About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 15 September 2023

லீலை கண்ணன் கதைகள் - 36

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கோவர்த்தன மலையை தூக்குதல்|

பிருந்தாவன மக்கள் இவ்வாறு மகிழ்ச்சியில் திளைத்திருக்க இந்திரலோகத்தில் இந்திரன் கடும் கோபத்துடன் இருந்தான். தன்னை அலட்சியம் செய்து ஆயர்குல மக்கள் ஒரு மலைக்குப் பூஜை செய்ததைக் கண்ட அவனது மனம் ஆத்திரத்தில் துடித்தது. 


ஆயர்குலத்து மக்களையும் அவர்களுக்கு ஆலோசனை கூறிய கிருஷ்ணரையும் பழி வாங்க நினைத்தான். கடும் கோபம் அவனது புத்தியை மறைத்து விட்டது. பகவான் கிருஷ்ணர், மகாவிஷ்ணுவின் அவதாரமே என்பதையும் மறந்தான்.


தேவர்களின் அரசனான இந்திரன், நீருக்கு தேவனான வர்ண தேவனை அழைத்து தனது மேகங்களை திரட்டி கடும் மழையைப் பொழிந்து பிருந்தாவனத்தை அழித்து விடும் படி கட்டளை இட்டான். இந்திரன் மேலும் வாயு தேவனை அழைத்தான். கடும் சூறாவளிக் காற்றாக வீசி பிருந்தாவனத்து மக்களின் வீடு வாசல்களையும் மரங்களையும் அழிக்கும் படி கட்டளை இட்டான். பிருந்தாவனத்தில் பெரும் புயல் உண்டாகியது. கடும் மழை பெய்தது. சூறாவளிக் காற்று சுழன்று அடித்தது. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மரங்களும் குடிசைகளும் கடும் காற்றில் சரிந்து வீழ்ந்தன. ஆயர்குலத்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஒதுங்குவதற்கு இடமின்றி அங்கும் இங்கும் ஓடினார்கள். பசுக்களும் வளர்ப்புப் பிராணிகளும் பரிதாபமாக அலறின. எங்களைக் காப்பதற்கு யாரும் இல்லையா என்ற மக்கள் ஓலமிட்டு அழுதார்கள்.


அனைவரும் கிருஷ்ணரிடம் தஞ்சம் அடைந்தார்கள். கிருஷ்ணர் புன்னகையுடன் அவர்களைத் தேற்றினார். என் அருமைத் தந்தையே! தாயே! ஆயர்குலத்து மக்களே! நீங்கள் யாரும் கலங்க வேண்டாம். இது இந்திரன் நடத்தும் விபரீத விளையாட்டு. ஆனால் நமது பூஜையை ஏற்றுக் கொண்ட கோவர்த்தன மலை இப்போதும் நம்மைக் காக்கும். வாருங்கள். உங்கள் பசுக்களையும் மற்றும் வளர்ப்புப் பிராணிகளையும் அழைத்துக் கொண்டு வாருங்கள். எல்லோரும் கோவர்த்தன மலைக்கே போவோம் என்று கூறினார். கிருஷ்ணர் முன்னே நடக்க நந்தகோபர் யசோதை மற்றும் ஆயர்குலத்து மக்கள் அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து நடந்தார்கள். பசுக்களும் ஆடுகள் கோழிகள் நாய்கள் பூனைகள் முதலிய வளர்ப்புப்பிராணிகளும் அவர்களுடன் நடந்து சென்றன. அந்தக் கூட்டத்தின் முன்னே நடந்து கோவர்த்தன மலையை அடைந்த கிருஷ்ணர் ஒரு கணங்கூடத் தாமதிக்காமல் அந்த மலையைத் தம் இரு கைகளாலும் தூக்கினார்.


ஒரு குழந்தை தனது பொம்மையைத் தூக்குவது போல் அவ்வளவு எளிதாக கிருஷ்ணர் அந்தப் பெரிய மலையைத் தூக்கினார். தலைக்கு மேலே அதை உயர்த்திய கிருஷ்ணர் தமது இடது கரத்தின் சிறு விரல் நுனியில் அந்தப் பெரிய மலையை நிலையாக நிறுத்திக் கொண்டார். பின்னர் தம் மக்களை அன்புடன் அழைத்தார். பிருந்தாவனத்து மக்கள் அனைவரும் தமது வளர்ப்புப் பிராணிகளுடன் அந்த மலையின் கீழே அமர்ந்தார்கள். ஆயிரக்கணக்கான அந்த மக்கள் கூட்டத்திற்கு கோவர்த்தன மலை ஒரு குடை போன்று விளங்கியது. வெளியே கடும் மழை பெய்தது. காற்று ஓ என்று வீசியது. ஆனால் பிருந்தாவனத்து மக்கள் அனைவரும் எவ்வித கஷ்டமும் இன்றி பகவான் கிருஷ்ணரின் பாதுகாப்பில் மலைக்குடையின் நிழலில் ஆனந்தமாக இருந்தார்கள். இவ்வாறு ஏழு நாட்கள் மழை தொடர்ந்து பெய்தது. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 008 - திருக்கூடலூர் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

008. திருக்கூடலூர் 
ஸங்கம க்ஷேத்திரம் - கும்பகோணம்
எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த 
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் – 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1358 - 1367 - ஐந்தாம் பத்து - இரண்டாம் திருமொழி

------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி
உண்டு கேட்டு உற்று மோந்துப் பார்க்கும் ஐவர்க்கே*
தொண்டு படலாமோ உன் தொண்டனேன் விண்டு இலங்கும்*
ஆடல் ஊர் நேமி முதல் ஐம்படையாய் அன்பு உடையாய்*
கூடலூராய் இதனைக் கூறு* 

  • விண்டு இலங்கும் – விட்டு விட்டுப் பிரிகாசிக்கின்ற
  • ஆடல் ஊர் – வெற்றி பொருந்திய
  • நேமிமுதல் – சக்கரம் முதலிய
  • ஐம் படையாய் – பஞ்சாயுதங்களை உடையவனே!
  • அன்பு உடையாய் – உயிர்களிடத்தில் நிர்ஹேதுகமான கிருபையை உடையவனே!
  • கூடலூராய் – திருக்கூடலூர் என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பவனே!
  • உன் தொண்டனேன் – உனக்கே அடியவனாகிய நான் அவ்வாறு அடிமையாக இருத்தலை விட்டு
  • உண்டு – இனிய உணவுகளைச் சுவைத்தும்
  • கேட்டு – இனிய இசை முதலியவற்றைக் கேட்டும்
  • உற்று – இன்பம் உண்டாக்கும் பொருள்களைப் பரிசித்தும்
  • மோந்து – நறுமணமுள்ள பொருள்களை மோந்தும்
  • பார்க்கும் – நற்காட்சியுள்ள பொருள்களைக் கண்டும் மகிழ்கின்ற
  • ஐவர்க்கே – பஞ்சேந்திரியங்கட்கே
  • தொண்டு படல் ஆமோ – அடிமைப்படுதல் தகுதியாகுமோ?
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 29 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 29 - பரமனின் இடை
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்

இருங்கை மத களிறு* 
ஈர்க்கின்வனைப்* 
பருங்கிப் பறித்துக்* 
கொண்டோடும் பரமன் தன்* 
நெருங்கு பவளமும்* 
நேர் நாணும் முத்தும்* 
மருங்கும் இருந்தவா காணீரே* 
வாணுதலீர் வந்து காணீரே|

  • இரு கை - பெரிய துதிக்கையை உடைய
  • மத களிறு - மத்த கஜமான குவலயா பீடத்தை
  • ஈர்க்கின்றவனை – தன் வசமாக ஈர்க்கின்ற பாகனை
  • பருங்கி - கொன்று
  • பறித்துக் கொண்டு - யானையின் கொம்புகளை முறித்துக் கொண்டு
  • ஓடு - கம்ஸனிருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு ஓடின 
  • பரமன் தன் – பரம புருஷனான கண்ணனுடைய
  • நெருங்கு – அடர்த்தியாகக் கோர்த்த
  • பவளமும் - பவழ வடமும்
  • நேர் நாணும் - அழகிய அரை நாணும்
  • முத்தும் – முத்து வடமும் இவற்றோடே சேர்ந்த
  • மருங்கும் இருந்த வா காணீரே - திருவரையும் இருந்த படியை வந்து பாருங்கள் 
  • வாள் நுதலீர் வந்து காணீரே – ஒளி பொருந்திய நெற்றியை உடைய பெண்களே! வந்து பாருங்கள்

நீண்ட, கரிய துதிக்கையை உடைய குவலயாபீடம் என்ற பெரிய மதங்கொண்ட யானை, கம்சனால் ஏவப்பட்டு கண்ணனைப் பார்த்து சீறி வர அதனுடைய தந்தங்களை சுலபமாக கைகளினால் முறித்து அவைகளாலேயே யானையையும், அதைக் கட்டுபடுத்தி செலுத்தும் பாகனையும் சேர்த்துக் கொன்ற பரமபுருஷனான கண்ணனின் இடையில், பவளமும் முத்தும் பொன் மருங்கும் சேர்த்து நெருக்கமாய் கோர்க்கப்பட்ட நீண்ட அழகிய அரைஞான் கயிறு இருக்கின்ற அழகினை வந்து பாருங்கள்! அவற்றில் எது சிறப்பாய் பொலிகிறது என்பதனையும் வந்து பாருங்கள். பரமனின் பவளக்கொடி அணிந்த இடையினை வந்து பாருங்கள்! என்று ஒளி பொருந்திய நெற்றியினை உடைய பெண்களை அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.30

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.30

கா³ண்டீ³வம் ஸ்ரம் ஸதே ஹஸ்தாத்: 
த்வக் சைவ பரித³ஹ்யதே|
ந ச ஸ²க்நோம்ய வஸ்தா²தும் 
ப்⁴ரம தீவ ச மே மந:||

  • கா³ண்டீ³வம் - காண்டீபம் என்கிற வில் (அர்ஜுநனின் வில்)
  • ஸ்ரம் ஸதே – நழுவுகிறது
  • ஹஸ்தாது - கையிலிருந்து
  • த்வக் - உடலிலும்
  • ச - மேலும்
  • ஏவ - நிச்சயமாக
  • பரித³ஹ்தே - எரிச்சல் உண்டாகிறது
  • ந - இல்லை 
  • ச - மேலும் 
  • ஸ²க்நோமி - என்னால் முடிய 
  • அவஸ்தா²தும் - இருக்க 
  • ப்⁴ரமதி - குழம்புவது 
  • இவ - போல 
  • ச - மேலும் 
  • மே - எனது 
  • மநஹ - மனம் 

கேசியென்னும் அசுரனை அழித்த கேசவனேl என்னால் நிற்க முடியவில்லை, எனது மனம் குழம்புகிறது, விபரீதமான சகுணங்களையே காண்கிறேன், இவ்வாறு அர்ஜுநன் புலம்ப ஆரம்பித்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.14

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.14

தஸ்மாத்³ ஏகேந மநஸா 
ப⁴க³வாந் ஸாத்வதம் பதி:|
ஸ்²ரோதவ்ய: கீர்தி தவ்யஸ்²ச 
த்⁴யேய: பூஜ்யஸ்²ச நித்யதா³||

  • தஸ்மாத்³ - ஆகையால்
  • ஸாத்வதம் பதிஹி - ஜீவன்களுக்கெல்லாம் பதியான
  • ப⁴க³வாந் - மகா விஷ்ணுவானவர்
  • ஏகேந மநஸா - ஏகாக்ரமான மனத்தால்
  • நித்யதா³ - எப்பொழுதும்
  • ஸ்²ரோதவ்யஹ் - கேட்கத் தக்கவர்
  • கீர்த்தி தவ்யஸ்² ச - ஸ்தோத்தரிக்கத் தகுந்தவர்
  • த்⁴யேய - தியானம் செய்யத் தக்கவர்
  • பூஜ்யஸ்² ச - பூஜிக்கவும் தக்கவர்

ஆகையால், மனத்தைச் சலனமின்றி ஒருநிலைப்படுத்தி, பக்தர்களுக்கு அன்பான பகவானை எப்போதும் துதிக்க வேண்டும். அவரது சரிதங்களைக் கேட்க வேண்டும்; (உருவத்தைத்) தியானம் செய்ய வேண்டும்; (திரு அடிகளில்) பூஜை புரிய வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 45

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 15

லோகாத்⁴ யக்ஷ: ஸுராத்⁴ யஷோ 
த⁴ர்மாத்⁴ யக்ஷ: க்ருதாக்ருத:|
சதுர் ஆத்மா சதுர் வ்யூஹ: 
சதுர் த³ம்ஷ்ட்ர: சதுர்பு⁴ஜ:||

  • 135. லோகாத்⁴ யக்ஷஸ் - உலகங்களை நன்கு அறிந்தவன்.
  • 136. ஸுராத்⁴ யஷோ - தேவர்களை நன்கு அறிந்தவன்.
  • 137. த⁴ர்மாத்⁴ யக்ஷஹ் - தர்மத்தை நன்கு அறிந்தவன்.
  • 138. க்ருதாக்ருதஹ - இகபரபலன்களை அளிப்பவன்.
  • 139. சதுர் ஆத்மா - நான்கு வடிவங்களைத் தரிப்பவன்.
  • 140. சதுர் வ்யூஹஸ் - நான்கு வியூக மூர்த்திகளாக இருப்பவன்.
  • 141. சதுர் த³ம்ஷ்ட்ரஸ் - நான்கு முன்பற்களை உடையவன்.
  • 142. சதுர்புஜஹ - நான்கு திருக்கைகளை உடையவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - நாற்பத்தி இரண்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

042 மூலம் என்று அழைத்தேனோ கஜராஜனைப் போலே|

கஜேந்திர மோட்சம் பாகவத புராணத்தின் எட்டாவது நூலில் பகவான் விஷ்ணு, முதலை பிடியில் சிக்கிய கஜேந்திரன் எனும் யானையின் அபயக் குரலைக் கேட்டவுடன் நேரில் தோன்றி யானைக்கு மோட்சம் அளித்ததை விளக்குகிறது. இக்கதையை வியாசரின் மகனான சுகப் பிரம்மம், மன்னர் பரிக்க்ஷித்துவிற்கு கூறியதாக அமைகிறது. 


கஜேந்திர மோட்ச வரலாறானது வைணவ சமயத்தின் சரணாகதி தத்துவத்திற்கு உதாரணமாக உள்ளது. இங்கு கஜேந்திரன் மனிதனையும், முதலை அவன் பாவங்களும், சேற்றுக்குளமாக சம்சாரமும், என்றும் போல் ஆபத்தில் இருந்து காக்கும் கடவுளாக ஸ்ரீமன் நாராயணனையும் குறிக்கிறது!


முதலையின் பிடியில் இருந்த கஜேந்திரன், விஷ்ணுவை நோக்கி துதித்த பாடல், கஜேந்திர ஸ்துதியாக போற்றப்படுகிறது. இது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் முதல் சுலோகம் ஆகும்.

தேவேந்திரனுக்கு உரிய திரிகூட மலையில் கஜேந்திரன் என்னும் பெயர் கொண்ட யானை, யானை கூட்டத்தின் தலைவனாக வாழ்ந்து வந்தது. ஒரு நாள், தாகம் தணிக்க தனது யானை கூட்டத்துடன் நீர்நிலையை நோக்கிச் சென்றது. குட்டி யானைகள் விளையாடிக் கொண்டு இருக்க, கஜேந்திரன் நீருக்குள் இறங்க முற்பட்ட பொழுது, அந்த குளத்தில் வாழும் ஒரு முதலை கஜேந்திரனின் கால்களை பற்றியது. 


முதலையின் வாயில் அகப்பட்ட கால்களுடன் உயிருக்கு போராடிய கஜேந்திரனை மற்ற யானைகள் காப்பாற்ற முயன்று தோல்வியுற்றன. தம் வலிமை எல்லாம் திரட்டி அவை கஜேந்திரனை மீட்க முயற்சித்தும் ஒரு பலனும் அளிக்கவில்லை. பின்னர் கஜேந்திரனின் காலம் நெருங்கி விட்டது, இனி உயிர் பிழைக்க வழியில்லை என்று உணர்ந்து, அவை ஒவ்வொன்றாக விலகிச் சென்றன.


நாட்கள் சென்று கொண்டிருந்தன, ஆயினும், முதலையின் பிடி விட்டபாடில்லை! இரண்டும் சக்தியை இழந்து ஓய்ந்தன. தனது இறுதி காலம் நெருங்குவதை உணர்ந்த யானை, ஒரு தாமரை மலரை தனது தும்பிக்கையால் பற்றி வான் நோக்கி “ஆதிமூலமே” என பெருமாளை நோக்கிச் சரணாகதி செய்தது. தனது பக்தனின் துயர் துடைக்க விரைந்து வந்த பெருமாள் கருட வாகனத்தில் விரைந்து வந்த பெருமாள், யானையின் காலுக்கு ஊறு விளையாமல், முதலையின் தலையைத் தன் சக்ராயுதத்தால் துண்டித்து யானையை விடுவித்து மோட்சம் அளித்தார்.. முதலை கந்தர்வ உருவம் பெற்றது. கந்தர்வன் பெருமாளைத் துதித்துச் சென்றான். இறுதியில் யானையும் மோட்சம் அடைந்தது.


கஜேந்திரன் தனது முற்பிறவில் இந்திரதுய்மன் என்னும் மன்னன். இவர் ஒரு சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினார். அகத்திய முனிவரைக் குலகுருவாகக் கொண்டிருந்தான். ஒருநாள் அவன் அகந்தை கண்களை மறைக்க, அங்கு வந்த அகத்தியரை வரவேற்று உபசரிக்காமல் அலட்சியம் செய்தான். அதனால் வெகுண்ட அகத்தியர், இந்திரத்துய்மனை யானையாகப் பிறக்கும்படி சபித்து விட்டார். இந்திரத்துய்மன் திரிகூடாசலம் என்ற மலையை அடுத்திருந்த காட்டில் யானையாகப் பிறந்தான். யானையாகப் பிறந்தபோதும் திருமால் பக்தி தொடர்ந்தது. அன்றாடம், யானை ஆற்றில் நீராடி, அருகில் இருந்த தாமரைத் தடாகத்திற்குச் செல்லும். அங்கிருந்து பெரிய தாமரை மலர் ஒன்றைத் தன் துதிக்கையில் எடுத்து வந்து, திருமாலின் அர்ச்சாமூர்த்தத்தின் திருவடியில் சமர்ப்பிக்கும். அந்த கஜேந்திரன் தான் முதலையின் வாயில் கட்டுண்டான். 

ஒரு முறை முனிவர் தேவலாவுடன் கந்தர்வ மன்னனும் சேர்ந்து நீராடிக் கொண்டிருக்கும் பொழுது, முனிவர் சூரிய நமஸ்காரம் செய்கையில் விளையாட்டாக கந்தர்வ மன்னன், அவரது கால்களை இழுத்தார். இதில் கோபமடைந்த முனிவர், முதலையாக பிறப்பாய் என சாபமிட்டார். தன் தவறை உணர்ந்த கந்தர்வன் சாப விமோசனம் வேண்டினான். பிறவியின் முடிவில் கஜேந்திரன் கால்களை பிடிக்க, விஷ்ணுவால் சாப விமோசனம் பெறுவாய் என கூறினார்.

அதன்படி கந்தர்வனும் அரசனும் முறையே முதலையாகவும், யானையாகவும் பிறவி எடுத்து தங்களது சாப விமோசனத்தை பெற்றனர்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " கஜேந்திரன் போல், ஸ்ரீமன் நாராயணனே அனைத்திற்கும் ஆதிமூலம் என்பதை உணர்ந்து, அவரை அழைத்து, அவரின் கருணையில் திளைத்தேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 35

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கோவர்த்தன விழா|

வருடந்தோறும் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் ஆயர்கள் இந்திரனுக்கு விழாக் கொண்டாடுவது வழக்கமாக இருந்தது. இந்திரன் தேவர்களுக்கு அரசன். ஆகமங்களுக்குத் தலைவன். அதனால் மேகங்கள் நல்ல மழையை பெய்ய வேண்டும் என்று இந்திரனை வேண்டுவதற்காக அந்த விழா கொண்டாடப்பட்டது. அந்த வருடமும் விழா கொண்டாடப் படுவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆயர்குலத் தலைவர் நந்தகோபர் விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். இந்திரன் தானே மூவுலகங்களுக்கும் இறைவன் என்று எண்ணிக் கர்வம் அடைந்தான். மும்மூர்த்திகளை வழிபட மறந்தான். அவனது கர்வத்தை உணர்ந்து கொண்ட கிருஷ்ணர் அவனுக்கு நல்ல அறிவு புகட்ட முனைந்தார்.


விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த தந்தையிடம் சென்றார். “தந்தையே இந்திரனுக்காக இந்த விழாவைக் கொண்டாட வேண்டாம்” என்று கூறினார். நந்தகோபர் வியப்படைந்தார். ஏன் அப்படிச் சொல்கிறாய் கிருஷ்ணா?.. என்று கேட்டார். “தந்தையே இந்திரனுக்கு மேலானவர்களே மும்மூர்த்திகள். அவர்களே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களைச் செய்து உலகங்களையும் உயிர்களையும் வாழ வைக்கிறார்கள். அவர்கள் இல்லாத இடமேயில்லை. இதோ இந்தக் கோவர்த்தன மலையினுள்ளும் அவர்கள் இருந்து நம்மையெல்லாம் வாழவைக்கிறார்கள். மேலும் ஆயர்களான நமது வாழ்க்கையில் கோவர்த்தன மலை முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அதுவே நமக்குச் சுத்தமான தண்ணீரைத் தருகின்றது. நமது பசுக்கள் உண்பதற்குப் பசுமையான புல்லைத் தருகின்றது. ஆதலால் நாம் இந்தக் கோவர்த்தன மலைக்கே பூஜை செய்து விழா எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணர் கூறினார். கிருஷ்ணர் சொல்லுக்கு மறுப்பு ஏது? நந்தகோபர் சம்மதித்தார். மறுநாள் காலை கோவர்த்தன மலைக்கே பூஜைகள் செய்து விழாக் கொண்டாடுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யும்படி கட்டளையிட்டார்.

மக்கள் யாவரும் ஒன்று சேர்ந்தார்கள். கோவர்த்தன மலையைச் சுத்தம் செய்தார்கள். வாழை மரங்களை நட்டார்கள். மாவிலைத் தோரணங்களைக் கட்டினார்கள். பல வண்ணக் கோலங்களை இட்டார்கள். நெய் விளக்குகளை ஏற்றி வைத்தார்கள். கோவர்த்தன மலை சொர்க்கலோகம் போல் அழகுடன் விளங்கியது. மறுநாட்காலை கோவர்த்தன விழா தொடங்கியது. பிருந்தாவனத்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் புது ஆடைகள் அணிந்து அந்த மலையின் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

பெண்கள் புது அரிசி கொண்டு பொங்கல் சமைத்தார்கள். காய் கறிகள் பழங்கள் கொண்டு விருந்து படைத்தார்கள். ஆண்கள் தமது பசுக்களை வரிசையாக நிற்க வைத்துக் குளிப்பாட்டி அலங்கரித்து நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்துப் பூஜை செய்தார்கள். அந்தணர்கள் மலை அடிவாரத்தில் யாகசாலைகளை ஏற்படுத்தி அவற்றிலே நெய் ஊற்றி நெருப்பு வளர்த்து அகில், சந்தனம் முதலிய வாசனைப் பொருட்களை அந்த நெருப்பிலே இட்டு மந்திரங்கள் ஓதி யாகம் செய்தார்கள். சமைக்கப்பட்ட பொங்கல் மற்றும் சுவையான உணவுப் பொருட்களை மக்கள் அந்த மலையின் அடிவாரத்திலே குவித்தார்கள். அந்த உணவுக்குவியல் மற்றொரு சிறிய மலை போன்று தோற்றமளித்தது.

நந்தகோபர் கிருஷ்ணரை அழைத்தார். மகனே கிருஷ்ணா... நீ சொன்னபடியே உணவுப்பொருட்களை மலையாகக் குவித்துவிட்டோம். இப்போது நமது கோவர்த்தன மலையில் வாழும் தெய்வம் நாம் படைத்த உணவுப் பொருட்களை ஏற்றுக் கொள்ளுமா என்று கேட்டார். கிருஷ்ணர் புன்னகைத்தார். நிச்சயமாக ஏற்றுக் கொள்ளும் என்று பதில் கூறினார். இவ்வாறு கூறிய பின்னர் கிருஷ்ணர் தாமே அந்த மலையின் தெய்வமாக உருவெடுத்தார். மலையின் உச்சியிலே அழகிய பிரமாண்டமான உருவத்துடன் தோன்றினார். அந்த உணவு மலை முழுவதையும் ஒரு நொடிப்பொழுதில் உண்டு முடித்தார். அங்கு சூழ்ந்து நின்று வணங்கிய ஆயர்குல மக்கள் அனைவருக்கும் அருள் வழங்கி மறைந்தார். தங்கள் காணிக்கையைக் கோவர்த்தன மலைத் தெய்வமே நேரில் வந்து ஏற்றுக் கொண்டதைக்கண்டு மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து ஆடிப்பாடினார்கள். அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக உணவருந்திய பின்னர் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 008 - திருக்கூடலூர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

008. திருக்கூடலூர் 
ஸங்கம க்ஷேத்திரம் - கும்பகோணம்
எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ வையம் காத்த பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ பத்மாசினி தாயார் ஸமேத ஸ்ரீ வையம் காத்த பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: வையம் காத்த பெருமாள்
  • பெருமாள் உற்சவர்: ஜகத்ரட்சகன், உய்ய வந்தார்
  • தாயார் மூலவர்: பத்மாசினி
  • தாயார் உற்சவர்: புஷ்பவல்லி 
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம்: சக்கர
  • விமானம்: ஸுந்தர சத்வ
  • ஸ்தல விருக்ஷம்: பலா
  • ப்ரத்யக்ஷம்: நந்தக மாமுனி
  • ஆகமம்: வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: ஒரு ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10 

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

இத்தலத்தில் பெருமாள் தன் கையில், கிளம்புவதற்கு தயார் நிலையில் இருக்கும் "பிரயோகச் சக்கரத்துடன்' இருக்கிறார். அம்பரீஷன் எனும் மன்னனர் பெருமாள் மீது தீவிர பக்தி கொண்டிருந்தான். தன் படைகள் மீது அதிகம் கவனம் செலுத்தாமல் பக்தியிலேயே திளைத்திருந்தான். இதனால் எதிரிகளிடம் தன் நாட்டையும் இழந்தார். ஆனாலும் கவலைப்படாத அம்பரீஷன், எப்போதும் மகாவிஷ்ணுவின் திருநாமத்தையே உச்சரித்துக் கொண்டு, அவருக்காக விரதங்கள் இருப்பதிலேயே கவனமாக இருந்தார். ஒரு சமயம் அவர் ஏகாதசி விரதம் இருந்த போது துர்வாச மகரிஷி அவரைப் பார்ப்பதற்கு வந்தார். விரதத்தில் மூழ்கியிருந்ததால் மன்னர் துர்வாசரை கவனிக்கவில்லை. அம்பரீஷன் தன்னை அவமதிப்பதாக எண்ணிய துர்வாசர், அவனை சபித்தார். மகரிஷியின் கோபத்திற்கு ஆளான அம்பரீஷன் மனம் வருந்தி மகாவிஷ்ணுவை வேண்டினான். தன் பக்தனை காப்பதற்காக மகாவிஷ்ணு துர்வாசர் மீது சக்கராயுதத்தை ஏவினார். சக்கரம் துர்வாசரை விரட்ட அவர் மகாவிஷ்ணுவை சரணடைந்து, தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார். மகாவிஷ்ணுவும் மன்னித்து அருளினார். பின் அம்பரீஷன் இத்தலத்தில் பெருமாளுக்கு கோயில் கட்டி வழிபட்டான். அவனது பெயரால் சுவாமிக்கு "அம்பரீஷ வரதர்' என்ற பெயரும் ஏற்பட்டது. இங்கு வேண்டிக் கொள்பவர்களுக்கு பெருமாளின் சக்கரமே பாதுகாப்பாக இருந்து அவர்களை வழி நடத்தும் என்பது நம்பிக்கை.

உலகில் உள்ள புண்ணிய நதிகளில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பர். அந்த நதிகள் எல்லாம் காவிரியில் சேர்ந்து தங்கள் மீது சேர்ந்த பாவங்களை போக்கிக் கொள்ளும் என்பது ஐதீகம். இவ்வாறு மொத்த பாவங்களும் சேரப்பெற்ற காவிரி, தன் பாவங்கள் தீர பிரம்மாவிடம் வழி கேட்டாள். அவர் பூலோகில் இத்தலத்தில் உள்ள பெருமாளை வழிபட பாவங்கள் நீங்கும் என்றார். அதன்படி காவேரி இத்தலத்தில் பெருமாளை வேண்டி தன் பாவங்களை போக்கிக் கொண்டாளாம். முன்னொரு காலத்தில் இக்கோயில் வளாகத்தில் வசித்த கிளியொன்று அருகில் உள்ள நாவல் மரத்தில் இருந்து ஒரு பழத்தை பறித்து வந்து அதனை பெருமாள் முன் வைத்து "ஹரிஹரி' என்று சொல்லி அவரை வணங்கிவிட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது. ஒருநாள் அந்த கிளி நாவல் பழம் பறித்துக் கொண்டு வந்தபோது, வேடன் ஒருவன் அதன் மீது அம்பை எய்தான். அம்பு தைத்த கிளி "ஹரிஹரி' என்று சொல்லியபடியே தரையில் வீழ்ந்தது. அருகில் சென்ற வேடன், கிளி பெருமாள் நாமத்தை சொல்லியதைக் கேட்டு பயந்து ஓடிவிட்டான். அப்போது மகாவிஷ்ணு அக்கிளிக்கு காட்சி கொடுத்தார். அதனிடம், "நீ முற்பிறவியில் கற்றிருந்த கல்வியால் செருக்குடன் இருந்தாய். எனவே, கிளியாக சாபம் பெற்ற நீ இப்பிறவியில் என் திருநாமத்தை மட்டும் உச்சரிக்கும் பணியை செய்தாய்'' எனச் சொல்லி சாபவிமோசனம் கொடுத்தார். இங்கு  வழிபடுபவர்களின் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

கருவறைக்கு பின்புறத்தில் சுவாமிக்கு இடது புறத்தில் தலவிருட்சமான பலா மரம் உள்ளது. இம்மரத்தில் இயற்கையாகவே சங்கு வடிவம் தோன்றி இருக்கிறது. பெருமாளின் சக்கரம் துர்வாசரை விரட்டி சென்ற போது, இங்கு சங்கு பிரதானமாக இருந்ததாம். இதனை உணர்த்தும் விதமாக இம்மரத்தில் சங்கு வடிவம் இருக்கிறது. பிரயோக சக்கரம், சுயம்புவாக வெளிப்பட்ட சங்கு இவ்விரண்டையும் இங்கு தரிசிப்பது மிகவும் அரிய பலன்களைத் தரக்கூடியது. நவக்கிரக தலங்களில் கேது தலமான இங்கு பவுர்ணமியில் 108 தாமரை மலர்களுடன் "ஸ்ரீ ஷீக்த ஹோமம்' நடக்கிறது. பெருமாள் இத்தலத்தில் வராக அவதாரம் எடுத்து உட்சென்றவர் என்பதால் கருவறையில் சுவாமியின் திருப்பாதங்களுக்கு மத்தியில் இருக்கும் இடமே உலகின் மையப்பகுதி என்கிறார்கள். நந்தக முனிவர் தேவர்களோடு கூடி வந்து சுவாமியை வழிபட்டுச் சென்றனர். எனவே, இவ்வூர் "கூடலூர்' என்ற பெயர் பெற்றது.

இரண்யாட்சகன் எனும் அசுரன் ஒரு சமயம் பூமாதேவியுடன் சண்டையிட்டு பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். எனவே பெருமாள் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று அவளை மீட்டு வந்தார். பெருமாள் இத்தலத்தில் தரையைப் பிளந்து பூலோகம் சென்று, அருகில் உள்ள ஸ்ரீ முஷ்ணத்தில் பூமாதேவியை மீட்டு வெளியில் வந்தார் என தலவரலாறு கூறுகிறது. இதனை உணர்த்தும் விதமாக திருமங்கை யாழ்வார் இத்தலத்தை "புகுந்தானூர்' என்று சொல்லி மங்களாசாசனம் செய்துள்ளார். வையகத்தை (பூமியை) காத்து, மீட்டு வந்தவர் என்பதால் இவர் "வையங் காத்த பெருமாள்' எனப்படுகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 28 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 28 - அத்தத்தின் பத்தாம் நாள் 
தோன்றிய அச்சுதன்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்

மத்தக் களிற்று
வசுதேவர் தம்முடைச்* 
சித்தம் பிரியாத* 
தேவகி தன் வயிற்றில்*
அத்தத்தின் பத்தாம் நாள்* 
தோன்றிய அச்சுதன்* 
முத்தம் இருந்தவா காணீரே* 
முகிழ் நகையீர்! வந்து காணீரே|

  • மத்தம் – மதத்தை உடைய
  • களிறு - யானைகளை நிர்வஹகிக்கும்
  • வசுதேவர் தம்முடை – ஸ்ரீ வஸுதேவருடைய
  • சித்தம் பிரியாத – மனத்தை விட்டுப் பிரியாத
  • தேவகி தன் - தேவகியினுடைய
  • வயிற்றில் - வயிற்றிலே
  • அத்தத்தின் பத்தாம் நாள் - ஹஸ்த நக்ஷத்ரத்துக்குப் பத்தாவதான திருநாளிலே
  • தோன்றிய - திருவவதரித்த
  • அச்சுதன் - கண்ணபிரானுடைய
  • முத்தம் இருந்தவா காணீரே - ஆணழகை வந்து பாருங்கள் 
  • முகில் நகையீர் வந்து காணீரே – புன் சிரிப்பை உடைய பெண்களே! வந்து பாருங்கள்

மதங்கொண்ட ஆண் யானையைப் போன்று வலிமையுடைய வசுதேவருடைய சிந்தனையில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும், அவரது துணைவியாரான தேவகி அன்னையின் திருவயிற்றில் ஹஸ்த நக்ஷத்திரத்தின் பத்தாம் நாள் உதித்தான் அச்சுதன். குழந்தைக்கே உரித்தான பிறந்த மேனியாக உள்ள அழிவற்றவனான இந்த பாலகனின் திருக்கோலத்தை காண, நாணத்துடன் குறுநகைப் புரியும் பெண்களை யசோதை அழைக்கிறாள்.

(ஹஸ்தத்தின் முன்னிருந்து பத்தாம் நாள் = திருவோணம், பின்னிருந்து பத்தாம் நாள் = ரோகிணி. ஆழ்வார் இரண்டையுமே குறிக்கிறார். ஆழ்வார் இங்கு நேராக கண்ணனின் பிறந்த நக்ஷத்திரத்தை குறிப்பிடாததற்கு காரணம், கம்சனை போன்ற துஷ்டர்கள் நக்ஷத்திரத்தை வைத்து அதனை மந்திரங்களால் துஷ்ப்ரயோகித்து குழந்தையை மரணமடையச் செய்யலாம் என்ற பயம்தான் என்று பெரியவர்கள் வியாக்யானம். ஆழ்வார் கண்ணனின் அநுபவத்திலேயே மூழ்கியிருந்ததால் அவர் மேற்கூறியவாறு நினைத்திருக்கலாம் என்பதில் முரண்பாடு இல்லை) 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.29

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.29

ஸீத³ந்தி மம கா³த்ராணி 
முக²ம் ச பரிஸு²ஷ்யதி|
வேபது²ஸ்² ச ஸ²ரீரே மே 
ரோம ஹர்ஷஸ்² ச ஜாயதே||

  • மம கா³த்ராணி - என்னுடைய உறுப்புகள் 
  • ஸீத³ந்தி - சோர்கின்றன
  • முக²ம் - வாய் 
  • பரிஸு²ஷ்யதி - உலர்கிறது
  • மே ஸ²ரீரே - என்னுடைய உடலில் 
  • வேபது²ஸ்²  - உடல் நடுக்கம்
  • ச - மற்றும்
  • ரோம ஹர்ஷஸ்²  - மயிர் சிலிர்ப்பு 
  • ச - மற்றும்
  • ஜாயதே - உண்டாகிறது 

உடல் நடுக்கத்தால் எனது உடலில் மயிர்க் கூச்சம் உண்டாகிறது கையிலிருந்து காண்டீபம் நழுவுகின்றது. மேலும் தோல் எரிகின்றது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.13

அத: பும்பி⁴ர்த்³விஜ ஸ்²ரேஷ்டா² 
வர்ணாஸ்²ரம விபா⁴க³ஸ²:|
ஸ்வநுஷ்டி² தஸ்ய த⁴ர்மஸ்ய 
ஸம் ஸித்³தி⁴ர் ஹரி தோஷணம்||

  • அதஃ - ஆகையால்
  • த்³விஜ ஸ்²ரேஷ்டா²ந் - பிராமணோத்தமர்களே!
  • வர்ணா ஸ்²ரமம் - வாழ்வின் நான்கு சமூகப் பிரிவுகளையும் (வர்ணம்), வகுப்புகளையும் (ஆஸ்ரமம்) கொண்ட ஸ்தாபனம்
  • விபா⁴க³ஸ²: - அப்பிரிவின் படி
  • பும்பிர் - மக்களால்
  • ஸ்வநுஷ்டி² தஸ்ய - நன்கு அனுஷ்டிக்கப்பட்ட
  • த⁴ர்மஸ்ய - தர்மத்திற்கு
  • ஹரி - மகாவிஷ்ணுவை
  • தோஷணம் - திருப்திப்படுத்தும்
  • ஸம் ஸித்³தி⁴ர் - மிக உயர்ந்த பயனாகும் 

ஆகையால், அந்தண சிரேஷ்டர்களே! மனிதர்கள் தங்களது குலம், வருணாசிரமம் இவற்றிற்குத்தக்கவாறு, (தங்களுக்கு என்று வகுக்கப்பட்ட கடமைகளைச் சிறிதும் பிறழாது சரிவரச் செய்து வருவானாகில்,) அந்த தர்மமே, பகவானான ஸ்ரீஹரியை மகிழ்ச்சி அடையச் செய்துவிடும். (நாம், நமது கடமையைச் சரிவரச் செய்து வருவதன் நோக்கம், பகவானை மகிழ்ச்சியடையச் செய்வதேயன்றி, வேறு பயன் கருதியன்று.)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 44

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 14

ஸர்வக³: ஸர்வ வித்³ பா⁴நுர் 
விஷ்வக் ஸேநோ ஜநார்த³ந:|
வேதோ³ வேத³வித்³ அவ்யங்கோ³ 
வேதா³ங்கோ³ வேத³வித் கவி:||

  • 124. ஸர்வக³ஸ் - எல்லா உலகங்களையும் தன்னிடம் வைத்துள்ளவன்.
  • 125. ஸர்வ வித்³ - எல்லாவற்றையும் அடைபவன்.
  • 126. பா⁴நுர் - விளக்கமாக இருப்பவன்.
  • 127. விஷ்வக் ஸேநோ - எங்கும் எவரையும் காத்தலுக்குரிய சேனையை உடையவன்.
  • 128. ஜநார்த³நஹ - பகைவர்களை அழிப்பவன்.
  • 129. வேதோ³ - வேத சாஸ்திரங்களைத் தருபவன்.
  • 130. வேத³வித்³ - வேதப்பொருளை ஐயந்திரிபின்றி அறிந்தவன்.
  • 131. அவ்யங்கோ³ - வேதாங்கங்கள் நிறைந்திருப்பவன்.
  • 132. வேதா³ங்கோ³ - வேதங்களை அங்கமாக சரீரமாக உடையவன்.
  • 133. வேத³வித் - வேதப் பொருளான தர்மங்களை அறிந்தவன்.
  • 134. கவிஹி - அனைத்தையும் ஊடுருவிப் பார்ப்பவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - நாற்பத்தி ஒன்றாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

041 மண் பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே|

மன்னன் தொண்டைமான் ஆட்சி காலத்தில், திருமலையின் அருகில் குரவபுரம் என்னும் சிற்றூர் இருந்தது. அவ்வூரில், குரவநம்பி என்னும் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பெருமாள் பக்தன் அவன் துணைவியுடன் வாழ்ந்து வந்தான். இருவரும் சிறந்த பெருமாள் பக்தர்களாக இருந்து வந்ததால், அனுதினமும், திருமலைவாசனுக்கு நிவேதனம் பண்ணுவதற்கான மண்பாண்டங்களை கோவிலுக்கு வழங்குவதை தொண்டாக செய்து வந்தனர். தினமும் மீதி இருக்கும் மண்ணில், அனுதினமும் காலையும் இரவும் தன் கைகளால் களிமண்ணால் செய்த பூக்களை தான் செய்த ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சமர்ப்பித்து பூஜை செய்வார். திருமலையப்பனும் அவர் அளிக்கும் புஷ்பத்தை ஏற்று தலையில் சூடிக் கொண்டார். 


ஸ்ரீனிவாச பெருமாள் நிரந்தரமாக இவ்வுலகில் தங்க, திருமலையில் “ஆனந்த நிலையம்” என்னும் கோவில் கட்டிக் கொடுத்த மன்னன் தொண்டைமான், அனுதினமும், தங்கத்தினால் செய்யப்பட்ட தாமரை மலர்கள் கொண்டு பூஜை செய்வார்!! ஒரு நாள், திருமலை கோவிலுக்கும் தன் அரண்மனைக்கும்  இடையில் உள்ள இரகசிய பாதை வழியாக கோவில் வந்து சேர்ந்த மன்னன், தான் காலையில் ஸ்ரீநிவாசனுக்கு பூஜித்த தங்க தாமரை மலர்களுக்கு பதில் களிமண்ணால் செய்யப்பட்ட பூக்கள் இருப்பதைக் கண்டார். எதனால் தங்க மலர்கள் மண் மலராக மாறியது என்று ற குழப்பத்துடன் இது பற்றி பெருமாளிடம் மீண்டும் மீண்டும் வினவ, 


"அதுவா, அது ஒரு அன்பன் எனக்கு ஆசையாக கொடுத்தான். ஆனால் அவன் சூட்டும் போது என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளான்." என்றார். 

"அப்படி என்ன சுவாமி நிபத்தனை விடுத்துள்ளான், என்னிடம் கூறக் கூடாதா?" என்று அரசர் வினவ

"அவன் அனுமதி இல்லாமல் யாருக்கும் அவனைப் பற்றி சொல்ல கூடாது. எதற்கும் நாளை அவனிடம் அனுமதி கேட்டு உனக்குச் சொல்கிறேன்" என்றார் திருமலைவாசன்.

மறுநாள் தொண்டைமான் சக்ரவர்த்தி வந்து கேட்டு விடுவானே என்று, திருமலையப்பனும் குயவன், எப்போதும் போல மண் புஷ்பத்தைக் கொடுக்கும் போது, "குயவா, ஒரு நிமிஷம் இரு, உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்." என்றார்.

"ஸ்வாமி, என்னிடமா?" என்று குயவன் ஆச்சர்யத்துடன் கேட்க, 

"ஆமாம், தொண்டமான் சக்ரவர்த்தி இந்த புஷ்பம் யார் கொடுக்கிறார்கள் என்று கேட்கிறான். நீ தான் சூட்டுகிறாய் என அவனிடம் தெரிவிக்கலாமா?" என்று கேட்டார் ஸ்ரீனிவாச பெருமாள்.  


"வேண்டாம் ஸ்வாமி. நான் தான் புஷ்பம் சூடுகிறேன் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம். நான் செய்வது சாதாரண தொண்டு, அதை உலகம் அறியச் செய்ய வேண்டுமா? வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்று இருக்கும் போது, சாதாரண ஒரு புஷ்பம் கைங்கர்யம் யாருக்கும் தெரியப்படுத்தாதிர்கள் ஸ்வாமி. அப்படி தெரியப் படுத்தணும் என்றால் எனக்கு உடனே நீங்கள் முக்தி கொடுக்க வேணும்" என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டான் நம்பி. 

தர்மசங்கடத்தில் ஆழ்ந்தார் திருமலையப்பன். காலையில் எப்போதும் போல தொண்டமான் சக்ரவர்த்தி வந்தார்.

திருமலையப்பன் நேற்று நடந்த விஷயத்தைக் கூறி, தான் அவனுக்கு முக்தி கொடுக்க தீர்மானித்து விட்டு, மன்னரிடம் புஷ்பம் யார் சமர்ப்பிக்கிறார்கள் என்று கூறினார். 

தங்கமோ மண்ணால் செய்த மலரோ, இறைவனுக்கு இரண்டும் ஒன்று தான். இறைவன் பக்தியையும் மனிதனின் மனதையும் மட்டும் தான் கருத்தில் கொள்வார் என்பதையும் உலகிற்கு உணர்த்தினார்! மன்னன் தொண்டைமான் குரவபுரம் சென்று, குரவநம்பியின் குடிலை அடைந்தார். நடந்தவை அனைத்தையும் கூறினார்! அங்கே ஸ்ரீனிவாச பெருமாளும் வந்தார் குயவனுக்கும் அவன் மனைவிக்கும் முக்தியை அளிக்க. குயவனின் பக்தியை எண்ணி வியந்தார் தொண்டைமான். 

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "குரவநம்பி போல், எதையும் எதிர் பார்க்காமல், மண் மலர்கள் கொண்டு பூஜித்தேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்