||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
010. திருப்புள்ளம் பூதங்குடி
பூத புரி - கும்பகோணம்
பத்தாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 1348 -1357 - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி
-------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
விரும்பினவை எய்தும் வினை அனைத்தும் தீரும்*
அரும்பரம வீடு அடைவீர் பெரும் பொறிகள்*
கள்ளம் பூதம் குடி கொள் காயமுடையீர் அடிகள்*
புள்ளம் பூதங்குடியில் போம்*
- பெரும் பொறி கொள் - வலிய ஐம்பொறிகளைக் கொண்டதும்
- கள்ளம் பூதம் குடி கொள் - வஞ்சனைக் குணமும் பஞ்ச பூதங்களும் பொருந்தப் பெற்றதுமான
- உடையீர் - உடையவரான ஜநங்களே! நீங்கள்
- அடிகள் புள்ளம்பூதங்குடியில் போம் - எம்பெருமான் எழுந்தருளி இருக்கின்ற திருப்புள்ளம் பூதங்குடி என்னும் ஸ்தலத்தில் போய்ச் சேருங்கள்
- சேர்ந்த மாத்திரத்தில் - விரும்பினவை எய்தும் - நீங்கள் விரும்பியவை எல்லாம் கைகூடும்
- வினை அனைத்தும் தீரும் - உங்களது எல்லா வினைகளும் நீங்கும்
- அரும் பரம வீடும் அடைவீர் - பெறுதற்கு அரிய சிறந்த முத்தி உலகத்தையும் சேர்வீர்கள்
-------------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1348 - வாமனன் வாழும் இடம் திருப்புள்ளம் பூதங்குடி
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்
அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான்* என்னை ஆள் உடையான்*
குறிய மாணி உரு ஆய* கூத்தன் மன்னி அமரும் இடம்*
நறிய மலர் மேல் சுரும்பு ஆர்க்க* எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட*
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்*
புள்ளம் பூதங்குடி தானே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1349 - யானையின் துயர் தீர்த்தவன் வாழும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
கள்ளக் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து* உலகம் கைப்படுத்து*
பொள்ளைக் கரத்த போதகத்தின்* துன்பம் தவிர்த்த புனிதன் இடம்*
பள்ளச் செறுவில் கயல் உகளப்* பழனக் கழனி அதனுள் போய்*
புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்* புள்ளம் பூதங்குடி தானே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1350 - மருதம் சாய்த்த மால் மருவும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
மேவா அரக்கர் தென் இலங்கை* வேந்தன் வீயச் சரம் துரந்து*
மா வாய் பிளந்து மல் அடர்த்து* மருதம் சாய்த்த மாலது இடம்*
கா ஆர் தெங்கின் பழம் வீழக்* கயல்கள் பாயக் குருகு இரியும்*
பூ ஆர் கழனி எழில் ஆரும்* புள்ளம் பூதங்குடி தானே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1351 - வல்வில் இராமன் வாழும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம்
வெற்பால் மாரி பழுது ஆக்கி* விறல் வாள் அரக்கர் தலைவன் தன்*
வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும்* துணித்த வல் வில் இராமன் இடம்*
கற்பு ஆர் புரிசை செய் குன்றம்* கவின் ஆர் கூடம் மாளிகைகள்*
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்* புள்ளம் பூதங்குடி தானே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1352 - மாயன் மன்னும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
மை ஆர் தடங் கண் கருங் கூந்தல்* ஆய்ச்சி மறைய வைத்த தயிர்*
நெய் ஆர் பாலோடு அமுது செய்த* நேமி அங் கை மாயன் இடம்*
செய் ஆர் ஆரல் இரை கருதிச்* செங் கால் நாரை சென்று அணையும்*
பொய்யா நாவின் மறையாளர்* புள்ளம் பூதங்குடி தானே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1353 - ஏழு எருதுகளை அடக்கியவன் எழுந்தருளிய இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
மின்னின் அன்ன நுண் மருங்குல்* வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா*
மன்னு சினத்த மழ விடைகள்* ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்*
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல்* வரி வண்டு இசை பாட*
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்* புள்ளம் பூதங்குடி தானே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1354 - வாணன் தோள் துணித்தவன் வாழும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி* மாரி பழுதா நிரை காத்து*
சடையான் ஓட அடல் வாணன்* தடந் தோள் துணித்த தலைவன் இடம்*
குடியா வண்டு கள் உண்ணக்* கோல நீலம் மட்டு உகுக்கும்*
புடை ஆர் கழனி எழில் ஆரும்* புள்ளம் பூதங்குடி தானே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1355 - அருச்சுனனின் தேரை ஓட்டியவன் அமரும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய* விசயன் தேர் கடவி*
இறையான் கையில் நிறையாத* முண்டம் நிறைத்த எந்தை இடம்*
மறையால் முத்தீ அவை வளர்க்கும்* மன்னு புகழால் வண்மையால்*
பொறையால் மிக்க அந்தணர் வாழ்* புள்ளம் பூதங்குடி தானே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1356 - அருமறைகள் அருளியவன் அமரும் இடம்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
துன்னி மண்ணும் விண் நாடும்* தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்*
அன்னம் ஆகி அரு மறைகள்* அருளிச்செய்த அமலன் இடம்*
மின்னு சோதி நவ மணியும்* வேயின் முத்தும் சாமரையும்*
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்* புள்ளம் பூதங்குடி தானே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1357 - துயர் நள் விலகி விடும்
பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
கற்றா மறித்து காளியன் தன்* சென்னி நடுங்க நடம் பயின்ற*
பொன் தாமரையாள் தன் கேள்வன்* புள்ளம் பூதங்குடி தன் மேல்*
கற்றார் பரவும் மங்கையர் கோன்* கார் ஆர் புயல் கைக் கலிகன்றி*
சொல் தான் ஈர் ஐந்து இவை பாடச்* சோர நில்லா துயர் தாமே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்