||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கிரந்த மகிமை
ஸ்கந்தம் 01
கங்கை உள்பட ஸப்த புண்ய நதிகளும் வந்து ஒருவருக்கு ஸேவை செய்து தங்களிடம் சேர்ந்த பாவங்களைத் தொலைக்கின்றன என்றால் அவர் எவ்வளவு புண்யசாலியாக இருக்க வேண்டும்? நிச்சயமாக அவரை நிந்தித்தது தவறு தான். மன்னிப்பு கேட்பதோடு, அவரின் புண்யத்திற்கான காரணத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். பலவாறு சிந்தித்துக் கொண்டு பயணியானவர் வீட்டுத் திண்ணையில் தவிப்போடு அமர்ந்திருந்தார். சற்று பொழுது புலரும் தருவாயில் வெளியே வந்த அந்த மஹாத்மாவின் கால்களில் ஓடிச் சென்று விழுந்தார்.
"நான் செய்தது பெரும் தவறு ஸ்வாமி. மன்னிச்சுடுங்க. உங்க பெருமை தெரியாம நேத்திக்கு தாறுமாறா பேசிட்டேன்."
அவருக்கோ ஒன்றும் புரியவில்லை. பயணியை ஆசுவாசப்படுத்தி உட்கார வைத்து என்னவென்று விசாரித்தார்.
"அதையெல்லாம் விடுங்க. எனக்கொன்னும் தெரியாது. கங்கையாவது, ஸப்த நதியாவது. நான் பிறந்ததிலிருந்து இங்கேயேதான் இருக்கேன்" என்றார்.
கங்கையே இவரை மஹாத்மா என்கிறாள். இவரோ கங்கையைத் தெரியாது என்கிறாரே என்று குழம்பிப் போனார் பயணி. ஆனாலும் இந்த முறை ஏமாந்து போய் விடக் கூடாது என்று மேலும் விசாரித்தார்.
"அதெல்லாம் இருக்கட்டும். நீங்க என்ன பூஜை பண்றீங்க? ஏதாவது ஜபம் செய்யறீங்களா? உங்கள் குரு யார்?" கேள்வி மேல் கேள்வி அடுக்கிக் கொண்டே போக, அவரோ திருதிருவென்று விழித்தார். பின்னர் பேச ஆரம்பித்தார்.
"இதோ பாருங்க. பூஜையோ, ஜபமோ எனக்கொன்னும் தெரியாது. நான் செய்வதெல்லாம் ஒன்னே ஒன்னு தான்"
"என்ன அது?"
"என் வீட்டில் ஒரு பழைய புத்தகம் இருக்கு. பரம்பரை பரம்பரையாக என் கொளுத் தாத்தா, தாத்தா, அப்பா எல்லாரும் பாராயணம் செய்த புத்தகம். எனக்கு ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு அக்ஷரம் கூட தெரியாது. அதனால், நான் பாராயணம் செய்வதும் இல்லை. ஆனால், காலையில் ஸ்நானம் செய்துவிட்டு அந்த புத்தகத்திற்கு இரண்டு புஷ்பங்களைப் போட்டு ஒரு தீபம் காட்டுவேன். அவ்வளவுதான் நான் செய்யும் பூஜை. நான் வேறெந்த தெய்வத்தையும் வழிபடுவதில்லை. கோவில்களுக்கோ யாத்திரைகளோ சென்றதுமில்லை" என்றார்.
வியப்பின் உச்சிக்கே போன பயணி,
"அந்தப் புத்தகத்தை நான் பார்க்கலாமா?" என்று தயங்கி் தயங்கிக் கேட்டார்.
"வாருங்கள். காட்டுகிறேன்" என்று வீட்டினுள் அழைத்துச் சென்று பூஜையில் இருந்த புத்தகத்தை ஜாக்கிரதையாக எடுத்துக் கொடுத்தார்.
தொட்டால் பொடிப் பொடியாக உதிர்ந்து போகும் நிலையில் இருந்த அந்தப் புத்தகத்தைப் பிரித்தால் முதல் பக்கத்திலேயே ஸ்ரீமத் பாகவத மஹாபுராணம் என்ற எழுத்துக்கள் பளிச்சிட்டன.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment