||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
014. திருநறையூர்
நாச்சியார் கோயில் - கும்பகோணம்
பதிநான்காவது திவ்ய க்ஷேத்ரம்
ஸ்ரீ திருநறையூர் நம்பி பெருமாள் திருக்கோயில்
ஸ்ரீ வஞ்ஜுளவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ திருநறையூர் நம்பி பெருமாள்
திருவடிகளே சரணம்||
- பெருமாள் மூலவர்: திருநறையூர் நம்பி
- பெருமாள் உற்சவர்: இடர் கடுத்த திருவாளன்
- தாயார் மூலவர்: வஞ்ஜுளவல்லி
- தாயார் உற்சவர்: நம்பிக்கை நாச்சியார்
- திருமுக மண்டலம் திசை: கிழக்கு
- திருக்கோலம்: நின்ற
- புஷ்கரிணி/தீர்த்தம்: மணிமுத்தா நதி, சங்கர்ஷணம், பிரத்யும்னம், அனிருத்தம், சாம்ப
- விமானம்: ஸ்ரீநிவாச, ஹேம
- ஸ்தல விருக்ஷம்: வகுளம் (மகிழம்)
- ப்ரத்யக்ஷம்: ப்ரஹ்மா, மேதாவி ரிஷி
- ஆகமம்: வைகாநஸம்
- ஸம்ப்ரதாயம்: தென் கலை
- மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
- பாசுரங்கள்: 110
--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
ஸ்தல புராணம்
திருமங்கை ஆழ்வாருக்கு அருளிய பெருமாள். நீலன் எனும் குறுநில மன்னனாக இருந்த திருமங்கை ஆழ்வார் பெருமாள் மீது பக்தி கொண்டு தான் வைத்திருந்த பணத்தை எல்லாம் இறைப்பணிக்கே செலவிட்டார். அவர் வைணவர் அல்லாததால் யாரும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மனம் கலங்கிய அவர் இத்தலம் வந்த போது மகாவிஷ்ணுவிடம் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். அவருக்காக மனம் இரங்கிய பெருமாள் ஆச்சார்யனாக வந்து 'முத்ரா தானம்' (பஞ்ச சமஸ்காரம்) செய்து வைத்தார். (முத்ரா தானம் என்பது ஒருவரை பரிபூரண வைணவராக ஏற்றுக் கொள்வதற்காக அவரது இரு கைகளில் சங்கு, சக்கர அச்சு இடப்படும் அடையாளம்). ஆச்சார்யனாக வந்ததால் இத்தலத்து பெருமாள் 2 கைகளுடன் இருக்கிறார். கையில் சங்கும், சக்கரமும் முத்ரா தானம் செய்த கோலத்தில் முன் புறம் தள்ளியும், சங்கு திரும்பிய நிலையிலும் இருக்கிறது. தன்னை ஏற்றுக் கொண்டதால் திருமங்கை ஆழ்வார் இத்தலத்தில் 100 பாசுரங்களுக்கு மேல் பதிகங்கள் பாடி ஸ்வாமியை, "நம்பி' என்று சொல்லி மங்களாஸாஸநம் செய்தார். நம்பி என்றால் பரிபூரணமான நற்குணங்களால் நிறையப் பெற்றவர் என்று பொருள். திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே பெருமாள் ஆச்சார்யனாக வந்து முத்ரா தானம் செய்துள்ளார்.
ஸ்ரீரங்கம் கோயில், ஆண்டாளால் பெயர் பெற்றிருப்பது போல இத்தலமும் தாயாரால் பெயர் பெற்றிருக்கிறது. இங்கு தாயாரை மையப்படுத்தியே கருவறையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. பெருமாளை விட சற்று முன் புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. வீதி உலா செல்லும் போதும் இவளே முன்பு செல்ல அதற்கு பின்பே ஸ்வாமி எழுந்தருளுகிறார். இவளுக்கே முதலில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக் கொத்து வைத்தபடி அருள் பாலிக்கிறாள். இவள் தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டு இருக்கிறது.
இங்கு கருடாழ்வார் தனிச் சன்னதியில் உடலில் 9 நாகங்களுடன் அருளுகிறார். இவருக்கு ஆறு காலமும் மோதக நைவேத்யம் படைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப் படுகிறது என்பது சிறப்பிலும் சிறப்பு. உற்சவ காலங்களில் மரத்தால் அல்லது பிற உலோகங்களால் செய்யப்பட்ட கருடன் தான் வீதி உலா செல்வார். ஆனால், இங்கு கருட சேவையின் போது கற் சிலையாக இருக்கும் மூலவரே வீதி உலா செல்கிறார். இவரை கருவறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும் போது முதலில் நான்கு பேர் இவரை சுமந்து வருவர். பின் அப்படியே 16, 32 எனப் பெருகி இறுதியில் பலர் இவரைச் சுமக்கிறார்கள். இவர் வெளியில் இருந்து மீண்டும் கருவறை நோக்கி வரும் போது அதே எண்ணிக்கையில் ஆட்கள் குறைந்து பின் கருவறையில் வைக்கின்றனர். கருடரால் சிறப்பு பெற்ற இத்தலத்தில் சில வருடங்களுக்கு முன்பு வரையில் உச்சி கால பூஜையில் இரண்டு கருடன்கள் வந்து நைவேத்ய பொருட்களை உண்டு வந்ததாம். அவற்றின் மறைவிற்கு பிறகு பிரகாரத்தில் அதற்கென தனிச் சன்னதி அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
கோச்செங்கணர் எனும் சோழ மன்னர் சிவன் மீது கொண்டிருந்த பக்தியால் நாயன்மார்களில் ஒருவராக இடம் பிடித்தவர். 70 சிவாலயங்கள் கட்டி சிவனை வழிபட்ட இவருக்கு வைகுண்டம் செல்ல ஆசை ஏற்பட்டது. எனவே அவர் பெருமாளை வேண்டினார். அவருக்கு இரண்டு கரங்களுடன் காட்சி தந்த பெருமாள் தனக்கு கோயில் கட்டும்படி பணித்தார். அவருக்காக இத்தலத்தில் சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன், கோபுரத்திற்கு அருகில் இருந்து பார்த்தாலும் ஸ்வாமி தெரியும்படி மாடக் கோயில் போல இக்கோயிலைக் கட்டினான் கோச்செங்கட் சோழன். திருமங்கை ஆழ்வார் தனது பாசுரத்தில் இக்கோயிலை "மணிமாடக்கோயில்' என்று பாடியுள்ளார்.
பஞ்ச கிருஷ்ண கோயில்களில் முதலாவதான இத்தலம் முக்தி தரும் 12 தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. விமானம் ராஜ கோபுரம் போன்ற அமைப்பிலேயே இருக்கிறது.
மேதாவி எனும் மகரிஷி மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இங்கு வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள். சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு "வஞ்சுளா தேவி' எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமண வயதை அடைந்த அவள், தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷாத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளை தேடி வந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று தேடினர். அவருடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்கும் இடத்தைக் கூறினார். அவர் இங்கு வந்து வஞ்சுளா தேவியை பெண் கேட்டார். மேதாவி மகாவிஷ்ணுவிடம், "தாங்கள் என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென விரும்பினால் எப்போதும் நீங்கள் அவள் சொல் கேட்டுத் தான் நடக்க வேண்டும், அவளே அனைத்திலும் பிரதானமானவளாக இருக்க வேண்டும்,'' என நிபந்தனை விதித்தார். மகாவிஷ்ணுவும் ஏற்றுக் கொண்டார். கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது மகாவிஷ்ணு கருடாழ்வாரிடம், "நான் இங்கு என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே, நீயே இங்கிருந்து நான் பக்தர்களுக்கு அருளுவதைப் போல அருள் வழங்க வேண்டும்'' என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே, இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம் பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் "நாச்சியார் கோயில்' என்ற பெயரும் பெற்றது.
இங்குள்ள மூலவர் ஸன்னதியின் மேல் உள்ள விமானம் ஹேம விமானம் எனப்படுகிறது. பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார் கீழே நவக்கிரகங்கள் மேலே தசாவதாரங்கள் பொறிக்கப்பட்டு இருக்க அதன் மத்தியில் பிரயோக கோலத்தில் இருக்க, அருகில் மேதாவி அவரை வணங்கியபடி உள்ளார். கருட சன்னதிக்கு அருகில் 108 திருப்பதிகளின் உற்சவர் சிலைகள் இருக்கிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் சிரவண நட்சத்திரத்தில் விசேஷ திருமஞ்சனங்கள் நடக்கிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment