||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
026 அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே|
கண்ணனும், சுதாமனும் (குசேலரின் பெயர்) சாந்திபனி முனிவரிடம் குருகுலவாசத்தில் கல்வி பயின்று வந்தனர்.
ஒரு நாள் முனிவர், காட்டிலிருந்து காய்கறிகளும், அடுப்பெரிக்க சுள்ளியும் கொண்டு வரச் சொல்லி இருவரிடமும் பணித்தார். இருவரும் அதற்காக காட்டிற்குள் போன போது, பெரும் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனால் இரவு முழுதும் ஒரு பெரிய மரத்தடியில் தங்கினர்.
மறுநாள், முனிவர் இவர்களைத் தேடி வந்த போது, இரவு முழுதும் அவர்கள் பட்ட சிரமங்களைக் கேட்டறிந்தார். பின், "குருவிற்காக இவ்வளவு துன்பப்பட்ட நீங்கள் பிற்காலத்தில் வளத்துடன் வாழ்வீர்களாக" என ஆசிர்வதித்தார்
அதன் பின்னர்...

கம்சனை அழித்த பின்னர் கண்ணன் துவாரகையின் மன்னன் ஆனான். சுதாமா சுசீலையை மணந்து, 27 குழந்தைகளை பெற்று வறுமையில் வாடினார்.
அவர் மனைவி சுசீலை சீல குணம் உடையவள். குழந்தைகள் பசியால் அழும் போது எல்லாம், தெய்விக கதைகளை சொல்லித் தூங்க வைப்பாள். நாளுக்கு நாள் வறுமைப் பிணியின் தீவிரம் அதிகமாக இருந்தது.
ஆனால், ஆச்சார்யனின் வாக்கு பலிக்காமல் இருக்கக் கூடாது இல்லையா! அதனால், குசேலரின் மனைவியின் மனதிற்குள் புகுந்து கொண்டு கண்ணன் அவளை இப்படி பேச வைத்தான்.
"உங்கள் பால்ய சிநேகிதர், கண்ணன் இப்போது மன்னனாக இருக்கிறார்.அவரிடம் போய் நீங்கள் உதவிக் கேட்கக் கூடாதா" என்று சுசீலை சுதாமரிடம் கூறினாள். சுசீலையின் வார்த்தைகளில் சுதாமருக்கு உடன்பாடில்லை. என்றாலும், இக்காரணம் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணனைக் காண ஒரு வழி கிடைத்ததாய் எண்ணி ஒப்புக் கொண்டார். கிருஷ்ணனைப் பார்க்கச் செல்லும் போது, என்ன கொண்டு செல்வேன் என்று சுசீலையிடம் வருந்தினார்.
சுசீலை உடனே பக்கத்து வீட்டுக்கு சென்று கொஞ்சம் அரிசியை இடித்து அதில் கிடைத்த அவல் பொரியை வாங்கி வந்து குசேலரின் மேல் துண்டில் முடிந்து வழி அனுப்பி வைக்க, சுதாமரும், ஸ்ரீ கிருஷ்ணனை இத்தனை வருடங்கள் கழித்து பார்க்கப் போவதை எண்ணியவாறே துவாரகை நோக்கி பயணித்தார். குசேலர், கிருஷ்ணனின் அரண்மனையை அடைந்தார்.
பல வருடங்கள் கழித்து தன்னை காண வந்த நண்பனை, மாளிகை வாசலில் நிற்கும் சுதாமாவைக் காண, துவாரகையின் மன்னனான ஸ்ரீ கிருஷ்ணன் துள்ளிக் குதித்து ஓடி வருவதை கண்களில் கண்ணீருடன் சுதாமா கண்டார். குசேலரைப் பார்த்த கிருஷ்ணன் மிகவும் பரவசமடைந்து ஸ்ரீ கிருஷ்ணனின் தங்க இருக்கையில் சுதாமரை அமர வைத்து, கிருஷ்ணனே பாத பூஜை செய்ய, ருக்மிணி சாமரம் வீச, சத்யபாமா பல வகை இனிப்பு, பலகாரம் மற்றும் பழ வகைகளை சுதாமருக்கு தங்க தட்டில் வைத்து பரிமாறினார். தங்களின் சிறு வயது குறும்புகளை, கிருஷ்ணனின் லீலைகளை, சுதாமரின் தன்னலம் அற்ற அன்பினைப் பற்றிய சம்பவங்களை நினைவு கூர்ந்தும் இருவரும் நேரம் போவது தெரியா வண்ணம் உரையாடினர்.
கிருஷ்ணனின் ஆடம்பர மாளிகை, ஆபரணம், பட்டு உடைகள், தங்கத்தட்டில் உணவு என எல்லாவற்றையும் கண்ட சுதாமருக்கு, சுசீலை கொடுத்து அனுப்பிய அவல் பொரியை கிருஷ்ணனுக்கு கொடுக்க சங்கோசம் கொண்டு மறைத்தே வைத்திருந்தார். சுதாமரின் எண்ணங்களை அறிந்து கொண்ட ஸ்ரீ கிருஷ்ணன், "எவ்வளவு நாள் கழித்து வந்திருக்கிறாய் சுதாமா? என்ன கொண்டு வந்தாய் எனக்கு? முன்பெல்லாம் குருகுலத்தில் ஏதாவது கொண்டு வந்து கொடுப்பாயே என பழைய ஞாபகத்தோடு மீண்டும் மீண்டும் கேட்க, சுசீலை கொடுத்து அனுப்பிய அவல் மூட்டையை மிகுந்த தயக்கத்துடன் கிருஷ்ணனிடம் குசேலர் நீட்டினார். சுதாமரிடம் இருந்து அவல் பொரியை பெற்றுக் கொண்டார். இரு கை அளவே கொண்ட அவல் பொரியை பெற்றுக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணன், ஒரு பிடி அவலை எடுத்து வாயில் இட்டார் கிருஷ்ணர். "கோகுலத்தின் வெண்ணையை விட ருசியுள்ளதாய் உள்ளது"- என்றார், கண்களில் நட்புடனும் அன்புடனும். கிருஷ்ணனின் சிறு பிள்ளைப் போன்ற சிரிப்பினையும், குறும்பையும் கண்டு மகிழ்ந்தார் சுதாமர். இன்னொரு பிடி அவலை எடுத்து வாயில் போடுவதற்குள் அருகிலிருந்த ருக்மணி தடுத்து விட்டாள். ஒரு பிடி அவல் வாயில் இட்டமைக்கே குசேலரின் வீடும் கிராமமும் தாங்காத நிலைக்கு செல்வம் கோடி கோடியாய் குவிந்து விட்டது. பக்தன் தாங்கும் செல்வம் அளிக்கப்பட்டு விட்டது. அதிகப்படியான செல்வமும் ஆபத்து என்று தாயாரான ருக்மணிக்கு தெரியும்.
குசேலன் கிருஷ்ணனை தேடி நாடி வந்தது பொருளுதவி பெற்று தனது வறுமையைப் போக்கிக் கொள்ள. ஆனால் நண்பனை சந்தித்ததில் அது எல்லாம் மறந்து போய் விட்டது. பழைய அன்பு பாசம் மட்டுமே அவர்களுக்குள் இருந்ததால் மற்றவைக்கு நெஞ்சில் நினைவில் இடமில்லை. குசேலர் அவல் பொரியைக் கொடுத்து விட்டு ஏதும் வேண்டாமலே, மனம் முழுதும் மகிழ்ச்சியுடன் விடைப் பெற்றுக்கொண்டார். இல்லம் நெருங்கும் போது, வெறுங்கையுடன் செல்வதைக் கண்டு சுசீலை என்ன கூறுவாளோ என்று எண்ணியவாறே தயக்கத்துடன் சென்றார். தெரு முனையில் திரும்பும் பொழுது, தயக்கத்துடன் நிமிர்ந்த சுதாமர், தன் குடில் இருந்த இடத்தில் மாட மாளிகை இருப்பதையும், தன் பிள்ளைகள் பட்டாடை அணிந்து தெருவில் விளையாடுவதையும் கண்டு ஆச்சர்யம் கொண்டார். இவை அனைத்தும் கிருஷ்ணனின் லீலையே என்பதை அறிந்து கொண்ட சுதாமா, ஸ்ரீ கிருஷ்ணனின் தூய நட்பினையும், இணையில்லா அன்புள்ளத்தையும் தினம் எண்ணியவாறு பல நற்காரியங்கள் செய்து, எளிய வாழ்க்கை வாழ்ந்தார்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அந்த குசேலரைப் போல் நான் சுதாமரைப் போல், அன்பு மட்டுமே உள்ளத்தில் கொண்டு, ஸ்ரீ கிருஷ்ணனை மட்டுமே கருத்தில் கொண்டு, இறைவனிடம் எதையும் எதிர்பாராமல் ஒரு சிறு அவல் பொரியும் தரவில்லையே சுவாமி என வருத்தப் பட்டாள் ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்