||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
072 உயிராய் பெற்றேனோ ஊமையைப் போலே|
திருவரங்கத்தில் ராமானுஜருடைய மடத்தில் பல சிஷ்யர்கள் தொண்டு புரிந்து ராமானுஜருடன் இருந்தார்கள். தினமும் ராமானுஜர் கூறும் நல் உபதேசங்களைக் கேட்பார்கள். திருவரங்கன் முன் ஆழ்வார் பாசுரங்களைச் செவிக் குளிர பாடுவார்கள்.
ராமானுஜரின் மடத்தில் வாய் பேச முடியாத, காது கேட்க முடியாத, கல்வி அறிவு இல்லாத ஒரு வைணவர் இருந்தார். அவரால் ராமானுஜர் கூறும் நல்வார்த்தைகளைக் கேட்க முடியாது. சிஷ்யர்களுடன் சேர்த்து ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடவும் முடியாது. தன்னால் முடிந்த சேவைகளை ராமானுஜருக்கு அவர் ஆற்றி வந்தார்.
வேலை எல்லாம் முடித்து விட்டு, ராமானுஜர் உபதேசம் செய்யும் போது ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு ராமானுஜரையே பார்த்து ரசித்துக் கொண்டு இருப்பார் “என்ன அருமையான தேஜஸ்! எவ்வளவு பிரகாசமான திருமுகம், காவியுடையுடன், திரிதண்டம், பவித்திரமான பூணூல், நெற்றியில் சூரியனைப் போலப் ஒளிரும் திருமண், அவருடைய மென்மையான திருப்பாதங்கள்” என்று ராமானுஜரின் திருமேனியை ரசிப்பதே அவருக்கு வேலை.
ஒரு நாள் ராமானுஜர் காலட்சேபத்தின் போது இந்த வைணவர் ஏக்கமாக ராமானுஜரைப் பார்த்துக் கொண்டு இருந்தார். ராமானுஜருக்கு “அடடா! நாம் கூறும் ரகசிய அர்த்தங்களை இவரால் கேட்க முடியாது. இவருக்கு என்ன வேண்டும் என்று வாய் திறந்து கேட்கவும் முடியாது. இவரும் நற்கதி அடைய வேண்டும்” என்று நினைத்துக் கொண்டார்.
அன்றைய காலட்சேபம் முடிந்தவுடன் ராமானுஜர் கருணையுடன் “என்னுடன் வா” என்று சைகை காண்பித்து அவரைத் தன் அந்தரங்க அறைக்கு அழைத்துச் சென்று கதவைச் சாத்திக்கொண்டார். இந்தக் காட்சியைப் கண்ட சிஷ்யர்களுக்கு ஒரே வியப்பு. உள்ளே என்ன நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. சிஷ்யர்களுடன் இருந்த கூரத்தாழ்வானுக்கும் வியப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தாழிட்ட கதவுக்கு அருகில் சென்றார். கதவில் காதை வைத்துப் பார்த்தார். காது கேளாதவருடன் என்ன பேசுவார்? ஒன்றும் கேட்கவில்லை. கண்ணை இடுக்கிக் கொண்டு சாவி துவரத்தின் வழியே என்ன நடக்கிறது என்று பார்த்தார்.
“ஐயோ! பல சாஸ்திரங்கள், ஸ்ரீபாஷ்யம் என்று பலவற்றைப் படித்தேன். படித்துப் பண்டிதர் ஆகிக் கெட்டு ஒழிந்தேன்! ஒரு வாய் பேச முடியாதவனாய் பிறந்திருந்தால் பெரும் பாக்கியம் கிடைத்திருக்கும்!” என்று மூர்ச்சையாகி கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் “ஆழ்வான்! என்ன நடந்தது” என்று கேட்க மயக்கம் தெளிந்த ஆழ்வான் உள்ளே தான் கண்ட காட்சியைக் விவரித்தார்.
ராமானுஜர் திரிதண்டத்துடன் ஆசனத்தில் உட்கார்ந்து இருந்தார். அவரை தன் எதிரே கீழே உட்காரச் சொல்லித் தன் தனது இரு பாதுகைகளை அவரது தலையில் வைத்து ஆசிர்வதிக்க, அந்த வைணவர் தன் இரு கரத்தால் உடையவரின் பாதுகைகளைத் தன் தலை மீது அழுத்திக் கொண்டான். பின், அந்தப் பாதுகைகளை அந்த வைணவரிடமே கொடுத்து விட்டார். அப்போது அவன் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார். இராமானுஜரின் பாதுகைகளை தனது உயிராய் எண்ணி, இராமானுஜருக்கு சேவை புரிவதே தனது வாழ்நாள் குறிக்கோளாய் கருதி, தன் வாழ்நாளைக் கழித்தார்.
நானும் ஏதும் அறியாதவனாய், வாய் பேச முடியாதவனாய் இருந்திருந்தால், எனக்குப் படிப்பு அறிவு இருந்திருக்காது. ராமானுஜரிடம் கொண்ட பக்தியால் எனக்கும் இந்தப் பேரருள் கிடைத்திருக்கும். இவர் பெற்ற பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லையே! என்று வருந்தினார்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அவரைப் போல், உமது பாதுகைகளைப் பெற்றேனா இல்லை அவற்றை உயிரெனக் கருதி வாழ்ந்தேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment