About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 3 November 2023

லீலை கண்ணன் கதைகள் - 60

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

துவாரகா கட்டமைப்பு|

காலயவனன் என்ற ஒரு பெரிய யவனவீரன் இருந்தான். மிக்க பலசாலிகளுடன் சண்டை போட்டு வெற்றி கொள்வதையே அவன் தன் வேலையாகக் கொண்டிருந்தான். தனக்கு நிகரான பலசாலி இந்த உலகில் யாருமே கிடையாது என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.


ஒரு சமயம் அவன் நாரத முனிவரைச் சந்தித்துத் தன் வீரத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டான். அதற்கு நாரதர் அவனுக்கு நிகரான பலசாலிகள் யாரும் இல்லை, ஆனால் அவனைவிட மிகப் பெரிய பலசாலிகளாக கிருஷ்ணனும் பலராமனும் தான் இருகிறார்கள் என்று சொன்னார்.

அதனால் அவன் மூன்றரைக் கோடி மிலேச்சத் துருப்புக்களை அழைத்துக் கொண்டு மதுரா நகரை முற்றுகையிட்டான். யாதவர்கள் இப்பொழுது இருதலைக் கொள்ளி எரும்பைப் போலத் தவித்தனர். ஒரு பக்கம் ஜராசந்தனின் பலம்வாய்ந்த படைகள்; இன்னொரு பக்கம் காலயவனின் படைகள்! நெருக்கடி நிலை ஏற்பட்டுவிட்டது என்பதைக் கிருஷ்ணன் உணர்ந்தான்.

ஏற்கனவே காலயவனன் மதுரா நகரை எல்லாப் பக்கங்களிலும் முற்றுகையிட்டிருந்தான். அடுத்த நாளே, ஜராசந்தனின் படைகள், முந்தைய பதினேழு தடவைகள் எத்தனை பலத்துடன் விளங்கினவோ அதே பலத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே மதுராவின் முக்கியப் பகுதிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கிருஷ்ணன் உணர்ந்தான்.

தங்கள் மக்களை எப்படிக் காப்பாற்றுவது என்று பலராமனும், கிருஷ்ணனும் வெகு நேரம் சிந்தித்தனர். கடைசியாகக் கிருஷ்ணன், "நாம் எங்காவது நல்ல கோட்டை கட்டி அங்கு நம் மக்களை குடியேற்றுவோம்" என்று சொன்னான். உடனே கிருஷ்ணன், கடலின் நடுவில் மிகவும் அழகான ஒரு நகரத்தை கட்டச் சொன்னான். புது நகருக்குத் “துவாரகை” என்று பெயரிடப்பட்டது. கிருஷ்ணன் துவரகையைப் பலராமன் பொறுப்பில் விட்டுவிட்டு, ஓர் ஆயுதமுமின்றி, கழுத்தில் ஒரு தாமரை மலையை மட்டும் அணிந்துக் கொண்டு, காலயவனனைச் சந்திக்க, துவாரகையை விட்டு வெளியே வந்தான்.

காலயவனன் இதற்கு முன்பு கிருஷ்ணனைப் பார்த்ததில்லை. ஓர் அழகிய இளைஞன் பட்டாடை அணிந்து நிற்பதைப் பார்த்தான். அந்த இளைஞனின் மார்பில் ஸ்ரீவத்ஸ அடையாளம் இருந்தது. கழுத்தில் கௌஸ்துபமணி பிரகாசித்தது. முகத்தில் புன்சிரிப்பு தாண்டவமாடியது. அந்த இளைஞன் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகுடையவனாக இருந்தான்.

அந்த இளைஞன் தான் கிருஷ்ணன் என்பதைப் புரிந்து கொண்டான். கிருஷ்ணன் எந்த ஆயுதமுமின்றி நடந்து செல்வதைக் காலயவனன் பார்த்து, தானும் அவனைப் பின்தொடர்ந்தான். கிருஷ்ணன் திரும்பிப் பார்த்தான். அவன் ஒரு திட்டம் வைத்திருந்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - அறுபத்தி ஆறாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

066 அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே|

நம்பி என்ற செல்வந்தர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தொண்டில் ஈடுபட்டு வந்தார். ஆனால், அவரது தொண்டுகள் பயனுள்ளதாக அமையவில்லை.


நம்பியைத் திருத்த ராமானுஜர் செய்த அறிவுரைகள் அனைத்தையும் அவர் அலட்சியப் படுத்தினார். அதனால் மனம் உடைந்த ராமானுஜர் காஞ்சிக்குத் திரும்பச் செல்ல நினைத்தார். கூரத்தாழ்வார் அவரை சமாதானம் செய்து, நம்பியை நல்வழிப்படுத்தி, ராமானுஜரின் சீடனாக ஆக்கினார். உடையவரின் நோக்கத்தில் இருந்த பரிசுத்தம் புரிந்து, அவரை சரணடைந்தார்.

ராமானுஜர் அவருக்கு "திருவரங்கத்து அமுதனார்" என்ற பெயரைச் சூட்டினார்

அவருக்கு ஒரு நூல் எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அமுதனார் ஒரு நாள், ராமானுஜரின் பெருமையைப் போற்றும் விதமாக, அவரை வாழ்த்தி, அந்தாதி ஒன்று இயற்றி, ராமனுஜரிடம் வழங்கினார். ஆனால், ராமானுஜரோ, தன்னைப் பற்றிய போற்றுதல் அதிகமாக இருப்பதால், அந்த ஓலைச் சுவடியை வாங்கி வைத்துக் கொண்டார், அந்தாதிக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. மேலும், “உமக்கு எழுத வேண்டும் என்று தோன்றினால், நமது திவ்யதேசங்கள் பற்றியோ, அல்லது பன்னிரு ஆழ்வார்களைப் பற்றியோ, ஆச்சார்யர்கள் பற்றியோ அல்லது கூரத்தாழ்வாரை குறித்தோ எழுது." என்றார்.

அமுதனாரோ, "ராமானுஜர் நூற்றந்தாதி” எழுதினார். ஒவ்வொரு பாடலிலும் முதல் இரண்டு வரிகளில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களின் பெருமையைச் சொல்லி, பிந்தைய இரண்டு வரிகளில் அவர்களின் சம்பந்தம் பெற்ற ராமானுஜரின் பெருமையை எழுதினார். ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டு அழகிய சிங்கர் சன்னதியில் அமர்ந்து அனைவருக்கும் சொல்லிய போது, தற்செயலாக ஸ்ரீ ராமானுஜர் அங்கு எழுந்தருளினார். அவரும் நூற்றந்தாதியை முழுமையாகக் கேட்டார். அவர் மறுத்துச் சொல்ல முடியாதபடி ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர் பெருமை கூறப்பட்டபடியால், அதை ஏற்றுக் கொண்டார்.

இந்த நூற்றந்தாதியினை திருவரங்கத்தில் ராமானுசரின் சிஷ்யர்கள் ஓதுவது வழக்கமாயிற்று. இதை தானும் கேட்டு இன்புற வேண்டும் என்று விரும்பிய நம்பெருமாள், ராமானுஜரை மடத்திற்கு செல்லப் பணித்து விட்டு, சப்தாவரணப் புறப்பாடின் போது, வாத்திய கோஷத்தை நிறுத்தி விட்டு, ராமானுஜ நூற்றந்தாதியை மட்டும் ஓதச் சொல்லிக் கேட்டு உகந்தருளினார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அமுதனாரைப் போல் என் ஆச்சார்யான் மீது அந்தாதி பாடினேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அரங்கேற்றம்

ஸ்கந்தம் 01

நைமிஷாரண்யத்தில் சௌனகாதி ரிஷிகள் அனைவரும் சேர்ந்து ஸத்ர யாகம் செய்தனர். ஆயிரம் வருஷங்களுக்கு நடைபெறும் அந்த யாகத்தில் விராம காலத்தில் அதாவது, யாகம் நடைபெறாத நேரங்களில் வீண் பொழுது போக்குவதோ, உறங்கவோ கூடாது. அதனால், அந்த நேரங்களில் புராணக் கதைகளைக் கேட்பதும், ஸத்சங்கமுமாக நடத்துவது வழக்கம். அந்த சமயத்தில் ஸூத பௌராணிகர் அவ்விடத்திற்கு வந்தார். அவரைக் கண்டதும் ரிஷிகளின் முகங்கள் அன்றலர்ந்த தாமரையாய் மலர்ந்தன.

அவரை வரவேற்று ஆசனம் கொடுத்து அவரிடம் சொன்னார்கள்,


உங்கள் தந்தையான ரோம ஹர்ஷணரின் ஸ்வரூபமாகவே நீங்கள் சரியான சமயத்தில் இங்கு வந்திருக்கிறீர்கள். புராணங்கள் அனைத்தையும் வியாஸர் ரோம ஹர்ஷணரிடம் ஒப்படைத்தார் என்பதை முன்னமே பார்த்தோம். புராணங்களைச் சொல்லும் போது பாவங்களில் மூழ்கி, தன்னை மறந்து சொல்வார். அப்போது அடிக்கடி மயிர்க் கூச்சம் ஏற்பட்டு பகவானின் லீலைகளில் மூழ்கி மூர்ச்சை அடைவார் என்பதனாலேயே அவருக்கு ரோம ஹர்ஷணர் என்பது காரணப் பெயராயிற்று. அவரது மகனான, ஸூதரும் தந்தையைப் போலவே பாவ பூர்ணராக இருந்து கதை சொல்வதால் அவருக்கும் தந்தையின் பெயரான ரோம ஹர்ஷணர் என்பதே வழக்காயிற்று.

ரிஷிகள் சொன்னார்கள்,
கலியுகம் துவங்கி விட்டது. கலியுகத்தில் மக்கள் படும் கொடுமைகளை நினைத்தாலே ஹ்ருதயம் கலங்குகிறது. அந்த ஜனங்களுக்கு நற்கதியடைய சரியான உபாயம் என்ன?

அவர்களின் கேள்வியால் மகிழ்ந்த ஸூத பௌராணிகர் சொல்ல ஆரம்பித்தார். கலியுகத்தில் மக்கள் உய்ய ஒரே வழி ஹரி கதா ச்ரவணமாகும். ஹரியின் அனந்தமான லீலைகளை ஒருவன் கேட்பதாலேயே அவனுக்கு முக்தியின் வாசல் திறந்து விடுகின்றது. கலியுகத்திற்கேற்ற புராணமான ஸ்ரீமத் பாகவதத்தை சொல்கிறேன்.

ஸ்ரீ மத் பாகவத புராணமா? அது எப்போது யாரால் இயற்றப்பட்டது? நீங்கள் எப்படி அதை அறிந்தீர்கள்?

வியாஸ பகவான் இயற்றிய புராணம். அவரது புத்ரரான ஸ்ரீ சுக மஹரிஷி அதை பாண்டு வம்சத்து அரசனான பரீக்ஷித்திற்கு கங்கைக் கரையில் ஏழு நாள்கள் சொன்னார். அப்போது பல மஹரிஷிகள் உபச்ரோதாவாக இருந்து கேட்டனர். நானும் கேட்டேன். ஸ்ரீ சுக ப்ரும்மம் சொன்னதை என் அறிவிற்கு எட்டிய வரை, நான் புரிந்து கொண்ட வரை, நினைவில் நின்ற வரையில் எடுத்துச் சொல்ல முயற்சி செய்கிறேன்..

ஸ்ரீ சுக ப்ரும்மம் சொன்னாரா? ஏழு நாள்களா? அவர் பரிவ்ராஜகராயிற்றே. பசு மாட்டின் மடியிலிருந்து பால் பாத்திரத்தில் விழும் நேரம் கூட ஓரிடத்திலும் நிற்க மாட்டாரே. அவர் ஏழு நாள்கள் ஓரிடத்தில் எப்படி தங்கினார்? மேலும் பரீக்ஷித் இளைஞன், ஸார்வ பௌமன், அவன் எதற்காக இவ்விளம் வயதில் கங்கைக் கரைக்கு வந்தான்? சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்.
என்றனர் ரிஷிகள்.

ஸூத பௌராணிகர், முதலில் வியாஸரையும், பிறகு சுக மஹரிஷியையும் த்யானம் செய்து துதித்து விட்டுப் பேச ஆரம்பித்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்