||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
022. திருவெள்ளியங்குடி (கும்பகோணம்)
இருபத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்
ஸ்ரீ கோலவில்லி ராமர் திருக்கோயில்
ஸ்ரீ மரகதவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ கோலவில்லி ராமர் பெருமாள்
திருவடிகளே சரணம்||
- பெருமாள் மூலவர்: கோலவில்லி ராமரன், ஸ்ரீராப்தி நாதன்
- பெருமாள் உற்சவர்: சிருங்கார சுந்தரர் (தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் இப்பெருமானுக்கு விருப்பம் அதிகம்)
- தாயார் மூலவர்: மரகதவல்லி
- தாயார் உற்சவர்: ஸ்ரீதேவி, பூதேவி
- திருமுக மண்டலம் திசை: கிழக்கு
- திருக்கோலம்: புஜங்க ஸயனம்
- புஷ்கரிணி/தீர்த்தம்: சுக்கிர, பிரம்ம, பரசுராம, இந்திர
- விமானம்: புஷ்கலா வர்த்தக
- ஸ்தல விருக்ஷம்: செவ்வாழை
- ப்ரத்யக்ஷம்: சுக்ரன், பிரமன், பராசரர், இந்திரன், மயன், மார்கண்டேயன், பூமிதேவி
- ஆகமம்: வைகாநஸம்
- ஸம்ப்ரதாயம்: வட கலை
- மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
- பாசுரங்கள்: 10
--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
ஸ்தல புராணம்
இத்தலத்தின் அருகில் சேங்கானூர் என்ற ஊர் உள்ளது. இது தான் வைணவ மேதை பெரியவாச்சான் பிள்ளையின் அவதார தலமாகும். காஞ்சிப் பெரியவர் இத்தலத்தில் தங்கி கோயில் திருப்பணி செய்துள்ளார்.
இந்த பெருமாளை தரிசித்தால் 108 திருப்பதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தனக்கு கண்ணில் ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில், சுக்கிர பகவான் அணையா தீபமாக இத்தலத்தில் இரவு பகலாக பிரகாசித்து கொண்டிருக்கிறார். எனவே இத்தலம் நவக்கிரகத்தில் சுக்கிரத் தலமாக போற்றப்படுகிறது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இங்கு மட்டும் தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம். இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள் பாலிக்கிறார்.
மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது இறைவன் என்பதை அறியாத மன்னன் தாரை வார்த்து கொடுக்க சம்மதிக்கிறான். ஆனால், உண்மை நிலை அறிந்த அசுர குல குரு சுக்ராச்சாரியார், தாரை வார்க்கும் செம்புக் குடத்தின் துவாரத்தை ஒரு வண்டாக உருவெடுத்து அடைத்து விட்டார். குருவின் இந்த செயல் அறிந்த பகவான் ஒரு குச்சியால் துவாரம் வழியாக குத்த, ஒரு கண்ணை இழக்கிறார் சுக்கிரன். ஒளியிழந்த கண்ணுடன் பல தலங்களுக்கு சென்று வழிபட்டு கடைசியாக இத்தலத்து பெருமாளை வழிபட்டு மீண்டும் பார்வை பெற்றார். இதனால் தான் இத்தலம் வெள்ளியங்குடி (சுக்கிரன்) என அழைக்கப் படுகிறது. சுக்கிரன் இத்தலத்தில் வந்து தவம் செய்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தேவ சிற்பியான விஸ்வகர்மா பெருமாளுக்கு அழகாக கோயில்களை கட்டி முடித்தார். இதே போல் தன்னால் கோயில்கள் கட்ட முடியவில்லையே என அசுர குல சிற்பி மயன் வருத்தப் பட்டு பிரம்மனிடம் வேண்டினார். அதற்கு பிரம்மா இத்தலத்தில் கடும் தவம் செய்தால் பெருமாள் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்,'' என கூறினார். மயனின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் சங்கு சக்ரதாரியாக காட்சி கொடுத்தார். ஆனால் மயன், "தனக்கு இந்த தரிசனத்திற்கு பதில், ராமாவதார காட்சி வேண்டும் என்றான். தன் கரத்திலிருந்த சங்கு சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு கோலவில்லி ராமனாக வில் அம்புகளுடன் தரிசனம் தந்தார் பகவான். இப்படிப்பட்ட பெருமைக்குரிய தலத்தில் தவமிருக்க விரும்பி இங்கு வந்தார் சுக்ராச்சாரியார். இதன் காரணமாகவும் இது "வெள்ளியங்குடி' ஆயிற்று.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment