About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 10 April 2024

ஸ்ரீமத் பாகவத புராணம் - 80

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 25

ஸ்கந்தம் 03

கர்தமர் வனம் சென்றபின், கபிலர் தன் தாயான தேவஹூதியை மகிழ்விக்க எண்ணி, அந்த ஆஸ்ரமத்திலேயே தங்கினார்.

ஒருநாள் தேவஹூதி, கர்தமர் தன் மகனான கபிலரைப் பற்றிக்‌ கூறியவைகளை நினைவு கூர்ந்தாள்.


கர்தமர் என்ற பெரிய ஆத்மஞானியைக் கணவராகப் பெற்றும் நாள்களை வீணே கழித்துவிட்டோம்.

மகனாக இறைவனே அவதரித்திருக்கும்போதும் இப்பிறவியை உய்விக்கும் வழியை அறியத்தவறினால், அது முட்டாள்தனம் என்றெண்ணினாள்.

கபிலர் தனித்திருக்கும் சமயத்தில், அவரிடம் சென்றாள்.

ப்ரபோ! இவ்வுலக இன்பங்களை நுகர்ந்து, பொறிகளின் அடிமையாய்க் காலத்தை வீணடித்துவிட்டேன். அஞ்ஞான இருளில் மூழ்கிக் கிடக்கிறேன்.

பற்பல பிறவிகள் எடுத்து நொந்துபோய் முடிவில் உன் கருணையால் இம்மானுடப்பிறவி கிடைத்துள்ளது. நீ என்னைக் கரையேற்றவே எனக்கு மகனாகப் பிறந்துள்ளாய். என் அஞ்ஞான இருளகற்றி எனக்கு ஞானக் கண் அருள்வாய்!

அனைத்து ஜீவராசிகளுக்கும் நீயே தலைவன். அனைத்திற்கும் மூலகாரணன். நற்குணங்களின் கொள்கலன். ஜீவர்களை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும் சூரியன் போல் அஞ்ஞான இருளிலிருந்து ஞானப் பாதையில் அழைத்துச் செல்ல வந்த ஞான சூரியன் நீயே.

உன்னைத் தவிர சரணமடையத் தக்கவர்கள் யாருளர்? ஆகவே, உன்னையே சரணடைகிறேன். ப்ரக்ருதி (மாயை), புருஷன் (இறைவன்) பற்றிய தத்துவத்தை எனக்கு உபதேசம் செய்தருளும்படி இறையான உன்னை வணங்கி வேண்டுகிறேன், என்றாள்.

தேவஹூதி தன் பொருட்டு வேண்டினாலும், இவற்றை நாம் படிக்கும்போது, நம்பொருட்டுச் சொன்னாள் என்றே தோன்றுகிறது. ஒருவரின் பொருட்டுச் சொன்னாலும், ஞானவழி நம் அனைவர்க்குமானதே..

தாய் கேட்ட கேள்வி, அனைத்து ஜீவர்களுக்கும் முக்தியில் ஆசையை உண்டு பண்ணுவதாகவும், எவ்வித மறைவு எண்ணமும் இன்றித் தூய்மையான வேண்டுகோளாகவும் இருப்பது கண்டு, சான்றோர்களின் புகலிடமான கபிலர் முகம்‌ மலர்ந்தார்.

பின்னர் தாயிடம்‌ கூறலானார். தாயே! ஆன்மாவின் உண்மையை உணர்த்தும் ஞானயோகம் உலகியல் தளைகளிலிருந்து விடுபட, சிறந்த சாதனமாகும். இதில்‌ இன்ப துன்பங்கள் இல்லை. இரண்டும்‌ அழிந்துவிடும்.

முன்பு, நாரதர் முதலிய மஹரிஷிகளுக்கு இதை நான் உபதேசித்தேன்.

ஒரு ஜீவன் தளைகளில் சிக்கிக் கொள்ளவும், அதிலிருந்து விடுபடவும் முக்கிய காரணமாக இருப்பது மனமே. உலகியல் இன்பங்களில் சென்றால் அது தளைப்படுகிறது. இறைவனிடம் ஒன்றினால் விடுதலை அடைகிறது. உண்மையற்ற பொய்யான உலகியல் விஷயங்களில் ஈடுபட்டால், காமம், ஆசை, கோபம் முதலியவற்றிற்குக் காரணமாகிறது. அதே மனம், ஆசைகளை ஒதுக்கிவிட்டுத் தூய்மை பெறுமாயின் இன்ப துன்பங்களைச் சமமாக எண்ணும் தன்மை பெறுகிறது.

இவ்வாறான மனம் கொண்டவன், ஆன்ம ஞானம், வைராக்யம், பக்தி ஆகியவற்றைக் கொண்டவனாய் இருப்பான். ப்ரக்ருதியின் பரிமாணங்களான உடல், பொறி, புலன், மனம்,‌ப்ராணன் இவைகளிலிருந்து இயல்பாகத் தனித்திருப்பான். முக்குணங்களால் பாதிப்படையமாட்டான். தேவர், மனிதர் என்ற வேறுபாடு அற்றிருப்பான். உடலால் வேறுபட்டிருப்பினும், ஞானத்தினால் வேறுபாடில்லாமலும், அணுவிலிருந்து பிரிக்கமுடியாதவனாயும்‌ இருப்பான்.

இவன் இன்ப துன்பங்களில் ஈடுபடாமல் தனித்திருக்கும் ஆன்மாவையும், உலகியல் தளைகளை விளைவிக்கும் திறன் இன்றித் தோற்றுப்போன மாயையையும் காண்பான். அம்மா! அனைத்து ஜீவராசிகளுக்கும் அந்தராத்மாவாக விளங்கும் பகவானிடம் ஏற்படும் பக்தியைத்தவிர, முக்தி அடைய வேறொரு எளிய சாதனம் இல்லவே இல்லை என்பது யோகிகளின் கருத்து.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment