||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் – 61 - கண்ணன் நெடுமால்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - எட்டாம் பாசுரம்
சிறியனென்று என்னிளஞ் சிங்கத்தை*
இகழேல் கண்டாய்*
சிறுமையின் வார்த்தையை*
மாவலியிடைச் சென்று கேள்*
சிறுமைப் பிழை கொள்ளில்*
நீயும் உன் தேவைக்கு உரியை காண்*
நிறைமதீ! நெடுமால்*
விரைந்துன்னைக் கூவுகின்றான்|
- சிறியன் என்று - சிறு குழந்தை தானே என்ன செய்து விட முடியும் என்று
- என் இள சிங்கத்தை - என் சிங்கக்குட்டியை, கண்ணபிரானை
- இகழேல் - அவமதியாதே, சிறுபிள்ளை என்று எண்ணி ஏளனம் செய்யாதே
- சிறுமையில் - இவனுடைய பால பிராயத்தில் நடந்த
- வார்த்தையை - செய்கையை
- மாவலி இடை சென்று கேள் - மஹாபலியிடம் போய்க் கேட்டுக் கொள்
- சிறுமை பிழை கொள்ளில் - இவ்வளவு அழைத்தும் வராமல் அபசாரம் புரியும் அத்தப்பை நீ உணர்ந்தால்,
- நீயும்; உன் தேவைக்கு - நீயும் பகவானுக்கு அடிமை செய்ய
- உரியை காண் - யோக்யதை பெறுவாய்
- நிறை மதி - பூர்ண சந்திரனே!
- நெடு மால் - சர்வேஸ்வரனான இவன்
- விரைந்து உன்னை கூவுகின்றான் - உன்னை அழைக்கின்றான்! மகிழ்ந்து ஓடி வா
பூர்ண சந்திரனே! என் சிங்கக்குட்டி கண்ணனை சிறியவன் என்று மற்ற பிள்ளைகளைப் போல் நினைத்து அவமதிக்காதே. இவனைச் சிறுவனாக முதலில் எண்ணி, பிறகு தான் செய்த அபசாரத்திற்க்காக வருந்திய மஹாபலியிடம் போய்க் கேள் இவன் செய்கையை. இவ்வளவு அழைத்தும் வராமல் அபசாரம் புரியும் நீயும் அத்தப்பை உணர்ந்தால், பகவானுக்கு அடிமை செய்ய யோக்யதை பெறுவாய். பூர்ண சந்திரனே! சர்வேஸ்வரன் உன்னை அழைக்கின்றான்! மகிழ்ந்து ஓடி வா.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment