About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 15 July 2023

6. மதுரகவி ஆழ்வார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

----------

  • அம்சம் - நித்யஸூரி குமுதர்
  • அவதார ஸ்தலம் - திருக்கோளூர்
  • காலம் - கி.பி. 9ம் நூற்றாண்டு
  • வருடம் - ஈஸ்வர - த்வாபர யுகம்
  • மாதம் - சித்திரை
  • திரு நக்ஷத்திரம் - சித்திரை
  • திதி - வளர்பிறை சதுர்த்தசி
  • கிழமை - வெள்ளி
  • ஆசார்யன் - நம்மாழ்வார்    
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - ஆழ்வார் திருநகரி 
  • அருளிச் செய்தவை - 1. கண்ணினுண் சிறுத்தாம்பு - முதலாம் ஆயிரம் - 937-947
  • பாசுரங்கள் - 11

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச ஸ்தலங்கள் 
அவர் எந்த திவ்ய தேசத்திற்கும் பாடவில்லை 
----------
பிற பெயர்கள்
இன்கவியார், ஆழ்வாருக்கு அடியான்
----------
நம்மாழ்வாரையே தன் இஷ்ட தெய்வமாகக் கொண்டு வைணவத்தின் எல்லை நிலமாக கருதப்படும் பாகவத சேஷத்வத்தில் ஊன்றி அருளிச் செய்யும் பிரபந்தம் கண்ணிநுண் சிறுத்தாம்பு. நம்மாழ்வார் என்று திருநாமத்தை உச்சரித்த அளவில் நாவில் அமுதம் ஊறுகிறது. வேறொரு தெய்வத்தை நாடாமல் நம்மாழ்வாரின் அருளிச் செயல்களையே பாடி கொண்டுத் திரிவேன். நம்மாழ்வாரே எனக்கு தாயாகவும், தந்தையாகவும், தலைவராகவும் இருந்து என்னை தன் கருணைக்கு பாத்திரம் ஆக்கினார். வேதத்தின் உள் பொருட்களைப் பாடியதோடு அல்லாமல் என்னுடைய நெஞ்சிலே படியும் படி என்னைத் திருத்தி பணி கொண்டார். எம்பெருமானை ஆச்ரயித்த பாகவதர்கள் அனைவரிடமும் பக்தியுடைய நம்மாழ்வாரிடம் பக்தி கொண்டு அருளிச் செய்த இந்த பிரபந்தத்தை உறுதியான நம்பிக்கையுடன் அனுசந்திப்பவர்கள் பரம பதத்தில் வஸிக்க பெறுவர் என்று பிரபந்தத்திற்கு பயனைக் கூறுகிறார்.
----------
தனியன்
அவிதித விஷயாந்தரஸ் ஸ²டாரேர் 
உபநிஷதாம் உபகான மாத்ர போக:|
அபி ச குண வசாத் ததேக ஸே²ஷி 
மதுர கவிர் ஹ்ருதயே மமாவி ரஸ்து||

தனியனின் விளக்கம்
நம்மாழ்வாரைப் பாடுவது தவிர வேறொன்றும் செயலாக நினையாதவர், நம்மாழ்வார் பாசுரம் தவிர வேறொன்றையும் பாடவும் விழையாதவர், அவருக்கே அடிமைப் பட்டவரான மதுரகவி ஆழ்வார் அடியேன் மனத்தில் உறுதியாக எழுந்தருளட்டும்.

வாழி திருநாமம்
சித்திரையில் சித்திரை நாள் சிறக்க வந்தோன் வாழியே|
திருக்கோளூர் அவதரித்த செல்வனார் வாழியே|
உத்தர கங்கா தீரத் துயர் தவத்தோன் வாழியே|
ஒளி கதிரோன் தெற்கு உதிக்க உகந்து வந்தோன் வாழியே|
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே|
பராங்குசனே பரன் என்று பற்றினான் வாழியே|
மத்திமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே|
மதுரகவி திருவடிகள் வாழி வாழி வாழியே||

திருநாள் பாட்டு
1. ஏரார் மதுரகவி* இவ்வுலகில் வந்துதித்த*
சீராரும் சித்திரையில் சித்திரை நாள்* 
பாருலகில் மற்றுள்ள ஆழ்வார்கள்* வந்துதித்த நாள்களிலும்*
ற்றது எமக்கென்று நெஞ்சே ஓர்!

2. வாய்த்த திருமந்திரத்தின்* மத்திமமாம் பதம் போல்*
சீர்த்த மதுரகவி செய் கலையை* 
ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள்* 
அருளிச்செயல் நடுவே* சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

5. நம்மாழ்வார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - ஸேனை முதலியார்
  • அவதார ஸ்தலம் - திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)
  • காலம் - கி.பி. 9ம் நூற்றாண்டு
  • வருடம் - பிரமாதி - கலியுகம் தொடங்கி 43 ம் நாள் 
  • மாதம் - வைகாசி
  • திரு நக்ஷத்திரம் - விசாகம்
  • திதி - பவுர்ணமி
  • கிழமை - வெள்ளி
  • தந்தை - காரி
  • தாய் - உடைய நங்கை
  • ஆசார்யன் - ஸேனை முதலியார்
  • அருளிச் செய்தவை -                                                                                                  1. திருவிருத்தம் (ரிக் வேத ஸாரம்) - மூன்றாம் ஆயிரம் - 2478-2577 (100 பாசுரங்கள்),                                                                                                                  2. திருவாசிரியம் (யஜுர் வேத ஸாரம்) - மூன்றாம் ஆயிரம் - 2578-2584 (7 பாசுரங்கள்),                                                                                                                  3. பெரிய திருவந்தாதி (அதர்வண வேத ஸாரம்) - மூன்றாம் ஆயிரம் - 2585-2671 (87 பாசுரங்கள்),                                                                                          4. திருவாய்மொழி (ஸாம வேத ஸாரம்) - நான்காம் ஆயிரம் - 2675-3776 (1102 பாசுரங்கள்)
  • பாசுரங்கள் - 1296

----------
மங்களாஸாஸநம்: செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் - 37; பாசுரங்கள் - 419

  • திருவரங்கம் 12 பாசுரங்கள்
  • திருப்பேர்நகர் 11 பாசுரங்கள்
  • திருக்குடந்தை 11 பாசுரங்கள்
  • திருவிண்ணகரம் 11 பாசுரங்கள்
  • திருக்கண்ணபுரம் 11 பாசுரங்கள்
  • திருத்தஞ்சை மாமணிக் கோயில் 1 பாசுரம்
  • திருவெஃகா 1 பாசுரம்
  • திருநாவாய் 11 பாசுரங்கள்
  • திருக்காட்கரை 11 பாசுரங்கள்
  • திருமூழிக்களம் 11 பாசுரங்கள்
  • திருவல்லவாழ் 11 பாசுரங்கள்
  • திருக்கடித்தானம் 11 பாசுரங்கள்
  • திருச்செங்குன்றூர் 11 பாசுரங்கள்
  • திருப்புலியூர் 11 பாசுரங்கள்
  • திருவாறன்விளை 11 பாசுரங்கள்
  • திருவண்வண்டூர் 11 பாசுரங்கள்
  • திருவனந்தபுரம் 11 பாசுரங்கள்
  • திருவாட்டாறு 11 பாசுரங்கள்
  • திருவண்பரிசாரம் 1 பாசுரம்
  • திருக்குறுங்குடி 13 பாசுரங்கள்
  • திருசீரவரமங்கை 11 பாசுரங்கள்
  • திரு வைகுந்தம் 2 பாசுரங்கள்
  • திருவரகுணமங்கை 1 பாசுரம்
  • திருப்புள்ளிங்குடி 12 பாசுரங்கள்
  • திருத்தொலைவில்லி மங்கலம் 11 பாசுரங்கள்
  • திருக்குளந்தை 1 பாசுரம்
  • திருக்கோளூர் 12 பாசுரங்கள்
  • திரு தென் திருப்பேரை 11 பாசுரங்கள்
  • திருக்குறுகூர் 11 பாசுரங்கள்
  • திருமாலிருஞ்சோலை 46 பாசுரங்கள்
  • திருமோகூர் 11 பாசுரங்கள்
  • திரு அயோத்தி 1 பாசுரம்
  • திரு வடமதுரா 10 பாசுரங்கள்
  • திரு துவாரகா 1 பாசுரம்
  • திருவேங்கடம் 52 பாசுரங்கள்
  • திருப்பாற் கடல் 9 பாசுரங்கள்
  • திரு பரமப்பதம் 24 பாசுரங்கள்

----------
பிற பெயர்கள்
குருகூர் சடகோபன், பராங்குசன், சடாரி, மாறன், வகுலா பரணன், குருகையர் கோன், மகிழ்மாறன், சதாஜித், குருகூர் நம்பி, தொண்டர்பிரான், நாவிரர், கரிமாறன், திரு நாவீருடையபிரான், உதய பாஸ்கரர் , வகுள பூஷண பாஸ்கரர் , குருகை பிரான், ஞான தமிழுக்கு அரசு, ஞான தமிழ் கடல், திருவாய்மொழி பெருமாள், மெய் ஞான கவி, பொருநல் துரைவன், தெய்வ ஞானகவி, குமரி துரைவன், தெய்வ ஞான செம்மல், பவரோக பண்டிதன், நாவலர் பெருமாள், முனி வேந்து, பாவலர் தம்பிரான், பரப் பிரம்ம யோகி, வினவாத்து உணர்த விரகர், நிகாவலன் பெருமாள், குழந்தை முனி, ஞான தேசிகன், ஸ்ரீவைஷ்ணவ குலபதி, ஞானபிரான், பிரப்பன்ன ஜன கூடஸ்தர், மணிவள்ளி, இன்ப மாரி, நம் பெரியவர், பராங்குச நாயகி 
----------
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாயான நம்மாழ்வார், ரிக் வேத ஸாரமான திருவிருத்தத்தில், தன் ஞானக் கண்ணுக்கு இலக்காகும் பகவானிடம், அவன் அனுபவத்திற்கு தடையாக உள்ள சரீரத்தை போக்கி அருள வேண்டும் எனக் கதறுகிறார். ஆழ்வாருடைய இந்த பதற்றம் தீரும்படி எம்பெருமான் தன் ஸ்வரூப, ரூப, குண, விபூதிகளை ஆழ்வாருக்குக் காட்ட, அதைக் கண்டு அநுபவித்த ஆழ்வார், அந்த திவ்ய மங்கள விக்ரஹத்தில் கொள்ளும் பர பக்தி, பர ஞான, பரம பக்திகளே உயர்ந்த புருஷார்த்தம் என்றும், அவன் திருவடிகளைப் பற்றி அவன் க்ருபைக்கு பாத்திரமான பாகவதர்களிடமும் பக்தி கொண்டு, தொண்டு செய்ய வேண்டும் என்று யஜுர் வேத ஸாரமான திருவாசிரியத்தில் காட்டுகிறார். அதர்வண வேத ஸாரமான பெரிய திருவந்தாதியில், பரமாத்மாவின் குணாநுபவத்தில் ஈடுபடுகிறார். ஹே பகவானே! பெற்ற தாயைப் போல் பிரியமுள்ளவனும், தந்தையைப் போல நலம் செய்பவனும், ஆசாரியனைப் போல ஆத்மாவிற்கு நன்மை செய்பவனும் நீயே. உன்னையே வேண்டும் அடியவர்களுக்கு உன் இனிமை மிகுந்த அனுபவத்தை கொடுத்த பின்னும், 'இன்னும் என்ன தரலாம்?' என்று நீ கலங்கி இருப்பது உன் சிவந்த திருக்கண்கள் காட்டுகிறதே என்று அனுபவிக்கிறார். ஸாம வேத ஸாரமான திருவாய் மொழியில், சேதனர்களுக்கு ஒரே புகலாக விளங்கும் பரமாத்ம ஸ்வரூபம், அடையப் புகும் ஜீவாத்ம ஸ்வரூபம், அடையப் போகும் பலத்தின் (பயன்) ஸ்வரூபம், அதை அடையக் கூடிய வழியான உபாய ஸ்வரூபம், அதை அடைய ஒட்டாமல் தடுக்கும் விரோதி ஸ்வரூபம் என்னும் அர்த்த பஞ்சகமும் அடங்கிய சாஸ்திரத்தின் ஸாரமான பொருளை உபதேசிக்கிறார். மந்திர ரத்னமான த்வய மந்திரத்தின் விவரமாக அமைந்திருப்பதே இப்பிரபந்தம். நாம் அனைவரும் ஒரு ஸதாசார்யரின் திருவடிகளை பற்றி திருவாய் மொழியின் ஸாரத்தை பருகுவோம்
----------
தனியன்
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூ⁴தி:
ஸர்வம் ய தே³வ நியமேந மத்³ அந்வயா நாம்|
ஆத்³யஸ்யந: குலபதேர் வகுளா பி⁴ராமம்
ஸ்ரீமத் தத³ங்க்⁴ரி யுக³ளம் ப்ரநமாமி மூர்த்⁴நா||

தனியனின் விளக்கம்
ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம் எல்லாமும் ஆனவருமான நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

வாழி திருநாமம்
1. ஆன திருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே|
ஆசிரியம் ஏழு பாட்டும் அளித்த பிரான் வாழியே|
ஈனமற அந்தாதி எண்பத்து ஏழு ஈந்தான் வாழியே|
இலகு திருவாய்மொழி ஆயிரத்து நூற்றிரண்டு உரைத்தான் வாழியே|
வானணியும் மாமாடக் குருகை மன்னன் வாழியே|
வைகாசி விசாகத்தில் வந்து உதித்தான் வாழியே|
சேனையர் கோன் அவதாரம் செய்த வள்ளல் வாழியே|
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே||

2. மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே|
வேதத்தைச் செந்தமிழால் விரித்து உரைத்தான் வாழியே|
ஆதி குருவாய்ப் புவியில் அவதரித்தோன் வாழியே|
அனவரதம் ஸேனையர் கோன் அடி தொழுவோன் வாழியே|
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே|
நன் மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே|
மாதவன் பொற் பாதுகையாய் வளர்ந்து அருள்வோன் வாழியே|
மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே||

3. திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே| 
திருவான திருமுகத்துச் செவி என்றும் வாழியே| 
இருக்கு மொழி என் நெஞ்சில் தேக்கினான் வாழியே| 
எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே| 
கருக் குழியில் புகா வண்ணம் காத்து அருள்வோன் வாழியே|
காசினியில் ஆரியனாய்க் காட்டினான் வாழியே| 
வருத்தமற வந்ததென்ன வாழ வைத்தான் வாழியே| 
மதுரகவி தம் பிரான் வாழி வாழி வாழியே||

4. திருக்குருகூர்த் திருப்புளியில் வளர்ந்த பிரான் வாழியே| 
சேமங்கொள் தென்மறைகள் வெளியிட்டான் வாழியே| 
பெருக்கமுற்ற அடி நிலையாய் வந்து உதித்தான் வாழியே| 
பெரு நிலைகள் மதுர கவிக்கு அருள் புரிந்தோன் வாழியே| 
கருத்துடை நாதமுனிக்கும் கருணை செய்தான் வாழியே| 
குருக்களுக்குத் திலகம் எனக் கூற நின்றான் வாழியே| 
குருகூரன் சடகோபன் குலத் தாள் வாழியே||

திருநாள் பாட்டு
1. ஏரார் வைகாசி* விசாகத்தின் ஏற்றத்தை*
பாரோர் அறிய பகர்கின்றேன்*
சீராரும் வேதம் தமிழ் செய்த* 
மெய்யன் எழில் குருகை* நாதன் அவதரித்த நாள்!

2. உண்டோ வைகாசி* விசாகத்துக்கு ஒப்பொருநாள்?*
உண்டோ சடகோபர்க்கு ஒப்போருவர்?* 
உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு* தென்குருகைக்குண்டோ*
ஒரு பார் தனில் ஒக்கு மூர்!

ஆழ்வாரைப் பற்றிய தனிப் பாடல்கள்
1. தேனறா மலர்த் தொடையலும் மவுலியும், 
திருக்கிளர் குழைக் காதும் கானறா மலர்த் திருமுகச் சோதியும், 
கயிரவுத் துவர் வாயும் மோனமாகிய வடிவமும் மார்பகமும், 
முத்திரைத் திருக்கையும் ஞான தேசிகன் சரண தாமரையும், 
என் நயனம் விட்டு அகலாவே   

2. பாடுவது எல்லாம் பராங்குசனை 
நெஞ்சத்தால் தேடுவது எல்லாம் புளிக் கீழ்த் தேசிகனை 
ஓடிப் போய்க் காண்பது எல்லாம் நங்கை இரு கண்மணியை 
யான் விரும்பிப் பூண்பது எல்லாம் மாறன் அடிப் போது

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

4. திருமழிசை ஆழ்வார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

----------

  • அம்சம் - ஆழி (சக்கரத்தாழ்வார்)
  • அவதார ஸ்தலம் - திருமழிசை
  • காலம் - கி.பி. 7ம் நூற்றாண்டு 
  • வருடம் - சித்தார்த்தி - த்வாபர, கலி யுக சந்தி
  • மாதம் - தை
  • திரு நக்ஷத்திரம் - மகம்
  • திதி - தேய்பிறை பிரதமை
  • கிழமை - ஞாயிறு
  • தந்தை - பார்க்கவ முனிவர்
  • தாய் - கனகாங்கி 
  • ஆசார்யன் - ஸேனை முதலியார், பேயாழ்வார்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருக்குடந்தை
  • அருளிச் செய்தவை -                                                                                                      1. திருச்சந்த விருத்தம் - முதலாம் ஆயிரம் - 752-871 (120 பாசுரங்கள்)            2. நான்முகன் திருவந்தாதி - மூன்றாம் ஆயிரம் - 2382-2477 (96 பாசுரங்கள்)
  • பாசுரங்கள் - 216

----------
மங்களாஸாஸநம்: செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் - 17; பாசுரங்கள் - 67

  • திருவரங்கம் 14 பாசுரங்கள்
  • திரு அன்பில் 1 பாசுரம்
  • திருப்பேர் நகர் 1 பாசுரம்
  • திருக்கவித்தலம் 1 பாசுரம்
  • திருக்குடந்தை 7 பாசுரங்கள்
  • திருப்பாடகம் 2 பாசுரங்கள்
  • திருஊரகம் 2 பாசுரங்கள்
  • திருவெஃகா 3 பாசுரங்கள்
  • திருஎவ்வுள் 1 பாசுரம்
  • திருவல்லிக்கேணி 1 பாசுரம்
  • திருக்குறுங்குடி 1 பாசுரம்
  • திருக்கூடல் 1 பாசுரம்
  • திருக்கோஷ்டியூர் 1 பாசுரம்
  • திரு துவாரகா         1 பாசுரம்
  • திருவேங்கடம்         15 பாசுரங்கள்
  • திருப்பாற் கடல் 13 பாசுரங்கள்
  • திரு பரமப்பதம் 2 பாசுரங்கள்
----------
பிற பெயர்கள்
பக்தி சாரர், பார்கவர், மகிசாரபுரீஸ்வரர், மழிசை பிரான்
----------

இவர் எம்பெருமானுடைய அந்தர்யாமித்வத்தில் மிகவும் ஊன்றியவர். சிறந்த யோகிகள் மற்றும் பக்தர்களுக்கு, எம்பெருமான் தன் திருமேனியுடன் அவர்களுடைய இதயத்தில் காட்சி கொடுப்பான். அப்படி இவருக்கு எம்பெருமான் காட்சி தர, அதிலேயே மிகவும் ஈடுபட்டிருந்தவர். அதற்கு மேலும் முக்கியமாக ஸ்ரீவைஷ்ணவர்கள் என்பவர்கள், ஸ்ரீமந் நாராயணனுக்கு அடிமைப்பட்டு இருக்க வேண்டும். வேறு எந்த எந்த தேவதையையும் மறந்தும் கூட நினைக்க கூடாது என்ற விஷயத்தை மிக ஆழமாக எடுத்துக் காட்டியவர். நான்முகன் திருவந்தாதியில் ஸ்ரீமந் நாராயணனின் பரத்வத்தை நிரூபித்து இதர மதங்களை கண்டனம் செய்கிறார். ஈசர்க்கும் நான்முகற்கும் தெய்வமான நீரே அனைத்து காரணமும், கற்றவையும், கற்பவையும், அனைத்தும் நாராயணனே என்பதை நன்கறிந்தேன் என்று தலைக் கட்டுகிறார்.

திருமழிசை ஆழ்வார் பல சமயங்களிலும் உழன்று, திரிந்து, திருத்தி அமைக்கப்பட்டு, வைணவத்தை அடைந்ததால், சாஸ்திரங்களை கடைந்து திரட்டி ஸாரமாக திருச்சந்த விருத்தத்தை அருளிச் செய்கிறார். ஜகத்திற்கு மூல காரணம், அவனே அனைத்திற்கும் அந்தர்யாமி, அவனே அனைத்திற்கும் ஆதாரம் என அனைத்தும் அந்த முழு முதற் கடவுளான பகவான் ஸ்ரீமந் நாராயணனே என்று காட்டிக் தருகிறார். அவனே ஸர்வ காரணமானதால் சரணடைய தகுந்தவன். அவனுடைய அவதார ரஹஸ்யத்தை அவன் காட்டி தந்தால் அன்றி நம்முடைய சாமர்த்தியத்தால் அறிய முடியாது. அவனது அனைத்து கல்யாண குண விசேஷங்களின் எல்லையை பிராட்டியைத் தவிர பிரம்மாதி தேவர்களாலும், நித்ய சூரிகளாலும் அறிய முடியாது. பகவான் ஸங்கல்பத்தால் தான் ஏற்கும் பிறவிகளில் ஏற்றத் தாழ்வை பார்க்காதது போலவே தன்னை சரண் அடைந்தவர்களின் பிறப்பு, ஞானம், குணவிசேஷம் எதையும் பொருட்படுத்தாமல் அடைக்கலம் அளிப்பவன். திரும்பி வருதல் இல்லாத பரமபதத்தை அடைய அவனே உபாயம் (வழி), அடைவிப்பனும் அவனே, அடையும் பயனும் அவனே, அவனைச் சரணடையுங்கள் என்று உபதேசிக்கிறார்.
----------
தனியன் 1
மகா²யாம் மகரே மாஸே 
சக்ராம்ஸ²ம் பா⁴ர்க³வோத்³ ப⁴வம்| 
மஹீ ஸார புராதீ⁴ஸ²ம் 
ப⁴க்தி ஸார மஹம் ப⁴ஜே||

தனியன் 2
ஸ²க்தி பஞ்சமய விக்ரஹ ஆத்மநே 
ஸூக்தி ஹாரா ஜித்தா சித்த ஹாரிணே|
முக்தி தாயக முராரி பாதயோர் 
பக்தி ஸார முநயே நமோ நம:||

தனியனின் விளக்கம்
எம்பெருமான் முராரியின் கமலப் பாதங்களில் வைத்த பக்தியே வடிவெடுத்தவரும், பஞ்சோபநிஷத்மய திருமேனியை உடைய (நம் சரீரம் நிலம் நீர் காற்று வெளி தீ எனும் பஞ்ச பூதங்களால் ஆனது. எம்பெருமான் திருமேனியோ விஸ்வம், நிவ்ருத்தம், சர்வம், பரமேஷ்டி, புமான் எனும் பஞ்ச உபநிஷத்துகளால் ஆனது) எம்பெருமானைத் தன் நெஞ்சிலே தரித்தவரும், நமக்கு மதி தர வல்லவருமான திருமழிசைப் பிரானுக்கு என் வணக்கங்கள். ஸூக்திஹாரன் என்னும் அரசனிடத்தில் ஜயித்த ஹாரத்தை அணிந்து கொண்டிருப்பவர் என்றும் சொல்லப்படும்.

வாழி திருநாமம்
அன்புடன் அந்தாதி தொண்ணுற்றாறு உரைத்தான் வாழியே|
அழகாரும் திருமழிசை அமர்ந்த பிரான் வாழியே|
இன்ப மிகு தையில் மகத்து இங்கு உதித்தான் வாழியே|
எழிற் சந்த விருத்தம் நூற்றிருபது ஈந்தான் வாழியே|
முன்புகத்தில் வந்து உதித்த முனிவர் கோன் வாழியே|
முழுப் பொன்னிப் பெருக்கெதிர் செல்முதிர் கவியோன் வாழியே|
நன் புவியில் நாலாயிரத்து எழுநூறிருந்தான் வாழியே|
நங்கள் பத்திசாரர் இரு நற்பதங்கள் வாழியே||

திருநாள் பாட்டு
தையில் மகம் இன்று* தாரணியீர்! ஏற்றம்* 
இந்தத் தையில் மகத்துக்கு சாற்றுகின்றேன்* 
துய்ய மதி பெற்ற* மழிசை பிரான் பிறந்த நாள் என்று*
ற்றவர்கள் கொண்டாடும் நாள்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

3. பேயாழ்வார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - நாந்தகம் (வாள்)
  • அவதார ஸ்தலம் - மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் குளத்தில் செவ்வல்லி மலரில் - அயோநிஜர் (சுயம்பு)
  • காலம் - கி.பி. 7ம் நூற்றாண்டு
  • வருடம் - சித்தார்த்தி
  • மாதம் - ஐப்பசி
  • திரு நக்ஷத்திரம் - சதயம்
  • திதி - வளர்பிறை தசமி
  • கிழமை - வியாழன்
  • ஆசார்யன் - ஸேனை முதலியார்
  • அருளிச் செய்தவை - 1. மூன்றாம் திருவந்தாதி - மூன்றாம் ஆயிரம் - 2282-2381 
  • பாசுரங்கள் - 100

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் - 15; பாசுரங்கள் - 44

  • திருவரங்கம்         2 பாசுரங்கள்
  • திருக்குடந்தை         2 பாசுரங்கள்
  • திருவிண்ணகரம் 2 பாசுரங்கள்
  • திருக்கச்சி         1 பாசுரம்
  • திருஅஷ்டப்புஜகரம் 1 பாசுரம்
  • திருவேளுக்கை 3 பாசுரங்கள்
  • திருப்பாடகம்         1 பாசுரம்
  • திருவெஃகா         4 பாசுரங்கள்
  • திருவல்லிக்கேணி 1 பாசுரம்
  • திருக்கடிகை         1 பாசுரம்
  • திருமாலிருஞ்சோலை 1 பாசுரம்
  • திருக்கோஷ்டியூர் 1 பாசுரம்
  • திருவேங்கடம்         19 பாசுரங்கள்
  • திருப்பாற்கடல் 4 பாசுரங்கள்
  • திரு பரமப்பதம் 1 பாசுரம்

----------
பிற பெயர்கள்
கைரவ முனி, மஹாதாஹ்வாயா, ஓடித் திரியும் யோகிகள்
----------
சிறுவயது முதல் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அவர் மனம் எப்போதும் பரமனின் திருவடியையே நாடி நின்றது. திருமாலின் திருப்புகழை பாமாலையாக்கி நாள்தோறும் தொடுப்பார் இவர். அப்பொழுது இவர் கண்களில் ஆனந்த வெள்ளம் கரை புரண்டோடும். திருமாலின் திருப்பாதம் பணியுங்கள். உங்கள் வினைகள் ஓடிப் போகும். அத்துடன் மீண்டும் உங்களை தொடாது. முதலாழ்வார்கள் எனப்பட்ட பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரில் இவர் தான் அதிகமான ஸ்தலங்களைப் பாடி உள்ளார். திருக்கோவிலூரில் உள்ள ஒரு வைணவரின் வீட்டில் விளக்கு வெளிச்சத்தில் நாராயணன் நிற்பது முதலில் பேயாழ்வாருக்கு தான் தெரிந்தது. இப்படி பரமனைக் கண்ட பரவசத்தில் திருக்கண்டேன். பொன்மேனி கண்டேன் என்று துவங்கி நூறு பாடல்களை பாடினார். மேலும் திருவேங்கடம் சென்ற இவர் பெருமானை சிவனும், விஷ்ணுவும் கலந்த உருவாக கண்டார். பெருமாள் மேல் ஆராக்காதல் கொண்டு வேறு எதையும் நினைக்காமல் வாழ்ந்தார். பக்தி பரவசத்தில் அதுவே ஒரு வெறிபோல் தோன்றும்படி அவர் அழுவார். தொழுவார். ஆடிக் காண்பார். இறை பக்தியில் தன்னை முழுதும் மறந்து போனதால் இவர் பேயர் போலும் பித்தர் போலும் திரிந்தார். இதனாலேயே இவர் பேயாழ்வார் என் அழைக்கப் பட்டார்.  

உபயவிபூதி நாயகன் ஸ்ரீயுடன் கூடினவன் என்று பக்தியால் பகவானை அநுபவித்தபடி பேசுகிறார். அவன் திருவடிகளை சேவித்த அளவில் எல்லை இல்லாமல் வளரும் பிறவிகளைப் போக்கினேன். கொடியதான நரக வாஸத்திலிருந்து என்னை மீட்பதற்கு அவனே அருமருந்தாக திகழ்கிறான். என் மனதில் குடியேறிய அவனது திருப் பாதங்களே நான் பெற்ற பெரும் செல்வமும் அமிர்தமும் ஆகும். திருவனந்தாழ்வான் ஆகிற மெத்தென்ற பஞ்ச சயனத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்வாமி, அதை விட்டு என் மனமாகிற மலரணையில் பள்ளி கொண்டான் என்று அனுபவிக்கிறார். அவன் புகழை பேச வல்லவர்களும் பூரணமாக பேசி முடித்துவிட முடியுமா? முடியவே முடியாது. என் வாக்கு ஸதா ஸர்வ காலமும் அவனையே மங்களாசாசனம் செய்ய வேண்டும். தியானம் செய்வோரின் மனதில் அவன் அகலாது பொருந்தியுள்ளான் என்று உறுதி கொள் என்று தன் நெஞ்சை விளித்துக் கூறுகிறார். தவம் புரிவதற்காக மலைகளில் நிற்கவோ தடாகங்களில் மூழ்கவோ பஞ்சாக்னியில் வாடவோ தேவையில்லை. பயனை எதிர் பார்க்காமல் அன்புடன் அவன் திருவடிகளில் மலர்களை இட்டு அஞ்சலி செய்தாலே பாவங்கள் தான் இருக்க தகுந்த இடம் இதுவல்ல என்று ஓடிப் போய்விடும் என்கிறார். தேன் மிகுந்த தாமரை மலரில் நித்யவாஸம் புரியும் ஸ்ரீமகாலட்சுமியை அநுபவித்தபடியே பிரபந்தத்தைத் தலைக்கட்டுகிறார்.
----------
தனியன் 1
துலா ஸ²த அபி⁴ஷக் ஜாதம் 
மயூர புரி கைர வாத்| 
மஹந்தம் மஹதா யாதம் 
வந்தே³ ஸ்ரீநந்த³ காம்ஸ²கம்||

தனியன் 2
த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா 
விஷ்ணும் ரமயா மயிலாதிபம்|
கூபே ரக்தோத் பலே ஜாதம் 
மஹதாஹ்வயம் ஆச்ரயே||

தனியனின் விளக்கம்
திருமயிலைத் தலைவர், கிணற்றில் செவ்வல்லிப் பூவில் அவதரித்த ஸ்ரீமந் நாராயணனைக் கண்ட திவ்ய சக்ஷுஸ் பெற்ற பேயாழ்வார் திருவடிகளை வணங்குகிறேன்.

வாழி திருநாமம்
திருக்கண்டேன் என நூறும் செப்பினான் வாழியே|
சிறந்த ஐப்பசியில் சதயம் சனித்த வள்ளல் வாழியே|
மருக் கமழும் மயிலை நகர் வாழ வந்தோன் வாழியே|
மலர்க்கரிய நெய்தல் தனில் வந்து உதித்தான் வாழியே|
நெருக்கிடவே இடை கழியில் நின் செல்வன் வாழியே|
நேமி சங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே|
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே|
பேயாழ்வார் தாளிணை இப்பெரு நிலத்தில் வாழியே||

திருநாள் பாட்டு
1. ஐப்பசியில் ஓணம்* அவிட்டம் சதயம் இவை*
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்* 
எப்புவியும் பேசு புகழ்* பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்*
தேசுடனே தோன்று சிறப்பால்!

2. மற்றுள்ள ஆழ்வார்களுக்கு* முன்னே வந்துதித்து*
ற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த* 
பெற்றிமையோர் என்று
முதலாழ்வார்கள் என்னும் பெயரிவர்க்கு*
நின்து உலகத்தே நிகழ்ந்து*

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

2. பூதத்தாழ்வார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - கௌமோதகம் (கதை)
  • அவதார ஸ்தலம் - திருக்கடல்மல்லை (மகாபலிபுரம்) தலசயனப் பெருமாள் கோவிலில் மல்லிகை புதர்களுக்கிடையே நீலோத்பவ மலரின் நடுவில் - அயோநிஜர் (சுயம்பு)
  • காலம் - கி.பி. 7ம் நூற்றாண்டு 
  • வருடம் - சித்தார்த்தி
  • மாதம் - ஐப்பசி
  • திரு நக்ஷத்திரம் - அவிட்டம்
  • திதி - ஐப்பசி வளர்பிறை நவமி
  • கிழமை - புதன்
  • ஆசார்யன் - ஸேனை முதலியார்
  • அருளிச் செய்தவை - 1. இரண்டாம் திருவந்தாதி - மூன்றாம் ஆயிரம் - 2182-2281
  • பாசுரங்கள் - 100 

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் - 14; பாசுரங்கள் - 31

  • திருவரங்கம்                 4 பாசுரங்கள்
  • திருக்குடந்தை                 2 பாசுரங்கள்
  • திருத்தஞ்சை மாமணிக் கோயில் 1 பாசுரம்
  • திருக்கோவிலூர்                 1 பாசுரம்
  • திருக்கச்சி                         2 பாசுரங்கள்
  • திருத்தண்கா                 1 பாசுரம்
  • திருப்பாடகம்                 1 பாசுரம்
  • திருநீர்மலை                 1 பாசுரம்
  • திருக்கடல் மல்லை                 1 பாசுரம்
  • திருத்தங்கல்                 1 பாசுரம்
  • திருமாலிருஞ்சோலை         3 பாசுரங்கள்
  • திருக்கோஷ்டியூர்                 2 பாசுரங்கள்
  • திருவேங்கடம்                 9 பாசுரங்கள்
  • திருப்பாற்கடல்                 2 பாசுரங்கள்

----------
பிற பெயர்கள்
பூத யோகி, ஓடித் திரியும் யோகிகள்
----------
உபய விபூதி நாயகனான ஸ்ரீமந் நாராயணனை தம் பக்தியால் தியானித்து, பக்தி பரவசத்தால் பக்குவம் அடைந்து, உண்மை அறிவை உபதேசிக்கிறார். ஞான ஸ்வரூபமான ஆத்மா, அவனிடம் கொண்ட பக்தியில் உருகி கரைந்து, தான் பகவானுக்கு தாஸபூதன் என்று அறியாமல் போனாலும், அவனை நம் மனதில் ஸ்திரமாக குடியேறும் படி செய்வதே நமக்கு சகல இஷ்டங்களையும் அருளும். மேட்டு நிலத்தை தடாகமாக்கி மழை நீரை சேமிக்க தகுந்த பாத்திரமாகச் செய்ய வேண்டும் என்பதை நமக்கு காட்டி தருகிறார்.

வேதத்தின் பொருளை அறியாதவர்கள் கலங்க வேண்டாம். புருஷோத்தமனான பகவானின் திருநாமத்தை துதிப்பதே வேதத்தின் ஸாரமான பொருள் என்பதை அறிவீர் என்று உபதேசிக்கிறார். ஆதிமூல காரணமான பகவானின் திருவடிகளில் மன்னிக்கிடப்பவர்களின் பாதங்களை தொழுவதே தன் கரங்களின் உயர்ந்த செயலாக கருதுகிறார். கண்ணனே நம் பாவங்களுக்கு சத்ரு என்ற திட நம்பிக்கை கொண்டு வணங்குவோம் என்று உபதேசிக்கிறார்.
----------
தனியன் 1
துலா த⁴நிஷ்ட² ஸம்பூ⁴தம் 
பூ⁴தம் கல்லோல மாலிநம்|
தீரே பு²ல்லோத் பலே 
மல்லாபுர்ய மீடே³ க³தா³ம் ஸ²கம்||

தனியன் 2
மல்லாபுர வராதீஸ²ம் 
மாதவீ குஸுமோத் பவம்|
பூதம் நமாமி யோ விஷ்ணோர் 
ஜ்ஞாந தீபம் அகல் பயத்||
 
தனியனின் விளக்கம்
திருக்கடல்மல்லைத் தலைவர், மாதவிப் பூவில் அவதரித்தவர், தம் ஞான திருஷ்டியால் நாராயணனைக் கண்டுகளிக்க ஞான தீபம் ஏற்றியவரான பூதத்தாழ்வாரை வணங்குகிறேன்.

வாழி திருநாமம் 
அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே|
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே|
நன்புகழ் சேர் குருக்கத்தி நாண் மலரோன் வாழியே|
நல்ல திருக்கடல்மல்லை நாதனார் வாழியே|
இன்புருகு சிந்தை திரி இட்ட பிரான் வாழியே|
எழில் ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே|
பொன் புரையும் திருவரங்கர் புகழ் உரைப்போன் வாழியே|
பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே||

திருநாள் பாட்டு
1. ஐப்பசியில் ஓணம்* அவிட்டம் சதயம் இவை*
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்* 
எப்புவியும் பேசு புகழ்* பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்*
தேசுடனே தோன்று சிறப்பால்!

2. மற்றுள்ள ஆழ்வார்களுக்கு* முன்னே வந்துதித்து*
ற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த* 
பெற்றிமையோர் என்று
முதலாழ்வார்கள் என்னும் பெயரிவர்க்கு*
நின்து உலகத்தே நிகழ்ந்து*

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

1. பொய்கையாழ்வார்

 ||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - பாஞ்சசன்னியம் (சங்கு)
  • அவதார ஸ்தலம் - காஞ்சீபுரம் திருவெஃகா யதோக்தகாரி கோயிலில் பொற்றாமரை பொய்கையில் தாமரை மலரில் - அயோநிஜர் (சுயம்பு)
  • காலம் - கி.பி. 7ம் நூற்றாண்டு 
  • வருடம் – சித்தார்த்தி (த்வாபர யுக கலியுக சந்தி)
  • மாதம் - ஐப்பசி
  • திரு நக்ஷத்திரம் - திருவோணம்
  • திதி - வளர்பிறை அஷ்டமி
  • கிழமை - செவ்வாய்
  • ஆசார்யன் - ஸேனை முதலியார்
  • அருளிச் செய்தவை - 1. முதலாம் திருவந்தாதி - மூன்றாம் ஆயிரம் - 2082-2181 
  • பாசுரங்கள் - 100

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் – 6; பாசுரங்கள் - 17 

  • திருவரங்கம்         1 பாசுரம்
  • திருக்கோவிலூர்         2 பாசுரங்கள்
  • திருவெஃகா         1 பாசுரம்
  • திருவேங்கடம்         10 பாசுரங்கள்
  • திருப்பாற்கடல் 1 பாசுரம்
  • திரு பரமப்பதம் 2 பாசுரங்கள்
----------
பிற பெயர்கள்
சரோ யோகி, பொய்கை பிரான், பத்ம முனி, காவினிய போரேயர், கிரக முனி, மகாதேவயார், தமிழ் தலைவன் 
----------
வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் ஆவார். பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் என்று அழைக்கப்படுகிறார். இவரே திருமாலின் பத்து அவதாரங்களையும் முதலில் சிறப்பித்துப் பாடியவர் ஆவார். இவர் கவிஞர் தலைவன் என்று வைணவர்களால் சிறப்பிக்கப்படுகிறார். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப் போற்றப்படுகிறது. ஒரு சமயம் பொய்கையாழ்வார் மழையின் காரணமாக திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் வந்தனர். இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு திருமால் மூவருக்கும் காட்சியளித்தார். முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.

பரமபதத்திற்கும் இம்மண்ணுலகத்திற்கும் ஒரே நாதனாக ஒப்பற்ற ஸ்வாமியாக விளங்குபவன் ஸ்ரீமன் நாராயணன் என்பதை தன் ஞானத்தால் உணர்ந்தார். உபய விபூதியையும் தியானத்து, பிறந்த ஞானத்தாலே, அவரவர் தாம் தாம் அறிந்தவாறு தந்தமக்கு விருப்பமான உருவம், பெயர் வைத்து பரம்பொருளான அவனைத் தொழுதாலும், கருணைக் கடலான அவன் அருள் புரிவது திண்ணம் என்று உலகோருக்கு அவனது எளிமையை எடுத்துக் கூறுகிறார். மூவரான மும்மூர்த்திகளில் முதல்வனானவன் கடல்நிற வண்ணன் எம்பெருமான். திருநாபியில் பிரமனுக்கு இடம் அளித்து வேதத்தை ஓதுவிக்குமாறு உபதேசித்த அந்த எம்பெருமானை மனதால் சிந்தனை செய்யாமல் கர்மானுஷ்டானங்கள் செய்வதால் ஒரு பயனும் இல்லை. மனத்தூய்மையுடன் வாயினால் பாடி, தூ மலர் கொண்டு தொழுதால் தீராத பாவ வினைகளும் அணுகாமல் பரம பக்தியாகிற செல்வம் வளர பெறுவோம் என்று நாம் உய்ய மிகவும் சுலபமான வழியைக் காட்டித் தருகிறார்.
----------
தனியன் 1
துலாயாம் ஸ்²ரவணே ஜாதம் 
காஞ்ச்யாம் காஞ்சந வாரிஜாத்| 
த்³வாபரே பாஞ்ச ஜந்யாம்ஸ²ம் 
ஸரோ யோகி³நம் ஆஸ்²ரயே|| 

தனியனின் விளக்கம்
த்வாபர யுகத்தில், ஐப்பசி மாஸ ஸ்ரவண நக்ஷத்ரத்தில், காஞ்சீபுரியில், பொற்றாமரையில், பாஞ்ச ஜந்ய அம்ஸமாகத் தோன்றிய பொய்கை ஆழ்வாரை வணங்குகிறேன்.

தனியன் 2
காஞ்ச்யாம் ஸரஸி ஹேமாப்ஜே 
ஜாதம் காஸார யோகிநம்|
கலயே ய: ஸ்ரிய:பதி 
ரவிம் தீபம் அகல்பயத்|

தனியனின் விளக்கம்
காஞ்சித் திருவெஃகாத் திருக்குளத்தில் தங்கத்  தாமரைப் பூவில் அவதரித்த, தம் திவ்ய ஞான ஒளியால் ஸூர்ய தேஜஸ்ஸில் ஸ்ரீமந் நாராயணனைக் கண்ட பொய்கை ஆழ்வாரைத்  துதிக்கிறேன்.

வாழி திருநாமம் 
செய்ய துலா ஓணத்தில் செகத்து உதித்தான் வாழியே|
திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தோன் வாழியே|
வையந் தகளி நூறும் வகுத்து உரைத்தான் வாழியே|
வனச மலர்க் கருவதனில் வந்து அமைந்தான் வாழியே|
வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே|
வேங்கடவர் திருமலையை விரும்பும் அவன் வாழியே|
பொய்கை முனி வடிவழகும் பொற்பதமும் வாழியே|
பொன் முடியும் திருமுகமும் பூதலத்தில் வாழியே||

திருநாள் பாட்டு
1. ஐப்பசியில் ஓணம்* அவிட்டம் சதயம் இவை*
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்* 
எப்புவியும் பேசு புகழ்* பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்*
தேசுடனே தோன்று சிறப்பால்!

2. மற்றுள்ள ஆழ்வார்களுக்கு* முன்னே வந்துதித்து*
ற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த* 
பெற்றிமையோர் என்று
முதலாழ்வார்கள் என்னும் பெயரிவர்க்கு*
நின்து உலகத்தே நிகழ்ந்து*

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்