About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 20 November 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 78

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 48

யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்²ச
க்ரது: ஸத்ரம் ஸதாங்க³தி:|
ஸர்வ த³ர்ஸீ² விமுக்தாத்மா
ஸர்வ ஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்||

  • 446. யஜ்ஞ - யாகமாக உள்ளவர். அனைத்து வகையான யக்ஞங்களின் உருவகமானவர். அவர் அனைத்து தேவர்களையும் தனது யாகத்தால் மகிழ்வித்து வளர்க்கிறார்.
  • 447. இஜ்யோ - யாகத்தால் வழி படத்தக்கவர். மரியாதைக்குரியவர். 
  • 448. மஹேஜ்யஸ்²ச - பிற தெய்வங்களின் சிறந்த வழிபாட்டையும் ஏற்பவர்.
  • 449. க்ரதுஸ் - செய்யப்படும் அனைத்துக் கர்மாக்களாலும் ஆராதிக்கப்படுபவர். அனைத்து செயல்களுக்கும் பின்னால் உள்ள சக்தி.
  • 450. ஸத்ரம் - ஸ்திரரூபியானவர். ரிஷிகளால் பல யாகங்களால் பல காலங்களில் செய்யப்படும் யாக வடிவானவர். பக்தியுள்ளவர்களையும் நேர்மையாளர்களையும் பாதுகாக்கிறார்.
  • 451. ஸதாம் கதிஹி - சாதுக்களுக்கு அடையத் தக்கவர்.
  • 452. ஸர்வ த³ர்ஸீ² - எல்லாவற்றையும் பார்த்து அறிபவர்.
  • 453. நிவ்ருத்தாத்மா - எந்தப் பொருளிலும் பற்றில்லாத மனமுடையவர். இயற்கையாகவே விடுதலை பெற்றவர். தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் ஆத்மாவாக இருப்பவர்.
  • 454. ஸர்வஜ்ஞோ - தானே சிறந்த தர்மம், தானே சிறந்த பயன் என்பதை அறிந்தவர். 
  • 455. ஜ்ஞாநம் உத்தமம் - மேலான ஞானமயமானவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.15 

யம் ஹி ந வ்யத²யந் த்யேதே 
புருஷம் புருஷர் ஷப⁴|
ஸம து³:க² ஸுக²ம் தீ⁴ரம்  
ஸோ ம்ருதத் வாய கல்பதே||

  • யம் - எவனொருவன் 
  • ஹி - ஏனெனில் 
  • ந - என்றுமில்லை 
  • வ்யத²யந்தி - கவலை தருவது 
  • ஏதே - இவையெல்லாம் 
  • புருஷம் - ஒருவனுக்கு 
  • புருஷர்ஷப - புருஷர்களில் சிறந்தவனே 
  • ஸம - மாறாத 
  • து³ஹ்க² - கவலை 
  • ஸுக²ம் - மகிழ்ச்சி 
  • தீ⁴ரம் - பொறுமையாக 
  • ஸ - அவனே 
  • அம்ருதத்வாய - விடுதலைக்கு 
  • கல்பதே - தகுதி பெற்றவனாகக் கருதப் படுகிறான்

புருஷர்களில் சிறந்தவனே, அர்ஜுநா! ஒருவனுக்கு இவையெல்லாம் கவலை தருவதில்லை. எவனொருவன், கவலையிலும் மகிழ்ச்சியிலும் மாறாமல், பொறுமையாக இருக்கிறானோ, அவனே, முக்திக்கு தகுதி பெற்றவனாகக் கருதப்படுகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.13

அஷ்டமே மேரு தே³வ்யாம் து 
நாபே⁴ர் ஜாத உருக்ரம:|
த³ர்ஸ²யந் வர்த்ம தீ⁴ராணாம் 
ஸர்வாஸ்²ரம நமஸ்க்ருதம்||

  • அஷ்டமே து - எட்டாவதான அவதாரத்தில்
  • ஸர்வாஸ்²ரம - எல்லா ஆசிரமத்தினராலும்
  • நமஸ்க்ருதம் - வணங்கத்தக்க
  • தீ⁴ராணாம் - வீரர்களின்
  • வர்த்ம - மார்க்கத்தை
  • த³ர்ஸ²யந் - காண்பிக்கின்றவராய்
  • உருக்ரமஹ - உருக்ரமன் என்ற பெயரை உடையவராய்
  • நாபே⁴ர் - நாபியிடத்திலிருந்து
  • மேரு தே³வ்யாம் - மேரு தேவியினிடத்தில் 
  • ஜாத - ரிஷபர் என்ற பெயரை உடையவராய் தோன்றினார்

எட்டவதாக பகவான், நாபியின் மனைவியான மேரு தேவியின் திருவயிற்றில் 'ரிஷப தேவர்' என்ற பெயருடன் திரு அவதாரம் செய்து, நான்கு ஆசிரமத்தில் இருப்பவர்களாலும் கொண்டாடப்படுகின்ற தீரர்களின் மார்க்கமான (பரம ஹம்ஸ) சந்யாஸ தர்மத்தைத் தானே நடத்திக் காட்டினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.13

ப்ரஜாபதி ஸம: ஸ்²ரீமாந்
தா⁴தா ரிபு நிஷூத³ந:|
ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய
த⁴ர்மஸ்ய பரி ரக்ஷிதா||

  • ப்ரஜாபதி ஸமஸ் - பிரம்ம தேவருக்கு ஒப்பானவர்
  • ஸ்²ரீமாந் -  ஸ்ரீயை உடையவர்
  • தா⁴தா -  போஷிக்கிறவர்
  • ரிபு நிஷூத³நஹ - சத்ருக்களைத் தோற்கடிப்பவர்
  • ரக்ஷிதா -  ரக்ஷகர்
  • ஜீவ லோகஸ்ய -  ப்ராணி ஸமூஹத்திற்கு
  • த⁴ர்மஸ்ய -  தர்மத்தினுடைய 
  • பரி ரக்ஷிதா - அன்பான ரக்ஷகர்

பிரஜாபதிக்கு {பிரம்மருக்கு} இணையான தாதாவும் {அண்டத்தை ஆதரிக்கும் விஷ்ணுவும்}, ஸ்ரீயுடன் கூடியவனுமான அவன் {ராமன்}, பகைவரை அழித்து, உயிரினங்களின் உலகைக் காத்து, அறத்தை முழுமையாகப் பாதுகாக்கிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

திவ்ய ப்ரபந்தம் - 60 - பெரியாழ்வார் திருமொழி - 1.4.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் – 60 - லிலையில் வளர்ந்த சிறுக்கன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - ஏழாம் பாசுரம்

பாலகனென்று
பரிபவம் செய்யேல்* 
பண்டொரு நாள் ஆலினிலை வளர்ந்த* 
சிறுக்கன் அவனிவன்*
மேலேழப் பாய்ந்து* 
பிடித்துக் கொள்ளும் வெகுளு மேல்*
மாலை மதியாதே* 
மா மதீ! மகிழ்ந்து ஓடி வா!

  • பாலகன் என்று - இவனொரு சிறு குழந்தை என்று
  • பரிபவம் செய்யேல் - அலட்சியமாய் எண்ணி விடாதே
  • பண்டு ஒரு நாள் - முன்பொரு காலத்திலே
  • ஆலின் இலை - ஆலிலை மேல்
  • வளர்ந்த - சயனத் திருக்கோலத்தில் பால முகுந்தனாக மிதந்து வந்தப் புராணங்களிலே சொல்லப்படுகிற
  • சிறுக்கண் அவன் - அந்த சிறு பிள்ளை தான்  
  • இவன் - இவன் என்பதை உணர்வாய் 
  • மேல் எழப் பாய்ந்து - உன் மேல் ஒரு பாயலாகப் பாய்ந்து
  • பிடித்துக் கொள்ளும் - உன்னைப் பிடித்துக் கொள்வான்
  • வெகுளும் ஏல் - இவனுக்கு கோபம் வந்து விட்டால்
  • மாலை - இந்த பெருமைப் படைத்த மஹா புருஷனை
  • மதியாதே - சிறுவன் என்று எடை போடாதே!
  • மா மதீ!  – பூத்திருக்கின்ற பூரண நிலவே!
  • மகிழ்ந்து ஓடி வா! -  உகப்புடன் விரைந்தோடி வா

பௌர்ணமி நாளில் பூத்திருக்கின்ற பூரண நிலவே! என் மகனை சிறிய மழலை தானே என்று எளிமையாய் எண்ணி விடாதே. முன்னொரு காலத்தில், ஊழிப் பிரளயத்தின் போது, அண்டங்கள் அனைத்தையும் தன் வயிற்றினுள் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, பங்கயப் பாத விரலை பவள இதழால் சுவைத்துக் கொண்டே பிரளய நீரில் ஆலிலை மேல் சயனத் திருக்கோலத்தில் பால முகுந்தனாக மிதந்து வந்த அந்த சிறுவன் தான் இவன். இவனுக்குக் கோபம் வந்துவிட்டால், உன்னை ஒரே பாய்ச்சலில் எட்டிப் பறித்து, எங்கும் அசைய விடாமல் பிடித்துக் கொள்வான். அதற்காக நீ அச்சம் கொள்ளவும் தேவையில்லை; என் மகன் உன்னுடன் அன்பாக விளையாடுவான் அதனால் இம்மஹா புருஷனை அவமதியாமல் விரைந்தோடி வா வெண்மதியே!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 016 - திருக்கண்ணமங்கை 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

016. திருக்கண்ணமங்கை 
க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரம் - திருவாரூர் 
பதினாறாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 14

திருமங்கையாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 1638 - பத்தராவிப் பெருமாளைக் கண்டு கொண்டேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
பெரும் புறக் கடலை அடல் ஏற்றினைப்* பெண்ணை ஆணை* 
எண் இல் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை முத்தின் திரள் கோவையைப்*
பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை* 
அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை* 
அமுதம் பொதி இன் சுவை* கரும்பினை கனியை சென்று நாடிக்*
 கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1639 - எல்லாப் பொருள்களுமாக இருப்பவன் பக்தவத்சலன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
மெய்ந் நலத் தவத்தை திவத்தைத் தரும்*
மெய்யைப் பொய்யினை கையில் ஓர் சங்கு உடை*
மைந் நிறக் கடலைக் கடல் வண்ணனை மாலை* 
ஆல் இலைப் பள்ளி கொள் மாயனை* 
நென்னலைப் பகலை இற்றை நாளினை*
நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை*
கன்னலைக் கரும்பினிடைத் தேறலைக்*
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1640 - நான் தேடிய தெய்வம் பக்தவத்சலனே
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை*
வாச வார் குழலாள் மலை மங்கை தன் பங்கனை* 
பங்கில் வைத்து உகந்தான்* தன்னைப் பான்மையைப் பனி மா மதியம் தவழ்*
மங்குலைச் சுடரை வட மா மலை உச்சியை* 
நச்சி நாம் வணங்கப்படும் கங்குலை* 
பகலை சென்று நாடிக்* கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1641 - எனக்கு உற்றுழி உதவுபவன் பக்தவத்சலன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - நான்காம் பாசுரம் 
பேய் முலைத் தலை நஞ்சு உண்ட பிள்ளையைத்*
தெள்ளியார் வணங்கப்படும் தேவனை*
மாயனை மதிள் கோவல் இடைகழி மைந்தனை* 
அன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை* 
இலங்கும் சுடர்ச் சோதியை* எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை*
காசினை மணியைச் சென்று நாடிக்* 
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1642 - இம்மைக்கும் மறுமைக்கும் மருந்து இவனே
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை*
இம்மையை மறுமைக்கு மருந்தினை*
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனை* 
கையில் ஆழி ஒன்று ஏந்திய கூற்றினை*
குரு மா மணிக் குன்றினை* நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை*
காற்றினைப் புனலைச் சென்று நாடிக்* 
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1643 - திருமங்கை மணாளன் திருக்கண்ணமங்கையில் உள்ளான்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
துப்பனைத் துரங்கம் படச் சீறிய தோன்றலைச்*
சுடர் வான் கலன் பெய்தது ஓர் செப்பினை* 
திருமங்கை மணாளனைத்* தேவனைத் திகழும் பவளத்து ஒளி ஒப்பனை*
உலகு ஏழினை ஊழியை* ஆழி ஏந்திய கையனை அந்தணர் கற்பினை* 
கழுநீர் மலரும் வயல்* கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1644 - மூவரில் முதல்வன் பக்தவத்சலன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
திருத்தனை திசை நான்முகன் தந்தையைத்*
தேவ தேவனை மூவரில் முன்னிய விருத்தனை* 
விளங்கும் சுடர்ச் சோதியை* 
விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய அருத்தனை*
அரியைப் பரி கீறிய அப்பனை* அப்பில் ஆர் அழல் ஆய் நின்ற கருத்தனை* 
களி வண்டு அறையும் பொழில்* கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1645 - பக்தர்களின் தலை மேல் இருப்பவன் பக்தவத்சலன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
வெம் சினக் களிற்றை விளங்காய் வீழக்* கன்று வீசிய ஈசனை* 
பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலைத்*
தோன்றல் வாள் அரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை* 
அமுதத்தினை நாதனை* நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியை*
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக்*
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1646 - பக்தவத்சலனைக் கண்ணாரக் கண்டேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பண்ணினைப் பண்ணில் நின்றது ஓர் பான்மையைப்*
பாலுள் நெய்யினை மால் உரு ஆய் நின்ற விண்ணினை* 
விளங்கும் சுடர்ச் சோதியை* வேள்வியை விளக்கின் ஒளி தன்னை* 
மண்ணினை மலையை அலை நீரினை*
மாலை மா மதியை மறையோர் தங்கள் கண்ணினை* 
கண்கள் ஆரளவும் நின்று* கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1647 - கண்ணபிரானை! நீ கூட இப்பாடல்களைச் சுவைக்கலாம்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - பத்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று* 
காதலால் கலிகன்றி உரை செய்த*
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை*
வல்லர் ஆய் உரைப்பார் மதியம் தவழ்*
விண்ணில் விண்ணவர் ஆய் மகிழ்வு எய்துவர்*
மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய கண்ண* 
நின் தனக்கும் குறிப்பு ஆகில் கற்கலாம்* கவியின் பொருள் தானே|

011. திவ்ய ப்ரபந்தம் - 1848 - திருநீர்மலையும் திருக்கண்ணமங்கையும்
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்
ஒரு நல் சுற்றம்* எனக்கு உயிர் ஒண் பொருள்*
வரும் நல் தொல் கதி* ஆகிய மைந்தனை*
நெரு நல் கண்டது* நீர்மலை இன்று போய்*
கரு நெல் சூழ்* கண்ணமங்கையுள் காண்டுமே|

012. திவ்ய ப்ரபந்தம் - 2008 - கண்ணனை எண்ணாத மனிதரை மதியாதே
பெரிய திருமொழி - பதினொன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
மண் நாடும் விண் நாடும்* வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்*
உண்ணாத பெரு வெள்ளம்* உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட*
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்* கழல் சூடி அவனை உள்ளத்து*
எண்ணாத மானிடத்தை* எண்ணாத போது எல்லாம் இனிய ஆறே|

013. திவ்ய ப்ரபந்தம் - 2706 - தலைவி சென்று தேடிய திவ்ய தேசங்கள்
சிறிய திருமடல் - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே* 
மதிள் கச்சி ஊரகமே பேரகமே*
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே* 
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்* 
ஆராமம் சூழ்ந்த அரங்கம்* கணமங்கை| 

014. திவ்ய ப்ரபந்தம் - 2773 - எம்பெருமான் தங்கியிருக்கும் திவ்ய தேசங்களை அவள் புகழ்ந்து வணங்குகிறாள்
பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் (61)
மா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி*
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை*
கன்னி மதிள் சூழ் கண மங்கைக் கற்பகத்தை*
மின்னை, இரு சுடரை, வெள்ளறையுள் கல் அறை மேல் பொன்னை* 
மரதகத்தை புட்குழி எம் போர் ஏற்றை* மன்னும் அரங்கத்து எம் மா மணியை|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 69

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணருக்கு வரவேற்பு| 

பலராமர் சீக்கிரமே வந்து கிருஷ்ணரை அடைந்தார். பலராமரும் கிருஷ்ணரும் நந்தவனத்தில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தி பீஷ்மகரை எட்டியது. அவர்கள் திருமணத்தைப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று அவர் நினைத்தார்.


ஆகவே வாத்திய கோஷங்களுடன் அவர்களைச் சந்தித்து, தக்க மரியாதைகளைச் செய்து, அவர்களும் அவர்களுடைய படைகளும் சௌகரியமாகத் தங்க ஏற்பாடுகள் செய்தார். அவரே கிருஷ்ணர்தாம் தம் மாப்பிள்ளை என்று முதலில் மனதில் எண்ணியிருந்தார். இப்பொழுது இன்னொருவர் அந்த இடத்தைப் பிடிக்கப் போவது அவருக்கே பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்வார், பாவம்! ஊர் மக்கள் கிருஷ்ணர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டார்கள். உடனே திருமணத்தில் இருந்த ஆசையெல்லாம் மறந்து, கும்பல் கும்பலாக கிருஷ்ணரைத் தரிசிப்பதும், அவருடைய ஆசிர்வாதங்களைப் பெறுவதுமாக இருந்தார்கள். கிருஷ்ணரின் அழகைக் கண்டு அவர்கள் அப்படியே மோகித்துப் போனார்கள்.

அவர்கள் தங்களுக்குள், "ருக்மிணி தான் கிருஷ்ணருக்குச் சரியான ஜோடி, இத்தனை அழகிய கிருஷ்ணர்தாம் ருக்மிணியை மணக்கத் தகுந்தவர். இருவருக்கும் எத்தனை நல்ல பொருத்தம் உள்ளது! நாங்கள் சிறிதளவாவது புண்ணியம் செய்திருந்தால், அந்தப் புண்ணியத்தின் பலனாய் பகவான் இவர்கள் இருவரையும்தாம் சேர்த்து வைக்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - எழுபத்தி ஐந்தாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

075 யான் சிறியேன் என்றேனோ திருமலை நம்பியைப் போலே|

பெரிய திருமலை நம்பி, திருமலையில் அவதரித்தவர், ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவர். ஸ்ரீசைல பூர்ணர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. ராமானுஜரின் தாய்மாமனான இவரிடம், ஆளவந்தார், ராமானுஜருக்கு ராமாயணத்தை கற்றுக் கொடுக்கும் பொறுப்பினை நியமனம் செய்தார். ராமானுஜருக்கு இளையாழ்வார் எனும் இயற்பெயரை சூட்டிய பெரிய திருமலை நம்பி, திருவேங்கடத்தில் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களில் முதன்மையானவராக கருதப்பட்டவர். திருவேங்கடமுடையானுக்கு நித்ய கைங்கர்யபரராக இருந்து சேவை புரிந்த திருமலை நம்பி,  அவருக்காக தினமும் ஆகாச கங்கையிலிருந்து தீர்த்தம் கொண்டு வருவார்.


ஒரு சமயம், ராமானுஜர், வேங்கடவனைத் தரிசிக்க, திருப்பதிக்கு எழுந்தருளினார். பெரிய திருமலை நம்பியோ அந்நேரம் திருமலையில் இருந்தார். ராமானுஜரின் சீடர்கள் அவரை மலை மீது ஏறி எம்பெருமானுக்கு மங்களாஸாஸனம் செய்ய வேண்டினர். தவிர, ஆனந்தாழ்வாரின் நந்தவனத்தையும் பார்க்க வேண்டினர். ஆனால், ராமானுஜரோ, அந்த மலை ஆதிஷேசன் என்றும், அதில் தன் கால்கள் படலாமா"? என்றும் யோசித்தார். ஆனால், சீடர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால் மலை மீது ஏற ஒப்புக் கொண்டு ஏறினார்.

ராமானுஜரின் வருகையை அறிந்த பெரிய திருமலைநம்பி, பெருமாளின் தீர்த்த பிரசாதத்தை எடுத்துக் கொண்டு, ராமானுஜரை வரவேற்க, அவரே மலை இறங்கி சென்றார். தனது ஆசார்யன் என்ற முறையிலும், முதியவர் என்ற முறையிலும், ராமானுஜர் அவரிடம், ‘‘அடியேன் போன்ற சிறியோனை வரவேற்க தாங்களே வர வேண்டுமா? யாரேனும் தாழ்ந்தவர் இல்லயோ?’’ என்றார்.

திருமலை நம்பி, பெருந்தன்மையுடன், ‘‘ராமானுஜா! திருமலையில் நான்கு வீதிகளிலும் தேடினேன்; என்னை விடச் சிறியவர் எவரும் கிடைக்கவில்லை! அதனால் நானே கொண்டு வந்தேன்.’’ என்று பதிலளித்தார். நம்பியின் தன்னடகத்தைக் கண்ட எம்பெருமானார் பெரிதும் வியந்தார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " ஸ்ரீவைணவ கோட்பாடுகளை பாராட்டி, அதன் வழி வாழ்ந்து, அந்த திருமலை நம்பி தன்னை சிறியோன் என்றுக் கூறிக் கொண்டது போல நான் கூறினேனா? என்னை சிறியன் என்றேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 22

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பக்தனின் ஊடல்

ஸ்கந்தம் 01

பகவானான கண்ணனே உடனிருந்து யுத்தத்தை நடத்தி அதில் வெற்றிக் கனியைப் பெற்றுத் தந்த போதும், தர்ம புத்திரனின் மனக் கலக்கம் நீங்கவில்லை.

வியாஸரும் மற்ற மஹரிஷிகளும், கண்ணனும் தேற்றியும், தன் சுற்றத்தார் அனைவரும் போரில் இறந்து படத் தானே காரணம் என்று எண்ணி சோகத்தில் ஆழ்ந்தார்.

"அழியக்கூடிய இவ்வுடலைக் காக்க, எவ்வளவு சேனைகள் கொல்லப்பட்டன. குழந்தைகள், அந்தணர்கள், உறவினர்கள் நண்பர்கள், சகோதரர்கள், ஆசிரியர்கள் அனைவர்க்கும் துரோகம் இழைத்து விட்டேன். குடிகளைக் காக்க நேர்ந்த தர்மப் போர் என்றாலும் என் மனம் கேட்கவில்லை. ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற பாவத்தினால் ஏற்பட்ட கறையை எப்படிப் போக்கிக் கொள்வது?" என்று புலம்பினார்.

பின்னர் அந்திம காலத்தில் இருக்கும் பீஷ்மரிடம் சென்று தர்மங்களைக் கேட்டு அறியச் சென்றார். அவரைத் தொடர்ந்து அர்ஜுனனோடு கண்ணனும் பீஷ்மரைப் பார்க்கச் சென்றான்.

பீஷ்மர் யுத்தத்தில் கண்ணன் மேலுள்ள அபரிமிதமான பக்தியால், கண்ணன் மீது அம்பு மழை பொழிந்தார்.

தன் மீது சாக்கிய நாயனார் எறிந்த கற்களைப் பூக்களால் ஆன பூஜை போன்று சிவபெருமான் ஏற்றார். அதைப் போலவே, பீஷ்மர் விட்ட அத்தனை அம்புகளையும் தானே விரும்பி ஏற்றான் கண்ணன். அந்த அம்புகளால் ஏற்பட்ட வடுக்களை பூஷ்ணமாக ஏற்று இன்றும்  பார்த்த ஸாரதியாய் திருவல்லிக்கேணியில் காட்சியளிக்கிறான்.

சாதாரண மாந்தர்க்கே அந்திம நேரத்தில் பகவானை நினைத்தால் மோக்ஷம் கிட்டும் என்றால், பீஷ்மருக்கு? அவருக்கு மோக்ஷத்தைக் கண்ணன் அருள வேண்டியதில்லை. அவரது தந்தை சந்தனுவால் விரும்பியபடி மரணம் என்ற வரத்தைப் பெற்றிருந்தார். கடுமையான ஸாதனைகளாலும், ப்ரும்மச் சர்யத்தாலும் யோகீஷ்வரராகவும் ஆகி விட்டார். தன் உடலைத் தான் விரும்பிய நேரம் நீங்கலாம் என்ற வரம் பெற்றிருந்தும் அம்புப் படுக்கையில் படுத்திருந்தார்.

அதென்ன அம்புகளை வரிசையாக நட்டுப்போட்ட படுக்கையா என்ன? யுத்தத்தின் பத்தாம் நாளன்று அர்ஜுனன் விட்ட அம்புகள் அனைத்தும் பீஷ்மரின் உடலின் முன்புறம் குத்தி பின்புறமாய் வெளி வந்திருக்கின்றன. உடலில் உள்ள குருதி முழுதும் வடிந்து விட்டது. அதன் பின்னர் யுத்தம் எட்டு நாள்கள் நடந்தது.

அஸ்தினாபுரத்தின் அரியணை ஒரு தர்மவானிடத்து ஒப்படைக்கப்பட்டது என்ற சேதியும் அவருக்கு வந்தது. உடல் முழுவதும் வலிகளோடு துடித்துக் கொண்டு, ப்ராணனை விடாமல், அதற்காகக் காத்திருந்தார் என்று சொல்பவர்கள் உண்டு. இன்னும் சிலர் உத்தராயண புண்ய காலத்திற்காகக் காத்திருந்தார் என்று சொல்வார்கள். யுத்தம் மார்கழி மாதக் கடைசியில் முடிந்து விட்டது. மகர சங்கராந்தி புண்ய காலமும், உத்தராயணமும் வந்து ஒரு வாரம் ஆயிற்று. இன்னும் வலிகளோடு உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். எதற்காக?

அந்திம காலத்தில் கண்ணனைக் காண வேண்டும் என்பதற்காக. அதற்கென்ன? அஸ்தினாபுரத்தில் தானே இருக்கிறான்? யாரிடமாவது சொல்லி விட்டால் ஓடி வர மாட்டானா? இல்லை. இது பக்தனுக்குள்ள பிடிவாதம். அதென்ன நான் சொல்லி அவர் தெரிந்து கொள்வது? அவருக்கு என்னைத் தெரியாதா? என் கஷ்டம் அறியாதவரா? என்னைப் பார்க்க அவருக்கு எப்போது விருப்பமோ அப்போது வரட்டும். அது வரை காத்திருப்பேன். வராமல் இருந்து விடுவாரா என்ன? பக்தனுக்கும் பகவானுக்கும் உள்ள ஊடல். அவரது எண்ணம் தெரிந்தே கண்ணனும் ஒரு வாரம் சோதித்து விட்டு, இப்போது தானே வந்து அவர் முன் நின்றான். கண்ணன் பீஷ்மரைக் காண விரும்பியே தன் பயணத்தைத் தள்ளிப் போட்டான்.

யுதிஷ்டிரன் பிதாமகரை, உயர்ந்த தர்மங்களை எடுத்துச் சொல்லும்படி கேட்டார்.

"ஒருவன் தன் கடைசி காலத்தில் சில ரகசியமான சொத்துக்களை மகனிடம் கொடுப்பது போல், நீங்கள் எனக்கு இது வரை சொல்லாத விசேஷ தர்மங்கள் இருந்தால் அவற்றைச் சொல்லுங்கள்" என்றார்.

தன் முன் வந்து நின்ற பகவானைக் கண்ணால் பருகிக் கொண்டே யுதிஷ்டிரனின் கேள்விக்கு பதில் சொன்னார் பீஷ்மர்.

"ப்ரும்மாதி தேவர்களுக்கும் கிட்டாத பகவான் உன் வீட்டில் வந்து சகஜமாகப் பழகுகிறான். பகவானையே எப்போதும் நம்பியிருந்த போதிலும் பாண்டவர்களான உங்கள் வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள். விதி எவ்வளவு வலிமையானது பார்த்தாயா? எல்லாமே காலத்தின் கோலம். எனவே நடப்பதெல்லாம் நாராயணனின் சங்கல்பம் என்று கொள்வாய். இவ்வுலகைப் படைத்து காத்து அழிக்கும் ஸர்வ வல்லமை படைத்த பகவானே உன் வீட்டில் இதோ இந்த க்ருஷ்ணனாக நடிக்கிறான்" என்று சொல்லி, பகவானை ஸஹஸ்ரநாமங்களால் துதித்தார்.

இதற்குள் ரிஷிகள் பலரும், அமரர்களும் அங்கு கூடினர். மஹாபாரதத்தில் விஸ்தாரமாகச் சொல்லி விட்டதால், இங்கு சுருக்கமாகச் சொல்கிறார் வியாஸர். அதன் பின் பீஷ்மர் மானிடப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் பொதுவாகக் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள், ப்ரும்மச்சாரிகள், இல்லறவாசிகளின் தர்மங்கள், தான தர்மங்கள், ராஜ தர்மங்கள், மோக்ஷ நெறி, கற்பு நெறி, பெண்களுக்குண்டான தர்மங்கள், ஏகாதசி போன்ற விரத தர்மங்கள், அறம், பொருள், இன்பம், வீடு அச்கிய நால்வகைப் புருஷார்த்தங்களை அடையும் முறை ஆகியவற்றை சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் கூறியுள்ளபடி சுருக்கமாகக் கூறினார்.

பின்னர் தன் கண் முன் நிற்கும் கண்ணனைக் கண்ணாரக் கண்டு தன் அந்திம ப்ரார்த்தனையை அவன் முன் ஸமர்ப்பித்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்