About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 12 February 2024

திவ்ய ப்ரபந்தம் - 91 - பெரியாழ்வார் திருமொழி - 1.7.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 91 - காலில் சங்கு சக்கர ரேகை
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - ஆறாம் பாசுரம்

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம்* 
உள்ளடி பொறித்தமைந்த* 
இரு காலுங் கொண்டு அங்கங்கு எழுதினாற் போல்* 
இலச்சினை பட நடந்து* 
பெருகா நின் இன்ப வெள்ளத்தின் மேல்* 
பின்னையும் பெய்து பெய்து* 
கரு கார்க் கடல் வண்ணன் காமர் தாதை* 
தளர் நடை நடவானோ!

  • ஒரு காலில் - ஒரு பாதத்திலே
  • சங்கு - சங்கமும்
  • ஒரு காலில் - மற்றொரு பாதத்தில்
  • சக்கரம் - சக்கரமும்
  • உள் அடி - பாதங்களின் உட் புறத்திலே
  • பொறித்து - ரேகையின் வடிவத்தோடு கூடி
  • அமைந்த - பொருந்தி இருக்கப் பெற்ற
  • இரு காலும் கொண்டு - இரண்டு பாதங்களினாலும்
  • அங்கு அங்கு - அடி வைத்த அந்த அந்த இடங்களிலே
  • எழுதினால் போல் – சித்திரித்தது போல
  • இலச்சினை பட – முத்திரை படியும்படி 
  • நடந்து - அடி வைத்து 
  • பெருகா நின்ற - அவனது வடிவழகைக் கண்டு பூரித்து  பொங்குகிற
  • இன்பம் வெள்ளத்தின் மேல் - ஆனந்தம் என்ற ஸமுத்ரத்துக்கு மேலே
  • பி்ன்னையும் - மேலும் ஆனந்தத்தை 
  • பெய்து பெய்து - மிகுதியாக உண்டாக்கிக் கொண்டு
  • கரு கார் கடல் வண்ணன் - மிகவும் கருநிறமுள்ள ஸமுத்ரம் போன்ற திருநிறமுடையவனும்
  • காமர் தாதை - காமதேவனுக்குப் பிதாவுமான இப்பிள்ளை  
  • தளர் நடை - அழகிய இளம் நடையை
  • நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்

கண்ணனின் திருப்பாதங்களில் சங்கு சக்கர ரேகைகள் பதிந்திருந்த படியால், அவன் இரு கால்களாலும் அடி மேல் அடி வைத்து நடக்கும் போது அந்தந்த இடங்களில் வரைந்தாற் போல் அடையாளங்கள் எற்பட்டிருந்தனவாம். கரு நிறக் கடல் போல் நிறத்தை உடையவனும், காம தேவனின் பிதாவுமான கண்ணன், பொங்கி வரும் ஆனந்த சமுத்திரத்திற்கும் மேலான ஆனந்தமுடையவனாய் தளர் நடை நடந்து வருவானோ என ஆவலுடன் காத்திருக்கிறார் ஆழ்வார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment