய அவர்கள் விரும்பினார்கள். அது மலை பாம்பகாகவே இருந்தாலும் கூட தங்கள் பிரியமான கிருஷ்ணன் அதைக் கொன்று தங்களைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. கிருஷ்ணனின் வசீகரமான முகத்தை அவர்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டே பலமாகச் சிரித்துக் கொண்டும் கைகளைக் தட்டிக் கொண்டும் குகை வாயில் போல இருந்த அந்த மலைப் பாம்பின் வாயில் அவர்கள் நுழைந்தார்கள். 

அது உயிருள்ள மலைப் பாம்பு என்பதும் அதற்குள் நுழைந்தால் நிச்சியம் மரணம் தான் என்பதும் கிருஷ்ணனுக்கு தெரியும். அதனால் தன் நண்பர்களைக் காப்பாற்றுவதற்காக அவர்களை தடுக்கப் பார்த்தான். ஆனால் அதற்குள் கிருஷ்ணனைத் தவிர மற்ற எல்லோரும் உள்ளே நுழைந்து விட்டார்கள். மலைப் பாம்பு தன் வாயை இன்னும் மூடவில்லை. கிருஷ்ணனும் உள்ளே நுழைவதற்காக அது காத்துக் கொண்டிருந்தது.


உலகைக் காப்பவனான கிருஷ்ணன் ஓர் கணம் யோசனை செய்தான். ஒரே நேரத்தில் அரக்கனையும் கொல்ல வேண்டும், தன் நண்பர்களையும் காப்பாற்ற வேண்டும். அதை எப்படி செய்யலாம்? அவன் ஒரு தீர்மானத்திற்கு வந்தான். நேரே அவன் வாய்க்குள் புகுந்து, தன் உடலைப் பெரிதாக்கிக் கொண்டான். அரக்கன் மூச்சுவிட முடியாமல் தவித்தான். கண்கள் பிதுங்க அரக்கன் இப்படியும் அப்படியும் உருண்டான். கடைசியில் செத்து ஒழிந்தான். கிருஷ்ணன் தன் நண்பர்களைப் பார்த்தான். பாம்பின் உடலுக்குள்ளிருந்த விஷ வாயுவினால் அவர்கள் மயக்கமுற்றுக் கிடந்தார்கள். ஆனால் கிருஷ்ணனுடைய பார்வை அவர்கள் மீது விழுந்ததும் அவர்கள் எல்லோரும் மயக்கம் நீங்கி அந்த செத்த பாம்பின் உடலிலிருந்து வெளியே வந்தார்கள்.  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 005 - திரு அன்பில் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

005. திரு அன்பில் (திருச்சி)
ஐந்தாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 1 பாசுரம்

1. திருமழிசையாழ்வார் - 1 பாசுரம்
1. நான்முகன் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 2417 - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம் (36)

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி
போற்றி செய வோர் குடைக் கீழ்ப் பொன்னாடும் இந்நாடும்
நால் திசையும் ஆண்டாலும் நன்கு இல்லை தோற்றம் இலா
எந்தை அன்பில் ஆதி இணைத் தாமரை அடிக்கே
சிந்தை அன்பிலாதார் சிலர் 

  • தோற்றம் இலா எந்தை - பிறப்பில்லாத எமது தந்தையும்
  • அன்பில் ஆதி - திருவன்பில் என்னும் திருப்பதியில் எழுந்தருளி இருக்கின்ற முழுமுதற் கடவுளுமான எம்பெருமானது
  • இணை தாமரை அடிக்கு - இரண்டு திருவடித் தாமரைகளினிடத்தில்
  • சிந்தை அன்பு இலாதார் சிலர் - தமது மனத்தில் பக்தியைக் கொள்ளாதவராகிய சில பேர்
  • போற்றி செய - யாவரும் தமக்கு வாழ்த்துக் கூற
  • ஓர் குடை கீழ் - ஒற்றை வெண் கொற்றக் குடையின் நிழலிலே
  • பொன் நாடும் - பொன்னுலகமாகிய தேவ லோகத்தையும்
  • நால்திசையும் இ நாடும் - நான்கு திக்கின் எல்லை வரையிலும் உள்ள இம்மண்ணுலகத்தையும்
  • ஆண்டாலும் - தனி அரசாட்சி செய்தாலும்
  • நன்கு இல்லை - அதனால் அவர்க்கு யாதொரு நன்மையும் உண்டாகாது
---------------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 1

திருமழிசையாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 2417 - பக்தர் உள்ளத்தில் உறைபவன் திருமால்
நான்முகன் திருவந்தாதி - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம் (36)
நாகத்து அணைக் குடந்தை* வெஃகா திரு எவ்வுள்* 
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில்* 
நாகத்து அணைப் பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்* 
அணைப்பார் கருத்தன் ஆவான்| (2)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 21 - பெரியாழ்வார் திருமொழி - 1.1.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 21 - கண்ணனின் துடுக்குத்தனம்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

கிடக்கில் தொட்டில்* கிழிய உதைத்திடும்* 
எடுத்துக் கொள்ளில்* மருங்கை இறுத்திடும்*
ஒடுக்கிப் புல்கில்* உதரத்தே பாய்ந்திடும்* 
மிடுக்கிலாமையால்* நான் மெலிந்தேன் நங்காய்|

  • கிடக்கில் - இப்பிள்ளையானவன் தொட்டிலில் கிடந்தானாகில்
  • தொட்டில் - தொட்டிலானது
  • கிழிய - சிதிலமாகும்படி
  • உதைத்திடும் - கால்களினால் உதைக்கிறான்
  • எடுத்துக் கொள்ளில் - இவனை இடுப்பில் எடுத்துக் கொண்டால்
  • மருங்கை - இடுப்பை
  • இறுத்திடும் - முறிக்கிறான்
  • ஒடுக்கி - இவனுடைய கை கால்களை ஒடுக்கி
  • புல்கில் - மார்வில் அணைத்துக் கொண்டால்
  • உதரத்து - வயிற்றிலே
  • பாய்ந்திடும் - பாய்கிறான்
  • மிடுக்கு - இச்சேஷ்டைகளைப் பொறுக்கவல்ல சக்தி
  • இலாமையால் - இப்பிள்ளைக்கு இல்லாமையால்
  • நான் - தாயாகிய நான்
  • மெலிந்தேன் - மிகவும் இளைத்தேன்
  • நங்காய் - பூர்ணகளான ஸ்த்ரீகளே 

கண்ணன் ஒரு சிறு குழந்தை போல் தோன்றினாலும் அவன் செய்யும் சேஷ்டிதங்களோ அவன் ஒரு அசாதாராணமானவன் என்று யசோதைக்கும் மற்றும் அங்குள்ள பெண்டிதர்களுக்கும் புரிய ஆரம்பிக்கிறது. குழந்தையை தொட்டிலில் விட்டால், தொட்டில் உடைய தன் இளம் கால்களால் உதைக்கிறான். சரி, தொட்டில் வேண்டாம் என்று இடுப்பில் வைத்து கொள்ளும் போது இடுப்பை வளைத்து நெருக்குகிறான், கை கால்களை ஒடுக்கி மார்பில் அணைத்தாலோ வயிற்றில் வேகமாக பாய்கிறான். இந்த விநோதமான விளையாட்டுக்களை தாங்க முடியாமல் தன் உடம்பே இளைத்து விட்டது என்று யசோதை சக தோழிகளிடம் கூறுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது. இதற்கு மற்றொரு அர்த்தமாக, இச்சேட்டிதங்களால் குழந்தையான கண்ணனுக்கு ஸ்ரமமேற்பட்டு அவன் இளைத்து விட்டான் என்று யசோதை கவலைப் படுகிறாள் என்பதாக சில விமர்சகர்களின் கருத்து. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.21

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.21 

ஹ்ருஷீகேஸ²ம் ததா³ வாக்யம்
இத³ம் ஆஹ மஹீபதே|
அர்ஜுந உவாச|
ஸேநயோ ருப⁴ யோர் மத்⁴யே
ரத²ம் ஸ்தா²பய மேச்யுத||

  • ஹ்ருஷீகேஸ²ம் - கண்ணனிடம்
  • இத³ம் வாக்யம் - இந்த வார்த்தைகளை 
  • ஆஹ - சொல்கிறான்
  • மஹீபதே - ராஜனே!
  • அர்ஜுந: உவாச - அர்ஜுநன் கூறினான் 
  • ஸேநயோ: - படைகளுக்கு 
  • உப⁴யௌ: - இரண்டு 
  • மத்⁴யே - நடுவே 
  • ரத²ம் - தேர் 
  • ஸ்தா²பய - தயவுசெய்து நிறுத்தும் 
  • மே - என்னுடைய 
  • அச்யுத - வீழ்ச்சியடையாதவரே 

கண்ணனிடம் இந்த வார்த்தைகளை சொல்கிறான். அர்ஜூனன் கூறுகிறார்: ராஜனே! கண்ணா! வீழ்ச்சியடையாதவரே! படைகளிரண்டுக்கும் நடுவே என் தேரை கொண்டு நிறுத்தும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.5

முநய: ஸாது⁴ ப்ருஷ்டோ ஹம்
ப⁴வத்³ பி⁴ர்லோக மங்க³ளம்।
யத் க்ருத: க்ருஷ்ண ஸம் ப்ரஸ்²நோ
யேநாத்மா ஸுப்ர ஸீத³தி॥

  • யேந - எந்த கேள்வினால்
  • ஆத்மா - எனது ஆத்மாவானது
  • ஸுப்ர ஸீத³தி - மிக மகிழ்ச்சி அடையுமோ
  • க்ருஷ்ண ஸம் ப்ரஸ்²நோ - க்ருஷ்ண பரமாத்மா விஷயமான கேள்வியானது
  • ப⁴வத்³ பி⁴ர் - உங்களால்
  • அஹம் ப்ருஷ்டோ - நான் கேட்கப்பட்டேன்
  • யத் க்ருதஹ் - எந்த க்ருஷ்ண கதையானது
  • முநயஸ் - மஹரிஷிகளே!
  • ஸாது⁴ - நல்லதும்
  • லோக மங்க³ளம் - உலக க்ஷேமத்தை கொடுக்கக் கூடியதாகவும் உள்ளதோ 

முனிவர்களே! ஸ்ரீ க்ருஷ்ணரைப் பற்றி நீங்கள் கேட்ட உத்தமமான கேள்வியினால் எனது மனம் மகிழ்கிறது. அந்த கேள்வி, உலகிற்கெல்லாம் நன்மையைத் தரக் கூடியது; நலத்தைச் செய்யப் போகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 36

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 6

அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ²: 
பத்³ம நாபோ⁴ அமரப்ரபு⁴:|
விஸ்²வ கர்மா மநுஸ் த்வஷ்டா 
ஸ்த²விஷ்ட²: ஸ்த²விரோ த்⁴ருவ:||

  • 46. அப்ரமேயோ - அறிவுக்கு எட்டாத பெருமைகளை உடையவர். அளவிட முடியாதவர். வரையறுக்க முடியாதவர், ஐந்து புலன்களால் உணர முடியாது.
  • 47. ஹ்ருஷீகேஸ²ஃ - இந்திரியங்களை அடக்கி ஆள்பவர். இந்திரியங்களின் இறைவன். சூரியன் மற்றும் சந்திரன் வடிவத்தில் மகிழ்ச்சியின் கதிர்களை பரப்புகிறவர்.
  • 48. பத்³மநாபோ⁴ - நாபியிலிருந்து நீண்ட தண்டையுடைய தாமரைப்பூ அழகன். பிரபஞ்சத்தின் ஆதாரமாக இருப்பவர். படைப்பாளியான பிரம்மாவின் இருப்பிடமாக அனைத்து படைப்புகளுக்கும் அவர் தான் அடிப்படைக் காரணம். தொப்புள் கொடி போன்ற ஒன்றால் தாங்கப்பட்ட அவரது நாபியிலிருந்து (தொப்புள்) பத்மம் (பிரபஞ்சம்) வெளிப்படுகிறது.
  • 49. அமரப் ரபு⁴ஹு - தேவர்கள் தலைவனாயிருந்து நிர்வாகம் செய்பவர்.
  • 50. விஸ்²வ கர்மா - உலக நடைமுறைகளைத் தானே செய்பவர்.
  • 51. மநுஸ் - மனதில் நினைத்த மாத்திரத்திலேயே உலக நியதிகளைச் செய்பவர். விஸ்வகர்மாவைப் போல அவர் தனது கருவிகளைக் கொண்டு உலகை உருவாக்கினார். அவர் தனது சிந்தனையால் மட்டுமே படைப்பை ஏற்படுத்துகிறார்.
  • 52. த்வஷ்டா - பெயர்கள், உருவ அமைப்புகள் முதலானவற்றைப் பாகுபாடு செய்பவர். அவதாரங்கள் எடுப்பவர். பிரளய காலத்தில் உலகைச் சுருக்கி தனக்குள் அடக்கிக் கொள்கிறார்.
  • 53. ஸ்த²விஷ்ட²ஸ் - மிகவும் பெரியவர். தனது விருப்பத்தின் பேரில் பிரம்மாண்டமான வடிவங்களை எடுப்பவர். (வராஹ அவதாரத்தில் உள்ள பெரிய பன்றி அல்லது வாமன அவதாரத்தில் திரிவிக்ரமைப் போல)
  • 54. ஸ்த²விரோ - எக்காலத்தும் நிலைத்திருப்பவர்.
  • 55. த்⁴ருவஹ - மாறாமல் நிலையாய் இருப்பவர். நேரம், இடம் முழுவதும் முழுமையாக இருக்கிறார். காலச் சக்கரத்தால் பாதிக்கப்படாத வயதுடையவர். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - முப்பத்தி மூன்றாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

033 இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவானைப் போலே|

ஸ்ரீநாராயணர் முன்னிலையில் சாதி பேதம் கூடாது என உரைத்தது வைஷ்ணவம். ஸ்ரீராமாநுஜர் அதற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்.

இனி நம்பாடுவான் கதை.


108 திவ்ய தேசங்களில் திருக்குறுங்குடியும் ஒன்று. மகேந்திர மலை என்ற மலையை அடுத்து அமைந்துள்ள இவ்விடத்தில் எம்பெருமான், நின்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி, மலைமேல் நம்பி என ஐந்து விதமாக எழுந்தருளியுள்ளார். வராக அவதாரம் எடுத்த பெருமாள் தன் உடலைக் குறுக்கிக் கொண்டதால் இத்தலத்திற்கு இப்பெயர்.

நம்பாடுவான் ஒரு வைணவ பக்தர். முனிக்கிராமம் என்ற ஊரைச் சேர்ந்த நம்பாடுவான், பாணர் குலத்தில் பிறந்தவர். தினந்தோறும் திருக்குறுங்குடிக்குச் சென்று, அங்குள்ள நம்பி என்ற பெருமாளை யாழிசைத்துப் பாடிய பின் தான் தனது தினசரிச் செயல்களைத் தொடங்குவார். சூரியன் உதிக்கும் முன் காடு கடந்து திருக்குறுங்குடி சென்று, பெருமாளைப் பற்றிப் பாடிவிட்டு, மக்கள் எழும் முன் ஊர் திரும்பி விடுவார். தன்னுடைய குலத்தின் காரணமாக கோயிலின் வாயிலில் நின்று பாடிவிட்டு செல்வது அவரது வழக்கம். அவரது பண்ணில் மயங்கிய திருக்குறுங்குடிப் பெருமாள், யாழிசையுடன் போற்றிப் பாடிய பாணரை, ‘நம்பாடுவான்’ (என் பாடகர்) என்று சிறப்புப் பெயர் கொண்டு அழைத்தார். அன்று முதல் அப்பாணர் அவ்வாறு அழைக்கப்பட்டார். அதுவே நிரந்தரமானது.


கார்த்திகை மாத சுக்லபக்க்ஷ ஏகாதசி நாளில் நம்பாடுவான், இரவு முழுதும் விழித்திருந்து பெருமாள் புகழைப் பாடி, விரதமிருந்து, விடியும் முன் பண்ணிசைக்க கோவிலை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார். காட்டில் இருந்த பிரம்ம ராக்ஷஸன், பாணரை வழிமறித்தான். 'உன்னை உணவாக உண்ணப் போகிறேன்" என்றான்.

பாணரோ, “என்னை உண்டு உன் பசியைப் போக்கிக் கொள்கிறாய் என்றால் எனக்கும் சந்தோஷம் தான். எனக்கு இவ்வுடலின் மீது எந்த ஒரு விருப்பமும் இல்லை. இது என் உடைமையும் இல்லை. ஆனால், இன்று ஏகாதசி. திருக்குறுங்குடிக்குச் சென்று, எம்பெருமானின் முன் பாடிவிட்டு, நான் மேற்கொண்டுள்ள ஏகாதசி விரதத்தை நிறைவு செய்துவிட்டுத் திரும்பி வந்த பின் என்னை உண்டு உன் பசியாறுவாயாக! அதுவரை பொறுத்திரு”, என்று கூறினார். 


முதலில் பாணரை அவன் நம்பவில்லை. ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் திருமாலடியார் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள் என்பதைக் கூறி, அதை மீறினால், மீண்டும் மீண்டும் பிறந்து, இறைவனை அடைய முடியா வண்ணம் ஆன்மா பிறவிக்கடலில் அகப்பட்டுக் கொள்ளும். எனவே, நான் வாக்குறுதி வழங்குகிறேன். நான் வருவேன்.” என்று கூறி விளக்கியவுடன் அவரைக் குறுங்குடிக்குச் சென்று வர அனுமதித்தான்.

சந்நிதி அடைந்து, வழக்கம் போல, சந்நிதியிலிருந்து விலகிப் பாடினார் நம்பாடுவான். ஆனால், எம்பெருமான், கொடி மரம், கருடன் ஆகியவற்றை விலகி இருக்கச் சொல்லி அங்கிருந்த வண்ணமே சேவை சாதித்தார்.

பின்னர், கொடுத்த வாக்கைக் காக்க ராட்சசனிடம் சென்றார். வழியில் ஒரு முதியவர், "நீ போகாதே! தன் உயிரைக் காத்துக் கொள்ள வாக்குத் தவறினால் தவறில்லை" என்றார். ஆனால், கொடுத்த வாக்கைக் காப்பது தான் ஸ்ரீவைஷ்ணவின் தருமம்" என நம்பாடுவான் மறுத்து விட்டார்.

பிரம்மராக்ஷஸனிடம் உறுதியளித்தபடி வந்து நின்றார். பிரம்மராக்ஷஸன், ‘‘அடியவரே! சிறந்த திருமாலடியார் நீங்கள். தங்களைப் புசித்து மேலும் என் பாவத்தைப் பெருக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை! தாங்கள் இனிதே இல்லம் திரும்புங்கள்!’’ என்று கூறினான்.

நம்பாடுவான், தான் உறுதி அளித்தபடி, பிரம்மராக்ஷஸனின் பசியைப் போக்காமல் அவ்விடத்தை விட்டு அகல விரும்பவில்லை. ஆனால், அவனோ அவரைப் புசிக்க விரும்பவில்லை. தன்னை இப்பாவத்தில் இருந்து விடுவிக்கும் சக்தி, நம்பாடுவானுக்கே உள்ளது என்பதை அறிந்த பிரம்மராக்ஷஸன், “ஏகாதசி விரதத்தைத் தொடர்ந்து அனுஷ்டித்து வந்ததால் பெரும்புண்ணியம் கிடைக்கும் அல்லவா? அந்தப் புண்ணியத்தில் எட்டில் ஒரு பங்கை என்னிடம் கொடுங்கள்”, என்றார்.

நம்பாடுவான், அதற்கு, “நான் பலனை எதிர்ப்பார்த்து விரதம் இருக்க வில்லை. அவரின் புகழ் பாடுவதால், பெருமாளின் மனமும் என் மனமும் குளிரும். எதையும் எதிர்ப்பார்த்து நான் செய்யவில்லை”, என்றார். “சரி, என்றால், நீங்கள் பாடும் ஒரு பாடலின் பலனை எனக்கு வழங்குவதாக கூறிவிடுங்கள்.”, என்றான் பிரம்மராக்ஷஸன்.

பிரம்மராக்ஷஸனின் நிலைமையை கண்ட நம்பாடுவான், மனம் வருந்தி ராட்சஸனிடம் அவன் கேட்டதைக் கொடுத்து விட்டார். உடனே, பிரம்மராக்ஷஸ வடிவம் நீங்கி, அந்தணப் பிரம்மச்சாரியாக நிற்கக் கண்டார். தான் வேள்வி செய்த பொழுது செய்த தவறுகளின் காரணமாகத் தனக்கு இந்த அசுர உருவம் ஏற்பட்டதாகக் கூறிய பிரம்மச்சாரி நம்பாடுவானுக்கு நன்றி கூறிச் சென்றார்.

பிரம்மராக்ஷஸன் உணவு கிடைக்காமல் பசியும் தாகமும் வாட்டிய நிலையில் இருந்தான். அந்த இளைப்பு, விடாய் இரண்டையும் நம்பாடுவார் தீர்த்தார். அத்துடன் சாபம் நீங்கவும் உதவினார். இன்றும் கைசிக ஏகாதசி (கார்த்திகை மாதம்) அக்கோயில் விழா கொண்டாடுகிறது.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அறநெறி பிறழாது நம்பாடுவான், ராட்சசன் இளைப்பின் தாகத்தை தீர்த்தார். நம்பாடுவான் போல் பிறருக்கு உதவி புரிந்தேனா?!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்