||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
028. திருக்காழி சீராம விண்ணகரம் (சீர்காழி)
இருபத்தி எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் – 10
001. திவ்ய ப்ரபந்தம் - 1178 - பக்தர்களே! சீர்காழிப் பதி சேருங்கள்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்
ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி*
உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும்*
தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த*
தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி*
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்*
அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்*
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும்*
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1179 - திருமால் திருவடி அணைவீர்! காழி நகர் சேருங்கள்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை*
நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன்*
ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை*
ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழு சே ஓடச்*
சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்*
தொல் குருகு சினை என்னச் சூழ்ந்து இயங்க எங்கும்*
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய்*
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1180 - வாணாசுரனின் தோள்களை அறுத்தவன் இடம் காழி
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய்*
மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து*
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள்*
நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு*
மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும்*
மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்*
செய் அணைந்து களை களையாது ஏறும்*
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1181 - ஏழு எருதுகளை அடக்கியவனின் காழி சேர்மின்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம்
பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து முன் நாள்*
பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்*
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட*
நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலைத்*
தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே*
தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்*
செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர்*
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1182 - பரசுராமனாக அவதரித்தவனின் காழி சேர்க
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு*
திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து*
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட*
விண்ணவர் கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர்*
அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட*
அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்*
செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ்*
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1183 - இராமபிரானுக்குரிய காழி சேருங்கள்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம்
பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாளப்*
படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை*
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த*
விண்ணவர் கோன் தாள் அணைவீர் வெற்புப்போலும்*
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும்*
துடி இடையார் முகக் கமலச் சோதி தன்னால்*
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர்*
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1184 - சேர்தற்குரிய இடம் காழியே
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - ஏழாம் பாசுரம்
பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்*
புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த*
செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன்*
திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த் தெள்கி*
மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி*
வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி*
தெருவில் வலம்புரி தரளம் ஈனும்*
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1185 - வளம் நிறைந்த காழி சேர்க
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - எட்டாம் பாசுரம்
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்*
பணை நெடுந் தோள் பிணை நெடுங் கண் பால் ஆம் இன்சொல்*
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவில்*
மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ*
நெட்டு இலைய கருங் கமுகின் செங் காய் வீழ*
நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத்*
தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும்*
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1186 - இலக்குமியை மார்பில் கொண்டவனது காழி சேர்மின்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்துப்*
பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து*
கறை தங்கு வேல் தடங் கண் திருவை மார்பில்*
கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழுநீர் கூடித்*
துறை தங்கு கமலத்துத் துயின்று கைதைத்*
தோடு ஆரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணி*
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ்*
காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1187 - இவற்றைப் படிப்போர் உலகத் தலைவர் ஆவர்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - நான்காம் திருமொழி - பத்தாம் பாசுரம்
செங் கமலத்து அயன் அனைய மறையோர் காழிச்*
சீராம விண்ணகர் என் செங் கண் மாலை*
அம் கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன்*
அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம்*
கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன்*
கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன*
சங்க முகத் தமிழ் மாலை பத்தும் வல்லார்*
தடங் கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்