||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றியவர் வேத வியாசர். இயற்பெயர் கிருஷ்ண த்வைபாயனர். வேதங்களை பிரித்து வியாசம் பண்ணியதால் வியாசர் என்றழைக்கப்படுகிறார்.
அர்ஜுனனின் மகன் அபிமன்யு. அபிமன்யுவின் மகன் பரிக்ஷித். பரிக்ஷித் ஒருமுறை காட்டில் வேட்டையாடி விட்டு ஒரு முனிவரின் வீட்டுக்குள் நுழைந்து விட்டான். அங்கு சமீகர் என்கிற முனிவர் தியானத்தில் இருந்தார். அவரிடம் தான் பரிக்ஷித் மன்னன் என்றும் தான் அம்பு எய்த ஒரு மானை தேடி வந்ததாகவும், அந்த மானை பார்த்தீரா என்று பல முறை வினவியும் அவர் மௌன விரதத்தில் இருந்ததால் பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பரிக்ஷித் அங்கு கிடந்த ஒரு இறந்த பாம்பை தான் வில்லினால் எடுத்து அவர் தோளில் போட்டு விட்டு சென்று விட்டான். ஆனால் அந்த துறவி அதனால் கோபப்படவே இல்லை. அவரது மகன் சிருங்கி, தவத்தில் சிறந்தவன், ஆனால் கோபக்காரன். அவன் நடந்ததை கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்தான். தன் தந்தையை அவமானப்படுத்திய அந்த பரிக்ஷித் மன்னன் இன்னும் ஏழு இரவுகளுக்குள் கடும் விஷமுடைய தக்ஷகன் என்ற பாம்பினால் கடிக்கப்பட்டு மரணமடைவனாக என்று கடும் சாபத்தை கொடுத்தான். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பரிக்ஷித் தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று உடனே உணர்ந்தான். தான் ஏன் அவ்வாறு செய்தோம் என்று யோசித்தான். கலியுகம் தொடங்கியதாலேயே, கலிபுருஷன் தன்னை தீண்டியதாலேயே இப்படியொரு மகாபாவமான செயலை செய்ய நேர்ந்தது என்று உணர்ந்து கண்ணீர் உகுத்தான்.
சுக பிரம்ம ரிஷியிடம் 'எது ஒருவனுக்கு உயர்ந்த லக்ஷியம்? மரணமடையுமுன் நான் என்ன செய்ய வேண்டும்? மனிதனானவன் எதை கேட்க வேண்டும், செய்ய வேண்டும், ஞாபகம் கொள்ள வேண்டும்? என்று கேட்கிறான். இந்த கேள்வியில் ஆரம்பித்து சுக பிரம்ம ரிஷி மற்றும் பரிக்ஷித் இவர்களுக்குள் நடந்த சம்பாதனை ஏழு நாட்களாக நடந்தது. அதுவே பாகவதம். அதில் ப்ரம்மாவும் நாரதரும், விதுரரும் மைத்ரேயரும் யுதிஷ்டிரனும் நாரதரும், கிருஷ்ணனும் உத்தவரும், பரிமாறிக் கொண்ட சம்பாஷணைகள் இடம் பெறுகின்றன சம்பாஷனை முடியவும் பரிக்ஷித் அடைய வேண்டியதை அடைந்து விட்டேன். பாக்யவான் நான். சாஸ்வதமான ஹரியை எனக்குக் காட்டி விட்டீர்களே. வேறு என்ன வேண்டும்? என் அறியாமை, சந்தேகம் சகலமும் நீங்கின. இனி என்னை அந்த தக்ஷகன் என்கிற சர்ப்பம் தீண்டி மரணம் அடைந்தாலும் துளியும் வருத்தமோ, கவலையோ இல்லை என்றான். அந்த சமயத்தில் சூத பௌராணிகரும் உடனிருந்து பாகவதத்தை கேட்டார். அந்த விஷயத்தையே சூத பௌராணிகரும் சனகாதி முனிவர்களும் நைமிஷாரண்யத்தில் வைத்து கேள்வி பதிலாக பகிர்ந்து கொள்வதாய் பாகவதம் ஆரம்பிக்கும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment