||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
014 அவன் சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே|
இவ்வாக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஆழ்வார் நம்மாழ்வார் ஆவார். ஆழ்வார்கள் பெருமானின் ஒவ்வொரு அம்சமாகப் பிறந்ததாகக் கூறும் வைணவர்கள் நம்மாழ்வாரை மட்டும் விஷ்ணுவின் எட்டு அம்சங்களில் இருந்து சிறிது சிறிதாகப் பெற்று அவதரித்ததாகக் கூறுவர்.
இவர் பிறக்கும் போதே சடம் என்னும் மாயைக்குக் காரணமான வாயுவை வென்றதால் அழுதல், அசைதல் இன்றி ஜடமாக இருந்தார். குழந்தையைப் பெற்றவர்கள் பெருமாள் சந்நிதிக்கு எடுத்துச் சென்றனர். அங்குக் குழ்ந்தை தவழ்ந்து சென்று கோவிலில் இருந்த தலவிருட்சமான உறங்காப் புளியமரப் பொந்தில் சென்று அமர்ந்து யோக நிலையில் இருந்தது.
அயோத்தி சென்ற மதுரகவி ஆழ்வார், தெந்திசையில் இருந்து ஒளி வான்வழி வருவதைக் கண்டு அத்னைத் தொடர்ந்து வந்தார். ஆழ்வார் திருநகிரியை அடைந்தார். அங்கு இருந்த உறங்கா புளிய மரப்பொந்தில் இருந்து ஒளி வருவதையும் அதில் ஒருவர் யோக நிஷ்டையில் இருப்பதையும் கண்டார். அவரது நிஷ்டையைக் கலைக்க ஒரு கல்லை அவர் மீது எறிய படுத்திருந்தவர் கண் திறந்தார்.
மதுரகவி அவரைப் பார்த்து "செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்" என்றார்.
நம்மாழ்வார் சிரித்தவாறே, 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்றார்
அந்த உடலின் இன்ப துன்பங்களை அனுபவித்து அந்த உடலிலேயே கிடக்கும் என அதற்குப் பொருள்.
நம்மாழ்வாரால் எங்கும் செல்ல முடியாது என்பதை உணர்ந்த மகாலட்சுமி பெருமாளிடம் விண்னப்பிக்க, அதன் காரணமாக நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் உள்ள பெருமாள் அந்தந்த மூர்த்தியாக அவருக்கு சேவை சாதித்தார்.
பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்ந்த நம்மாழ்வார், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையே நான்கு வேதங்களின் சாரமாக திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி என்ற பிரபந்தங்களாக இயற்றினார்.
அதில், திருவந்தாதியில் கூறுகிறார்.
இந்த உலகமும், மேலுலகமும் உன்னிடம் உள்ளன. நீயோ என் செவி வழியாக என் மனதினுள் நுழைந்து எனக்குள்ளே தங்கி விட்டாய். எனவே நான் உன்னை விட பெரியவனா அன்றி நீ பெரியவனா என்று எம்பெருமானே நீயே கூறு என்கிறார். ஸ்ரீமன் நாராயணனை பார்த்து நீ சிறியவன் நான் பெரியவன் என்று ஆழ்வார் கூறினார். இந்த ஜகத்தையே தாங்கி கொண்டிருப்பவன் எம்பெருமான். எம்பெருமனோ ஆழ்வாரின் செவி வழியே இருதயத்திற்குள் புகுந்து அதையே பீடமாக வைத்து அமர்ந்திருக்கிறான். அதனால் தான் பெரியன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
(ஆழ்வார்திருநகரியில் பெருமாள் பங்குனி உத்தரத்தின் போது வீதி புறப்பாடை முடித்துக் கொண்டு காலையில் 9 மணி வாக்கில் தாயார் சந்நிதிக்கு வருவார். பெருமாளுக்கு வேறு நாச்சியார்கள் தொடர்பு காரணமாக தாயார் சந்நிதி கதவை சாத்தி மூடுவர். பெருமாள் எவ்வளவு சொல்லியும் தாயார் சமாதானம் ஆக மாட்டார். நம்மாழ்வார் தாயாரிடம் சென்று சமாதானம் செய்ய, தாயாரும் சம்மதித்து "சரி" என சந்நிதிக் கதவைத் திறக்க சம்மதிப்பார். ஆகவே நம்மாழ்வார் பெருமானை விட பெரியவர் என பெருமைப்படுவதில் தவறில்லை)
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “ஆழ்வாரை போல நான் சொல்லவில்லையே! பெருமானையே சேர்த்து நாம் தாங்கணும் என்று ஆழ்வாரை போல நான் ஆசைபடலையே! அந்த பாவசுத்தி என்னிடம் இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment