||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
019. திருநாகை (நாகப்பட்டினம்)
பத்தொண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1758 - அச்சோ! இவர் எவ்வளவு அழகு!
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
பொன் இவர் மேனி மரகதத்தின்* பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்மின்*
இவர் வாயில் நல் வேதம் ஓதும்* வேதியர் வானவர் ஆவர் தோழீ*
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி*
ஏந்து இளங் கொங்கையும் நோககுகின்றார்*
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்* அச்சோ ஒருவர் அழகியவா|
002. திவ்ய ப்ரபந்தம் - 1759 - குடந்தையில் கிடக்கும் பெருமாளா இவர்?
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும்* சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த*
சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன்* செஞ் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி*
பாடக மெல் அடியார் வணங்கப்* பல் மணி முத்தொடு இலங்கு சோதி*
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்* அச்சோ ஒருவர் அழகியவா|
003. திவ்ய ப்ரபந்தம் - 1760 - உலகம் அளந்த உத்தமர் தான் இவர்?
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
வேய் இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த*
மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம்*
தாயின நாயகர் ஆவர் தோழீ* தாமரைக் கண்கள் இருந்த ஆறு*
சேய் இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்* செவ்விய ஆகி மலர்ந்த சோதி*
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்* அச்சோ ஒருவர் அழகியவா|
004. திவ்ய ப்ரபந்தம் - 1761 - சங்கு சக்கரதாரியின் அழகு தான் என்னே!
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
வம்பு அவிழும் துழாய் மாலை தோள் மேல்* கையன ஆழியும் சங்கும் ஏந்தி*
நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார்* நாகரிகர் பெரிதும் இளையர்*
செம் பவளம் இவர் வாயின் வண்ணம்* தேவர் இவரது உருவம் சொலலில்*
அம் பவளத் திரளேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா|
005. திவ்ய ப்ரபந்தம் - 1762 - கடல் வண்ணர் கட்டழகு உடையவர்
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
கோழியும் கூடலும் கோயில் கொண்ட* கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன*
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்*
பண்டு இவர்தம்மையும் கண்டறியோம்*
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்*
மா கடல் போன்று உளர் கையில் வெய்ய*
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி* அச்சோ ஒருவர் அழகியவா|
006. திவ்ய ப்ரபந்தம் - 1763 - கம்சனை வதைத்த காளையைக் கண்டேன்
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
வெம் சின வேழ மருப்பு ஒசித்த* வேந்தர்கொல்? ஏந்திழையார் மனத்தை*
தஞ்சு உடையாளர்கொல்? யான் அறியேன்* தாமரைக் கண்கள் இருந்த ஆறு*
கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த* காளையர் ஆவர் கண்டார் வணங்கும்*
அஞ்சன மா மலையேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா|
007. திவ்ய ப்ரபந்தம் - 1764 - இவரைக் கண்டு என் மனம் பணிகின்றதே!
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்*
பேர் அருளாளர்கொல்? யான் அறியேன்*
பணியும் என் நெஞ்சம் இது என்கொல்? தோழீ*
பண்டு இவர்தம்மையும் கண்டறியோம்*
அணி கெழு தாமரை அன்ன கண்ணும்*
அம் கையும் பங்கயம் மேனி வானத்து*
அணி கெழு மா முகிலேயும் ஒப்பர்* அச்சோ ஒருவர் அழகியவா|
008. திவ்ய ப்ரபந்தம் - 1765 - கருட வாகனர் வந்தார்: யாவரும் பாருங்கள்
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட* மாலிருஞ்சோலை மணாளர் வந்து* என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்*
நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன்*
மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த*
மா முகில் போன்று உளர் வந்து காணீர்*
அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்* அச்சோ ஒருவர் அழகியவா|
009. திவ்ய ப்ரபந்தம் - 1766 - ஆலிலையில் பள்ளி கொண்டவர் இவர் தாமோ?
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
எண் திசையும் எறி நீர்க் கடலும்* ஏழ் உலகும் உடனே விழுங்கி*
மண்டி ஓர் ஆல் இலைப் பள்ளி கொள்ளும்*
மாயர்கொல்? மாயம் அறிய மாட்டேன்*
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர்*
கொங்கு அலர் தாமரைக் கண்ணும் வாயும்*
அண்டத்து அமரர் பணிய நின்றார்* அச்சோ ஒருவர் அழகியவா|
010. திவ்ய ப்ரபந்தம் - 1767 - தேவர்களாகி மகிழ்வர்
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
அன்னமும் கேழலும் மீனும் ஆய* ஆதியை நாகை அழகியாரை*
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன்* காமரு சீர்க் கலிகன்றி*
குன்றா இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை*
ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்*
மன்னவர் ஆய் உலகு ஆண்டு* மீண்டும் வானவர் ஆய் மகிழ்வு எய்துவரே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்