About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 16 July 2023

9. ஸ்ரீ ஆண்டாள்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - பூமாதேவி
  • அவதார ஸ்தலம் - திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் நந்தவனத்தில் திருத்துழாய் மாடத்தின் அருகில் சுயம்பு
  • காலம் - கி.பி. 9ம் நூற்றாண்டு
  • வருடம் - நள
  • மாதம் - ஆடி
  • திரு நக்ஷத்திரம் - பூரம்
  • திதி - சுக்ல பக்ஷம் சதுர்த்தசி - கலி பிறந்து 98 ம் வருஷம்
  • கிழமை - செவ்வாய்
  • ஆசார்யன் - பெரியாழ்வார்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம் 
  • அருளிச் செய்தவை -                                                                                                    1. திருப்பாவை - முதலாம் ஆயிரம் - 474-503 (30 பாசுரங்கள்),                      2. நாச்சியார் திருமொழி - முதலாம் ஆயிரம் - 504-646 (143 பாசுரங்கள்)
  • பாசுரங்கள் - 173

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் - 11; பாசுரங்கள் - 71

  • திருவரங்கம் 11 பாசுரங்கள்
  • திருக்குடந்தை 1 பாசுரம்
  • திருக்கண்ணபுரம் 1 பாசுரம்
  • திருவில்லிபுத்தூர் 1 பாசுரம்
  • திருமாலிருஞ் சோலை 11 பாசுரங்கள்
  • திரு வடமதுரா 17 பாசுரங்கள்
  • திருவாய்ப்பாடி 5 பாசுரங்கள்
  • திரு துவாரகா 4 பாசுரங்கள்
  • திருவேங்கடம் 16 பாசுரங்கள்
  • திருப்பாற் கடல் 3 பாசுரங்கள்
  • திரு பரமப்பதம் 1 பாசுரம்

----------
பிற பெயர்கள்
கோதை, சூடி கொடுத்த நாச்சியார்
----------
கோதை நாச்சியார் என்று கொண்டாடப்படுபவள் ஆண்டாள். பெரியாழ்வாருக்குப் பெண்பிள்ளையாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவள். பூமிப் பிராட்டியின் அவதாரம். எம்பெருமானிடத்து இயற்கையான அன்பு கொண்டவள். பத்தினி என்ற உறவை உடையவள். ஆண்டாள் நாச்சியாரும் க்ருஷ்ணாவதாரத்தில் மிகவும் ஊன்றியவள். அனைவருடைய உஜ்ஜீவனத்திற்காகவும் இந்த உலகத்தில் அவதரித்து எல்லோருக்கும் நன்மையை தேடிக் கொடுத்தவள்.  இந்த உலகத்தில் உள்ள சேதநர்கள் அனைவரும் எம்பெருமானுடைய திருநாமங்களைப் பாடி உஜ்ஜீவனத்தை அடைய வேண்டுமென்று திருப்பாவையை அருளிச் செய்தவள். “பிஞ்சாய்ப் பழுத்தாளை, ஆண்டாளை நாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து” என்று மணவாள மாமுநிகள் உபதேச ரத்தின மாலையில் கொண்டாடுகிறார்.  “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்றும் பெயர் பெற்றவள். பெரியாழ்வார் தொடுத்து வைத்திருந்த மாலையைத் தான் சூடி எம்பெருமானுக்கு அதற்குப் பிறகு கொடுத்தவள். 

வேதமனைத்துக்கும் வித்தாக விளங்கும் திருப்பாவையில் 'ஏல் ஓர் எம்பாவாய்' என்ற சொற்றொடரால், "தோழி! இதன் பொருளைத் தெரிந்து கொண்டு ஏற்றுக்கொள்" என்று ஆண்டாள் அறிவுறுத்துகிறாள். திருப்பாவையில் அன்றாட வாழ்விற்குத் தேவையான எண் குறிப்பு, நாள் குறிப்பு, திசை குறிப்பு போன்றவற்றைக் காட்டித் தருவதோடு அல்லாமல் இந்த ஆத்மா உய்வடையும் பொருட்டு பலபல உபாயங்களையும் காட்டித் தருகிறாள். வைணவ லக்ஷணத்தின் குறிப்பு, ஸம்ப்ராயத்தில் அனுஷ்டிக்கும் பஞ்ச சம்ஸ்காரம் பற்றிய குறிப்பு, எம்பெருமானின் தசாவதாரக் குறிப்பு என்று அநேக விஷயங்கள் கொட்டி கிடக்கும் ஒரு பொக்கிஷமாக திகழ்கிறது. மேலும் நாம் முக்கியமாக அறிய வேண்டிய அர்த்த பஞ்சகத்தின் பொருள், ஸம்பிரதாய விசேஷ அர்த்தங்கள், ரஹஸ்ய அர்த்தங்கள் என்று ஸகல உபநிஷத்துக்களின் ஸாரமாக மிளிர்கிறது. நாம் உள்ளவரையும் மார்கழி மாத உபன்யாசங்களில் புதுப்புது அர்த்தங்களைக் கேட்டு இன்புறலாம்.

நாச்சியார் திருமொழியில் மன்மதனிடம், கண்ணன் தன்னை வந்தடையும்படி நீயே செய்ய வேண்டும் என்று வேண்டுகிறாள். அனைத்து கோபியர்களும் சேர்ந்து கண்ணனை தங்கள் மனக்கோயிலில் குடியேறும்படி வேண்டுகின்றனர். கண்ணன் அவர்களுடன் விளையாடுதல், அவன் தங்களுடன் கூடுவானா என்று குறிப்பு பார்த்தல், அவன் தன்னை கூடும்படி குயிலை கூவுமாறு வேண்டுதல் என்று பலபடி ஏங்க, கண்ணன் தன்னை வந்து மணப்பதாக கனவு கண்டு தோழிகளிடம் சொல்கிறாள் ஆண்டாள்.

தான் கண்டது கனவாகி விட்டதே! என்று கலங்கி அவன் திருக்கையிலிருக்கும் சங்கினிடம் அவன் திருப்பவளச் செவ்வாய் இருக்கும் தித்திப்பை சொல்லும்படி கேட்கிறாள். அவன் பிரிவை தாங்க மாட்டாமல் மேகத்தை தூது விடுகிறாள். பார்க்கும் எல்லா வஸ்துக்களிடமும் முறையிட்டு, தான் திருவரங்கனிடம் கொண்டுள்ள தீராக் காதலை தெரியப்படுத்துகிறாள். அவன் அருள் புரியாததால் அவன் இருக்கும் இடத்தில் தன்னைச் சேர்த்து விடும்படி வேண்டுகிறாள். எம்பெருமான் ஸம்பந்தப்பட்ட வஸ்துக்களை கொண்டு தன் தாகத்தை தீர்க்கும் படி வேண்டுகிறாள். கடைசியாக அவனுடைய பெருமைகளை எடுத்துக் கூறி இப்படிப்பட்டவனை கண்டீரோ கண்டீரோ எனக் கேட்க, ஆம் பிருந்தாவனத்தில் கண்டோம்! என்று பதில் கிடைக்கப் பெற்று பிரபந்தத்தை முடிக்கிறாள்.
----------
தனியன் 1
கர்க்கடே பூர்வ பல்குந்யாம் 
துளஸீ காந நோத் பவாம்|
பாண்ட்ய விஸ்வம் பராம் கோதாம் 
வந்தே ஸ்ரீ ரெங்க நாயகீம்||

தனியன் 2
நீளா துங்க³ ஸ்தந கி³ரி தடீ* 
ஸுப்தம் உத்³போ³த்⁴ய க்ருக்ஷ்ணம்*|
பாரார்த்²யம் ஸ்வம் ஸ்²ருதி ஸ²த ஸி²ரஸ்* 
ஸித்³த⁴ம் அத்⁴யா பயந்தீ*||
ஸ்வோச் சி²ஷ்டாயாம் ஸ்ரஜி நிக³ளிதம்* 
யா ப³லாத் க்ருத்ய பு⁴ங்க்தே*|
கோ³தா³ தஸ்யை நம இத³ம் இத³ம்* 
பூ⁴ய ஏ வாஸ்து பூ⁴யஹ||

தனியனின் விளக்கம்
நீளா தேவியின் திருமார்பில் தலை வைத்துறங்கும் கண்ணன் எம்பெருமானை, பாரதந்தர்யம் உணர்த்தும் வகையில் துயிலுணர்த்துபவள், எம்பெருமானுக்கே தான் சூடிக் களைந்த மாலையை அவன் விரும்பியபடி சமர்ப்பித்தவள் திருவடிகளை மீண்டும் மீண்டும் தொழுகிறேன்.

வாழி திருநாமம்
1. திருவாடிப்பூரத்து செகத்து உதித்தாள் வாழியே|
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே|
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே|
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே|
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே|
உயர் அரங்கற்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே|
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே|
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே||

வேதப்பிரான் பட்டர் அருளிச் செய்தவை
2. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்|

3. பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும்
கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு|

4. கமலமுடன் வில்லிபுத்தூர் விளங்க வந்தாள் வாழியே|
காரார் நற்றுழாய்க் கானத்து அவதரித்தாள் வாழியே|
விமலமாம் திருவாடிப் பூரத்தாள் வாழியே|
விட்டு சித்தன் வளர்தெடுத்த இளங்கிழையாள் வாழியே|
அமலத் திருப்பாவை ஐயாறு அளித்து அருள்வாள் வாழியே|
ஆக நூற்றி எழுபத்தி மூன்று உரைத்தாள் வாழியே|
அமுதனாம் அரங்கனுக்கே மாலை இட்டாள் வாழியே|
ஆண்டாள் தம் இணை அடிகள் அநவரதம் வாழியே||

திருநாள் பாட்டு
1. இன்றோ திருவாடிப்பூரம்* எமக்காக அன்றோ
இங்கு ஆண்டாள் அவதரித்தாள்* 
குன்றாத வாழ்வாக* வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து*
ஆழ்வார் திருமகளாராய்|

2. பெரியாழ்வார் பெண் பிள்ளையாய்* ஆண்டாள் பிறந்த*
திருவாடிப் பூரத்தின் சீர்மை* 
ஒரு நாளைக்கு உண்டோ* மனமே! உணர்ந்துப் பார்* 
ஆண்டாளுக்கு உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு|

3. அஞ்சுக் குடிக்கொரு சந்ததியாய்* ஆழ்வார்கள் தன் செயலை* 
விஞ்சி நிற்கும் தன்மையளாய்* 
பிஞ்சாய்ப் பழுத்தாளை ஆண்டாளைப்* பத்தியுடன் நாளும்*
வழுத்தாய் மனமே மகிழ்ந்து|

மங்கள ஸ்லோகம்
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தந ஹேதவே|
நந்த நந்தந ஸுந்தர்யை கோதாயாஇ நித்ய மங்களம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

8. பெரியாழ்வார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - கருடாழ்வார்
  • அவதார ஸ்தலம் - திருவில்லிபுத்தூர்
  • காலம் - கி.பி. 9ம் நூற்றாண்டு
  • வருடம் - குரோதன - கலி பிறந்து 47 ம் வருஷம்
  • மாதம் - ஆனி
  • திரு நக்ஷத்திரம் - ஸ்வாதி
  • திதி - சுக்ல பக்ஷம் ஏகாதசி
  • கிழமை - ஞாயிறு
  • தந்தை - முகுந்தர்
  • தாய் - பதுமவல்லி
  • ஆசார்யன் - ஸேனை முதலியார்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருமாலிருஞ்சோலை
  • அருளிச் செய்தவை -                                                                                                  1. திருப்பல்லாண்டு - முதலாம் ஆயிரம் - 1-12 (12 பாசுரங்கள்),                  2. பெரியாழ்வார் திருமொழி - முதலாம் ஆயிரம் - 13-473 (461 பாசுரங்கள்)
  • பாசுரங்கள் - 473

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் - 19; பாசுரங்கள் - 179

  • திருவரங்கம்              37 பாசுரங்கள்
  • திருவெள்ளறை      11 பாசுரங்கள்
  • திருப்பேர்நகர்              2 பாசுரங்கள்
  • திருக்குடந்தை              3 பாசுரங்கள்
  • திருக்கண்ணபுரம்      1 பாசுரம்
  • திருக்குறுங்குடி      1 பாசுரம்
  • திருவில்லிபுத்தூர்      1 பாசுரம்
  • திருமாலிருஞ் சோலை      34 பாசுரங்கள்
  • திருக்கோஷ்டியூர்      22 பாசுரங்கள்
  • திரு அயோத்தி               6 பாசுரங்கள்
  • திருக்கண்டமெனும் கடிநகர் 11 பாசுரங்கள்
  • திருவதரியாஷ்ரமம்       1 பாசுரம்
  • திருசாளக்கிராமம்               2 பாசுரங்கள்
  • திரு வடமதுரா               16 பாசுரங்கள்
  • திருவாய்ப்பாடி       10 பாசுரங்கள்
  • திரு துவாரகா               5 பாசுரங்கள்
  • திருவேங்கடம்               7 பாசுரங்கள்
  • திருப்பாற் கடல்       5 பாசுரங்கள்
  • திரு பரமப்பதம்       4 பாசுரங்கள்

----------
பிற பெயர்கள்
விஷ்ணுசித்தர், பட்ட நாதன், பட்டர் பிரான், ஸ்ரீ வில்லிபுத்தூரார், ஸ்ரீரங்கநாத ஸ்வசூரர் 
----------
எம்பெருமானுடைய நியமனத்தின் பேரில் பாண்டியன் சபையில் பரதத்துவ நிர்ணயம் செய்யவும் பகவான் ப்ரீதி மேலிட்டு தன் பரிவாரங்களுடன் ஆகாய மார்க்கமாக வந்து காட்சி கொடுக்க, நித்யவிபூதி நாதனின் திவ்ய மங்கள திருமேனி அழகில் ஸம்சாரிகளின் திருஷ்டி பட்டு, அவனுக்கு என்ன தீங்கு நேருமோ! என்று கலங்கி பொங்கும் பரிவுடன் பகவானுக்கு காப்பாக திருப்பல்லாண்டு பாடுகிறார். தான் மங்களாசாஸனம் செய்யும் பொழுது பகவானை அடைய விரும்பும் அனைத்து தரப்பு மக்களையும் பல்லாண்டு பாட அழைக்கிறார்.

ஸ்ரீக்ருஷ்ணன் அவதரித்த காலந்தொட்டு அக்குழந்தைக்கு உண்டான பல பல அபாயங்கள் காரணமாக அவனிடமே மனம் ஈடுபட, தானே யசோதையாக மாறி அனுதினமும் அவனது பால லீலைகளை அனுபவித்து பாசுரம் பாடுகிறார். அவனது குழலோசைக்கு தேவ, மனுஷ்ய, திர்யக், ஸ்தாவரங்கள் அனைத்தும் மயங்குவதைக் கண்டு நெகிழ்கிறார். ஸ்ரீக்ருஷ்ணாநுபவத்துடன் ஸ்ரீராமபிரானையும் அனுபவிக்கும் விருப்பத்துடன் சிறிய திருவடி அசோகவனத்தில் ஸீதாபிராட்டியைக் கண்டு அடையாள மோதிரத்தை கொடுத்து விண்ணப்பம் செய்த அடையாளங்களை அனுபவிக்கிறார்.

இந்த சரீரத்தை விட்டு ஆத்மா கிளம்பும் சமயம் வாதம், பித்தம் போன்றவை துன்புறுத்தும் பொழுது பகவானே! உன்னை நினைக்க மாட்டேன், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்று பகவான் திருவாய் மலர்ந்தருளிய வராஹ சரம ஸ்லோகத்தின்படி செய்து காட்டுகிறார்.

எம்பெருமானைப் பார்த்து நன்றாக இருக்க வேண்டும் என்று மிகுந்த அன்புடன் / மிகுந்த பரிவுடன் வாழ்த்தியவர். மற்றைய ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால் ஏனைய ஆழ்வார்கள் எம்பெருமானை பார்க்கும் பொழுது ‘எனக்கு இந்த சம்சாரம் மிகவும் சிரமமாக இருக்கிறது, என்னை இங்கிருந்து விடுவித்து மோட்சத்துக்கு அழைத்துக் கொண்டு போ’ என்று ப்ரார்த்திப்பார்கள். ஆனால் பெரியாழ்வாரோ எம்பெருமான் எதிரே வந்த பொழுது ‘இந்த சம்சாரத்தில் நீ வந்து விட்டாயே! உனக்கு ஏதாவது கேடு வந்து விடப்போகிறது!’ என்று பயந்தவர். அவர் எம்பெருமானுடைய பரத்வத்தை நிர்ணயம் செய்து இருந்தாலும் அந்த சமயத்தில் எம்பெருமானுடைய ஸௌகுமார்யத்தை மனதில் கொண்டு, கண்கள் கொண்டு காண முடியாத அழகு / மென்மை போன்ற குணங்கள் கொண்டவன்; இந்த உலகத்தில் உதித்திருக்கிறானே! எவ்வளவு ஆபத்துக்கள் நிறைந்த உலகமிது! என்று பயந்து எம்பெருமான் நன்றாக இருக்கவேண்டும் என்று மங்களாசாசனம் செய்தவர்.
----------
தனியன்
கு³ருமுக²ம் அநதீ⁴த்ய 
ப்ராஹ வே³தாந் அஸே²ஷாந்* 
நரபதி பரிக்லுப்தம் 
ஸு²ல்கம் ஆதா³து காம:*
ஸ்²வஸு²ரம் அமர வந்த்³யம் 
ரங்க³ நாத²ஸ்ய ஸாக்ஷாத்* 
த்³விஜ குல திலகம் தம் 
விஷ்ணு சித்தம் நமாமி|

தனியனின் விளக்கம்
ஒரு குருவிடமும் பயிலாது எம்பெருமான் க்ருபையினாலேயே அனைத்து வேதங்களையும் அறிந்து வேத சாரங்களை சொல்லிப் பரத்வ ஸ்தாபநம் பண்ணிய அந்தணர் தலைவர், ஆண்டாளின் தமப்பனார், திருவரங்க நாதனுக்கே மாமனார் ஆகிய பெரியாழ்வாரை அடி பணிகிறேன்.

வாழி திருநாமம்
நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே|
நானூற்றி அறுபத்தி ஒன்றும் நமக்கு உரைத்தான் வாழியே|
சொல்ல அரிய ஆனி தனில் சோதி வந்தான் வாழியே|
தொடை சூடிக் கொடுத்தாள் தன் தொழும் அப்பன் வாழியே|
செல்வ நம்பி தனைப் போலச் சிறப்பு உற்றான் வாழியே|
சென்று கிழி அறுத்து மால் தெய்வம் என்றான் வாழியே|
வில்லிபுத்தூர் நகரத்தை விளங்க வைத்தான் வாழியே|
வேதியர் கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே||

திருநாள் பாட்டு
1. இன்றைப் பெருமை அறிந்திலையோ* ஏழை நெஞ்சே!*
இன்றைக்கென் ஏற்றமெனில் உரைக்கேன்*
நன்றி புனை பல்லாண்டு பாடிய* 
நம் பட்டர்பிரான் வந்துதித்த* நல்லானியில் சோதி நாள்|

2. மாநிலத்தில் முன்னம்* பெரியாழ்வார் வந்துதித்த*
ஆனி தன்னில் சோதி நாள் என்றால் ஆதரிக்கும்* 
ஞானியருக்கு ஒப்பொருவர் இலை* 
இவ்வுலகு தனில் என்று நெஞ்சே* எப்பொழுதும் சிந்தித்திரு|

3. மங்களாசாசனத்தில்* மற்றுள்ள ஆழ்வார்கள்*
தங்கள் ஆர்வத்தளவு தானன்றி* பொங்கும் பரிவாலே* 
வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்*
பெரியாழ்வார் என்னும் பெயர்|

4. கோதிலவாம் ஆழ்வார்கள்* கூறு கலைக்கெல்லாம்*
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும்* 
வேதத்துக்கு ஓம் என்னும் அது போல்* 
உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்த்* தான் மங்களம் ஆதலால்|

5. உண்டோ திருப்பல்லாண்டுக்கு* ஒப்பதோர் கலை தான்*
உண்டோ பெரியாழ்வாருக்கு ஒப்பொருவர்?* 
தண்டமிழ் நூல் செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில்* 
அவர் செய்கலையில்* பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார்|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

7. குலசேகர ஆழ்வார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

  • அம்சம் - கௌஸ்துபம்
  • அவதார ஸ்தலம் - திருவஞ்சிக்களம்
  • காலம் - கி.பி. 8ம் நூற்றாண்டு
  • வருடம் - பராபவ - கலி பிறந்த 28ம் வருஷம்
  • மாதம் - மாசி
  • திரு நக்ஷத்திரம் - புனர்பூசம்
  • திதி - சுக்ல பக்ஷம் துவாதசி
  • கிழமை - வியாழன்
  • ஆசார்யன்ஸேனை முதலியார்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருநெல்வேலி  அம்பாசமுத்திரம் அருகிலுள்ள மன்னார் கோயில்
  • அருளிச் செய்தவை - 1. பெருமாள் திருமொழி - முதலாம் ஆயிரம் - 647-751
  • பாசுரங்கள் - 105

----------
மங்களாஸாஸநம் செய்த திவ்ய தேச 
ஸ்தலங்கள் - 9; பாசுரங்கள் - 82

  • திருவரங்கம்         31 பாசுரங்கள்
  • திருக்கோழி 1 பாசுரம்
  • திருக்கண்ணபுரம் 11 பாசுரங்கள்
  • திருவாலி திருநகரி 1 பாசுரம்
  • திருச்சித்திரகூடம் 11 பாசுரங்கள்
  • திருவித்துவக்கோடு 10 பாசுரங்கள்
  • திரு அயோத்தி         4 பாசுரங்கள்
  • திருவேங்கடம்         11 பாசுரங்கள்
  • திருப்பாற் கடல் 2 பாசுரங்கள்

-----------
பிற பெயர்கள்
கொள்ளிக் காவலன், கூடல் நாயகன், கோயிக்கோன், வில்லவர் கோன், சேரலர் கோன்
----------
ஸ்ரீராமாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். எப்பொழுதும் ஸ்ரீராமாயணத்தைக் கேட்டுக் கொண்டே இருப்பவர். பெரியோர்களை விட்டு ஸ்ரீராமாயணத்தை உபன்யாசம் சொல்லச் சொல்லி அதைக் கேட்டு அனுபவித்துக் கொண்டே இருக்கக் கூடியவர். க்ஷத்ரிய வர்ணத்தில் பிறந்தவர். பெரிய சக்ரவர்த்தியாக இருந்த போதிலும் தன்னை ஒரு அடியவன் ஆகவே நினைத்துக்கொண்டு, அதையே ஒரு பெரிய பாக்யமாகக் கருதியவர். குலசேகராழ்வார் ஸ்ரீரங்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தினமும் ஸ்ரீரங்கத்திற்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருந்தவர். அடியார்கள் இடத்தில் மிகுந்த பக்தி மற்றும் நம்பிக்கை கொண்டவர். கொல்லி காவலனான குலசேகர ஆழ்வார் தான் ராஜ்யத்தை விட்டு பூலோக வைகுண்டமாம் திருவரங்கம் சென்று எம்பெருமானுக்கு கைங்கரியம் செய்யும் பேறு என்று கிடைக்கப் பெறுவேன் என்றும், பரமாத்மாவின் மெய்யடியார்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்றும் உருகுகிறார். இப்படி அல்லாதாரோடு தனக்கொரு சேர்க்கை வேண்டாம் என்று நிச்சயத்துடன் பெரிய பெருமாள், சேதனர்களை கரை சேர்ப்பதற்காக திருமலையில் திருவேங்கடவனாக எழுந்தருளி இருக்கவே 'பகவானே! உன் தொண்டுக்கு ஆட்படும் வஸ்துக்களில் ஏதேனும் ஒன்றாக ஆக கடவேன்' என்று ஆசைப்படுகிறார். இவ்வாறு ஊற்றம் இருந்தும் பலன் உடனே கிடைக்காமல் போகவே, வித்துவக்கோட்டு அம்மானிடம் உன்னை விட்டால் வேறு கதி இல்லாத என்னிடம் நீ உதாசீனமாக இருந்தாலும் உன் திருவடிகளை விட்டு அகலமாட்டேன் என்று சரணாகதி செய்கிறார்.

தன் ஆத்ம பரத்தை அவன் திருவடிகளில் ஸமர்பித்த அளவில், எம்பெருமானின் விபவாவதார சேஷ்டிதங்களை அனுபவிக்க ஆசைப்பட்டு ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்தில் ஈடுபடுகிறார். உடன் அவருக்கு தேவகி பிராட்டி இழந்த எம்பெருமானது பால லீலைகள் நினைவுக்கு வர, தான் தேவகி நிலையை அடைந்து புலம்புகிறார். அடுத்து தேவகி போல் இல்லாமல் கௌசல்யா தேவி அருமை பெருமையுடன் தாலாட்டி, சீராட்டி, ஸ்ரீராமனை வளர்த்த அநுபவத்தில் ஆழங்கால் படுகிறார். அடுத்து தசரத சக்கரவர்த்தியின் நிலையை அடைந்து, 'ஐயோ! கைகேயியின் சொல் கேட்டு என் அருமை புதல்வனே கானகத்திற்கு அனுப்பினேனே' என்று சொல்ல முடியாதத்துயரில் ஆழ்ந்து போனவர், பின்பு தெளிந்து ஸ்ரீமத்ராமாயணத்தை பரிபூரணமாக அனுபவிக்கிறார்.
------------
தனியன் 1
கும்பே புனர்வஸவ் ஜாதம் 
கேரளே வஞ்சி மண்டலே|
கௌஸ்துப மாம்சம் தராதீசம் 
குலசேகரம் ஆஸ்ரயே||

தனியன் 2
குஷ்யதே யஸ்ய நகரே 
ரங்க யாத்ரா திநே திநே|
தமஹம் ஸி²ரஸா வந்தே 
ராஜா நம் குலசேகரம்||

தனியனின் விளக்கம்
எப்போதும் ஸ்ரீ ரங்க யாத்ரை பற்றிய பேச்சே நிகழும் நகரைத் தலைநகராகக் கொண்ட அரசர் குலசேகரப் பெருமாள் திருவடிகளை அடியேன் தலையால் வணங்குகிகிறேன்.

வாழி திருநாமம்
அஞ்சன மாமலைப் பிறவி ஆதரித்தோன் வாழியே|
அணி அரங்கர் மணத்தூணை அடைந்து உய்ந்தோன் வாழியே|
வஞ்சி நகரம் தன்னில் வாழ வந்தோன் வாழியே|
மாசி தன்னில் புனர்பூசம் வந்து உதித்தான் வாழியே|
அஞ்சல் எனக் குடப்பாம்பில் அங்கை இட்டான் வாழியே|
அநவரதம் ராம கதை அருளும் அவன் வாழியே|
செஞ்சொல் மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே|
சேரலர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே||

திருநாள் பாட்டு
மாசிப் புனர்பூசம்* காண்மின் இன்று மண்ணுலகீர்*
தேசு இத்திவசத்துக்கு ஏதென்னில்*
பேசுகின்றேன் கொல்லி நகர்க்கோன்*
குலசேகரன் பிறப்பால்* நல்லவர்கள் கொண்டாடும் நாள்!


||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்