||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
079 வாயில் கையிட்டேனோ எம்பாரைப் போலே|
திருப்பெரும்பூதூரின் அருகில் உள்ள மழலை மங்கலத்தில் (தற்போதைய மதுர மங்கலம்) கிபி 1026 ஆம் ஆண்டு, கோவிந்த பட்டர் என்ற இயற்பெயருடன் பிறந்த எம்பார், ராமானுஜரின் சித்தி மகனாவார். திருப்புட்குழியில் தன் அண்ணனாகிய இராமானுசருடன் யாதவ பிரகாசரிடம் கல்வி பயின்றார். ஒரு முறை காசிக்குச் சென்று கங்கையில் நீராடுகையில் சிவலிங்கம் ஒன்று கிடைக்க, அதை எடுத்து வந்து காளஹஸ்தியில் வைத்து கோயில் கட்டினார். இச்சம்பவத்தால் "உளங்கைக் கொணர்ந்த நாயனார்" என சைவர்களால் அழைக்கப்பட்டார். சிவ பக்தனாக இருந்த கோவிந்த பட்டரை ராமானுஜரின் வேண்டுதலுக்கிணங்க, திருமலையில் இருந்த பெரிய திருமலை நம்பிகள் வைணவத்திற்கு திருப்பினார்.
பெரிய திருமலை நம்பியிடம், திருமலையில் ராமாயணத்தின் உள் அர்த்தங்களை அறிந்து கொண்டிருந்த ராமானுஜர், ஒரு சமயம், எம்பார் பாம்பின் வாயில் தனது கையை வைத்து ஏதோ செய்து கொண்டிருப்பதைக் கண்டார். சில நிமிடங்கள் செல்ல, எம்பார், பாம்பை விட்டு விட்டு, தனது ஆசார்ய சேவைக்கு திரும்புவதைக் கண்டார். ராமானுஜர், "என்ன செய்து கொண்டிருந்தீர் பாம்புடன்?"என வினவினார்.
எம்பார், "அந்த பாம்பு தன் நாக்கை நீட்டிக் கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்த பொழுது, நாக்கினுள் முள் ஒன்று தைத்திருந்தது. அதை எடுத்து விட்டேன். அது ஓடி விட்டது.”, என்றார். அனைத்து உயிர்களையும் ஒன்றெனக் காணும் எம்பாரின் கருணை உள்ளதைக் கண்டு ராமானுஜர் பெருமிதமும் ஆனந்தமும் கொண்டார். வைணவனின் அடிப்படை தர்மம் மனித நேயம், கருணை, இரக்கம்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அந்த எம்பாரைப் போல அனைத்து உயிர்களிடத்திலும் கருணையுடன் இருந்தேனா? கருணை உள்ளத்தோடு பாம்பின் வாயில் கையை விட்டேனோ இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment