About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 5 November 2023

லீலை கண்ணன் கதைகள் - 62

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

காலயவனனை கொன்ற முசுகுந்தர்|

காலயவனனை கொன்ற அந்த மனிதர் யார் என்ற கேள்வி இப்பொழுது. அந்த மனிதரின் பெயர் ராஜா முசுகுந்தர். அவர் ஒரு பெரிய அரசர். அதே சமயத்தில் மிகுந்த பக்திமானும் கூட, வேதக் கொள்கைகளைப் பின்பற்றுபவர். அவர் மிகுந்த பலசாலியாக இருந்ததனால், ஒரு சமயம், தமக்கும் மற்ற தேவர்களுக்கும் உதவும்படி இந்திரன் அவரைக் கேட்டுக் கொண்டான். முசுகுந்தர் சரி என்று ஒப்புக் கொண்டு, வெகு காலம் தேவர்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்றினார்.


பிறகு சிவகுமாரனான முருகப் பெருமான் தேவர்களின் சேனைத் தலைவர் ஆக்கப்பட்டார். பிறகு இந்திரனும் மற்ற தேவர்களும் முசுகுந்தரை அணுகி, "நண்பரே! தாங்கள் இத்தனைக் காலமும் எங்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்றினீர்கள். எங்களுக்காகத் தங்கள் அரசு, உற்றார், உறவினர் எல்லாவற்றையும் தியாகம் செய்து விட்டு வந்தீர்கள். மனித வாழ்க்கை அநித்தியமானதால் தங்கள் குடும்பம், குழந்தைகள், உற்றார், உறவினர் யாரையும் அங்கே காண மாட்டீர்கள். ஆகவே எங்களிடம் ஏதேனும் வரம் கேளுங்கள்" என்று சொன்னார்கள்.

காலம் தன் உற்றார் உறவினர் எல்லோரையும் அழித்து விட்டது என்று கேட்டதும் அவர் திடுக்கிட்டார்! நாம் அத்தனை காலமா தேவர்களுடன் தங்கி விட்டோம் என்று நினைத்தார். ஆகவே பூமிக்குத் திரும்ப அவருக்கு ஆசையில்லை. ஓய்வு ஒழிவின்றி அவர் அசுரர்களோடு போரிட்டிருந்தார். இப்பொழுது மிகவும் அசதியாக இருந்தார். அவருக்கு இப்பொழுது தேவைப்பட்டதெல்லாம் நல்ல உறக்கம் தான்.

ஆகவே அவர், "இதோ பாருங்கள், எனக்கு இப்பொழுது வேண்டியதெல்லாம் நல்ல உறக்கம் தான். யாருடைய குறுக்கீடும் இல்லாமல் நான் நீண்ட காலம் உறங்க வேண்டும் என்று அருள் புரியுங்கள். அதோடு எவன் என் உறக்கத்தை கெடுத்து என்னை எழுப்புகிறானோ அவன் உடனே எரிந்து சாம்பலாகி விட வேண்டும் என்றும் அருள் புரியுங்கள்" என்றார்.

தேவர்கள் இந்த வரத்தை அளித்ததும் ராஜா முசுகுந்தர் இந்த மலைக் குகைக்கு வந்து தூங்க ஆரம்பித்தார். காலயவனன் அவர் தூக்கத்தைக் கெடுத்து எழுப்பியதால், தேவர்களின் வரத்தின்படி அவன் எறிந்து சாம்பலானான். முசுகுந்தர் இப்பொழுது நன்கு விழித்துக் கொண்டார். சிரித்த முகத்துடன் எதிரே கிருஷ்ணன் நிற்பதைப் பார்த்தார்.

கிருஷ்ணனின் இடுப்பில் இருந்த பட்டாடை, மார்பில் இருந்த ஸ்ரீவத்ச அடையாளம், கழுத்தில் இருந்த கௌஸ்துபமணி, இரு காதுகளிலும் தொங்கிய குண்டலங்கள் இவை எல்லாவற்றையும் பார்த்தார். கிருஷ்ணன் இப்பொழுது நான்கு கைகளுடனும், முழங்கால் வரை தொங்கிய துளசிமாலையுடனும் ஸ்ரீமகாவிஷ்ணுவாக அவருக்குக் காட்சியளித்தான். அந்த அழகைக் கண்டு ராஜா பிரமித்தார். இது யாராக இருக்க முடியும்?

உடனே அவர் கிருஷ்ணனைப் பார்த்து "தாங்கள் உலக நாயகன் என்று நான் நினைக்கிறன். ஆ! எனக்கு இப்பொழுது புரிந்து விட்டது. தாங்கள் “ஸ்ரீமந்நாராயணன்”. நான் ஒரு சாதாரண மனிதன். தேவர்களுக்குச் சொற்ப உதவி புரிந்தேன். நான் மிகவும் அசதியாக இருந்தேன். தேவர்கள் நான் விரும்பியவரை என்னைத் தூங்க அனுமதித்தார்கள். நான் முன் பின் அறியாத ஒருவனால் எழுப்பப் பட்டேன். அவன் உடனே சாம்பலாகி விட்டான். அவன் செய்த பாவம் தான் அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். பிறகு ஏன் கண்கள் தங்கள் தெய்விகத் தரிசனத்தைக் கண்டன. தங்களுக்கு ஏன் வணக்கம்" என்று வணங்கினர்.

முசுகுந்தரின் பக்தியைக் கிருஷ்ணன் மெச்சினான். அவன் சிரித்துக் கொண்டே பதில் சொன்னான்.

"நான் யார், ஏன் பெயர் என்ன என்று நீர் தெரிந்துகொள்ள விரும்புகிறீர். என்னுடைய பெயர்கள், நான் எடுத்த பிறவிகள், நான் செய்த காரியங்கள் எத்தனையோ கோடியாகும். அவற்றுக்குத் தொடக்கமும் கிடையாது, முடிவும் கிடையாது. இந்தப் பிறவியில் என் பெயர் கிருஷ்ணன். நான் கம்சனையும் இன்னும் பல அசுரர்களையும் கொன்றேன். உம் விழிகளால் நீர் ஒரு மனிதரை எரித்தீரே, அவன் காலயவனன் என்னும் கொடியவனும் பாவியுமான யவன வீரன். நீர் இங்கே இருப்பது தெரிந்து தான் நான் இங்கே இந்தக் குகைக்கு வந்தேன். நீர் என்றுமே என் பக்தராக இருந்தீர்கள். நீர் வேண்டியதைப் பெரும் காலம் வந்து விட்டது. நீர் கேட்கும் எதையும் நான் கொடுப்பேன். என் பக்தர்கள் ஒரு நாளும் துன்பப்படக் கூடாது".

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment