About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 10 August 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - பன்னிரெண்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

012 எம்பெருமான் என்றேனோ பட்டர் பிரானைப் போலே|

ஆழ்வார்களில் பட்டர்பிரான் என்றால் அது பெரியாழ்வார் எனப் போற்றப்படும் விஷ்ணு சித்தரையே குறிக்கும். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தார். வேறு எந்த ஆழ்வாருக்கும் இல்லாத பெருமை இவருக்கு உண்டு. பெரிய பிராட்டியை மகளாகவும், ஸ்ரீரங்கநாதரை மாப்பிள்ளையாகவும் அடையும் பேறு பெற்றவர், கருடனின் அம்சம் எனக் கருதப் பட்டார். எப்போதும் வில்லிபுத்தூரில் உள்ள வடபத்ரி பெருமானைச் சிந்தனையில் கொண்டு இருந்ததால் விஷ்ணு சித்தர் என்று பெயர் பெற்றார். 


தாய் மாமன் கம்சனின் அழைப்பை ஏற்று கண்ணன், பலராமனுடன் கோகுலத்தில் இருந்து புறப்பட்டார். வழியில் ஒருவர் கண்ணனுக்கும், பலராமனுக்கும் மாலைகள் அணிவித்தார். அதை ஏற்றுக் கொண்ட கண்ணன், அந்த பூ வியாபாரிக்கு அருள் செய்தார். அவ்வியாபாரி வீடு பேறு பெற்றார் என்ற கதையைக் கேட்ட விஷ்ணு சித்தரும், தானும் பெருமாளுக்கு புஷ்ப கைங்கரியம் செய்ய விரும்பினார். அதனால், தன் குடிலை ஒட்டி பூந்தோட்டம் அமைத்து. பூக்களை இறைவனுக்கு சமர்ப்பித்து வந்தார்


வல்லபதேவ பாண்டிய மன்னன் ஒரு வைணவ பக்தன். ஒருநாள் அவன் மாறு வேடத்தில் இரவில் நகர்வலம் வந்தான். அப்போது வைதீக அந்தணன் ஒருவன் ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான். வேறு ஊர்க்காரன் என்பதால் மன்னன் அவனை எழுப்பி, அவன் யார்? என விசாரித்தார். அதற்கு அவன் காசி சென்று விட்டு திரும்புவதாகவும், சேதுவிற்கு செல்வதாகவும் கூறினான் மன்னனும் "பல ஊர்களுக்கு சென்றுள்ள நீ, எனக்கு ஏதேனும் நன்மொழிக் கூறு" என்றார்.

அந்தப் பயணியும், "மழை காலத்திற்கு வேண்டியவற்றை மற்ற எட்டு மாதங்களிலும் இரவுக்கு வேண்டியதை பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும் சேர்த்து வைப்பவனே புத்திசாலி" என்றிட்டான். மன்னன் அதை மனதில் இருத்திக் கொண்டான்.

அரண்மனை வந்ததும் யோசித்த மன்னன், தன்னிடம் செல்வம் இருந்தாலும், மறுமை உலகிற்கு ஏதும் சேர்க்காமல் வறியனாக இருக்கிறேனே என எண்ணினான். . உடனே, தன் நண்பரும், சிறந்த வேதவித்துவுமான செல்வநம்பி என்பவரை அழைத்து" மறுமைக்கு உண்டானதைச் சேர்த்துத் தருபவன் யார்?" என்றான்

செல்வநம்பியும், இதை ஒரு போட்டியாக அறிவித்தார். சரியான விடை கூறுபவருக்கு, கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள பொற்கிழி பரிசளிக்கப்படும் என அறிவித்தார்.

யார் யாரோ வந்து என்னென்னவோ சொல்லியும் மன்னன் மனம் அவற்றை ஏற்கவில்லை. இந்நிலையில், இறைவன் விஷ்ணு சித்தரின் கனவில் வந்து, பாண்டிய மன்னன் வல்லப தேவன், யார் பரதேவதை என்று ஸ்தாபிப்பதற்காக எல்லா பட்டர்களையும் கூப்பிட்டு இருக்கிறான். "இம்மைக்கும், மறுமைக்கும் உள்ள செல்வம் நான் தான் என உன் திறமையால் நிரூபித்து, பொற் கிழியைப் பெற்று செல்" என்றார்

இந்த ஸ்ரீமன் நாராயணன் தான் எம்பெருமான் என்று வெளிபடுத்தி, சாஸ்திரம் அனைத்தையும் இதை தான் சொல்கிறது என்று எடுத்துக் காட்டி, இந்த எம்பெருமானுக்கு தான் பல்லாண்டு பாட வேண்டும் என்று அவர் பல்லாண்டு பாடி வெளிச்சம் போட்டு காட்டினார் பெரியாழ்வார். "என்றைக்கும், ஏழேழு பிறவிக்கும் உள்ள செல்வன் நாராயணனே: என மன்னனுக்கு விளக்கிவிட்டு, பொற்கிழி கட்டியிருக்கும் கம்பத்தின் அருகேச் சென்றார். கம்பம், அவர் பொற்கிழியை எடுக்கும் விதத்தில் வளைந்து கொடுத்தது. அதைக் கண்டு மன்னனும், மற்றோரும் மகிழ்ந்தனர்.

பொற்கிழியை எடுத்துக் கொண்டு விஷ்ணு சித்தர் கிளம்பினார். இதனால் பாண்டிய தேவன், பெரியாழ்வாரை தன் பட்டத்து யானை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்து கொண்டு போக, அப்பொழுது ஆகாசத்தில், கருட வாகனத்தில் எம்பெருமான் அவருக்கு சேவை சாதித்தார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அப்படிப்பட்ட பட்டர்பிரானாகிய விஷ்ணு சித்தர் சொன்னதைப் போல, ‘எம்பெருமான் நாராயணனே பரம்பொருள்’ என்றேனா...இல்லையே? எம்பெருமானை வெளிச்சம் போட்டு காட்டலையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment