||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
சுதாமரின் கதை|
சுதாமர் என்ற ஓர் அந்தணர் இருந்தார். அவர் கிருஷ்ணரின் அன்புக்கு உகந்த நண்பர். அவர் வேதங்களை நன்கு கற்றவர். ஆனால் மிகவும் ஏழை. மிகவும் அழுக்கடைந்த ஆடைகளை அவர் உடுத்தி இருந்ததனால் அவரைக் குசேலர் என்றும் அழைப்பார்கள்.
தெய்வாதீனமாக எது கிடைக்கிறதோ அதைக் கொண்டு தான் அவர் உயிர் வாழ்ந்தார். அவருடைய மனைவி எல்லா வகையிலும் அவரைப் போலவே இருந்தாள். இளம் வயதில் அவர் சாந்தீபனி முனிவரின் குருகுலத்தில் கிருஷ்ணரோடு சேர்ந்து படித்தவர்.
குழந்தைகள் படும் கஷ்டத்தைப் பொறுக்க முடியாமல் ஒரு முறை அவருடைய மனைவி அவரைப் பார்த்து, "பகவான் கிருஷ்ணர் ஒரு சமயம் தங்களுடைய நெருங்கிய நண்பராக இருந்தார் என்று பல தடவை என்னிடம் கூறியுள்ளீர்கள். நல்லவர்கள் மீதும், ஏழைகள் மீதும் அவர் மிக்க அன்பு கொண்டவர் என்பது பிரசித்தமாக இருக்கிறது. தாங்கள் அவரைப் பார்த்து ஏதாவது உதவி கேட்டால் என்ன?" என்று கேட்டாள்.
சுதாமர் அவள் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டார். மிகவும் சாதாரண ஒரு புடவையை அவள் அணிந்திருந்தாள். அந்தப் புடவையும் பல இடங்களில் கிழிந்திருந்தது. அவரைத் திருமணம் புரிந்து கொண்டதிலிருந்து, அவள் ஒரு நாள் கூட வயிறு நிறையச் சாபிட்டதில்லை. இதுதான் முதல் தடவையாக அவள் அவரை ஏதோ கேட்பது, அதுவும் அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
அவர் தமக்குள், "அவள் திருப்திக்காக நான் கிருஷ்ணரைப் பார்க்கப் போவேன். ஆனால் இது காரணமாக என் பழைய நண்பனை இத்தனை வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்" என்று நினைத்துக் கொண்டார்.
"அவருக்குக் காணிக்கையாகக் கொடுக்க வீட்டில் ஏதாவது இருக்கிறதா? வெறும் கையுடன் நான் என் நண்பனை எப்படிப் பார்க்க முடியும்?" என்று கேட்டார்.
அப்படிக் கொடுக்க வீட்டில் ஒன்றும் இல்லை. உடனே அவள் வெளியே சென்று நான்கு பிடி நெல், பக்கத்துக்கு வீடுகளிலிருந்து வாங்கி வந்தாள். அதை இடித்து அவலாகச் செய்து, அதை ஒரு துணியில் கட்டினாள். அதை எடுத்துக் கொண்டு, அந்த ஏழை பக்தரான அந்தணர் துவாரகை நோக்கி நடந்தார். வழியெல்லாம் கிருஷ்ணரைத் தாம் சந்திக்கப் போவதைப் பற்றியே எண்ணிக் கொண்டு சென்றார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment