About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 27 March 2024

திவ்ய ப்ரபந்தம் - 107 - பெரியாழ்வார் திருமொழி - 1.8.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 107 - நாரணனைப் பாடுவர் வைகுண்டம் செல்லலாம்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - பதினொன்றாம் பாசுரம்

தரவு கொச்சகக் கலிப்பா

நச்சுவார் முன் நிற்கும்* நாராயணன் தன்னை*
அச்சோ வருக என்று* ஆய்ச்சி உரைத்தன* 
மச்சு அணி மாடப்* புதுவைக்கோன் பட்டன் சொல்* 
நிச்சலும் பாடுவார்* நீள் விசும்பு ஆள்வரே! (2)

  • நச்சுவார் - தன்னை விரும்பிப் பக்தி செய்பவர்கள் 
  • முன் நிற்கும் - முன்னே வந்து நிற்குந் தன்மையுள்ள
  • நாராயணன் தன்னை - நாராயணனாகிய ஸ்ரீ க்ருஷ்ணனை
  • ஆய்ச்சி - இடைக் குலத்தவளான யசோதை அணைத்துக் கொள்ளுகையில் உண்டான விருப்பம் தோன்றும்படி
  • அச்சோ வருக - அச்சோ வருவாயாக 
  • என்று உரைத்தன - என்று சொன்னவற்றை
  • மச்சு அணி - பல நிலைகளால் அழகிய
  • மாடம் - மாளிகைகளை உடைய
  • புதுவை - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
  • கோன் - ஸ்வாமியான
  • பட்டன் - பெரியாழ்வார்
  • சொல் - அருளிய இப் பத்துப் பாசுரங்களையும்
  • பாடுவார் - ஓதுபவர்கள்
  • நிச்சலும் - அனுதினமும் 
  • நீள் விசும்பு - பரமாகாசமாகிற பரம பதத்திற்கு
  • ஆள்வர் – நிர்வாஹகராவர்

தன்னை துதிப்பவர் முன் வந்து நிற்கும் தன்மையுள்ள நாராயணனாகிய கண்ணனை இடையர் குல யசோதை அணைத்துக்கொள்ள விரும்பி அழைத்ததை, மாளிகைகளால் சூழப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூரின் தலைவனான பெரியாழ்வார் இப்பத்து பாசுரங்களால் விவரித்துரைத்தார். எப்போதும் இப்பாசுரங்களைப் பாடுபவர்கள் வான் புகழ் அடைவர். 

அடிவரவு: பொன் செங்கமலம் பஞ்சவர் நாறிய சுழல் போர் மிக்க என்னிது கண்ட துன்னிய நச்சுவர் - வட்டு

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment