||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஆத்மதேவன் - 4
ஸ்கந்தம் 01
கோகர்ணன் சூர்ய ஸ்தம்பனம் செய்தார். ஸூர்ய பகவான் ப்ரத்யக்ஷமானார்.
“என்னை ஏன் நிறுத்தினாய்?“
அவரை வணங்கி, தன் சகோதரன் துந்துகாரிக்கு ஒரு கதி சொல்ல வேண்டும் என்று ப்ரார்த்தனை செய்தார்.
ஸர்வ ஸாக்ஷியாய் விளங்கும் ஸூர்ய பகவான் சொன்னார்.
“கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்? உன் தந்தையான ஆத்ம தேவனை ஸ்ரீமத் பாகவத பாராயணம் செய்யச் சொல்லி நீ தானே சொன்னாய்? இப்போதும் அதுவே உபாயம்.“
“துந்துகாரியை ஏழு கணுக்கள் உள்ள ஒரு மூங்கிலில் ஆவஹனம் செய்து பாராயண விதிப்படி ஸப்தாஹமாக ஏழு நாள்கள் ஸ்ரீமத் பாகவதத்தைப் பாராயணம் செய்து அவனைக் கேட்கச் செய்தால், உன் சகோதரனுக்கு நற்கதி கிடைக்கும்.“ என்று அருளிவிட்டு தன் கதியைத் தொடர்ந்தார் ஆதித்யன்.
மிகவும் மகிழ்ந்து போன கோகர்ணன், பெரிய பந்தல் போட்டு, வெகு விமரிசையாக ஸ்ரீமத் பாகவத பாராயணம் செய்தார். ஊர் முழுதும் கூடியிருந்து கதாம்ருதத்தை அனுபவித்தனர்.
முதல் நாள் பாராயணம் முடிந்ததும், அங்கு நடப்பட்டிருந்த ஏழு கணுக்கள் உள்ள மூங்கிலில் ஒரு கணு வெடித்தது. இரண்டாம் நாள் முடிந்ததும் இரண்டாவது கணு, இப்படியாக ஏழு நாட்களில் ஏழு கணுக்களும் வெடித்து, ஒரு ஸுந்தர புருஷன் அனைவரும் பார்க்கும்படி அதிலிருந்து தோன்றினான். ஒரு திவ்ய விமானமும் வந்தது.
அவ்வளவு பேரும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த திவ்ய புருஷன் கோகர்ணனை வணங்கினான்.
“யார் நீங்கள்?“
“தம்பீ, என்னை தெரியவில்லையா? நான் தான் துந்துகாரி. நான் ராக்ஷஸ அவஸ்தையிலிருந்து தான் விடுதலை கேட்டேன். ஆனால், நீயோ எனக்கு பரமபதத்திற்கே வழி செய்து விட்டாய். உனக்கு என் நமஸ்காரங்கள்“ என்றான்.
கோகர்ணனுக்கு உடனே ஒரு சந்தேகம் எழுந்தது. திவ்ய விமானத்தில் துந்துகாரியை அழைத்துப் போக வந்த பார்ஷதர்களைப் பார்த்துக் கேட்டார்.
“என் சகோதரன் துந்துகாரிக்கு வைகுண்டம் கிடைத்தது மிகப் பெரிய சந்தோஷம். ஆனால் ஒரு சந்தேகம்.“
“கேளுங்கள் கோகர்ணரே“
“இங்கு நான் உள்பட இவ்வளவு பேரும் ஸ்ரீமத் பாகவதத்தை ஏழு நாட்களும் அனுபவித்தோமே. ஆனால் இவருக்கு மட்டும் விமானம் வந்திருக்கிறதே. எங்களுக்கு பரமபதம் எப்போது கிட்டும்? “
பார்ஷதர் முறுவலித்து விட்டுச் சொன்னார்.
“துந்துகாரி இதை விட்டால் தனக்கு கதியில்லை என்று அல்லும் பகலும் ஏக்கத்தோடு ஒரு ஸ்லோகம் கூட விடாமல் ச்ரத்தையாகக் கேட்டான். அதனால் உடனே மோக்ஷம் கிடைத்து விட்டது. மற்றவர்கள் அப்படி ச்ரத்தையாகக் கேட்கவில்லை. ஆனாலும், மறுபடி மறுபடி ஸ்ரீமத் பாகவத கதா ச்ரவணம் செய்து கொண்டிருக்கலாம். அவரவர்களின் அந்திம ஸ்திதியில் நிச்சயம் வைகுண்டம் உண்டு. நீங்கள் விரும்பினால், மறுபடி ஒரு ஸப்தாஹம் செய்யலாம்“ என்றார்.
வாய்ப்பை நழுவ விட மனமில்லாத கோகர்ணன் மறுபடி ஒரு ஸப்தாஹம் செய்தார். இம்முறை பார்ஷதர் கூறியது போல் சிந்தனை வேறின்றி பகவத் சரணங்களே கதி என்று கொண்டு ஏகாக்ர சித்தத்தோடு ஸப்தாஹம் செய்தார். ஏழாவது நாள் திவ்ய விமானம் வந்தது.
இப்போது கோகர்ணனை அழைத்துச் செல்ல திவ்ய விமானத்தில் ஸ்ரீமன் நாராயணனே வந்தார். மகிழ்ந்து போய் கோகர்ணனை ஆலிங்கனம் செய்து கொண்டார். உடனே கோகர்ணனுக்கும் பார்ஷதர்களைப் போலவே திவ்ய ரூபம் ஏற்பட்டது.
ஸ்ரீ ராமபிரான் பரமபதம் ஏகும் போது வைகுந்தம் வர விரும்புபவர்கள் அனைவரும் என்னோடு சேர்ந்து ஸரயுவில் இறங்குங்கள் என்று அறை கூவல் விடுத்து, தன்னோடு நதியில் இறங்கிய அனைவரையும் பரமபதம் அழைத்துச் சென்றார்.
இங்கோ கோகர்ணன் பகவான் அல்ல. இருப்பினும், ஸ்ரீ ராமனைப் போலவே, பரமபதம் விழைபவர்கள் அனைவரும் என்னோடு வரலாம் என அறை கூவல் விடுத்தார். ஊர் மக்கள் அனைவரும் ஏற, விமானம் அனைவர்க்கும் இடமளித்தது. கோகர்ணன் தன்னோடு வந்த அனைவரையும் அழைத்துக் கொண்டு வைகுந்தம் ஏகினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment