About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 15 September 2023

திவ்ய ப்ரபந்தம் - 28 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 28 - அத்தத்தின் பத்தாம் நாள் 
தோன்றிய அச்சுதன்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்

மத்தக் களிற்று
வசுதேவர் தம்முடைச்* 
சித்தம் பிரியாத* 
தேவகி தன் வயிற்றில்*
அத்தத்தின் பத்தாம் நாள்* 
தோன்றிய அச்சுதன்* 
முத்தம் இருந்தவா காணீரே* 
முகிழ் நகையீர்! வந்து காணீரே|

  • மத்தம் – மதத்தை உடைய
  • களிறு - யானைகளை நிர்வஹகிக்கும்
  • வசுதேவர் தம்முடை – ஸ்ரீ வஸுதேவருடைய
  • சித்தம் பிரியாத – மனத்தை விட்டுப் பிரியாத
  • தேவகி தன் - தேவகியினுடைய
  • வயிற்றில் - வயிற்றிலே
  • அத்தத்தின் பத்தாம் நாள் - ஹஸ்த நக்ஷத்ரத்துக்குப் பத்தாவதான திருநாளிலே
  • தோன்றிய - திருவவதரித்த
  • அச்சுதன் - கண்ணபிரானுடைய
  • முத்தம் இருந்தவா காணீரே - ஆணழகை வந்து பாருங்கள் 
  • முகில் நகையீர் வந்து காணீரே – புன் சிரிப்பை உடைய பெண்களே! வந்து பாருங்கள்

மதங்கொண்ட ஆண் யானையைப் போன்று வலிமையுடைய வசுதேவருடைய சிந்தனையில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும், அவரது துணைவியாரான தேவகி அன்னையின் திருவயிற்றில் ஹஸ்த நக்ஷத்திரத்தின் பத்தாம் நாள் உதித்தான் அச்சுதன். குழந்தைக்கே உரித்தான பிறந்த மேனியாக உள்ள அழிவற்றவனான இந்த பாலகனின் திருக்கோலத்தை காண, நாணத்துடன் குறுநகைப் புரியும் பெண்களை யசோதை அழைக்கிறாள்.

(ஹஸ்தத்தின் முன்னிருந்து பத்தாம் நாள் = திருவோணம், பின்னிருந்து பத்தாம் நாள் = ரோகிணி. ஆழ்வார் இரண்டையுமே குறிக்கிறார். ஆழ்வார் இங்கு நேராக கண்ணனின் பிறந்த நக்ஷத்திரத்தை குறிப்பிடாததற்கு காரணம், கம்சனை போன்ற துஷ்டர்கள் நக்ஷத்திரத்தை வைத்து அதனை மந்திரங்களால் துஷ்ப்ரயோகித்து குழந்தையை மரணமடையச் செய்யலாம் என்ற பயம்தான் என்று பெரியவர்கள் வியாக்யானம். ஆழ்வார் கண்ணனின் அநுபவத்திலேயே மூழ்கியிருந்ததால் அவர் மேற்கூறியவாறு நினைத்திருக்கலாம் என்பதில் முரண்பாடு இல்லை) 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment