About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 9 November 2023

லீலை கண்ணன் கதைகள் - 63

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||  

ஜராசந்தனின் ஏமாற்றம்|

முசுகுந்தரின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்து, அவர் தழுதழுத்த குரலில், "என் பிரபுவே, உலகம் அநித்தியம் என்பதை நான் அறிவேன். இது ஒரு கதையை எனக்கு நினைவு படுத்துகிறது. அடுப்பங்  கரையில் உத்தரத்தில் இருந்து ஒரு வெண்ணெய்ச் சட்டி தொங்கிக் கொண்டிருந்தது. வெண்ணையை ருசி பார்க்க விரும்பும் ஒரு எலி, பானையைத் தாங்கிக் கொண்டிருக்கும் கயிற்றின் நுனிக்குச் சென்று, அங்கிருந்து மெல்லக் கீழே இருங்கிக் கொண்டிருக்கிறது.


இதற்கிடையில் ஒரு பாம்பு எலியைத் தின்பதற்காக, அதன் மீது பாயக் காத்துக் கொண்டிருகிறது. இந்த விஷயம் எலிக்குத் தெரியாது. இது போலவே உலக விஷயங்களிலிருந்து, இன்பத்தை நாடும் மனிதனையும் அவனுடைய ஆசைகளையும் அழிக்கக் காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மனிதன் அறியாமல் இருக்கிறான். நான் கேட்கும் வரமெல்லாம் தங்களுக்குச் சேவை செய்ய வேண்டும், தங்கள் பாத கமலங்களுக்கு அடியில் என்றும் இருக்க வேண்டும் என்பது தான். எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம்" என்றார். அதற்குக் கிருஷ்ணன், "உமது பக்தியை மெச்சினேன். நீர் உலக ஆசை இல்லாமல் இருக்கிறீர். அதனால் என் ஞாபகம் உமக்கு என்றும் இருக்கும். கடைசியில் நீர் என்னை வந்து அடைவீர்" என்றார்.

கிருஷ்ணன் மதுரா திரும்பினான். பலராமனும் கிருஷ்ணனும் சேர்ந்து காலயவனனின் படைகளை அழித்தனர். காலயவனன் கொள்ளையடித்த பொருட்களையெல்லாம் அவர்கள் பறித்து, அதைத் துவாரகைக்குக் கொண்டு  வந்தனர். வழியில் ஒரு பெரிய சேனையுடன் ஜராசந்தன் அவர்களைத் தடுத்தான். உடனே தங்கள் உயிருக்குப் பயந்தவர்களைப் போல இருவரும் ஓட ஆரம்பித்தனர். இதைக் கண்டு ஜராசந்தன் ஆச்சரியப்பட்டான். அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை என்பதை அவன் கண்டான். ஆகவே தன்னுடைய சேனை பின் தொடர, அவன் அவர்களைத் தன் இரதத்தில் இருந்த படியே பின் தொடர்ந்தான்.

வெகு நேரம் அவர்களைப் பின் தொடர்ந்தான். பலராமனும் கிருஷ்ணரும் பிரவர்ஷணம் என்ற மலையின் அடிவாரத்தை அடைந்தார்கள். இருவரும் மலையுச்சிக்கு விரைந்தார்கள். இருவரும் மலைக்குள் எங்கோ ஒளிந்து விட்டார்கள் என்று ஜராசந்தன் நினைத்து, மலைச் சுற்றி விறகுகளை அடுக்கி அவற்றுக்குத் தீ வைத்தான். தீ பாதிமலைக்கு பரவியதும் பலராமனும் கிருஷ்ணனும் மலை உச்சியிலிருந்து கீழே குதித்தார்கள். ஜராசந்தன் அதை கவனிக்கவில்லை. அந்த தீயில் இருவரும் இறந்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு, அவன் தன் பெரிய சேனையுடன் தனது மகத நாட்டுத் தலைநகரை அடைந்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - அறுபத்தி ஒண்பதாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

069 கடலோசை என்றேனோ பெரிய நம்பியைப் போலே|

மாறனேரி நம்பி ஆளவந்தாரின் சீடர். இவர் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஆளவந்தார், வைணவ சித்தாந்த உண்மைகளை பரப்பும் நோக்கில் தம் சீடர்களுடன் பயணிக்கும் போது, ஒரு வயல் வழியே செல்ல நேரிட்டது. அங்கு உழவர் ஒருவர் உழுது கொண்டிருந்தார். உச்சி வேளை ஆனதால், பசியும் தாகமும் பொறுக்காத அவர், அருகில் உள்ள ஓடைக்குச் சென்று சேற்று நீரை கையால் அள்ளி எடுத்து, எம்பெருமானுக்கு நிவேதனம் செய்துவிட்டு, பின் பருகினார். இச்செயல் ஆளவந்தாரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. உடன் இருந்த பெரிய நம்பி இச்செயல் குறித்து அந்த உழவரிடம் வினவ, “இந்த மண்ணும் அந்த மண்ணும் ஒன்றுதான். சேற்றுக்கும் சோற்றுக்கும் வேறுபாடு காணேன்.” என்றார்.


சடகோப மாறன் என்ற பெயரை உடைய நம்மாழ்வாருக்கு நிகரானவர் என்று கூறி அவருக்கு மாறன் நேர் (இணையான) நம்பி என்று பெயர் சூட்டினார் ஆளவந்தார். நம்பிக்கு பஞ்ச சமஸ்காரம் செய்வித்து வைணவ சித்தாந்தம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், பகவத் கீதை முதலிய சகல வேத சாத்திரங்களை உபதேசம் செய்தார் ஆளவந்தார். நம்பியும் அனைத்தையும் கற்றுத் தெளிந்து சிறந்த ஞானியாக விளங்கினார். பெரிய நம்பியும் மாறனேரி நம்பியும் குரு பக்தியிலும் குருவிற்கு சேவை புரிவதிலும், குருவிடம் இருந்து கற்றுக் கொள்வதிலும் என அனைத்தையும் ஒன்றாகவே செய்து, பேதம் பாராது நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

ஆளவந்தார் ராஜ பிளவை நோயினால் அவதியுற்ற போது, மாறனேரி நம்பிகள், உபதேசங்களை கேட்டு வாங்குவதைப் போல் ராஜ பிளவை நோயையும், குருவின் வலியினையும் வாங்கிக் கொண்டார். ஆளவந்தாருக்கு பணிவிடைகள் செய்து, நம்பியும் நோயினால் அவதியுற்றார். ஆளவந்தாரின் மறைவுக்குப் பின், மனதாலும் நோயினாலும் அவதியுற்ற மாறனேரி நம்பியை பெரிய நம்பி கவனித்துக் கொண்டார்.

மாறனேரி நம்பி, தனது இறுதி காலத்தில், பெரிய நம்பியிடம், “வாழும் காலத்தில் என்னை புரிந்து கொள்ளாத என் உறவினர்களிடம் என் உடலை வழங்காதே. இராஜ பிளவை நோயை குருப்பிரசாதமாக பெற்றுக் கொண்டப் படியால் எனது உடலும் குருப் பிரசாதம் ஆகும். அதனை வைணவர்கள் அல்லாத என் குடும்பத்தினரிடம் அளிப்பது என்பது உயர்ந்தயாக நெய்யை தெரு நாய்களுக்கு இடுவதற்கு ஒப்பாகும். எனது இறுதி சடங்குகளை நீயே முன் நின்று செய்.”, என்றார்.

மாறனேறி நம்பி மறைந்து விட வைணவர்கள் யாரும் அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய முன் வரவில்லை. வேதியரான பெரிய நம்பியே, அவருக்கு இறுதி சடங்குகளை செய்தார். தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவனுக்கு வைணவன் ஒருவன், அதுவும் ஆசார்யன், இறுதி சடங்குகளை செய்வதா என எண்ணி, மற்ற வேதியர்கள் பெரிய நம்பியை தள்ளி வைத்தனர். 

அரங்கன் தேர்த் திருவிழா அன்று, மாறனேரி நம்பிக்கு சடங்குகள் செய்தவர்கள் அக்ரஹாரத்தில் இருக்க யோக்யதை அற்றவர்கள் என்று கருதி பெரிய நம்பியின் வீட்டு வாசலில் சிலர் முள் கட்டுகளைப் போட்டு இருந்தனர். அவரது மகள் கோபமுற்று, தேரில் உலா வந்து கொண்டிருந்த எம்பெருமாளை நோக்கி- "எனது தந்தை மாறனேரி நம்பிக்கு இறுதிக் கடன் செய்தது நியாயம் என்றால், உமது தேர் அசையாது நிற்கட்டும்" என்றாள். தேரும் அப்படியே நின்றது. பின் பெரிய நம்பிக்கு தீர்த்தம் வழங்கிய பின்னரே, தேர் நகன்றது.

அப்போது ராமானுஜர் அங்கு வந்தார். ராமானுஜர், பெரிய நம்பியின் செயலுக்கு விளக்கம் கேட்க, பெரிய நம்பிகள், "பறவையினத்தைச் சேர்ந்த ஜடாயூவிற்கு ஸ்ரீராமன் இறுதிக் கடன் செய்தாரே! விதுரருக்கு தர்ம புத்திரர் இறுதிக் கடன் செய்தாரே! மாறனேரி நம்பி இவர்களை விட தாழ்ந்தவரா? ராமர் மற்றும் தர்மரின் செயல்களைப் பாராட்டி ஆழ்வார்கள் பாடியுள்ளனர். அதனால் தான் மாறனேரி நம்பிக்கு இறுதிக் கடன் செய்ததாகப் பெரிய நம்பி சான்றுகள் காட்டிப் பேசினார். மேற்கண்ட சான்றுகளை எடுத்துக் காட்டிப் பேசிய பெரிய நம்பிகள் முத்தாய்ப்பு வைத்தாற் போல் ஒரு கருத்தைத் தெரிவித்தார். 

‘‘ராமர், தருமர் செய்த செயல்களை ஆழ்வாராதியர் குறிப்பிட்டுப் போற்றிப் பாடிய பாசுரங்கள் கடலோசை போன்றவையா?’’ என்று வினவினார். அதாவது, கடலோசை ஓயாமல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது! அதனை எவர் பொருட்படுத்துகின்றனர்? முற்போக்குச் சிந்தனைகளையும் சீர்திருத்தக் கருத்துக்களையும் அவ்வப்போது தோன்றும் மகான்கள் சான்றோர்கள் கூறிக் கொண்டே இருக்கின்றனர். அவை வீணில் ஒலிக்கும் கடலோசையைப் போன்று அலட்சியம் செய்யப்படுகின்றனவே? என்று பெரிய நம்பி எடுத்துப் பேசினார். 

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "ஆழ்வார்களின் பாசுரங்களை வெறும் கடலோசை என எண்ணாமல், பாசுரங்களில் உள்ள அர்த்தங்களை உணர்ந்து, அது வழி நடந்து பாகவத சேவையில் ஈடுபட்டேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 16

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

வியாஸ நாரத ஸம்வாதம் - 3

ஸ்கந்தம் 01

நாரதர் தன் கதையைத் தானே சொல்லலானார்.

"அம்மா ஆசை ஆசையாக ஸாது சேவை செய்தாள். 

அவர்கள் அதிகாலை 3 மணிக்கு ஏழு முறை சத்தமாக ஹரி ஹரி என்று உரக்கக் கூறிக் கொண்டு எழுவார்கள். பின்னர் நாமங்களைச் சொல்லிக்கொண்டே ஸ்நானம் செய்ய நதிக்குச் செல்வார்கள்.

தூக்கக் கலக்கத்தில் அம்மா தரதரவென்று என்னை இழுத்துக்கொண்டு போனாள்.


அங்கு சென்றதும் ஒரு மூலையாகப் பார்த்து மீண்டும் உறங்க ஆரம்பித்தேன். அம்மா வந்து தட்டி எழுப்பி, "ஸாதுக்கள் ஸந்நிதியில் தூங்காதே, எழுந்து உட்கார்" என்று உட்கார வைத்தாள்.

மறுநாள் அவர்கள் செல்லும் போது, சும்மா உட்கார முடியாமல், ஏதோ குச்சிகளை வைத்துக் கொண்டு விளையாட ஆரம்பித்தேன். அம்மா வந்து, "ஸாதுக்கள் வரும் வழியில் இப்படிச் செய்யாதே. எழுந்து கையைக் கூப்பிக் கொண்டு நில்" என்று நிற்க வைத்து விட்டுப் போனாள்.

மறுநாள் காலை,

"அவர்களைத் தொந்தரவு செய்யாமல் பின்னாலேயே போய் வா" என்று அனுப்பினாள்.

மறுநாள் கேட்டாள்,

"அவங்க பின்னால் போனியே, என்ன செய்தாங்க?"

"அவங்க நதியில் குளிச்சாங்கம்மா. ஏதேதோ மந்திரம் சொல்லிட்டே இருந்தாங்க."

"சரி, அவங்க பின்னால் போய் அவங்க குளிச்ச தண்ணி எங்க வருதோ அந்த இடத்தில் நின்னு நீயும் ஒரு முழுக்கு போடு. நதி ஒன்னும் ஆழமில்லை." என்றாள். அதையும் செய்தேன்.

இப்படியாக தினமும் ஸாதுகள் பின்னால் போவதும் வருவதுமாக என் நாள்கள் கழிந்தன.

அம்மா, "என்னோடு வந்து என்ன செய்யப் போற? இங்கேயே இரு" என்று என்னை விட்டு விட்டு மற்ற வீடுகளுக்கெல்லாம் வேலை செய்யப் போவாள். வரும் போது அவர்கள் கொடுக்கும் பழைய சோற்றைக் கொண்டு வந்து எனக்கும் கொடுத்து தானும் உண்பாள். மீண்டும் மாலை ஸாதுக்கள் அனுஷ்டானம் செய்வார்கள், அவர்கள் பின்னாலேயே போய் நானும் குளிப்பேன். ஏதேதோ பாடுவார்கள். தூரத்தில் அமர்ந்து நானும் அம்மாவும் கேட்போம். ஒன்றும் புரியாவிட்டாலும் கேட்க இனிமையாய் இருக்கும்.

அம்மா மாலையும் அங்கே சுத்தம் செய்து கோலம் போட்டுவிட்டு இரவு வீடு திரும்புவோம்.

ஒரு நாள் காலையில் போன அம்மா, மதியம் மூன்று மணியாகியும் வரவில்லை. ஐந்து வயதுச் சிறுவனான என்னால் பசி தாங்க முடியவில்லை. ஓ வென்று அழ ஆரம்பித்தேன்.

என் அழுகைச் சத்தம் கேட்டு ஒரு ஸாது அருகில் வந்தார். அவர்கள் மேல் படக்கூடாது, மரியாதையாய் இருக்க வேண்டும் என்று அம்மா சொல்லியிருந்ததால் சட்டென்று எழுந்து நின்றேன். அவர் என்னை கன்னத்தைப் பிடித்து, கண்ணீரைத் துடைத்து மனம் மயக்கும் புன்முறுவலோடு என்னைப் பார்த்து

"ஏம்பா அழற?"

"பசிக்குது. அம்மாவைக் காணல."

"நான் ஏதாவது குடுத்தா சாப்பிடறியா?"

சரியென்று தலையசைக்க, அவர் உள்ளிருந்து ஒரு மந்தாரை இலையில் கொஞ்சம் உணவைக் கொண்டுவந்து கொடுத்தார்.

ஊர் மக்கள் ஸாதுக்களுக்கென்று பார்த்துப் பார்த்து விசேஷமாகச் சமைத்த உணவு. அவர்கள் எல்லாவற்றையும் ஒன்றாய்க் கலந்து ருசி பார்க்காமல், ஏழு கவளம் உண்ட பின், அப்படியே ப்ரசாதமாகக் கொண்டு போய் விடுவார்கள். அன்று இன்னும் வந்து எடுத்துப் போகவில்லை போலும்.

அந்த உணவு மிகவும் சுவையாக இருந்தது. விசேஷமாய்ச் சமைத்ததால் அல்ல. சாதுக்களின் ப்ரசாதம் என்பதால். அது உச்சிஷ்டம் என்றோ, அதன் மகிமையோ எனக்கு அப்போது தெரியாது. பசிக்கு உணவென்று நினைத்தே உண்டேன்.
அவ்வளவு தான்!

அதன் பின் என் நிலைமை மாறி விட்டது. எனக்கு விளையாட்டில் ஆர்வம் போய் விட்டது. கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்தால் உள்ளிருந்து ஹரி ஹரி என்ற ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது. ஆனந்தமாய் இருந்தது. வெகு நேரம் வரை மூடிய கண்களோடு அசையாமல் அமர்ந்து உள்ளிருந்து எழும் நாதத்தை அனுபவிக்க ஆரம்பித்தேன்.

ஸாதுக்களின் உச்சிஷ்டத்தால் எவ்வளவு நன்மை நேரும் என்று கணிக்கவும் முடியுமோ?

காதும் கேளாமல் வாயும் பேசாமல் இருந்த குழந்தை நாம ஸங்கீர்த்தனம் செய்யத் துவங்கியது நமது ஸ்ரீ போதேந்திராளின் உச்சிஷ்டத்தால் அன்றோ?"

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்