About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 10 November 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - எழுபதாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

070 சுற்றி கிடந்தேனோ திருமாலை ஆண்டானை போலே|

திருமாலை ஆண்டான் ஆளவந்தாரின் சீடர்.

திருமாலிருஞ்சோலையில் அவதரித்த இவரின் இயற்பெயர் ஞானபூர்ணர். திருவாய்மொழி வியாக்யானங்களை ஆளவந்தாரிடம் கற்றவர். ஸ்ரீரங்கம் அழைத்து வந்த திருகோட்டியூர் நம்பி, ஒரு முறை திருமாலை ஆண்டானிடம் ராமானுஜருக்கு நம்மாழ்வாரின் திருவாய்மொழியை கற்பிக்குமாரு வேண்டினார். திருமாலை ஆண்டானும் ஒப்புக் கொண்டார்.

நம்பிகளை வரவேற்ற ராமானுஜர், திருமலை ஆண்டானையும் வணங்கினார். நம்பிகள் ராமானுஜரிடம்,"இவர் என் குரு ஆளவந்தாரின் சீடன். திருவாய்மொழியை ஆளவந்தாரிடம் கற்றுத் தேர்ந்தவர். நீங்கள் இவரிடம் திருவாய்மொழியை அர்த்தத்துடன் கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.


ராமானுஜரும் ஒப்புக் கொண்டார். திருமலை ஆண்டான், திருவாய்மொழியை, தான் ஆளவந்தாரிடம் கற்றவிதத்தில் அர்த்தத்துடன் கற்பித்தார்.

ஆனால், ராமானுஜர் அவ்வப்போது குறுக்கிட்டு, இதற்கு இந்தப் பொருள் வராதே' எனக் கூறி, அவர் ஒரு விளக்கத்தை உரைப்பார். இது ஆண்டானுக்கு எரிச்சல் மூட்டியது.

உதாரணத்திற்கு, திருவாய்மொழி இரண்டாம் பத்தில் வரும்

 "அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
  அறியாமா மாயத்து அடியேனை வைத்தாயால்:
  அறியாமைக் குறள் ஆய், நிலம் மாவலி மூவடி என்று
  அறியாமை வஞ்சித்தாய், எனது ஆவியுள் கலந்தே"

என்ற பாசுரத்திற்கு பாடம் எடுத்தார்.

இதற்கு ஆண்டான், "அறிவு பெறாத காலத்தில் தன்னுடன் வைத்திருந்த பெருமாள், பின்பு தன்னை சம்சார சாகரத்தில் தள்ளி வஞ்சித்து விட்டதாக புலம்புகிறார் ஆழ்வார்" எனப் பொருள் கூறினார்.

ஆனால் ராமானுஜர், "அது சரியான விளக்கம் அல்ல. தன்னுள்ளே உரையும் இறைவனை தெரிந்து கொள்ளாதது தனது அறியாமையே" என்று விளக்கினார்.

இதனால் கடுப்பான ஆண்டான், “ஆளவந்தாரிடம் இவ்விளக்கத்தை நான் கேட்டதில்லை. நீர் புது விளக்கம் கூறுவது, விஸ்வாமித்திரரின் மூன்றாம் உலகத்தைப் போன்றுள்ளது.”, என்று கூறி, அவ்விடத்தை விட்டு நீங்கினார். கற்பிப்பதையும் நிறுத்தினார்.

பாடம் நடத்துவதை ஆண்டான் நிறுத்தி விட்டதை அறிந்த திருக்கோட்டியூர் நம்பி, ஸ்ரீ ரங்கம் விரைந்து வந்து, திருமாலை ஆண்டானின் வாயிலாக நடந்தவற்றைக் கேட்டு அறிந்தார். பின்னர், “ராமானுஜரின் இவ்விளக்கத்தை ஒரு முறை ஆளவந்தார் உரைத்து நானே கேட்டிருகிறேன். ஆளவந்தாரின் மனதில் இல்லாதது ஒன்றும் ராமானுஜரின் நாவில் வராது. எல்லாம் அறிந்த கிருஷ்ண பகவான் சாந்திபனி முனிவரிடம் பாடம் கேட்டார். அதுபோல எண்ணி ராமானுஜருக்கு கற்பிக்கவும்,” என ஆண்டானுக்கு அறிவுரை கூறினார். திரும்ப பாடம் ஆரம்பமானது. ராமானுஜர் குறுக்கீடும் இருந்தது.

ஆண்டான் யோசித்தார், ராமானுஜர் சொல்லும் அர்த்தம் பொருத்தமாக இருப்பதை உணர்ந்தார். பின் கேட்டார் "நீர் ஆளவந்தாரிடம் பேசியதில்லை. அவர் பேசிக் கேட்டதும் இல்லை. அப்படியிருக்க இவ்வளவு சரியானப்படி அவர் எண்ணங்களை எப்படி பிரதிபலிக்கிறீர்கள்"? அதற்கு ராமானுஜர், “நான் ஆளவந்தாரின் ஏகலைவன்”, என்றார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அப்படி ராமானுஜர் குறுக்கீடுகள் இருந்தும், அவரைச் சுற்றியே இருந்த திருமாலை ஆண்டான் போல நான் சுற்றிக் கிடந்தேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment