||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
படைப்பின் முறை
ஸ்கந்தம் 02
தனித்து நீரில் யோக சயனத்தில் இருந்த விராட் புருஷன் விழித்துக் கொண்டதும், ஒவ்வொரு அங்கமும் செயல் படுவதற்கேற்ப அவற்றின் அதிஷ்டான தேவதைகளும், புலன்களின் சக்திகளும் உயிர் பெறுகின்றன.
அவர் பார்க்க நினைத்த போது சூரியன் தோன்றினான். அவரே கண்ணின் அதிஷ்டான தேவதை. கரங்களை அசைத்த போது அவற்றின் அதிஷ்டான தேவதையான இந்திரன் தோன்றினான். மாயை பற்றி நினைத்த போது இதயமும் அதை ஒட்டி மனமும், அதன் அதிஷ்டான தேவதையான சந்திரனும் தோன்றின. இவ்வாறு ஒவ்வொரு தேவதையாக விராட் புருஷனின் செயல்பாடுகளுக்கேற்பத் தோன்றின.
இவ்வுருவத்திற்கப்பாலும் இறைவன் சூக்ஷ்ம ரூபமாக நீக்கமற நிறைந்திருக்கிறான். அது சொல்லுக் கெட்டாதது. மனத்திற்கும் எட்டாதது. இறைவனின் ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபங்கள் இரண்டுமே மாயையின் தோற்றங்கள். உண்மையில் இறைவன் தானாக எச்செயலும் செய்வதில்லை. மாயையைக் கொண்டே அத்தனை செயல்களையும் நிகழ்த்துகிறான்.
ப்ரும்மா விராஜன் என்ற உருவிலும், வாச்யன் (சொல்லப்படுபவன்), வாசகன் (சொல்பவன்) என்ற உருவிலும் விளங்குகிறார். அதாவது சொல், பொருள் இரண்டு உருவிலும் இருக்கிறார். இன்னும் பல திருமேனிகளையும், திருப் பெயர்களையும் கொள்கிறார்.
மரீசி முதலிய ப்ரஜாபதிகள், மனுக்கள், தேவர்கள், ரிஷிகள், பித்ரு தேவதைகள், சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், வித்யாதரர்கள், குஹ்யகர்கள், கின்னரர்கள், அப்ஸரஸ்கள், நாகர்கள், சர்ப்பங்கள், கிம்புருஷர்கள், உரகர்கள், மாத்ரு தேவதைகள், அரக்கர்கள், பிசாசர்கள், ப்ரேதங்கள், விநாயகர்கள், கூஷ்மாண்டர்கள், உன்மாதர்கள், வேதாளர்கள், யாதுதானர்கள், கிரகங்கள், பறவைகள், விலங்குகள், பசுக்கள், மரங்கள், செடி கொடிகள், மலைகள், ஊர்வன, அசைவன, அசையாதன, கருவில் தோன்றுவன, முட்டையிலிருந்து வெளிவருவன, அழுக்கிலிருந்து தோன்றும் புழுக்கள், நீர், நிலம் ஆகாயத்தில் வசிப்பன அனைத்தையும் ப்ரும்மாவே படைக்கிறார்.
இவற்றில் சான்றோர்களிடம் ஸத்வ குணமும், தீயோர்களிடம் தமோ குணமும், இரண்டும் கெட்டு நடுவிலிருப்போரிடம் குணக் கலப்பும் இருப்பது அவரவரின் பாவ புண்ய கர்மாக்களினாலேயே ஆகும். ஸத்வ, ரஜஸ், தமஸ் அடிப்படையில் மூன்று இடங்கள் உள்ளன. அவை, தேவர்கள் அனுபவிக்கும் ஸ்வர்கம், மனிதர் அனுபவிக்கும், செல்வம் மக்கள் முதலியவை, நரகம் ஆகியவை. இவற்றிலும் குண பேதங்களால் பிரிவுகள் உண்டு.
இறைவனே உலகைக் காக்க அறமே உருவெடுத்த மஹா விஷ்ணுவாகவும், மீனம், வராகம் போன்றவையாகவும், ராமன் கிருஷ்ணன் போன்ற மானுட வடிவிலும் அவதாரம் செய்கிறார். இறைவன் ப்ரளய காலத்தில் காலாக்னி ருத்ர ரூபியாகவும் இருந்து தம்மிடம் தோன்றிய ப்ரபஞ்சத்தைத் தானே சிதறடிக்கிறார். இப்படியெல்லாம் சொன்ன போதிலும், வேதங்களாலும், சான்றோர்களாலும் இறைவனின் மகிமைகளையும், ஸ்வரூபத்தையும் முழுதும் கூற இயல்வதில்லை. பகவானே எல்லாவற்றையும் செய்வதாகக் கூறும் வேதங்கள், பின்பு, அவையனைத்தும் மாயையின் செயல், பகவானிடம் ஏற்றிச் சொல்லப்பட்டது என்கின்றன.
கல்பம் என்பது இருவிதங்கள். ஒன்று ப்ரும்மாவின் ஆயுள் காலம் முடியும் வரை உள்ள மஹா கல்பம். இன்னொன்று ப்ரும்மாவின் பகல் பொழுது முடியும் வரை உள்ள அவாந்தர கல்பம். இதுவரை சொன்னது இரண்டு கல்பங்களின் துவக்கத்திலும் நிகழ்பவை. எல்லா கல்பங்களிலும் படைப்பு என்பது ஒரே மாதிரி தான் நிகழும். மஹா கல்பத்தில் ப்ரக்ருதி, மஹத் என்பவற்றிலிருந்து துவங்குகிறது. அவாந்தர கல்பத்தில் ஜீவராசிகளிலிருந்து படைப்பு துவங்குகிறது. ஒன்று புதிதாகத் துவங்குவது. மற்றொன்று திருத்தியமைப்பது. இதன் பின் சௌனகர் விதுரரின் தீர்த்த யாத்திரை பற்றி வினவுகிறார்.
இரண்டாவது ஸ்கந்தம் முற்றிற்று.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்