||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 30 - நந்தன் மதலையின் உந்தி
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
வந்த மதலைக்*
குழாத்தை வலி செய்து*
தந்தக் களிறு போல்*
தானே விளையாடும்*
நந்தன் மதலைக்கு*
நன்றும் அழகிய*
உந்தி இருந்தவா காணீரே*
ஒளியிழையீர்! வந்து காணீரே|
- வந்த - தன்னோடு விளையாட வந்த
- மதலை குழாத்தை - சிறு பிள்ளைகளின் கூட்டத்தில்
- வலி செய்து - தன் வல்லமையைக் காட்டிக் கொண்டு
- தந்தம் களிறுபோல் - கொம்பு முளைத்த யானைக் குட்டி போல்
- தானே - தானே தலைவனாய் நின்று
- விளையாடும் - விளையாடுமவனாய்
- நந்தன் - நந்தகோபர்க்கு
- மதலைக்கு - விதேயனான பிள்ளையாகிய கண்ணனுடைய
- நன்றும் அழகிய - மிகவும் அழகியதான
- உந்தி இருந்த வா காணீரே - நாபி இருக்கிற படியை வந்து பாருங்கள்
- ஒளி - ஒளியால் விஞ்சின
- இழையீர் வந்து காணீரே – ஆபரணங்கள் அணிந்த பெண்களே! வந்து பாருங்கள்
குழந்தை கண்ணன் விளையாடும் போது மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளயாட மாட்டனாம். இவன் ஒரு தனிக் கட்சியாகவும், எல்லா குழந்தைகளும் சேர்ந்து எதிர் கட்சியாகவும் இருக்குமாறு தான் விளையாடுவானாம். விளையாடும் போது, தன்னுடன் விளையாட வந்த மற்ற ஆயர்க் குழந்தைகள் மத்தியில், தன் வல்லமையை காட்டிக் கொண்டு கொம்பு முளைத்த குட்டி யானை போல், அவர்களுக்கு ஏதாவது துன்பம் செய்து அழ வைத்து விட்டு, தான் மட்டும் தனியே வீரனாக நின்று, வென்று விளையாடும், நந்தகோபருடைய மழலைக் குழந்தையாய் குழைகின்ற செல்வமான இந்த மைவண்ணக் கண்ணனுக்கு சீர்மையுடன் அமைந்துள்ள அழகான தொப்புள் அழகினை வந்து பாருங்கள் என்று கண்ணனின் தொப்புள் அழகை காண ஒளிவீசிய ஆபரணங்கள் அணிந்திருந்த பெண்களை அழைக்கிறாள் யசோதை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment