||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
036. திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)
முப்பத்தி ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் – 10
001. திவ்ய ப்ரபந்தம் - 1278 - செங்கண்மால் திருத்தெற்றியம்பலத்தே உள்ளார்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்*
மற்று அவர் தம் காதலிமார் குழையும்*
தந்தை கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக்*
கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்*
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து*
இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்*
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1279 - பேய்ச்சி பால் உண்டவன் வாழும் இடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட*
பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி*
பெற்று எடுத்த தாய்போல மடுப்ப*
ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்*
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்*
இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங் கணார் தம்*
சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1280 - கண்ணனே திருத்தெற்றியம்பலத்து ஐயன்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப்*
பசு வெண்ணெய் பதம் ஆரப் பண்ணை முற்றும்*
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி*
அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்*
மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ*
மாங்கனிகள் திரட்டு உருட்டா வரு நீர்ப் பொன்னி*
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1281 - நப்பின்னை மணாளன் வாழ்விடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம்
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி*
வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த*
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட*
கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்*
ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்*
எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதி*
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1282 - செங்கண்மால் வாழ்விடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை*
கதிர் முத்த வெண்ண கையாள் கருங் கண் ஆய்ச்சி*
முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப*
மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்*
மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி*
ஆடவரை மட மொழியார் முகத்து*
இரண்டு சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1283 - இராவணன் தோள்களைத் துணித்தன் இடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம்
தான் போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்*
அது கண்டு தரித்திருப்பான் அரக்கர் தங்கள்*
கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன*
இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்*
மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்*
மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு*
தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1284 - குறளுருவான பெருமான் வாழ்விடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - ஏழாம் பாசுரம்
பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்*
பொல்லாத குறள் உரு ஆய்ப் பொருந்தா வாணன்*
மங்கலம் சேர் மறை வேள்வி அதனுள் புக்கு*
மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்*
கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த*
குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம் தன்னால்*
செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1285 - வராக அவதாரம் எடுத்தவன் வாழ்விடம் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - எட்டாம் பாசுரம்
சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு*
திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் குலுங்க*
நில மடந்தை தனை இடந்து புல்கிக்*
கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்*
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்*
ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்*
சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1286 - உலகங்களைத் தன் வயிற்றில் அடக்கியவன் அமரும் இடம்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி*
எண் திசையும் மண்டலமும் மண்டி* அண்டம்
மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்*
முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்*
ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து*
ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கு நாவர்*
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மாலே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1287 - தேவர்களுள் ஒருவர் ஆவர்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - நான்காம் திருமொழி - பத்தாம் பாசுரம்
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்*
திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலை*
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்*
கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி*
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன*
பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்*
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி*
சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர் தாமே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்