About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 11 October 2023

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - த்யான ஸ்லோகம் 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 6
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:

கோ³ஷ் பதீ³க்ருத வாராஸி²ம்
மஸ²கீ க்ருத ராக்ஷஸம்|
ராமாயண மஹா மாலா ரத்னம் 
வந்தே³ அனிலாத் மஜம்||

  • கோ³ஷ் பதீ³க்ருத வாராஸி²ம் - கடல் எவருக்கு குளம்படி ஜாலம் போல் ஆயிற்றோ
  • மஸ²கீ க்ருத ராக்ஷஸம் - ராக்ஷசர்கள் எவருக்கு கொசு போன்று ஆயினரோ
  • ராமாயண மஹா மாலா ரத்னம் - எவர் ராமாயணம் என்னும் மகத்தான ஹாரத்திற்கு பதக்கமாகிற ரத்தினம் போல் உள்ளவரோ
  • அனிலாத் மஜம் - அந்த ஹனுமானை
  • வந்தே³ - வணங்குகிறேன்

கடல் எவருக்கு குளம்படி ஜாலம் போல் ஆயிற்றோ, ராக்ஷசர்கள் எவருக்கு கொசு போன்று ஆயினரோ, எவர் ராமாயணம் என்னும் மகத்தான ஹாரத்திற்கு பதக்கமாகிற ரத்தினம் போல் உள்ளவரோ அந்த ஹனுமானை வணங்குகிறேன்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 42 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.20

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 42 - கண்ணன் திருக்குழல்கள்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - இருபதாம் பாசுரம்

அழகிய பைம் பொன்னின்* 
கோலங்கைக் கொண்டு* 
கழல்கள் சதங்கை* 
கலந்தெங்கும் ஆர்ப்ப* 
மழ கன்றினங்கள்* 
மறித்துத் திரிவான்* 
குழல்கள் இருந்தவா காணீரே* 
குவி முலையீர்! வந்து காணீரே|

  • அழகிய - அழகியதும்
  • பைம் பொன்னின் - பசும் பொன்னால் செய்யப்பட்டதுமான
  • கோல் - மாடு மேய்க்குங் கோலை
  • அங்கை - அழகிய கையிலே
  • கொண்டு - பிடித்துக் கொண்டு
  • கழல்கள் -  பாதங்களில் உள்ள வீரக்கழல்களும்
  • சதங்கை - சதங்கைகளும்
  • கலந்து - ஒன்றோடு ஒன்று கலந்து
  • எங்கும் ஆர்ப்ப - எல்லா இடங்களிலும் சப்திக்க
  • மழ - இளமை பொருந்திய
  • கன்று இனங்கன் - கன்றுகளின் கூட்டங்களை
  • மறித்து - கை விட்டுத் தனித்து போகாமல் மடக்கி
  • திரிவான் - ஓடி ஓடி திரியும் கண்ணபிரானுடைய  
  • குழல்கள் - சுருண்ட கூந்தல்
  • இருந்தவா காணீர்! - அழகாக இருப்பதை வந்து பாருங்கள் 
  • குவி முலையீர்! - குவிந்த முலைகளை உடைய அழகிய இளம் பெண்களே!
  • வந்து காணீர்! - வந்து பாருங்கள்

அழகான பசும் பொன்னால் செய்யப்பட்ட மாடு மேய்க்குங் கோலை தன் அழகிய உள்ளங்கைகளில் பிடித்தவாறே கண்ணன் திரிகையில், அவனுடைய காலணிகளும், சலங்கைகளும், அவன் நடக்கும் போதெல்லாம் ஒலி எழுப்புகின்றன. அவ்வொலி கானகமெங்கும் எதிரொலிக்க, இளம் கன்றுகள் மந்தையை விட்டுத் தனித்து வழி செல்லும் மழலைக் கன்றுக்குட்டிகளை மறித்து மந்தையோடு இணைத்து, ஆநிரைகளின் மேய்ச்சலுக்காகக் கானகமெங்கும் அலைந்து திரிபவனின் சுருண்ட கூந்தலழகை வந்து பாருங்கள். இந்த கோவலக் குமரனின் கூந்தலழகை காணுமாறு அங்கிருந்த அழகிய இளம் பெண்களை அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 49

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணன் மதுராவுக்கு வருகை|

முதன் முறையாக கிருஷ்ணன், பலராமன், மற்றும் சில கோபியர்கள் மதுரா சென்று அடைந்தார்கள். அதனால் அவர்களுக்கு அனைத்தும் புதியதாக தோன்றியது. அந்த ஊரினை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தனர், அடுத்த நாள் காலை, நந்தரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, சுற்றி பார்க்க வெளியே சென்றனர். 


கிருஷ்ணனும் பலராமனும் ஊரை சுற்றி பார்க்க வந்த விஷயம் ஊர் முழுக்க பரவியது, மதுராவின் மக்களுக்கு முன்பே இவர்களை பற்றி தெரியும், அதனால் அவர்களை பார்க்க வேண்டும் என்று அனைவரும் விருப்பப்பட்டனர். தெருவின் ஓரம் அனைவரும் கூடினர், சிலர் மாடியின் மேலே சென்று இவர்கள் வருகைக்காக காத்துகொண்டு இருந்தனர். கிருஷ்ணனும் பலராமனும் வரும் சமயம் பார்த்து அனைவரும் பூக்கள் தூவ ஆரம்பித்தனர். இருவரும் சிங்க நடை போட்டு தெருக்களில் நடந்து வந்தனர். கிருஷ்ணனும் பலராமனும் வரும்போது எதிரில் ஒரு சலவைக்காரன் வந்தான், அவன் முதுகில் பெரிய துணி மூட்டையே இருந்தது. அவனை நிறுத்தி, ஐயா எங்களுக்கு உடுத்த சில துணிகள் கிடைக்குமா என்று கிருஷ்ணன் கேட்டான்.


அந்த சலவைக்காரன் கம்சனின் வேலையாளி, கிருஷ்ணனை பார்த்து "உனக்கு என்ன தைரியம் இருந்தால் நீ அரசரின் துணிகளை கேட்பாய்? காட்டில் சுற்றுபவர்களுக்கு இந்த மாதிரி உடைகள் தேவையா? இதனை ராஜ பதவி உள்ளவர்கள் தான் அணிய வேண்டும். மூளை இல்லா முட்டாள்களே, உங்கள் உயிர் வேண்டும் என்றால் இதை மறந்துவிட்டு அப்படியே ஓடி விடுங்கள், இல்லையென்றால் அரச சேவகர்கள் உங்களை அடித்து விடுவார்கள்".

அந்த சலவையாளியின் பேச்சினை கேட்டு கோபமுற்ற கிருஷ்ணன், அவனை தலையில் அடித்தான், அந்த அடி பலமாக இருந்ததனால், அவன் அங்கயே விழுந்து இறந்தான். அவன் உடன் இருந்த மற்ற சலவையாளிகள் அவர்கள் வைத்து இருந்த மூட்டையை அங்கேயே போட்டு விட்டு தலை தெறிக்க ஓடினர். கிருஷ்ணனும் பலராமனும் மூட்டையை பிரித்து, அதில் உள்ள அழகிய ஆடையை எடுத்து உடுத்திகொண்டனர், மீதம் உள்ளதை கோபியருக்காவும் எடுத்து வைத்துக்கொண்டனர்.

அந்த தெருவில் ஒரு தையல்காரன் இருந்தான், அங்கு நடந்த அனைத்தையும் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அந்த இருவர் மீதும் அதிக மதிப்பினை வைத்திருந்தான், அவன் அவர்களை நோக்கி ஓடி, அவன் வைத்திருந்த சில ஆடைகளை கொடுத்து அதை ஏற்கும்படி கெஞ்சினான். கிருஷ்ணரும் பலராமரும் அதை வாங்கி உடுத்தி கொண்டனர். கிருஷ்ணர் அவனை பார்த்து "நீ மிக விரைவில் செல்வந்தன் ஆவாய், உனது மீதம் உள்ள வாழ்க்கை மிக்க சந்தோஷம் நிறைந்ததாக அமையட்டும், இறந்த பிறகு நீ வைகுண்டம் செல்வாயாக" என்று வாழ்த்தினான்.

கிருஷ்ணனுக்கு மலர்கள் என்றால் மிகவும் பிடிக்கும், அடுத்து இருவரும் பூக்கடைக்காரனிடம் சென்றனர். சுதாமா என்ற ஒரு மாலை கட்டுபவர் அங்கு வசித்து வந்தார், அவருக்கும் கிருஷ்ணன் பற்றிய கதைகள் தெரியும், கிருஷ்ணரும் பலராமரும் ஒன்றாக சுதாமா வீட்டுக்கு சென்றனர், இதை கண்ட சுதாமா, பெருமகழ்ச்சியுற்று அவர் இருவரையும் வரவேற்றார். அவர்கள் காலில் சாஷ்டங்கமாக விழுந்து வணங்கினார். பீடத்தில் அமர வைத்து அவர்கள் காலினை கழுவி, இருவரின் பாதத்திற்கும் மலர்களால் அலங்கரித்தார் சுதாமா. சுதாமா கண்ணிருடன் "பகவானே, உங்களை நேரில் பார்த்ததனால் நான் தூய்மை அடைந்தேன். உங்களது கட்டளையை கூறுங்கள், என்ன செய்ய வேண்டும்" என்று வினவினார். சுதமாவின் அன்பையும் பணிவையும் கிருஷ்ணன் புரிந்துகொண்டார். கிருஷ்ணர் சுதாமாவுக்கு ஒரு வரம் கொடுக்க விரும்பினார், "சுதாமா உனக்கு என்ன வேண்டுமோ கேள், நான் உனக்கு அதை தந்து ஆசிர்வதிக்கிறேன்" என்றார் கிருஷ்ணன்.

ஆனால் சுதாமாவின் மனம் நிறைந்துவிட்டது, கேட்க எதுவும் இல்லாமல், கிருஷ்ணனை வணங்கி, "உங்கள் அழகு முகத்தை பார்த்தால் போதும் கிருஷ்ணா, வேறு என்ன வேண்டும் எனக்கு?, உங்கள் மீது இறுதி வரை நான் பக்தி வைத்து இருக்க வேண்டும். அனைத்து மனிதரிடத்தும் நான் கருணையோடு இருக்க என்னை ஆசிர்வதியுங்கள். இதுவே என்னுடைய ஆசையும்" என்றார். கிருஷ்ணரும் அவரின் ஆசையை ஏற்றுக்கொண்டு அவரை ஆசிர்வதித்தார்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - ஐம்பத்தி ஐந்தாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

055 இரு கையும் விட்டேனோ த்ரௌபதியைப் போலே|

இந்திர பிரஸ்தம் உருவாக்கப்பட்டு, பஞ்ச பாண்டவர்களின் மூத்தவரான தர்மர் ராஜசூய யாகம் நடத்தி மன்னனாக முடி சூட்டப்பட்டான். விழாவில் கலந்து கொண்ட துரியோதனன், அரண்மனையை சுற்றிப் பார்க்கும் போது நீரில் விழுந்து விட, அதைக் கண்ட த்ரௌபதி நகைக்க, துரியோதனனின் கோபத்திற்கு வழி வகுத்தது. துரியோதனன் இவர்கள் நன்றாக இருப்பதைக் கண்டு பொறாமைப் பட்டான். இவர்களை எப்படி வீழ்த்துவது என்று யோசித்தான். மாமன் சகுனி சூதாட்டத்தில் வல்லவன். சூதாட்டத்தில் இவர்களை வீழ்த்தலாம் என்று தீய யோசனை கூறினான். சகுனியின் துணை கொண்டு, திட்டம் தீட்டி, பாண்டவர்களையும் த்ரௌபதியையும் அஸ்தினாபுரம் வரவழைத்தான் துரியோதனன். 


தர்மரைச் சூதாட்டத்துக்கு அழைத்தான் துரியோதனன். அரசன் எதற்குக் கூப்பிட்டாலும் அதை ஒப்புக் கொள்ள வேண்டும் இல்லை அரசனுக்கு அது அவமானம். அதனால் தர்மர் அதற்குக் கட்டுப்பட்டு ஒப்புக் கொண்டார். சூதாட்டம் நடந்தது. சகுனி சூதாட்டத்தில் குறுக்கு வழியில் வஞ்சகமாகப் பந்தயம் வைத்து ஒவ்வொன்றையும் இழக்க வைத்தான்.

தர்மர் முதலில் வீடு, நிலம், ராஜ்யம் முதல்யவற்றை பறிகொடுத்தார். பிறகுத் தன் தம்பிகளைப் பந்தயத்தில் வைத்துத் தோற்றார். அவர்கள் துரியோதனனுக்கு அடிமைகளானார்கள். தன்னை இழந்தார். இறுதியில், “திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து விளையாடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்.” என்று சவால் விட்டான் துரியோதனன். சகுனியின் சூழ்ச்சியின் தொடர் வெற்றிகளின் விளைவாக த்ரௌபதியையும் வைத்துத் தோற்றார். பாஞ்சால தேசத்து இளவரசி, இந்திரபிரஸ்தம் தேசத்து மகாராணி பாஞ்சாலி, நொடியில் பணிப்பெண் ஆனாள். துரியோதனன் பயங்கரமாகச் சிரித்தான். தன் தம்பி துச்சாதனனை அனுப்பி திரௌபதியை அரசவைக்கு இழுத்து வரக் கட்டளையிட்டான்.


துச்சாதனன் திரௌபதியின் தலை மயிரைப் பிடித்து இழுத்து சபைக்கு நடுவில் நிறுத்தினான். துரௌபதி அழுது கொண்டு சபை நடுவே வந்து நின்றாள். துரியோதனன், கர்ணன் முதலானவர்கள் திரௌபதியை மரியாதை குறைச்சலாகப் பேசினார்கள். பீஷ்மர், துரோணர் முதலானவர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தார்கள்.


அப்போது துச்சாதனன் ”திரௌபதி உன் கணவர்கள் எங்களுக்கு அடிமை. உன்னையும் பந்தயத்தில் தோற்றார்கள். அதனால் நீயும் எங்கள் அடிமை. அடிமைக்கு எதற்கு இந்த விலை உயர்ந்த உடைகள் என்று ஏளனம் செய்து, சான்றோர்கள் நிறைந்த சபையில் தர்மம் தலை குனிந்து நிற்க, அவள் அணிந்திருந்த சேலையைப் பிடித்து இழுத்தான். திரௌபதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தந்தைக்கு நிகரான தந்தையின் நண்பன் துரோணர் உதவிக்கு வரவில்லை. தர்மத்தின் திரு உருவம் பீஷ்மர் உதவிக்கு வரவில்லை. மன்னன் என மகுடம் சூடி அமர்ந்திருக்கும் மன்னனும் வரவில்லை. தான் அவமானப்படுவதை பார்த்து என்ன செய்வது என்று அறியாமல் முழித்துக் கொண்டு, மற்றவர்களைப் போல், ஏதும் செய்யாது, பேசாது அமர்ந்திருக்கும் கணவர்கள் கூட உதவவில்லை. வாதங்கள் வீணாய்ப் போக, உறவையும், மனிதனையும் நம்பி நின்றால் தான் காப்பாற்றப்பட போவதில்லை என்பதை உணர்ந்து, தன்னைக் காக்க கண்ணன் ஒருவனால் தான் முடியும் என அவனை சரணாகதி அடைகிறாள். 

துச்சாதனன் வேகமாக இழுக்க ஆரம்பித்தான். ஆரம்பத்தில், தனது இருகைகளால் மானம் போகாது மறைத்து கண்ணனைக் கூப்பிடுகிறாள். கண்ணன் வரவில்லை. பின், ஒரு கையால் மானத்தை மறைத்து, மறுகையால் கண்ணனை வணங்கி அலறுகிறாள். கண்ணன் வரவில்லை.  ஒரு கட்டத்தில் துச்சாதனனின் பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவள் கையே அவளுக்கு உதவி செய்ய முடியாமல் தவித்தது. இறுதியாக, தன் பலத்தை, தன் துணிச்சலை விடுத்து, தன் இருகைகளையும் மேலே தூக்கி, கைகூப்பி முற்றிலும் அவனே கதி என "சங்கு சக்ர கதாபாணே! துவாரகா வாசியே! அச்சுதா! கோவிந்தா! தாமரைக் கண்ணா! உன்னையே சரணடைந்தேன்! என்னைக் காப்பாற்று!” என்றாள்.

கண்ணன் எங்கிருந்தோ புடவை சுரக்க அருள் புரிந்தான். துச்சாதனன் திரௌபதியின் சேலையை இழுக்க இழுக்க வந்து கொண்டே இருந்தது. பல மணி நேரம் இழுத்து இழுத்துச் சோர்வடைந்தான் துச்சாதனன். மேலும் இழுக்க முடியாமல் சரிந்து கீழே விழுந்தான். பந்தயப்படி பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசமும், ஓர் ஆண்டு மறைந்தும் வாழ வேண்டும் என்ற நிபந்தனையில் காட்டுக்குச் சென்றார்கள்.

அழைத்ததும் வந்தான். அவள் மானத்தைக் காத்தான். மானத்தை உயிரை விடவும் பெரியதாய் கருதும் திரௌபதி, ஆடவர் நிறைந்திருக்கும் சபையில், அனைவரின் முன்னிலையில், துகிலுரியப்படும் நேரத்தில், தன் துகில் விட்டு இரு கை கூப்பி நின்று “கோவிந்தா” என்று கூவினால் என்றால், கண்ணனின் மீது அவள் கொண்டுள்ள நம்பிக்கையை என்ன வென்று கூறுவது? நுனிப்புல் அளவு கூட அவநம்பிக்கையோ ஐய்யமோ இல்லாது வேண்டி நின்றாளே!!

எம்பெருமானை, சரணாகதி என வந்துவிட்டால், நம்மை அவன் காப்பாற்றுவான் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "நான் அந்த திரௌபதியைப் போல முற்றிலும் நம்பிக்கையோடுசரணம் என இருகையும் விட்டேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ சுகாசாரியார்

ஸ்கந்தம் 01

வேதம் முழுவதையும் கிரஹித்த வியாஸ பகவான், கலியுகத்தில் இருக்கும் மனிதர்களைக் கருத்தில் கொண்டு முழு வேதத்தையும் ஒருவர் ஒரு வாழ் நாளுக்குள் அத்யயனம் செய்வது கடினம் என்று உணர்ந்து கொண்டார். எனவே, அதை நான்காகப் பிரித்து,  

  • ரிக் வேதத்தை பைலர் என்ற ரிஷியிடம் கொடுத்தார்
  • யஜுர் வேதத்தை வைசம்பாயனர் என்ற ரிஷியிடம் கொடுத்தார்
  • ஸாம வேதத்தை ஜைமினியிடம் கொடுத்தார்
  • அதர்வண வேதத்தை சுமந்து என்ற ரிஷியிடம் கொடுத்தார்
  • பதினேழு புராணங்களை ரோம ஹர்ஷணர் என்ற பௌராணிகரிடம் கொடுத்தார்
  • கடைசியாக பதினெட்டாவதாக எழுதிய ஸ்ரீமத் பாகவத புராணத்தைக் கொடுக்க தகுந்த ஒருவரை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.


ஸ்ரீமத் பாகவதம் ஞான யக்ஞம், ஆஸ்ரயம், மோக்ஷ க்ரந்தம் என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும் மிகவும் ரஸ ரூபமானது. ஒரு தந்தை சொத்தைப் பிரித்துக் கொடுப்பது போல் கொடுத்து விட்டு, தனக்குப் பிரியமான சொத்தை சரியாக நிர்வகிக்கத் தகுந்த ஆளை எதிர்பார்ப்பது போல் அமைந்தது.

ஸ்ரீ வியாஸ பகவான் ஒரு முறை யாகம் செய்யும் போது, யாக குண்டத்தில் இருந்து தோன்றியவர் ஸ்ரீ சுகாசார்யார். தோன்றும் போதே பதினாறு வயது நிரம்பிய இளம் பாலகனாக, அழகு சொட்டும் உருவத்தோடு விளங்கினார். ஞான ஸ்வரூபமான சுகர், யாக குண்டத்திலிருந்து வெளி வந்ததும், எதையும் கவனியாமல் கிடுகிடுவென்று ஓடத் துவங்கினார். எங்கும் நிரம்பியிருக்கும் ஆத்மாவில் ரமிப்பவராதலால் ஆடைகளின்றி, திக்குகளையே அம்பரமாகக் (ஆடையாக) கொண்டு திகம்பரராக சங்கல்பமின்றி சஞ்சரித்தார்.

தான் இவ்வளவு காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த புத்திரன் கிடைத்து விட்டான் என்று மகிழ்ந்து போன வியாஸரோ, சுகரைத் துரத்திக் கொண்டு ஓடினார். புத்ரா புத்ரா என்று கத்திக் கொண்டு தந்தை துரத்திக் கொண்டு ஓட, சுகர் தன்னைத் தான் அழைக்கிறார் என்று நினைக்கவில்லை. ஏனெனில் ப்ரபஞ்சம் முழுவதும் நிரம்பியிருக்கும் ஆத்மாவே தானென்று உணர்ந்து இருந்தார். ஆனால், வழியிலிருந்த மரம் செடி கொடிகளெல்லாம் ஏன் ஏன் என்று வியாஸருக்கு பதிலிறுத்தன என்றால், அவருடைய ப்ரும்மானுபவம் எத்தகையது என்று கற்பனை செய்து கூட பார்க்‌க முடியவில்லை.

ஓடிக் கொண்டிருந்த சுகர் ஒரு குளத்தின் வழிச் செல்ல, அங்கு ஆடையின்றி குளித்துக் கொண்டிருந்த பெண்கள் அவரைப் பார்த்து விட்டு குளியலைத் தொடர்ந்தனர். சற்று நேரத்தில் பின்னாலேயே துரத்திக் கொண்டு வந்த வியாஸரைப் பார்த்ததும் ஓடிச் சென்று ஆடைகளை அணிய முற்பட்டனர். இதைக் கண்ட வியாஸர், அந்தப் பெண்களிடம் கேட்டார். "நீங்கள் செய்வது நியாயமா? பதினாறு வயதுடைய என் மகன் ஆடையின்றி செல்கிறான். அவனைப் பார்த்து நீங்கள் வெட்கம் அடையவில்லையா?  கிழவனும், ரிஷியுமான என்னைக் கண்டதும் வெட்கப்படுகிறீர்களே" என்றார். அதற்கு அந்தப் பெண்கள், "மன்னித்து விடுங்கள் மஹரிஷி. தங்கள் மகன் இள வயதுடையவராய் இருந்த போதும், அவரைக் கண்டதும் வெட்கம் ஏற்படவில்லை, காரணம் அவர் தன்னை ஆணா, பெண்ணா என்று கூட உணராமல் ப்ரும்ம வஸ்துவாகவே இருக்கிறார். அவரைக் கண்டதும் எங்கள் மனத்தில் எந்த விகாரமும் ஏற்படவில்லை. ஆனால், நீங்கள் வயதானவர் என்றாலும் நீங்கள் ஆண், நாங்கள் பெண்ணினம் என்ற பேதம் தெரிவதால் வெட்கம் வந்து ஆடைகளை அணிந்தோம்" என்றனர்.

இந்த நிகழ்வு வியாஸரைக் குறைத்துச் சொல்லப்பட்டதல்ல. தந்தையான அவர் தன்னைக் குறைத்துக் கொண்டு தனயனின் பெருமையை உணர்த்துகிறார். மேலும், ஹ்ருதயத்தில் துளியும் காம வாசனையற்ற, ப்ரும்ம ஸ்வரூபமான ஸ்ரீ சுகர் தான் தசம ஸ்கந்தத்தில் ராஸ லீலையை வர்ணிக்கிறார், என்றால் ராஸம் எவ்வளவு உயர்ந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 57

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 27

அஸங்க்²யேயோ ப்ரமேயாத்மா 
விஸி²ஷ்ட: ஸி²ஷ்டக்ரு: ஸு²²சி:|
ஸித்³தா⁴ர்த்த²: ஸித்³த⁴ ஸங்கல்ப: 
ஸித்³தித⁴: ஸித்³தி⁴ ஸாதந:||

  • 248. அஸங்க்²யேயோ - எண்ணில் அடங்காதவன்.
  • 249. ப்ரமேயாத்மா - எல்லாவற்றிலும் பரந்திருப்பவன்.
  • 250. விஸி²ஷ்டஸ்² - தனிச் சிறப்புடையவன்.
  • 251. ஸி²ஷ்டக்ருஸ்² - நற்குண நற்செயல்களை உடைய சிஷ்டர்களை உயர்த்துபவன்.
  • 252. ஸு²²சிஹி - தூய்மையுடையவன், தன்னியல்பான ஒளியுடையவன்
  • 253. ஸித்³தா⁴ர்த்த²ஸ் - எல்லாவற்றையும் உடையவன்.
  • 254. ஸித்³த⁴ஸங்கல்பஸ் - விரும்பிய அனைத்தையும் பெறுபவன்
  • 255. ஸித்³தித⁴ஸ் - சித்திகளை அளிப்பவன்.
  • 256. ஸித்³தி⁴ ஸாதநஹ - அடையும் உபாயமாக உள்ளவன்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.42

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.42 

ஸங்கரோ நரகாயைவ 
குலக்⁴நா நாம் குலஸ்ய ச|
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் 
லுப்த பிண்டோ³ த³கக்ரியா:||

  • ஸங்கரோ - அத்தகு குழப்பத்தால்
  • நரகாய - நரகத்துக்கே கொண்டு செல்கிறது 
  • ஏவ - நிச்சயமாக 
  • குலக்⁴நாநாம் - குலநாசம் செய்தவர்களின் 
  • குலஸ்ய - குலத்தையும் 
  • ச - மேலும் 
  • பதந்தி - இழிவடைகின்றனர் 
  • பிதரோ- முன்னோர் 
  • ஹி - நிச்சயமாக 
  • ஏஷாம் - அவர்களின் 
  • லுப்த - நின்று 
  • பிண்ட³ - பிண்டம் 
  • உதக - நீர் 
  • த³கக்ரியா ஹ - கருமம் (சடங்கு) 

ஜாதி கலப்பினால், குலத்தை அழித்தவர்களுக்கும் குலத்தினருக்கும் நரகமே கிடைக்கிறது. அவர்களுடைய முன்னோர்களுக்கு பிண்டமும், நீரும் வைத்து வணங்கும் கரும நிகழ்வுகள் நடப்பதில்லை. இதனால் அவர்கள் இழிவடைகின்றனர்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.26

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.26

முமுக்ஷவோ கோ⁴ர ரூபாந் 
ஹித்வா பூ⁴த பதீந் அத²|
நாராயண கலா: ஸா²ந்தா 
ப⁴ஜந்தி ஹ்யந ஸூயவ:||

  • முமுக்ஷவோ - மோக்ஷத்தை அடைய விரும்புபவர்
  • கோ⁴ர - பயங்கரமான
  • ரூபாந்நு - உருவத்தை உடைய
  • பூ⁴த பதீந் - மற்ற க்ஷூத்ர தேவதைகளை
  • ஹித்வா - விட்டு
  • அத² - இக்காரணத்திற்காக
  • அநஸூயவஹ - மற்ற தேவதைகள் இடத்தில் அஸூயை அற்றவர்களாயும்
  • நாராயண கலாஹ் ஹ்ய - ஸ்ரீமன் நாராயண மூர்த்தியே
  • ஸா²ந்தா - அமைதி உடையவர்களாயும்
  • ப⁴ஜந்தி - பூஜிக்கின்றனர்

முக்தி இன்பம் கருதினோர், பயங்கரமான உருவமுடைய பூதத் தலைவர்களை (தமோ குணம், ரஜோ குணச் செய்கைகளை உடைய சாமானிய தேவதைகளை விடுத்து, (ஆனால்,) அந்த தெய்வங்களை நிந்தனை புரியாமல் அமைதியாக ஸ்ரீமந் நாராயணனையும், அவருடைய அவதாரங்களையுமே வழிபடுகிறார்கள்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - த்யான ஸ்லோகம் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 5
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:

வால்மீகே: முநி ஸிம்ஹஸ்ய 
கவிதா வந சாரிண꞉|  
ஸ்²ருண்வன் ராம கதா² நாத³ம் 
கோ ந யாதி பராம் க³திம்||

  • முநி ஸிம்ஹஸ்ய - முனிவர்களில் சிம்ஹம் போன்ற
  • கவிதா வந சாரிண꞉- கவிதை என்ற காட்டில் சஞ்சரிக்கும்
  • வால்மீகேர் - வால்மீகியின்
  • ராம கதா² நாத³ம் - ராம கதை என்கிற கர்ஜனையை
  • ஸ்²ருண்வன்- கேட்டு
  • கோ - எவர் தான்
  • பராம் க³திம் - மேலான கதியை
  • ந யாதி- அடைய மாட்டார்! 

முனிவர்களில் சிம்ஹம் போன்ற, கவிதை என்ற காட்டில் சஞ்சரிக்கும் வால்மீகியின் ராம கதை என்கிற கர்ஜனையை கேட்டு எவர் தான் மேலான கதியை அடைய மாட்டார்! 

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 41 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.19

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 41 - பரமன் நெற்றி
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பத்தொண்பதாம் பாசுரம்

முற்றிலும் தூதையும்* 
முன் கை மேல் பூவையும்* 
சிற்றிலிழைத்துத்* 
திரி தருவோர்களைப்*
ற்றிப் பறித்துக்* 
கொண்டோடும் பரமன் தன்* 
நெற்றி இருந்தவா காணீரே* 
நேரிழையீர்! வந்து காணீரே|

  • முற்றிலும் - மணல் கொழிக்கும் சிறு  முறங்களையும் 
  • தூதையும் - மணல் சோறு ஆக்குகின்ற சிறு பானைகளையும்
  • முன் கை மேல் - முன் கை மேல் வைத்து கொண்டு விளையாடும்
  • பூவையும் - பறவைகளையும் (மைனா) 
  • சிற்றில் -  மணலினால் சிறு வீடுகளை
  • இழைத்து - கட்டி கொண்டும்
  • திரி தருவோர்களை - விளையாடித் திரியும் சிறு பெண்களின்
  • பற்றி -  கையை வலியப் பிடித்துக் கொண்டு அவர்களுடைய அனைத்தையும்
  • பறித்துக் கொண்டு - அபஹரித்துக் கொண்டு
  • ஓடும் - ஓடுகின்ற 
  • பரமன் தன் - குறும்பில் சிறந்தவனான கண்ணபிரானுடைய 
  • நெற்றி இருந்த வா காணீரே - நெற்றியின் அழகை வந்துப் பாருங்கள்
  • நேர் - நேர்த்தியையுடைய
  • இழையீர் - ஆபரணங்களை அணிந்த பெண்களே! 
  • வந்து காணீரே - வந்துப் பாருங்கள்!

சிறு பெண் குழந்தைகள், தெருக்களில் கொட்டியிருக்கும் மண், கல் ஆகியவையோடு முறம், பானைகள் இவைகளையும் வைத்துக் கொண்டு, தங்களுக்குக் கிடைத்திருக்கின்ற சிறு சிறு பொருட்களைக் கொண்டு, மணலில் சிறிய வீடு கட்டி விளையாடுவர். அவ்வாறு இந்த பெண் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, கண்ணன் அங்கு இரகசியமாய் சென்று, அவர்கள் கைகளைப் பற்றி பலாத்காரமாக அவர்களிடம் இருக்கின்ற எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு வேகமாய் ஓடி விடுவானாம். தன்னைப் பிடித்து விடக்கூடாது என்பதற்காக வேகமாக ஓடுகின்ற அந்த சிறு நெற்றியில் முத்து முத்தாக வியர்த்து கொட்டி, அழகாக இருக்குமாம். தன் வயதொத்த பெண் பிள்ளைகளிடமிருந்து பொருட்களைப் பறித்துக் கொண்டு ஓடுகின்ற இந்த குறும்பு பிள்ளையின் நெற்றியழகை வந்துப் பாருங்கள் என்று ஆபரணங்கள் அணிந்த அழகிய பெண்களை அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 012 - திருக்குடந்தை 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

012. திருக்குடந்தை 
பாஸ்கர க்ஷேத்ரம் - கும்பகோணம்
பன்னிரெண்டாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 51 - 2

திருமங்கையாழ்வார் 

026. திவ்ய ப்ரபந்தம் - 1975 - வெண்ணெயுண்டவரை யாம் அறிவோம் 
பெரிய திருமொழி - பதினொன்றாம் பத்து - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம்
அறியோமே என்று* உரைக்கல் ஆமே எமக்கு*
வெறி ஆர் பொழில் சூழ்* வியன் குடந்தை மேவி*
சிறியான் ஓர் பிள்ளை ஆய்* மெள்ள நடந்திட்டு*
உறி ஆர் நறு வெண்ணெய்* உண்டு உகந்தார் தம்மையே|

027. திவ்ய ப்ரபந்தம் - 2010 - பிரளயத்தில் இருந்து நம்மைக் காத்தவன் மணிவண்ணன் 
பெரிய திருமொழிபதினொன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
அண்டத்தின் முகடு அழுந்த* அலை முந்நீர்த் திரை ததும்ப ஆஆ என்று*
தொண்டர்க்கும் அமரர்க்கும்* முனிவர்க்கும் தான் அருளி* 
உலகம் ஏழும் உண்டு ஒத்த திருவயிற்றின்* 
அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட*
கொண்டல் கை மணி வண்ணன்* தண் குடந்தை நகர் பாடி ஆடீர்களே|

028. திவ்ய ப்ரபந்தம் - 2037 - அரியை முற்ற முடியப் புகழ்வது எளிதன்று
திருக்குறுந்தாண்டகம் - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (6) 
மூவரில் முதல்வன் ஆய* ஒருவனை உலகம் கொண்ட*
கோவினைக் குடந்தை மேய* குரு மணித் திரளை* 
இன்பப் பாவினைப் பச்சைத் தேனைப்* 
பைம் பொன்னை அமரர் சென்னிப் பூவினை* 
புகழும் தொண்டர்* என் சொல்லிப் புகழ்வர் தாமே?

029. திவ்ய ப்ரபந்தம் - 2045 - அந்தோ! வீண் பொழுது போக்கினேனே!
திருக்குறுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம் (14)
காவியை வென்ற கண்ணார்* கலவியே கருதி* 
நாளும் பாவியேன் ஆக எண்ணி* அதனுள்ளே பழுத்தொழிந்தேன்*
தூவி சேர் அன்னம் மன்னும்* சூழ் புனல் குடந்தையானை*
பாவியேன் பாவியாது* பாவியேன் ஆயினேனே|

030. திவ்ய ப்ரபந்தம் - 2068 - எல்லாத் தலங்களையும் பாடுகிறாள் என் மகள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (17)
பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்ப*
பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று*
செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்*
சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து* 
ஆங்கே தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித்*
தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு*
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன*
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே|

031. திவ்ய ப்ரபந்தம் - 2070 - குடந்தை நகரும் பாடுகிறாள் என் மகள்
திருநெடுந்தாண்டகம் - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (19)
முற்று ஆரா வன முலையாள் பாவை* 
மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் அற்றாள்* 
தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்*
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ! என்னும்*
பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்*
பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி*
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்*
பொரு அற்றாள் என் மகள்-உம் பொன்னும் அஃதே|

032. திவ்ய ப்ரபந்தம் - 2080 - கண்ணனையே நாயேன் நினைக்கின்றேன்
திருநெடுந்தாண்டகம் - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (29)
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை*
அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை*
குன்றாத வலி அரக்கர் கோனை மாளக்*
கொடும் சிலைவாய்ச் சரம் துரந்து குலம் களைந்து வென்றானை* 
குன்று எடுத்த தோளினானை*
விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் நின்றானை* 
தண் குடந்தைக் கிடந்த மாலை*
நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே|

பூதத்தாழ்வார்

033. திவ்ய ப்ரபந்தம் - 2251 - எந்தை எழுந்தருளியுள்ள இடங்கள்
இரண்டாம் திருவந்தாதி - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
தமர் உள்ளம் தஞ்சை* தலை அரங்கம் தண்கால்*
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை*
தமர் உள்ளும் மாமல்லை கோவல்* மதிள் குடந்தை என்பரே*
ஏ வல்ல எந்தைக்கு இடம்|

034. திவ்ய ப்ரபந்தம் - 2278 - தேவர்கட்கெல்லாம் தலைவன் நெடுமால்
இரண்டாம் திருவந்தாதி - பத்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (97) 
எங்கள் பெருமான்* இமையோர் தலைமகன்! நீ*
செங்கண் நெடு மால் திருமார்பா!* 
பொங்கு பட மூக்கின் ஆயிர வாய்ப்* 
பாம்பு அணைமேல் சேர்ந்தாய்* குடமூக்கில் கோயிலாக் கொண்டு|

பேயாழ்வார்

035. திவ்ய ப்ரபந்தம் - 2311 - திருமால் தங்கியிருக்கும் இடங்கள்
மூன்றாம் திருவந்தாதி - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (30)
சேர்ந்த திருமால்* கடல் குடந்தை வேங்கடம்*
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பும்*
வாய்ந்த மறை பாடகம் அனந்தன்* 
வண் துழாய்க் கண்ணி* இறை பாடி ஆய இவை|

036. திவ்ய ப்ரபந்தம் - 2343 - திருமால் எழுந்தருளியுள்ள திருப்பதிகள்
மூன்றாம் திருவந்தாதி - ஏழாம் திருமொழி - இரண்டாம்   பாசுரம் (62)
விண்ணகரம் வெஃகா* விரி திரை நீர் வேங்கடம்*
மண் நகரம் மா மாட வேளுக்கை* 
மண்ணகத்த தென் குடந்தை* 
தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி*
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு|

திருமழிசை ஆழ்வார் 

037. திவ்ய ப்ரபந்தம் - 2417 - பக்தர் உள்ளத்தில் உறைபவன் திருமால்
நான்முகன் திருவந்தாதி - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம் (36)
நாகத்து அணைக் குடந்தை* வெஃகா திரு எவ்வுள்*
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில்*
நாகத்து அணைப் பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தன் ஆவான்|

திருமங்கையாழ்வார் 

038. திவ்ய ப்ரபந்தம் - 2672 - திருமாலே! பிரமனை ஈன்றாய்! இராவணனைக் கொன்றாய்! மூவுலகு அளந்தாய்!
திருஎழுகூற்றிருக்கை 
ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்*
ஒருமுறை அயனை ஈன்றனை* 
ஒரு முறை இரு சுடர் மீதினில் இயங்கா* 
மும் மதிள் இலங்கை இரு கால் வளைய* 
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை* 
மூவடி நானிலம் வேண்டி*
முப்புரி நூலொடு மான் உரி இலங்கு மார்வினின்* 
இரு பிறப்பு ஒரு மாண் ஆகி*
ஒரு முறை ஈர் அடி மூவுலகு அளந்தனை*
நால் திசை நடுங்க அம் சிறைப் பறவை ஏறி* 
நால் வாய் மும் மதத்து இரு செவி ஒரு தனி வேழத்து அரந்தையை* 
ஒரு நாள் இரு நீர் மடுவுள் தீர்த்தனை* 
முத் தீ நான்மறை ஐ வகை வேள்வி* 
அறு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை* 
ஐம்புலன் அகத்தினுள் செறித்து* 
நான்கு உடன் அடக்கி முக் குணத்து இரண்டு அவை அகற்றி* 
ஒன்றினில் ஒன்றி நின்று* 
ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை* 
முக் கண் நால் தோள் ஐ வாய் அரவோடு* 
ஆறு பொதி சடையோன் அறிவு அரும் தன்மைப் பெருமையுள் நின்றனை*
ஏழ் உலகு எயிற்றினில் கொண்டனை* 
கூறிய அறு சுவைப் பயனும் ஆயினை* 
சுடர்விடும் ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை* 
சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண* 
நின் ஈர் அடி ஒன்றிய மனத்தால்* 
ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலர் அன* 
அங்கையின் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை*
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை*
மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே* 
அறுபதம் முரலும் கூந்தல் காரணம்*
ஏழ் விடை அடங்கச் செற்றனை* 
அறு வகைச் சமயமும் அறிவு அரு நிலையினை* 
ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை* 
அறம் முதல் நான்கு அவை ஆய் மூர்த்தி மூன்று ஆய்* 
இரு வகைப் பயன் ஆய் ஒன்று ஆய் விரிந்து நின்றனை* 
குன்றா மது மலர்ச் சோலை வண் கொடிப் படப்பை* 
வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும்* 
செந்நெல் ஒண் கழனித் திகழ் வனம் உடுத்த* 
கற்போர் புரிசைக் கனக மாளிகை* 
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்* 
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை* 
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க* 
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த பரம* 
நின் அடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையே|

039. திவ்ய ப்ரபந்தம் - 2707 - தலைவி சென்று தேடிய திவ்ய தேசங்கள்
சிறிய திருமடல் - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (35)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்*
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்*
கார் ஆர் குடந்தை கடிகை கடல் மல்லை*
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை*
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்|

040. திவ்ய ப்ரபந்தம் - 2772 - எம்பெருமான் தங்கியிருக்கும் திவ்ய தேசங்களை அவள் புகழ்ந்து வணங்குகிறாள்
பெரிய திருமடல் - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (60)
தாமரை மேல் மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை*
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை*
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை*
மன்னிய தண் சேறை வள்ளலை|

நம்மாழ்வார்

041. திவ்ய ப்ரபந்தம் - 3310 - திருக்குடந்தை ஆராவமுதே! நின்னைக் கண்டேன்
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - முதலாம் பாசுரம்
ஆரா அமுதே அடியேன் உடலம்* நின்பால் அன்பாயே*
நீராய் அலைந்து கரைய* உருக்குகின்ற நெடுமாலே*
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்* செழு நீர்த் திருக்குடந்தை*
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!* கண்டேன் எம்மானே|

042. திவ்ய ப்ரபந்தம் - 3311 - திருக்குடந்தைப் பிரானே! நான் என்ன செய்வேன்?
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - இரண்டாம் பாசுரம்
எம்மானே! என் வெள்ளை மூர்த்தி* என்னை ஆள்வானே*
எம் மா உருவும் வேண்டும் ஆற்றால்* ஆவாய் எழில் ஏறே*
செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும்* திருக்குடந்தை*
அம் மா மலர்க்கண் வளர்கின்றானே* என் நான் செய்கேனே|

043. திவ்ய ப்ரபந்தம் - 3312 - திருக்குடந்தையானே! இறந்த பின்னும் நின் தாளே என் துணை
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - மூன்றாம் பாசுரம்
என் நான் செய்கேன்?* யாரே களைகண்?* 
என்னை என் செய்கின்றாய்?* உன்னால் அல்லால் யாவராலும்* 
ஒன்றும் குறை வேண்டேன்* கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்* 
அடியேன் அரு வாழ்நாள்* செல் நாள் எந் நாள்? அந் நாள்* 
உன தாள் பிடித்தே செலக்காணே|

044. திவ்ய ப்ரபந்தம் - 3313 - குடந்தையானே! நின்னைக் காண அழுது தொழுகின்றேன்
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - நான்காம் பாசுரம் 
செலக் காண்கிற்பார் காணும் அளவும்* செல்லும் கீர்த்தியாய்*
உலப்பு இலானே எல்லா உலகும் உடைய* ஒரு மூர்த்தி*
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்* 
உன்னைக் காண்பான் நான் அலப்பு ஆய்* 
ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே|

045. திவ்ய ப்ரபந்தம் - 3314 - ஆராவமுதே! நான் உன் திருவடி சேரும் வகையை நினை
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - ஐந்தாம் பாசுரம்
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்* பாடி அலற்றுவன்*
தழு வல்வினையால் பக்கம் நோக்கி* நாணிக் கவிழ்ந்திருப்பன்*
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய்* செந்தாமரைக் கண்ணா*
தொழுவனேனை உன தாள்* சேரும் வகையே சூழ் கண்டாய்|

046. திவ்ய ப்ரபந்தம் - 3315 - அமுதே! நான் எவ்வளவு நாள் தான் காத்திருப்பேன்?
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - ஆறாம் பாசுரம்
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து* 
உன் அடிசேரும் ஊழ் கண்டிருந்தே* 
தூராக்குழி தூர்த்து* எனை நாள் அகன்று இருப்பன்?*
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்* வானோர் கோமானே*
யாழின் இசையே! அமுதே! அறிவின் பயனே அரி ஏறே|

047. திவ்ய ப்ரபந்தம் - 3316 - எந்தாய்! இனிப் பொறுக்க முடியாது: அடைக்கலம் அருள்
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - ஏழாம் பாசுரம்
அரி ஏறே என் அம் பொன் சுடரே* செங்கண் கரு முகிலே!*
எரி ஏய் பவளக் குன்றே!* நால் தோள் எந்தாய் உனது அருளே*
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்* குடந்தைத் திருமாலே*
தரியேன் இனி உன் சரணம் தந்து* என் சன்மம் களையாயே|

048. திவ்ய ப்ரபந்தம் - 3317 - மாயா! என் உயிர் பிரியும் பொழுது நின் திருவடித் துணை வேண்டும்
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - எட்டாம் பாசுரம்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்* களைகண் மற்று இலேன்*
வளை வாய் நேமிப் படையாய்* குடந்தைக் கிடந்த மா மாயா*
தளரா உடலம் எனது ஆவி* சரிந்து போம் போது*
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப்* போத இசை நீயே|

049. திவ்ய ப்ரபந்தம் - 3318 - ஆதிமூர்த்தீ! எனக்கு தரிசனம் தா
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - ஒண்பதாம் பாசுரம்
இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ்* இருத்தும் அம்மானே*
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா* ஆதிப் பெரு மூர்த்தி*
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும்* திருக்குடந்தை*
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய்* காண வாராயே| 

050. திவ்ய ப்ரபந்தம் - 3319 - மாயா! உன்னடிமையாகிய நான் இன்னமும் துன்புறுவேனோ?
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - பத்தாம் பாசுரம்
வாரா அருவாய் வரும் என் மாயா!* மாயா மூர்த்தியாய்*
ஆரா அமுதாய் அடியேன் ஆவி* அகமே தித்திப்பாய்*
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்* திருக்குடந்தை*
ஊராய்* உனக்கு ஆள் பட்டும்* அடியேன் இன்னம் உழல்வேனோ?

051. திவ்ய ப்ரபந்தம் - 3320 - இவற்றைப் படியுங்கள்: ஆசைகள் அகலும்
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - பதினொன்றாம் பாசுரம்
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு* அவளை உயிர் உண்டான்*
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட* குருகூர்ச் சடகோபன்*
குழலின் மலியச் சொன்ன* ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்*
மழலை தீர வல்லார்* காமர் மான் ஏய் நோக்கியர்க்கே|

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்