About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 7 September 2023

லீலை கண்ணன் கதைகள் - 33

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பிரலம்பாசுரனின் அழிவு|

பலராமனும் கிருஷ்ணனும் கோபர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்கள். சில நாட்களுக்கெல்லாம் கோடைக்காலம் வந்தது. ஒரு நாள் கிருஷ்ணனும் பலராமனும் வழக்கம் போல் தங்கள் நண்பர்களுடன் மாடுகள் மேய்க்கக் காட்டுக்குச் சென்றார்கள். 


அன்றைக்குக் கிருஷ்ணன் நாட்டியமாடும் ஆசையில் இருந்தான். அதனால் எல்லோரும் ஒரு பெரிய மரத்தின் நிழலில் உட்கார, கிருஷ்ணன் நடனமாடத் தொடங்கினான். உடனே சிலர் ஆட்டத்திற்கேற்பப் பாடினார்கள்; சிலர் கொம்பு வாத்தியங்களை ஊதினர்; சிலர் புல்லாங்குழல் ஊதினர்; இன்னும் சிலர் கைத்தாளம் போட்டனர். கிருஷ்ணனின் தண்டை மணிகளின் இனிய ஓசை வெகு தூரத்துக்குக் கேட்டது. இதைக் கேட்டு மயில்கள் பல திசைகளிலிருந்தும் ஒடி வந்தன. கிருஷ்ணன் ஆடுவதைப் பார்த்து, அவையும் தங்கள் தோகைகளை விரித்து ஆடத் தொடங்கின. சொர்க்கலோகமே பூலோகத்திற்கு வந்து விட்டது போன்று அந்த அழகிய காட்சி தோன்றிற்று.


நடனம் முடிந்ததும் சிறுவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். அப்போது பிரலம்பன் என்ற ஒர் அசுரன் கிருஷ்ணனைக் கொல்லுவதற்காக அங்கு வந்து சேர்ந்தான். அவன் ஒரு கோபனைப் போலத் தன் உருவத்தை மாற்றிக் கொண்டு அவர்களோடு சேர்ந்து விளையாடத் தொடங்கினான். ஆனால் கிருஷ்ணன் அவனைக் கவனித்து விட்டான். அவனைக் கொல்லுவதற்கு ஒரு வழியைத் தீர்மானித்துக் கொண்டு, கிருஷ்ணன் அவன் பக்கம் சென்று அவனை நண்பனாக்கிக் கொண்டான். பல விளையாட்டுக்களின் மூலம் தன் நண்பர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன், திடீரென்று அவர்களிடம் ஒரு புதிய விளையாட்டைச் சொன்னான். அதன் படி எல்லோரையும் இரண்டு கட்சிகளாகப் பிரித்தான். வயதிலும் பலத்திலும் இரண்டு கட்சிகளும் சமமாக இருந்தன.


பலராமன் ஒரு கட்சிக்குத் தலைவன். கிருஷ்ணன் இன்னொரு கட்சிக்குத் தலைவன். எந்தக் கட்சி தோற்கிறதோ அதைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்ற கட்சியின் சிறுவர்களை முதுகில் தாங்கிச் செல்ல வேண்டும் என்பது நிபந்தனை. பிரலம்பன் கிருஷ்ணன் கட்சியில் இருந்தான். கிருஷ்ணன் கட்சி தோற்றது. அதனால் இந்தக் கட்சிச் சிறுவர்கள், பலராமன் கட்சிச் சிறுவர்களை முதுகில் ஏற்றிச் செல்ல வேண்டி வந்தது. பலராமனும் அவனுடைய சகாக்களும் மகிழ்ச்சியாக, எதிர்கட்சிச் சிறுவர்களின் முதுகுகளில் சவாரி செய்தார்கள். எல்லோரும் ஒர் அசுவத்த மரத்தை அடைந்தார்கள். கோபன் உருக் கொண்ட பிரலம்பாசுரன் பலராமனைத் தன் முதுகில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தான். கிருஷ்ணன் ஸ்ரீதாமா என்னும் சிறுவனைத் தன் முதுகில் சுமந்து கொண்டிருந்தான். 


பலராமன் கிருஷ்ணனுடைய அண்ணனாதலால் முதலில் அவனைக் கொல்வது என்று பிரலம்பாசுரன் முடிவு செய்தான். யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்று தெரிந்ததும், அவன் பலராமனை முதுகில் தூக்கிக் கொண்டு வெகு தூரம் ஓடினான், ஒரு தனி இடத்தை அடைந்ததும் அவன் தன் சுய உருவத்தை எடுத்துக் கொண்டான். அவனுடைய பெரிய உருவத்தைக் கண்டு, பலராமன் சற்றுத் திடுக்கிட்டான். அசுரன் தன்னைக் கொன்று விடுவான் என்று பலராமனுக்குத் தெரியும்.


ஆதலால் அவன் தன் முஷ்டியை மடித்துக் கொண்டு, பிரலம்பாசுரன் தலையையப் பார்த்துப் பல குத்துக்கள் விட்டான். இதை அந்த அசுரனால் தாங்க முடியவில்லை. அவன் தடுமாற ஆரம்பித்தான். வாயிலிருந்து ரத்தம் கொட்டிற்று. அவன் சீக்கிரமே அலறிக் கொண்டு செத்து விழுந்தான். அசுரனின் அலறலைக் கேட்டுக் கிருஷ்ணனும் அவனுடைய சகாக்களும் அங்கே ஓடி வந்தார்கள். எல்லோரும் பலராமனைத் தழுவிக் கொண்டு, “நன்று! நன்று! அசுரனைக் கொன்றாய். உன் புகழ் ஒங்குக! என்று பாராட்டினார்கள். இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்...

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 007 - திருக்கண்டியூர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

007. திருக்கண்டியூர் 
த்ரிமூர்த்தி க்ஷேத்ரம் – தஞ்சாவூர்
ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ ஹரசாப விமோச்சன பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ கமலவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஹரசாப விமோச்சன பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: ஹர சாப விமோச்சனன்
  • பெருமாள் உற்சவர்: கமலநாதன்
  • தாயார் மூலவர்: கமலவல்லி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு
  • திருக்கோலம்: நின்ற 
  • புஷ்கரிணி: கமல, கபால மோட்ச
  • தீர்த்தம்: பத்ம, கதா 
  • விமானம்: கமலாக்ருதி
  • ப்ரத்யக்ஷம்: அகஸ்தியர், ருத்ரன்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 1

----------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

சிவனின் (ஹரன்) சாபம் தீர்த்ததால், இங்குள்ள பெருமாள் "ஹரசாப விமோசனப் பெருமாள்' என்றழைக் கப்படுகிறார். பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இக்கோயிலை மகாபலி சக்கரவர்த்தி கட்டினார் என புராணங்கள் கூறுகிறது. இதே ஊரில் சிவபெருமானும் குடி கொண்டார். அவருக்கு "கண்டீஸ்வரர்' எனப் பெயர். இத்தலம் ஒரு மும்மூர்த்தி தலமாகும். பிரம்மனுக்கு கோயில் கிடையாது என்பதால், கண்டீஸ்வரர் கோயிலில் சரஸ்வதி சமேதராக பிரம்மன் அருள் பாலிக்கிறார். "ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற நூலை எழுதிய நாராயண தீர்த்தர் கண்டியூர் அருகிலுள்ள திருப்பூந்துருத்தியை சேர்ந்தவர். இவர் இத்தல பெருமாளின் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். திருமங்கையாழ்வார் இத்தலத்தில் பாடிய பாடலில் இங்குள்ள பெருமாளை, ஸ்ரீரங்கம் பெருமாள், காஞ்சி பெருமாள், கோயிலடி பெருமாள் ஆகிய பெருமாள்களுடன் ஒப்பிட்டு பாடுகிறார். 

சிவனுக்கு ஈசானம், தத் புருஷம், அகோரம், வாம தேவம், சத்யோஜாதம் என்று ஐந்து திருமுகங்கள் உண்டு. இதே போல் பிரம்மனுக்கும் ஐந்து முகங்கள் இருந்த காலம் அது. அதனால் சிவனுக்கு ஈடாக தன்னையும் நினைத்து கர்வத்துடன் பிரம்மா செயல்பட்டு வந்தார். இதனால் கோபம் கொண்ட சிவன் பிரம்மனின் நடுத் தலையை கிள்ளி எறிந்தார். இந்த பிரம்மஹத்தி தோஷத்தை தொலைக்க, கையில் ஒட்டிய பிரம்மனின் கபாலத்துடன் தீர்த்த யாத்திரை கிளம்பினார். ஒரு இடத்தில் அந்த கபாலம் விழுந்தது. அங்கே விஷ்ணு இருந்தார். அந்த தலமே பூரணவல்லி தாயார் ஸமேத ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 26 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 26 - தவழும் முழந்தாள்கள்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்

உழந்தாள் நறு நெய்* 
ஒரோர் தடா உண்ண*
இழந்தாள் எரிவினால்* 
ஈர்த்தெழில் மத்தின்*
பழம் தாம்பாலோச்ச* 
பயத்தால் தவழ்ந்தான்*
முழந்தாள் இருந்தவா காணீரே* 
முகிழ் முலையீர்! வந்து காணீரே| 

  • உழந்தாள் - சிரமப்பட்டு பானையில் சேர்த்து வைத்த
  • நறு நெய் - மணம் மிக்க நெய்யை
  • ஒரோர் தடா - ஒவ்வொரு பானையாக அனைத்தையும்
  • உண்ண - கண்ணன் அமுது செய்ததினால்
  • இழந்தாள் - பிள்ளையைத் தான் இழந்து விடுவோமோ என அச்சமுற்ற தாய் யசோதை
  • எரிவினால் - எரிச்சலுடன்
  • ஈர்த்து - கையைப் பிடித்து இழுத்து
  • எழில் மத்தின் - அழகிய மத்தினுடைய
  • பழம் தாம்பால் – பழைய கயிறால் 
  • ஒச்ச - அடிப்பதற்காக கையிலெடுக்க
  • பயத்தால் - அச்சத்தாலே
  • தவழ்ந்தான் - அதிலிருந்து தப்பிப்பதற்காக தவழ்ந்து சென்ற கண்ணனுடைய
  • முழந்தான் இருந்தவா காணீரே - முழங்கால்களின் அழகை வந்து பாருங்கள் 
  • முகிழ் முலையீர் - முகிழ்த்த அழகை உடைய பெண்களே!
  • வந்து காணீரே - வந்து பாருங்கள்

அரும்பாடுபட்டு பாலை கறந்து, காய்ச்சி, தயிராகத் தோய்த்து, கடைந்து வெண்ணையாக்கி பிறகு அதை நெய்யாக்கி தடாக்களில் (பானை) கொட்டி வைத்திருந்தாள் யசோதை. குழந்தை கண்ணனோ, வெண்ணெயோடு, மணம் மிகுந்த நெய்யையும் சேர்த்து, ஒரு தடாவைக் கூட விட்டு வைக்காமல், ஒவ்வோர் பானையாக சாப்பிட்டு விட, யசோதை பல நாட்களாய் முயன்று சேர்த்து வைத்த வெண்ணெயையும், நெய்யையும் உண்டுத் தீர்த்ததனாலும், அளவுக்கு மீறி சாப்பிட்டால் குழந்தைக்கு ஜீரணமாகாது போய் விடும் என்று அஞ்சியும், அக்கறையுடன் கூடிய செல்லக் கோபத்தினால், நெய் திருடி உண்டு, அன்னைக்கு அஞ்சி தூண் மறைவில் மறைவாய் நின்று எட்டி பார்த்த கண்ணனைத் தன்னருகே இழுத்து, அருகிலிருந்த தயிரினைக் கடைந்து வெண்ணெய் எடுப்பதற்கு வைத்திருந்த அழகிய மத்தினுடைய கயிற்றை எடுத்து கையை ஓங்கிக் கொண்டே யசோதை, கண்ணனைத் துரத்த, அவனும் அன்னை அடித்து விடுவாளோ என்று பயந்து போய், அந்த இடத்திலே நிற்காமல், அங்கும் இங்கும் ஆட்டம் ஆடி, பின் யசோதை அருகில் வந்தவுடன், சட்டென்று கீழே முழங்காலிட்டு, தவழ்ந்து கொண்டே யசோதையிடமிருந்து தப்பிச் சென்று விட்டான். இவ்வாறு என்னிடம் இருந்து, தவழ்ந்து கொண்டே தப்பிச் சென்ற மாயவனின் முழந்தால் எத்தனை அழகாய் இருக்கின்றது என்பதை, சிறுமிகளே, முகிழ்த்த அழகை உடைய இளம் பெண்களே அனைவரும் வந்து பாருங்கள். அவன் முழங்கால் அழகையும், அதைக் கொண்டு அவன் தப்பிக்கும் அழகையும் வந்து பாருங்கள் என்று யசோதை அழைக்கிறாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.27

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.27

ஸ்²வஸு²ராந் ஸுஹ்ருத³ஸ்² சைவ 
ஸேநயோ ருப⁴யோரபி|
தாந் ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய: 
ஸர்வாந் ப³ந்தூ⁴ந் அவஸ்தி²தாந்||

  • ஸேநயோர் - சேனைகளின்
  • உப⁴யோர் - இருதரப்பிலும்
  • அபி - உட்பட
  • ஸ்²வஸு²ராந் - மாமன்மாரும்
  • ஸுஹ்ருத³ - நண்பர்களும் 
  • ச – மற்றும்
  • ஏவ - நிச்சயமாக
  • தாந் - அவர்கள் அனைவரையும் 
  • ஸமீக்ஷய - நன்றாக பார்த்து பின் 
  • ஸ: - அவன் 
  • கௌந்தேயஹ - குந்தியின் மகன் அர்ஜுநன்
  • ஸர்வாந் - எல்லாவித 
  • ப³ந்தூ⁴ந் - உறவினர்கள் 
  • அவஸ்தி²தாந் - நிற்பவர்களை 

குந்தியின் மகனான அர்ஜுநன் எல்லாவித உறவினர்கள் நிலைபெற்ற அனைவரையும் கண்டபின் உயர்ந்த கருணையில் மூழ்கி கவலை கொண்டு இவ்வாறு கூறினான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்