About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 20 December 2023

108 திவ்ய தேசங்கள் - 018 - திருக்கண்ணங்குடி 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

018. திருக்கண்ணங்குடி
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - நாகப்பட்டினம்
பதினெட்டாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ லோகநாதப் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ அரவிந்தவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஷ்யாமளமேனி பெருமாள் 
திருவடிகளே சரணம்


  • பெருமாள் மூலவர்: லோகநாதன், ஷ்யாமளமேனி
  • பெருமாள் உற்சவர்: தாமோதர நாராயணன் - ஸ்ரீதேவி - பூதேவியுடன்                                               கையை இடுப்பில் கொண்டு கண்ணன் நிற்பதைப்                                            போல்
  • தாயார் மூலவர்: லோகநாயகி
  • தாயார் உற்சவர்: அரவிந்தவல்லி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம்: ஷ்ரவண
  • விமானம்: உத்பல 
  • ஸ்தல விருக்ஷம்: மகிழம்
  • ப்ரத்யக்ஷம்: ப்ருகு சைத்யர், கௌதம முனி
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 1. திருக்கண்ணமங்கை. 2. திருக்கண்ணபுரம். 3. கபிஸ்தலம். 4. திருக்கோவிலூர். 5. திருக்கண்ணங்குடி. இத்தல தீர்த்தத்தின் பெயரைக் கேட்டாலே சகல பாவங்களும் விலகி விடும் என்பதால் இப்பெயர் பெற்றது. இத்தல பெருமாளின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம். தாயார் லோக நாயகி முகமும், உற்சவர் அரவிந்த நாயகி முகமும் ஒரே மாதிரி இருப்பது சிறப்பு. எல்லா திவ்ய தேசத்திலும் கருடாழ்வார் கைகளை குவித்து வணங்கும் நிலையில் இருப்பார். ஆனால் இத்தலத்தில் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு வைகுண்டத்தில் எழுந்தருளி இருப்பதைப் போல் அருள் பாலிக்கிறார். "ஊராக் கிணறு, உறங்காபுளி, தேரா வழக்கு திருக்கண்ணங்குடி' என்று இத்தலத்திற்கு திவ்ய தேச சிறப்பு பழமொழி உண்டு.

கிருஷ்ண பக்தியில் வசிஷ்டர் மிக சிறந்தவர். "கிருஷ்ண பிரேமை வசிஷ்டாய நாமா' என்று சொல்வார்கள். ஒரு முறை வசிஷ்டர் வெண்ணெயில் கிருஷ்ணன் விக்கிரகம் செய்து, அதை தன் பக்தி மேலீட்டால் இளகாமல் வைத்து பூஜை செய்து வந்தார். இந்த பக்தியை கண்ட கண்ணன், சிறு குழந்தை வடிவம் கொண்டு கோபாலனாக வசிஷ்டரிடம் சென்றார். அங்கு வசிஷ்டர் பூஜை செய்து கொண்டு இருந்த வெண்ணெய்யை,  கண்ணன் அப்படியே எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டார். இதைக் கண்ட வசிஷ்டர், "அடே! அடே!''என விரட்டி சென்றார். திருக்கண்ணங்குடியை "கிருஷ்ணாரண்யம்' என புராணங்கள் கூறுகிறது. இங்கு மகிழ மரத்தின் அடியில் நிறைய ரிஷிகள் தவம் செய்து கொண்டு இருந்தார்கள். வசிஷ்டரால் விரட்டப்பட்ட கண்ணன் இப்பகுதிக்கு ஓடி வந்தான். இவர் வருவதை தங்களது ஞான திருஷ்டியால் அறிந்த ரிஷிகள் கிருஷ்ணனை பாசக் கயிற்றால் கட்டிப் போட்டனர். இவர்களது பக்திக்கு கட்டுப்பட்ட கண்ணன், "வசிட்டன் என்னை விரட்டி வருகிறான். வேண்டியதை சீக்கிரம் கேட்டுப் பெறுங்கள்''என்றார். அதற்கு ரிஷிகள், "கண்ணா! நீ எங்களுக்கு தரிசனம் தந்தது போல் இத்தலத்திற்கு வருவோர்களுக்கு தரிசனம் கொடுத்து அருள வேண்டும்,'' என வேண்டினர். இவர்களது வேண்டுதலுக்கு இணங்க கண்ணன் இத்தலத்தில் நிற்க, விரட்டி வந்த வசிஷ்டர் கண்ணனது பாதங்களை பற்றிக் கொண்டார். உடனே கோபுரங்களும், விமானங்களும் உண்டாகி விட்டன. இதை அறிந்த பிரம்மனும் தேவர்களும் உடனே வந்து பிரமோற்சவம் நடத்தினர். கண்ணன் கட்டுண்டு நின்ற படியால் "கண்ணங்குடி' ஆனது.

இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் "திருநீரணி விழா' என்பது சிறப்பான விழாவாகும். இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை தான் நடைபெறும். இதற்கு அனைவரும் விபூதி அணிந்தே வருவார்களாம். உபரிசரவசு மன்னனுக்காக இந்த விழா எடுக்கப்பட்டது. சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்த விழா எடுத்துக் காட்டாகும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment