About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 13 November 2023

திவ்ய ப்ரபந்தம் - 57 - பெரியாழ்வார் திருமொழி - 1.4.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் – 57 - சக்கரக் கையன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம்

சக்கரக் கையன்* 
தடங்கண்ணால் மலர விழித்து*
ஒக்கலை மேலிருந்து* 
உன்னையே சுட்டிக் காட்டும் காண்*
தக்கதறிதியேல்* 
சந்திரா! சலம் செய்யாதே*
மக்கட் பெறாத* 
மலடன் அல்லையேல் வா கண்டாய்!

  • சக்கரம் - சுதர்சன சக்கரத்தை
  • கையன் - திருக்கையில் ஏந்தி கொண்டு இருக்கும் கண்ணபிரான்
  • தட கண்ணால் - விசாலமான கண்களாலே
  • மலர் விழித்து - நன்கு விரிய விரித்து மலரப் பார்த்து
  • ஒக்கலை மேல் - என் இடுப்பின் மேல்
  • இருந்து – இருந்து கொண்டு
  • உன்னையே - உன்னையே
  • சுட்டி காட்டும் காண்- சுட்டிக் காட்டுகின்றான் பார்
  • தக்கது - இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று
  • அறிதியேல் - உனக்கு தெரியவில்லையா
  • சந்திரா - சந்திரனே!
  • சலம் செய்யாதே - பிடிவாதம் செய்யாமல் 
  • மக்கள் பெறாத – பிள்ளை பெறாத
  • மலடன் அல்லையேல் - மலடன் அல்லவே
  • வா கண்டாய் - உடனடியாக நீ இங்கே வந்து நிற்பாய்!  

பொலிவுடைய, வடிவான சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தி கொண்டு இருக்கும் கண்ணன், என் இடுப்பில் அமர்ந்து கொண்டு, தன்னுடைய பெரிய விசாலமான அழகிய கண்களை விரிய விரித்து, உன்னையே சுட்டிக் காட்டுகிறான் பார் சந்திரனே! மக்கட் செல்வம் வாய்க்கப் பெறாத மலடன் அல்லவே நீ. உனக்கு இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா? பிடிவாதம் செய்யாமல், உடனடியாக நீ இங்கே வந்து என் பிள்ளையுடன் விளையாடுவாயாக! என்று யசோதை அன்னை, நிலவினை கண்ணனுடன் விளையாட விளிக்கின்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment