||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கேள்விக் கணைகள்
ஸ்கந்தம் 03
உத்தவரும் விதுரரும் யமுனைக் கரையில் சந்தித்தனர்.
ஆனந்தத்தில் தம்மையே மறந்து தழுவிக் கொண்டு வெகு நேரம் நின்றனர். பின்னர், விதுரர் உத்தவனைப் பார்த்து மிகவும் பரபரப்புடன் வரிசையாக கேள்விக் கணைகளைத் தொடுத்தார். கண்ணனைப் பற்றி ஏதேனும் செய்தி கிடைத்தால் போதும் என்ற தவிப்பு மிகுந்திருந்தது அவர் குரலில்.
தன் தொப்புள் குழியிலிருந்து தோன்றிய ப்ரும்மாவின் வேண்டுகோளுக் கு இணங்கி பூபாரம் தீர்க்க வந்த கண்ணனும் பலராமனும் நலமா? குரு வம்சத்தின் நெருங்கிய நண்பரான வசுதேவர் நலமா? குந்தி முதலிய தன் சகோதரிகளுக்கு தந்தையைப் போல் மனம் மகிழ்ந்து திளைக்கும் படி வேண்டியதை எல்லாம் கொடுத்து சீர் செய்வாரே! அவர் எப்படி இருக்கிறார்? ருக்மிணியின் மகனும், சிறந்த சேனாதிபதியுமான ப்ரத்யும்னன் நலமா? அரசனாகும் ஆசையை அறவே விட்டொழித்தவரும், கண்ணனின் வேண்டுகோளுக்காக அரசாட்சி செய்பவருமான உக்ரசேனர் நலமா? ஸ்ரீ க்ருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதி முருகனைப் பலவாறு விரதங்களால் பூஜித்து சாம்பன் என்ற பெயரில் தன் மகனாகவே அடைந்தாளே. சாம்பனும் ஜாம்பவதியும் எப்படி இருக்கிறார்கள்? அர்ஜுனனிடம் இ ருந்து தனுர் வேதத்தின் ரகசியங்களைக் கற்ற ஸாத்யகி நலமா?
ஷ்வபல்கரின் மகனான அக்ரூரர் கிருஷ்ண பக்தியில் தலை சிறந்தவர் ஆயிற்றே. மஹா அறிவாளி. க்ருஷ்ணனின் காலடிச் சுவடுகளைக் கண்டு பரமானந்தம் அடைந்து ப்ருந்தாவனத்து வீதிகளில் விழுந்து புரண்டவர். அவர் நலமோடு இருக்கிறாரா? போஜ மன்னனின் பெண்ணான தேவகி தேவமாதா அதிதிக்கு ஒப்பானவள். வேதமாதா வேள்விகளின் நெறிகளையும், அவற்றின் பொருளையும் மந்திர உருவில் தாங்குவது போல் ஸ்ரீ க்ருஷ்ணனை உதரத்தில் தாங்கினாளே. அவள் நலமா?
சாஸ்திரங்களுக்கும் வேதங்களுக்கும் ஆதிகாரணன் எனவும், அந்தக் கரணங்களில் ஒன்றான மனத்தின் தேவதையென்றும் புகழப்படும் அநிருத்தன் நலமா?
அந்தக்கரணங்கள் நான்கு - சித்தம், அஹங்காரம், புத்தி, மனம் ஆகியவை. அவற்றின் தேவதைகள் முறையே வாசுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் ஆகியோர்.
உத்தவரே! க்ருஷ்ணனை ஹ்ருதய கமலத்தில் தாங்கி உடலைத் துரும்பென மதிப்பவர்களான ஹ்ருதீகன், சத்யபாமாவின் மகனான சாருதோஷ்ணன், கதன் ஆகியோர் நலமா? தர்ம புத்ரன் பற்றி ஏதாவது தெரியுமா? க்ருஷ்ணனும் அர்ஜுனனும் அவரது இரு கரங்கள் போல் இருப்பார்களே. அவர் நல்லாட்சி புரிகிறாரா? பீமன் போர்க் களத்திற்குத் தேரிலேறித் தான் வருவான். யுத்தம் சற்று உக்ரமடைந்ததும் சினத்தினால் கீழே குதித்து கதையைச் சுழற்ற ஆரம்பிப்பானே. அவனது சினம் குறைந்திருக்கிறதா? காண்டீபத்தை ஏந்திய அர்ஜுனன், தன்னைச் சார்ந்தவர் அனைவர்க்கும் நற்பெயர் வாங்கித் தருபவன். வேடனாக வந்த பரமேஸ்வரனையே பாணங்களால் மூடி மறைத்தவனாயிற்றே. அதனால் மகிழ்ந்து அவர் பாசுபதாஸ்திரம் கொடுத்தாரே. இப்போது தான் பகைவர்கள் அழிந்து விட்டார்களே. அவன் சந்தோஷமாக இருக்கிறானா? நகுல சகாதேவர்கள் மாத்ரிக்குப் பிறந்தார்கள். ஆனால், அவர்களைத் தன் பிள்ளைகள் போலவே வளர்த்தாளே குந்தி. மற்ற மூன்று பாண்டவர்களும் மிகுந்த அன்புடன் அவர்களைக் காத்தார்கள். அவர்கள் இருவரும் நலமா? குந்தியின் நிலை மிகவும் பரிதாபகரமானது. அளவுக்கதிகமான கஷ்டங்களை அனுபவித்த அவள் இப்போதாவது மகிழ்ச்சியாய் இருக்கிறாளா?
கீழ் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கும் என் அண்ணன் த்ருதராஷ்ட்ரனைப் பற்றித் தான் மிகுந்த கவலையாய் இருக்கிறது. பாண்டுவிற்கு அவர் செய்யும் துரோகங்கள் இன்னும் முடியவில்லை. ஆனால் பகவான் தானே அத்தனை பேரையும் ஆட்டிப் படைக்கிறான். எனவே, வருந்துவதில் அர்த்தமில்லை. கௌரவர்கள் பகவானையே அவமதித்தனரே. க்ருஷ்ணனைப் பற்றிய ஏதாவதொரு செய்தியையாவது கூறுங்கள் உத்தவரே. க்ருஷ்ணனின் புகழைக் கேட்டாலே போதும். ஒருவர் அத்தனை சங்கடங்களிலிருந்தும் விடுபடுவார். இறைவனான அவர், மானுட வேடம் தரித்து யதுகுலத்தில் திருத்தோற்றம் கொண்டார்.” விதுரர் மிகுந்த படபடப்புடன் பேசிக்கொண்டே போனார்.
உத்தவரோ தனக்கும் க்ருஷ்ணனுக்கும் இடையே இருந்த நட்பையும், இப்போது பிரிவாற்றாமையையும் நினைத்து தன்வசமிழந்து பதில் கூறவும் சக்தியின்றி, கண்ணீர் உகுத்தபடி ஒரு முஹூர்த்த காலம் பேசாமல் இருந்தார். அவர் ஐந்து வயதுக் குழந்தையாக இருந்த போது குழந்தை விளையாட்டில் ஸ்ரீ க்ருஷ்ணனின் உருவத்தை பொம்மையாகச் செய்து அதைப் பூஜிப்பதும், பேசுவதுமாக விளையாடுவார். உணவு உண்ண அன்னை அழைக்கும் குரல் கூட காதில் விழாது. இப்போது வயதாகி விட்டது. கண்ணனுடனேயே பல காலம் இருந்தவருக்கு பேச்சு எப்படி எழும்? அவரது கண்கள் மூடியிருந்தன. மெய் சிலிர்த்தது. ஆறாகக் கண்ணீர் பெருகிய வண்ணம் இருந்தது. அவரது நிலைமையைக் கண்ட விதுரர், இவரை தரிசித்ததே பெரும் பாக்யம் என்று எண்ணிக் கொண்டார். அவராக அந்நிலையிலிருந்து விடுபடும் வரை நிலவைக் காண ஏங்கும் சகோரபக்ஷி போல் பொறுமையாகக் காத்திருந்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment