About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 19 November 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 77

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 47

அநிர்விண்ண: ஸ்த² விஷ்டோ²பூ ⁴ர்
த⁴ர்ம யூபோ மஹாமக²:|
நக்ஷத்ர நேமிர் நக்ஷத்ரீ
க்ஷம: க்ஷாம: ஸமீஹந:||

  • 436. அநிர்விண்ணஸ் - சோம்பல் இல்லாதவர். ஒரு போதும் விரக்தி அடையாதவர்.
  • 437. ஸ்த விஷ்டோ² - பெருத்தவர். ஸ்தூல வடிவினன். மகத்தானவர்.
  • 438. அபூ⁴ர் - அனைத்தையும் தாங்குபவர். ஆதரவாளர்.
  • 439. த⁴ர்ம யூபோ - தர்மத்தைத் தலைமையாகக் கொண்டவர். தர்மத்துடன் ஐக்கியமானவர்.
  • 440. மஹா மக²ஹ - வேள்வி வடிவானவர். மிகப் பெரிய தியாகங்களுக்கான இலக்கானவர்.
  • 441. நக்ஷத்ர நேமிர் - விண்மீன்களை இயக்குபவர். நட்சத்திரங்களை அசையச் செய்பவர்.
  • 442. நக்ஷத்ரீ - விண்மீன்களை உடையவர்.
  • 443. க்ஷமஹ - பொறுமையுள்ளவர். திறமையானவர்.
  • 444. க்ஷாமஸ் - குறைந்து உள்ளவர், நுட்பமானவர். நித்யமானவர்.
  • 445. ஸமீஹநஹ - பிறரை இயங்கச் செய்பவர். நலம் விரும்புபவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.14

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.14 

மாத்ராஸ் பர்ஸா²ஸ்து கௌந்தேய 
ஸீ²தோஷ்ண ஸுக² து³:க² தா³:|
ஆக³மா பாயிநோ நித்யா:
தாம் ஸ்திதி க்ஷஸ்வ பா⁴ரத||

  • மாத்ராஸ் பர்ஸா²ஸ் - புலன்மய உணர்வு 
  • து - மட்டுமே 
  • கௌந்தேய - குந்தியின் மகனே 
  • ஸீ²த - குளிர் 
  • உஷ்ண - கோடை 
  • ஸுக² - சுகம் 
  • து³ஹ்க² - துக்கம் 
  • தா³ஹ - தருவது
  • ஆக³ம - தோன்றுகின்ற 
  • அபாயிநோ - மறைகின்ற 
  • அநித்யாஹ - நிலையற்ற 
  • தாந் - அவற்றையெல்லாம் 
  • ஸ்திதி க்ஷஸ்வ - பொறுத்துக் கொள்ள முயற்சி செய் 
  • பா⁴ரத - பரதகுலத் தோன்றலே

குந்தியின் மகனே! இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும், காலப் போக்கில் ஏற்படும் அவற்றின் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவதைப் போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன. எனவே, பரத குலத் தோன்றலே! இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.12

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.12

தத: ஸப்தம ஆகூத்யாம் 
ருசேர் யஜ்ஞோ ப்⁴ய ஜாயத|
ஸயா மாத்³யை: ஸுர க³ணைர் 
அபாத் ஸ்வாயம்பு⁴ வாந்தரம்||

  • ததஸ் - பிறகு
  • ஸப்தம -  ஏழாவதான அவதாரத்தில்
  • ருசேர் - ருசியிடத்தில் இருந்து
  • ஆகூத்யாம் - ஆகூதியிடத்தில்
  • யஜ்ஞ - யக்ஞன் என்ற பெயரோடு 
  • அப்⁴ய ஜாயத - உண்டானார்
  • ஸ - அப்படிப்பட்டவர்
  • யா மாத்³யைஸ் ஸுர க³ணைர் - யாமன் என்ற தனது குழந்தைகளான தேவ கூட்டங்களோடும்
  • ஸ்வாயம்பு⁴ வாந்தரம் - ஸ்வயம்புவ மன்வந்தரத்தை
  • ஆபாத் - தானே காப்பாற்றினார்

அதன் பிறகு ஏழாவது அவதாரமாக, ருசி என்ற பிரஜாபதியின் மனைவியான ஆகூதி என்பவளிடம் 'யக்ஞன்' என்ற பெயரோடு திரு அவதாரம் செய்து, தன் புத்திரர்களான யாமன் முதலிய தேவர்களுடன் ஸ்வாயம்புவ மன்வந்தரத்தைக் காப்பாற்றினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.12

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் -1.1.12

த⁴ர்மஜ்ஞ: ஸத்யஸந்த⁴ஸ்²ச
ப்ரஜாநாம் ச ஹிதே ரத:|
யஸ²ஸ்வீ ஜ்ஞாந ஸம்பந்ந:
ஸு²சிர்வஸ்²ய: ஸமாதி⁴மாந்||

  • த⁴ர்மஜ்ஞஸ் - தர்மம் அறிந்தவர்
  • ஸத்ய ஸந்த⁴ஸ்²ச - ஸத்யமான பிரதிக்‌ஞை உடையவர்
  • ப்ரஜா நாம் - பிராணிகளுடைய
  • ஹிதே - நன்மையில்
  • ரதஹ ச - நோக்கம் உடையவர்
  • யஸ²ஸ்வீ - கீர்த்தி உடையவர்
  • ஜ்ஞாந ஸம்பந்நஹ - ஞானம் நிறைந்த பேரறிவாளர்
  • ஸு²சிர் - பரிசுத்தர்
  • வஸ்²யஸ் - தம்மை அடைந்தவர்களுக்கு வசப்பட்டு நடப்பவர்
  • ஸமாதி⁴ மாந் - கவனம் நிறைந்தவர்

அவன் அறமறிந்தவனாகவும், வாய்மையில் அர்ப்பணிப்புள்ளவனாகவும் {சத்ய சந்தனாகவும்}, குடிமக்களின் நன்மையில் நாட்டமுள்ளவனாகவும், புகழ்பெற்றவனாகவும், விவேகமுள்ளவனாகவும், ஒழுக்கத்தில் தூய்மையானவனாகவும், தற்கட்டுப்பாடு கொண்டவனாகவும், கவனம் நிறைந்தவனாகவும் இருக்கிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 59 - பெரியாழ்வார் திருமொழி - 1.4.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் – 59 - கண்ணனின் கொட்டாவி
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம்

தண்டொடு சக்கரம்* 
சார்ங்கமேந்தும் தடக்கையன்*
கண் துயில் கொள்ளக் கருதிக்* 
கொட்டாவி கொள்கின்றான்*
உண்ட முலைப் பாலறா கண்டாய்* 
உறங்கா விடில்*
விண் தனில் மன்னிய* 
மா மதீ! விரைந்து ஓடி வா!

  • தண்டொடு - ‘கௌமோதகி’ என்னும் கதையையும்
  • சக்கரம் - சுதர்சன சக்கரத்தையும் 
  • சார்ங்கம் - ஸ்ரீ சார்ங்கமென்னும் வில்லையும்
  • ஏந்தும் - ஏந்தி கொண்டிருக்கும் 
  • தட - விசாலமான
  • கையன் - கைகளையுடைய இக்கண்ணபிரானுக்கு
  • கண் துயில் கொள்ள கருதி - தூக்க மயக்கம் தழுவிக் கொண்டது
  • கொட்டாவி கொள்கின்றான் - வாய் வழியே நெடு மூச்சு விடுகின்றான் (கொட்டாவி விடுகின்றான்) 
  • உண்ட - அமுது செய்யப்பட்டிருக்கிற 
  • முலைப்பால் - தாய்ப்பாலும்
  • அறா - சரியாக செரிமானமாகாது
  • உறங்காவிடில் - இப்போது இவன் உறங்கா விட்டால்
  • விண் தனில் - ஆகாசத்திலே
  • மன்னிய - என்றும் நிலை பெற்றிருக்கின்ற
  • மா மதீ! - பெருமை தங்கிய சந்திரனே!
  • விரைந்தோடி வா - என் மகன், கண்ணுறக்கம் கொள்ள தாமதிக்காமல் விரைந்து ஓடி வா 

விண்ணிலே என்றும் நிலை பெற்றிருக்கின்ற முழுமதியே! எத்துனை முறை தான் என் மகன் உன்னையேக் கூவி அழைத்துக் கொண்டிருப்பான். தன் வலிமையான பிஞ்சு கைகளில் கௌமோதகி என்கிற கதையுடன், சுதர்சன சக்கரத்தையும், சார்ங்கம் என்ற வில்லினையும் தன் விசாலமான திருக்கைகளில் ஏந்தியிருப்பவன், தூக்க மயக்கம் அவனைத் தழுவிக் கொண்டது. உறங்குவதற்கு நிமித்தமாய் வாய் வழியே நெடு மூச்சு விடுகின்றான். இதோ பார் வெண்மதியே! அவன் சரியான நேரத்திற்கு, சரியான நேரத்திற்கு அவன் உறங்காவிட்டால், அவன் நிறைவாய் உண்ட தாய்ப்பாலும் சரியாக செரிமானமாகாது. என் மகன், கண்ணுறக்கம் கொள்ள வேண்டும்; தாமதிக்காமல் விரைந்தோடிவா, வெண்ணிலவே!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 016 - திருக்கண்ணமங்கை 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

016. திருக்கண்ணமங்கை 
க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரம் - திருவாரூர்
பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த 
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் 
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 14 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 14 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) -12 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 1638 - 1647 - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1848 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 2008 - பதினொன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம் - 1 பாசுரம்

2. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம் 

  • திவ்ய ப்ரபந்தம் - 2706 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)

3. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம் 

  • திவ்ய ப்ரபந்தம் - 2773 - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் (61)

----------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

கருத்தினால் வாக்கினால் நான்மறையும் காணா*
ஒருத்தனை நீ நெஞ்சே உணரில் பெருத்த முகில்*
வண்ணம் அம்கை கண் கால் வனசம் திரு அரங்கம்*
கண்ணமங்கை ஊர் என்று காண்*

  • நெஞ்சே - மனமே! 
  • கருத்தினால் - மனத்தினாலும்
  • வாக்கினால் - வாக்கினாலும்
  • நால் மறையும் - நான்கு வேதங்களும்
  • காணா - கண்ட றிய முடியாத
  • ஒருத்தனை - ஒப்பற்ற திருமாலை
  • நீ உணரின் - நீ அறிய விரும்பினால், அவனுக்கு
  • வண்ணம் - திருமேனி நிறம்
  • பெருத்த முகில் - பெரிய காளமேகமாம்
  • அம் கை - அழகிய திருக்கைகளும்
  • கண் - திருக்கண்களும்
  • கால் - திருவடிகளும்
  • வனசம் - செந்தாமரை மலர்களாம்
  • ஊர் - இருப்பிடம்
  • திருவரங்கம் - ஸ்ரீரங்கமும்
  • கண்ணமங்கை - திருக்கண்ணமங்கையுமாம் என்று 
  • காண் - அறிவாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 68

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ருக்மிணியின் மன நிலை|

இதற்கிடையில் செய்வது இன்னதென்று தெரியாமல் ருக்மிணி தவித்தாள். கிருஷ்ணரின் வருகைக்காக அவள் மிகவும் ஆவலோடு காத்திருந்தாள். ஓர் உயர்ந்த மாளிகையின் உப்பரிகையில் உட்கார்ந்து அவள் கிருஷ்ணரின் வரவை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தாள். ஆனால் அவள் அனுப்பிய அந்தணர்க் கூட இன்னும் வரவில்லையே!


"நான் அதிர்ஷ்டம் இல்லாதவள். சிறிது நேரத்தில் என்னைச் சிசுபாலனுக்குத் திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள். கிருஷ்ணரோ இன்னும் வரவில்லை. நான் தூது அனுப்பிய அந்தணரும் கூட இன்னும் வரவில்லை. ஒருவேளை கிருஷ்ணர் என்னை ஏற்றுக் கொள்ளவில்லையோ என்னவோ" என்றெல்லாம் அவள் நினைக்க ஆரம்பித்தாள். அந்த நிலையில் கடவுளை வேண்டிக் கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு ஒரு வழியுமில்லை. ஆகவே கண்களில் கண்ணீர் மல்க, தன்னைக் காப்பாற்றும்படி இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தாள்.

இதற்கிடையில் கிருஷ்ணரும் அந்த அந்தணரும் ஊருக்கு வெளியே இருந்த ஒரு நந்தவனத்திற்கு வந்து சேர்ந்தார்கள். உடனே போய் ருக்மிணியிடம் விஷயத்தைச் சொல்லும்படி கிருஷ்ணர் அந்தணரைக் கேட்டுக் கொண்டார். அந்தணர் வருவதை தூரத்திலிருந்தே ருக்மிணி பார்த்தாள், அவர் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சியையும் அவர் மெதுவாக நடந்து வருவதையும் பார்த்து ருக்மிணிக்கு ஆறுதல் ஏற்பட்டது.

கிருஷ்ணர் வந்து விட்டார் என்று அந்தணரிடமிருந்து அறிந்ததும் அவள் உள்ளம் மகிழ்ச்சியால் குதூகலித்தது. அந்தணருக்கு என்ன கொடுப்பது என்று தெரியாமல் திகைத்து, 'பிராம்மணோத்தமரே! தங்களுக்கு என்ன வெகுமதி கொடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. தாங்கள் காட்டிய அன்புக்கு ஈடாக நான் ஒன்று தான் செய்ய முடியும்' என்று அவர் காலில் விழுந்து, அவர் பாதங்களைத் தன் கண்ணீரால் நனைத்தாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - எழுபத்தி நான்காவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

074 என்னைப் போல் என்றேனோ உபரிசரனைப் போலே|

உபரிசரன் என்றால் மேலுலகங்களில் சஞ்சரிப்பவன் என்று பொருள். உபரிசரன் வசு என்னும் மன்னன், இந்திரனால் பரிசாக அளிக்கப்பட்ட தங்கத் தேரில் மேலுலகம் சென்று வருவான். உபரிசரன் வசு சத்யசீலன், சிறந்த மன்னனாக, தர்மத்தின் வழியில் நாட்டை வழி நடத்தினான். அதனால் தர்ம தேவதை மகிழ்ந்து, வசுக்களைப் போல் அவன் பாதங்கள் பூமியில் படாது வானத்தில் நடக்குமாறு அவனுக்கு வரம் வழங்கினார்.


ஒரு நாள் ரிஷிகளுக்கும், தேவர்களுக்கும் வேள்வியில் பலியிடும் விலங்குகள் குறித்து சர்ச்சை எழுந்தது. ஆடு போன்ற விலங்கினை வேள்வித் தீயில் பலியிட்டால் மட்டுமே வேள்வி முழுமைப் பெரும். வேதத்தின் படி, எந்த ஒரு உயிரினையும் கொல்லுதல் பாவம். ஆதலால், ஆடு போன்ற உருவை தானியங்களில் உருவாக்கி அதை யாகத்தில் இட்டனர் ரிஷிகள். இதற்கு தேவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அந்த யாகத்தில் ஆட்டையே இட வேண்டும் என்றனர். வாக்குவாதம் முற்ற, அவர்கள் உபரிசரனை அணுகி, தர்மத்தின் படி தீர்ப்பை வழங்குமாறு வேண்டினர்.

 உபரிசரனை, ஆட்டை உயிர் பலி கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினான். அதனால் வெகுண்ட முனிவர்கள் அவனை அசுரர்கள் நிறைந்த பாதாள லோகத்தில் புகும் படிச் சபித்தனர். அசுரர்கள் உபரிசரனை பலவகையிலும் துன்புறுத்தினர். ஆனால், இரக்கமில்லாமல் உயிர் பலிக்கு ஆதரவளித்த பாவமே தன்னைப் பாதாள லோகத்தில் தள்ளியது என்பதை உணர்ந்த உபரிச்சரன், திருமாலை உள்ளன்போடு வழிபட்டு, உயிர்களுக்குத் தீங்கு நினையாத வைணவ நெறியே சிறந்தது என்பதை அசுரர்களுக்கு எடுத்துரைத்தார்.

அசுரர்கள் அவரிடம், ‘‘யார் அரக்கர்? யார் வைணவர்?’’ என்று கேட்டதற்கு, அன்று உயிர் பலி கொடுக்க பரிந்துரைத்த என்னைப் போன்றவன் அரக்கன். விஷ்ணுவின் பாதம் வணங்கி, எல்லா உயிரும் ஒன்றென நினைப்பவன் வைஷ்ணவன், ‘‘இன்றைய என்னைப் போல் இருப்பான்’’ என்றார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "உபரிசரன் போல் தன்னையே உதாரணமாக எடுத்துக் காட்டி வைணவ நெறிகளை விளக்கினேனா? இல்லையே! தன்னையே உதாரணம் காட்டும் அளவிற்குத் தன்னால் உயர முடியவில்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 21

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

அத்தை செய்த துதி

ஸ்கந்தம் 01

ப்ரும்மாஸ்திரத்தால் வந்த ஆபத்தை விலக்கி கர்பத்தைக் காத்தது கண்ணன் ஏவிய ஸுதர்சனம் என்பதை குந்தி உடனே புரிந்து கொண்டாள்.


வம்சத்தின் மூத்தவள். பாண்டுவுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த அன்றிலிருந்து காந்தாரியின் பொறாமையைச் சகித்துக் கொண்டு, தன் பிள்ளைகளைக் கொல்லத் துணிந்த கௌரவர்களைச் சகித்துக் கொண்டு, பொறுமையின் உருவமாய்த் திகழ்பவள். பீஷ்மர், விதுரர் போன்ற பெரியவர்கள் இருந்தும் தன் பிள்ளைகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டவள். சிறு வயது முதல், ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் கண்ணன் எப்படி தங்கள் வாரிசுகளைக் காத்தான் என்பதை அருகிலிருந்து பார்த்தவள்.

உத்தரையின் வயிற்றிலிருக்கும் சிசு தான் இப்போது ஒரே வாரிசு. மற்ற அத்தனை குழந்தைகளும் இறந்து விட்டன. அதைக் கண்ணன் காப்பாற்றிக் கொடுத்ததும், அவனது கருணையை நினைத்து குந்தியின் கண்களில் நீர் திரண்டது. குந்தி வசுதேவரின் தங்கை ஆவாள். அதனால் அவள் கண்ணனுக்கு அத்தையாகிறாள். 

ரதத்திலேறி கண்ணன் துவாரகைக்குப் புறப்படும் சமயத்தில் இவ்வளவு அமர்க்களம். கண்ணன் ரதத்தை விட்டு இறங்கவில்லை. குந்தி மெதுவாக ரத்தத்தின் அருகே சென்று கண்ணனைப் பார்த்துக் கைகளைக் கூப்பினாள்.
நீ ஸர்வேஸ்வரன், முதல் காரண புருஷன், பார்வையற்றவனுக்கு விஷயங்கள் தெரியாததைப் போல், மாயையினால் கண்கள் கட்டப்பட்டிருப்பவர்களின் கண்களுக்கு உமது ஸ்வரூபம் தெரிவதில்லை. உம்மை நமஸ்கரிக்கிறேன் என்றாள்.

இப்படிப்பட்ட ஸ்துதிகளைக் கேட்கவா கண்ணன் அவதாரம் செய்தான்?

கலகலவென்று சிரித்தான். மாயையைத் துணைக்கு அழைத்தான்.

"என்னாச்சு அத்தை உனக்கு? ஏன் இப்படி சொல்ற? நீ பெரியவ . நீ போய் எனக்கு நமஸ்காரம்னு சொல்ற?"

அவனைப் பரம்பொருளே என்றழைத்து தூரத்தில் வைப்பதை அவன் விரும்புவதே இல்லை. சிறு பேரழைத்தனவும் சீறியருளாதே என்ற ஆண்டாளின் கூற்றுக்கு இப்பெயர்களெல்லாம் சிறு பெயர்களாயிற்று என்று பெரியவாச்சான் பிள்ளை அவர்கள் வியாக்யானம் செய்கிறார்.

குந்தி புரிந்து கொண்டாள். உடனே, 

க்ருஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாய ச|
நந்தகோப குமாராய கோவிந்தாய் நமோ நம:||

என்று அடுத்த வாக்கியம் சொன்னாள்.

கண்ணன் மகிழ்ந்து போனான். கண்ணா, வசுதேவன் மகனே, நந்தகுமாரா, கோவிந்தா என்பவை அவன் விரும்பி ஏற்கும் விளிப் பெயர்கள். இந்த ஸ்லோகத்தை அறியாதவர்களே இல்லை எனலாம்.

கண்ணனின் தாய் தேவகி, தந்தை வசுதேவர், பின்னர் வளர்ப்புத் தந்தை நந்தன் ஒவ்வொருவராய் வரிசையில் நினைக்கிறாள். எனில் வளர்ப்புத் தாயான யசோதையை நினைக்கவில்லையா என்றால், அவளுக்குத் தனி ஏற்றம். பின்னால் ஒரு ஸ்லோகம் முழுவதும் யசோதையை ஸ்மரிக்கிறாள்.

"என்ன விஷயம் அத்தே சொல்லு"

"உன் அவயவங்கள் ஒவ்வொறுமே தாமரையின் வடிவழகை ஒத்தவை கண்ணா. பதினான்கு வருடங்கள் சிறையில் வாடிய பின்னரே உன் தாயான தேவகியை விடுவித்தாய். ஆனால், உன்னைப் பெற்றவளை விடவும் அதிகமாக என் மீது வாஞ்சை வைத்து ஒவ்வொரு ஆபத்து வரும் போதும் உடனே ஓடி வந்து காத்தாய். பீமனுக்கு விஷம் வைத்தார்கள். நீ காப்பாற்றினாய். அரக்கு 
மாளிகையோடு கொளுத்தப்பட்ட போதும் காத்தாய். ஹிடும்பன் முதலிய ராக்ஷஸர்களிடமிருந்தும், சூதாட்ட சபையில் த்ரௌபதியையும், வனவாஸத்தில் ஒவ்வொரு நாளும் ஏற்பட்ட கண்டங்களிலிருந்தும், காப்பாற்றினாய். ஒவ்வொரு சண்டையிலும், பீஷ்மர் போன்ற மஹாரதர்களின் அஸ்திரங்களிலிருந்தும் இப்போது ப்ரும்மாஸ்திரத்திலிருந்தும் நீயே எங்களைக் காத்தாய். உலகனைத்திற்கும் குருவாய் விளங்குபவன் நீ. நீ ஒடி வந்து தர்சனம் அளித்துக் காக்கும் படியான விபத்துக்களும் கஷ்டங்களும் எங்களுக்கு அடிக்கடி வரட்டும். ஒவ்வொரு கஷ்டமும் உன் தரிசனத்தாலேயே விலகுகிறது.

நீ தயிர்ச் சட்டிகளை உடைத்த போது, யசோதை உன்னைக் கட்டுவதற்கு கயிற்றைக் கொண்டு வந்தாள். அப்போது முகத்தைத் தாழ்த்திக் கொண்டு, பயமே பயப்படும் ஸ்வரூபமாகிய நீ பயந்தவன் போல் நின்றாயே. அந்த உன் ஸ்வரூபம் என்னை மயக்குகிறது. அதுவே என் தியானத்தில் எப்போதும் இருக்கட்டும். பிறப்பே இல்லாத நீ தேவர்களுக்கும் எங்களுக்கும் க்ஷேமம் செய்வதற்காக ப்ரும்மாவின் வேண்டுகோளுக் கிரங்கி அவதரித்திருக்கிறாய். யார் உன் சரித்திரத்தைக் கேட்கிறார்களோ, பாடுகிறார்களோ திரும்ப திரும்ப சொல்கிறார்களோ, அடிக்கடி நினைக்கிறார்களோ அவர்கள் உன் திருவடித் தாமரை யை வெகு சீக்கிரம் பார்க்கிறார்கள். ஹே கிருஷ்ணா! அர்ஜுனனின் தோழனே! வ்ருஷ்ணி குலத் தலைவனே! யோகீஷ்வரா! உனக்கு நமஸ்காரம்!" என்று இன்னும் பலவாறு ஸ்துதி செய்து கண்ணனை வணங்கினாள்.

குந்தி ஸ்துதி எனப்படும் இந்த ஸ்துதி பஞ்ச ஸ்துதிகளுள் ஒன்றாகும்.

இதைக் கேட்டு கண்ணன் அன்போடு ஒரு புன்முறுவல் செய்து விட்டு, "போய்ட்டு வரேன் அத்தை" என்றான்.

அப்போது தர்ம புத்திரர் அருகே வந்து, "கண்ணா, இப்போ தான் ஒரு ஆபத்து விலகியிருக்கு. மனம் ரொம்ப சங்கடமாய் இருக்கு. நீயும் இப்பவே கிளம்பணுமா? நீ இன்னும் கொஞ்ச நாள் எங்களோடு இருந்தா எங்களுக்கு ஆறுதலா இருக்கும்" என்று சொன்னார்.

அங்கிருக்குந்த அனைவர் முகத்தையும் பார்த்தான் கண்ணன். சற்று நேரம் முன்பு ஏற்பட்ட ஆபத்தின் அதிர்ச்சியிலிருந்து ஒருவரும் மீளவில்லை.

"சரி, நான் இப்ப போகல" என்று சொல்லி ரதத்திலிருந்து குதித்து இறங்கி அர்ஜுனனின் தோளின் மீது கையைப் போட்டுக் கொண்டு உள்ளே சென்றான்.

தாமரைக் கண்ணன் ஊருக்குக் கிளம்பவில்லை என்றதும் அனைவரின் முகங்களும் சூரியனைக் கண்ட தாமரையாய் மலர்ந்தன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்