||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
034. திருவாலி – திருநகரி (திருநாங்கூர்)
முப்பத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்
ஸ்ரீ அழகிய சிங்கர் பெருமாள் திருக்கோயில் & ஸ்ரீ வேதராஜன் பெருமாள் திருக்கோயில்
ஸ்ரீ அம்ருதகடவல்லீ தாயார் ஸமேத ஸ்ரீ வயலாலி மணவாளன் பெருமாள்
திருவடிகளே சரணம்||
- பெருமாள் மூலவர்: அழகிய சிங்கர் (லக்ஷ்மி நரஸிம்ஹன்), வேதராஜன்
- பெருமாள் உற்சவர்: திருவாலி நகராளன், கல்யாண ரங்கநாதன்
- தாயார் மூலவர்: பூர்ணவல்லி, அமிர்தவல்லி
- தாயார் உற்சவர்: அம்ருதகடவல்லி
- திருமுக மண்டலம் திசை: மேற்கு
- திருக்கோலம்: வீற்றிருந்த
- புஷ்கரிணி/தீர்த்தம்: இலாக்ஷணி
- விமானம்: அஷ்டாக்ஷர
- ஸ்தல விருக்ஷம்: வில்வம்
- ப்ரத்யக்ஷம்: கலியன், அலாதி நிகஞ்சம ப்ரஜாபதி
- ஸம்ப்ரதாயம்: தென் கலை
- மங்களாஸாஸநம்: 2 ஆழ்வார்கள்
- பாசுரங்கள்: 42
-------------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
ஸ்தல புராணம்
பத்ரிகாசிரமத்திற்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த இடமாதலால் இத்தலம் பத்ரிக்கு இணையானது. லக்ஷ்மியுடன் பெருமாள் நரஸிம்ஹ கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு "லக்ஷ்மி நரஸிம்ஹ க்ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு. திருவாலியையும் தரிசிப்பதால் இங்கே பஞ்ச நரஸிம்ஹ தலங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லக்ஷ்மி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். பெருமாள் கூறியபடி லக்ஷ்மி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மஹரிஷியின் மகளாக பிறந்தாள். பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் காதில் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார். திருமங்கை வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம். இதை முன்னிட்டு ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடக்கிறது.
திருமால் நரஸிம்ஹ அவதாரம் எடுத்த போது இரண்யனை வதம் செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார். இதனால் பயந்து போன தேவர்களும், ரிஷிகளும் பூலோகம் மேலும் அழியாது காக்கப்பட வேண்டும் என லக்ஷ்மி தேவியை வேண்டினர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற தாயார் பெருமாளின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். தேவியை பெருமாள் ஆலிங்கனம் (அணைத்தல்) செய்து கொண்டார். எனவே இவ்வூர் திரு ஆலிங்கனம் என்ற பெயர் பெற்று திருவாலி (திருவாகிய லக்ஷ்மியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று. இப்பகுதியில் (ஆலிநாடு) திருமங்கை ஆழ்வார் குறுநில மன்னனாக திகழ்ந்தார். எனவே அவருக்கு "ஆலிநாடன்' என்ற பெயர் உண்டாயிற்று.
பிரம்மாவின் புத்திரன் கர்த்தம பிரஜாபதி பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் செய்தான். இவனுக்கு தரிசனம் தர பெருமாள் தாமதம் செய்ததால், வருத்தம் அடைந்த லக்ஷ்மி பெருமாளிடம் கோபம் கொண்டு, இத்தலத்தில் குளத்தில் இருந்த தாமரை மலருக்குள் தன்னை ஒளித்து கொண்டாள். பெருமாள் லக்ஷ்மியை தேடி இத்தலம் வந்து லக்ஷ்மியை ஆலிங்கனம் செய்து கொண்டார். அருகிலுள்ள திருவாலியிலும் இதே போல் ஆலிங்கன கோலத்தில் இருப்பதால், இரண்டும் சேர்த்து திருவாலி-திருநகரி ஆனது.
திரேதா யுகத்தில் பிரஜாபதி உபரிசிரவஸு மன்னனாக பிறந்தான். இவன் இத்தலத்தின் மீது புஷ்பக விமானத்தில் பறந்து வரும் போது இவ்விடத்தில் பறக்காமல் அப்படியே நின்று விட்டது. எனவே, இத்தலம் மிகவும் புண்ணியமானது எனக்கருதி தனக்கு மோட்சம் வேண்டி பெருமாளிடம் தவம் செய்தான். கிடைக்கவில்லை. அடுத்த யுகத்தில் சங்கபாலன் என்ற பெயரில் ஒரு மன்னனின் மந்திரியாகப் பிறந்தான். அப்பிறவியிலும் தனக்கு மோட்சம் கேட்க, பெருமாள் கலியுகத்தில் கிடைக்கும் என கூறினார். கலியுகத்தில் நீலன் என்ற பெயரில் ஒரு படைத்தலைவனின் மகனாக பிறந்தான். இவன் திருவாலியில் வசித்த குமுதவல்லி நாச்சியாரை திருமணம் செய்ய நினைத்தான். அவள்,"ஓராண்டிற்கு தினமும் ஆயிரம் வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்தால் நான் உங்களுக்கு மனைவியாவேன்,' என்று நிபந்தனை விதித்தாள். இந்த அன்னதானத்திற்கு பொருள் தீர்ந்த பிறகு நீலன் வழிப்பறியில் ஈடுபட்டான். அந்த நேரத்தில் பெருமாள் லக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது நீலன் மறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் நீலனின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார். இவ்வாறு திருவாலியின் வரலாற்றிற்கும் திருநகரியின் வரலாற்றிற்கும் ஒரே வரலாறு உள்ளது
திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தனி சன்னதியில் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் காட்சி தருகிறார். இவருக்கு எதிரே ஒரு கொடி மரமும், பெருமாளுக்கு எதிரே ஒன்றும் என இரண்டு கொடி மரங்கள் உள்ளன.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்