||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
062 அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே|
இந்து தத்துவத்தில் இறைவனின் தன்மை பற்றிக் கூறும் கொள்கைகள் மூன்று: அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம்.
அத்வைதம் (அ + துவைதம்) என்பது இரண்டற்ற நிலை. ஜீவனும், இறைவனும் (ஜீவாத்மா, பரமாத்மா) ஒன்று தான். வேறு வேறு அல்ல. சகல உயிர்களுக்கும் பொதுவாக ஆத்மா விளங்குகிறது என்று இத்தத்துவம் விளக்குகிறது. ஆதிசங்கரர் தான் முதன்முதலில் அத்வைத தத்துவத்தை தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை.
த்வைதம் என்றால் இரண்டாக விளங்குவது என்று பொருள். பரமாத்மா என்பது இறைவன். ஜீவாத்மா என்பது கடவுளால் (பரமாத்மா) படைக்கப்பட்ட உயிர். எப்பொழுதுமே, இந்த வேறுபாடு இருந்து கொண்டே தான் இருக்கும் என்பதே த்வைதம் சொல்லும் உண்மை. இந்தக் கோட்பாட்டை உபதேசித்தவர் மத்வாச்சாரியார்.
விசிஷ்டாத்வைதம் - அத்வைதம் என்னும் கொள்கையோடு ஒரு விஷேஷத் தன்மை கொண்டது. அதாவது, பரமாத்மா வேறு, ஜீவாத்மா வேறு. ஆனால், ஜீவாத்மா முயன்றால், பரமாத்மாவை தன்னுள் ஏற்றுக் கொள்ளலாம். அதுவே முக்திக்கான வழி.
நான் தான் பிரம்மம் என்ற அத்வைத தத்துவம் ராமானுஜருக்கு திகைப்பூட்டியது.
நானே பிரம்மம் என்று இருந்து விட்டால் கடவுள் வணக்கத்திற்கு வகை ஏது. பக்திக்கு இடம் ஏது. தன்னைவிட மேலான பரம்பொருள் என ஜீவன் உணர்ந்தால் தான் அந்த பரம் பொருளை வணங்க வேண்டும், முக்தியடைய வேண்டும் என்ற எண்ணம் ஜீவனுக்கு ஏற்படும்.
பிரம்மம் தான் எல்லாம். ராமானுஜர் விசிஷ்டாத்வைதம் கொள்கையை பரப்பி வந்தார்.
அப்போது வடநாட்டில் யக்ஞமூர்த்தி என்ற பெரும்புலவர் இருந்தார். அவர் அத்வைத நெறியை வலியுறுத்தி வந்தார். ராமானுஜருடன் வாதாட யக்ஞமூர்த்தி திருவரங்கத்திற்கு வந்தார். யக்ஞமூர்த்தி நிரம்பக் கற்ற துறவி. வாதத்திறமை மிக்கவர்.
வாதப்போரின் நிபந்தனைப்படி, யக்ஞமூர்த்தி, தான் தோல்வி அடைந்தால் தன் பெயரை மாற்றி, ராமானுஜரின் பெயரை வைத்துக் கொள்வதாகக் கூறினார். அத்துடன், ‘‘நான் ராமானுஜரின் பாதுகைகளைச் சுமப்பேன்’’ என்றும் கூறினார். ராமானுஜர், ‘‘நான் தோற்றால் எனது நூல்களைக் கையால் தொடமாட்டேன்’’ என்றார். வாதம் பதினெட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பதினேழாம் நாள் நிலவரப்படி யக்ஞமூர்த்தியின் பக்கம் ஓங்கி நின்றது.
அன்றிரவு ராமானுஜர் திருவமுது செய்யாமல் இருந்தார். ஆழ்வார்கள் வளர்த்த திருமால் நெறி தன்னால் தோல்வி அடையாமல் காத்திடப் பெருமாளிடம் வேண்டினார். பெருமாளும் ராமானுஜரின் கனவில் தோன்றினார். உமக்கு, ‘‘இன்னுமொரு சீடனைத் தந்தருள்வோம்!’’ என்று குறிப்பாகக் கூறியருளினார். பதினேழாம் நாளிலேயே யக்ஞமூர்த்தி தன்னுடைய வாதத்தை நிறைவு செய்து விட்டார். பதினெட்டாம் நாள், ராமானுஜர் பல்வேறு சான்றுகளுடன் வாதாடினார். இறுதியில் வெற்றி வாகையும் சூடினார்.
யக்ஞமூர்த்தியும் ராமானுஜரின் சீடரானார். அத்வைத கொள்கை பின்பற்றிய யாதவ பிரகாசரிடம் கல்வி கற்ற போதே, சிறு வயது ராமானுஜர், தனது குருவிடம் துணிவுடன், ஆழ்வார்கள் கூறிய விசிஷ்டாத்வைத முறையைப் பற்றிக் கூறி விளக்கினார்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அந்த எம்பெருமானைப் போல வாதாடி அத்வைதம் வென்றவளா நான்? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment