||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
031. திருச்செம்பொன்செய் கோவில் (திருநாங்கூர்)
முப்பத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10
001. திவ்ய ப்ரபந்தம் - 1268 - திருமாலைச் செம்பொன்செய் கோயிலில் கண்டேன்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - முதலாம் பாசுரம்
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்* பேர் அருளாளன் எம் பிரானை*
வார் அணி முலையாள் மலர் மகளோடு* மண் மகளும் உடன் நிற்ப*
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய் கோயிலினுள்ளே*
கார் அணி மேகம் நின்றது ஒப்பானைக்*
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே||
002. திவ்ய ப்ரபந்தம் - 1269 - வானவர்கோன் வாழ்விடம் இக்கோயில்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னைப்* பேதியா இன்ப வெள்ளத்தை*
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை* ஏழ் இசையின் சுவை தன்னை*
சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள்*
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
மறைப் பெரும் பொருளை வானவர் கோனை*
கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1270 - கடல் நிற வண்ணனைக் காணலாம் இங்கே
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும்*
செழு நிலத்து உயிர்களும் மற்றும்*
படர் பொருள்களும் ஆய் நின்றவன் தன்னை*
பங்கயத்து அயன் அவன் அனைய*
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள்*
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன்*
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1271 - அலைகடல் துயின்றவன் அமரும் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம்
வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி* மண் அளவிட்டவன் தன்னை*
அசைவு அறும் அமரர் அடி இணை வணங்க* அலை கடல் துயின்ற அம்மானை*
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்*
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
உயர் மணி மகுடம் சூடி நின்றானைக்* கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1272 - தசரதன் மகனை இக்கோயிலில் காணலாம்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று* சென்று அடைந்தவர் தமக்கு*
தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்* தயரதன் மதலையை சயமே*
தே மலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள்*
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன்*
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1273 - கடலில் அணை கட்டியவனைக் கண்டேன்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
மல்லை மா முந்நீர் அதர்பட*
மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை*
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க* ஓர் வாளி தொட்டானை*
செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன்*
கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1274 - கஞ்சனைக் காய்ந்த காளையைக் காணலாம்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும்*
வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை*
கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானைக்* கரு முகில் திரு நிறத்தவனை*
செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக்* கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1275 - வேங்கடவாணனே இக்கோயிலில் உள்ளான்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய* அன்று ஆழி தொட்டானை*
மின் திகழ் குடுமி வேங்கட மலை மேல்* மேவிய வேத நல் விளக்கை*
தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்*
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
மன்று அது பொலிய மகிழ்ந்து நின்றானை*
வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1276 - அடியவரின் உள்ளத்தில் ஊறும் தேன்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
களங்கனி வண்ணா கண்ணனே என் தன்* கார் முகிலே என நினைந்திட்டு*
உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள்* உள்ளத்துள் ஊறிய தேனை*
தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை*
வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1277 - உலகை ஆண்டு தேவரும் ஆவர்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய் கோயிலினுள்ளே*
வானவர் கோனைக் கண்டமை சொல்லும்* மங்கையார் வாள் கலிகன்றி*
ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்* ஒழிவு இன்றிக் கற்று வல்லார்கள்*
மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு* வானவர் ஆகுவர் மகிழ்ந்தே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்