About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 24 December 2023

ஸ்ரீமத் பாகவத புராணம் - 32

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

மஹான்களின் கருணை

ஸ்கந்தம் 01

வயதோ பதினாறு. மென்மையான பாதங்கள், மென்மையான கைகள், மென்மையான உடல், கன்னங்களும் மென்மையானவை. மனோஹரமான உருவம், அகன்ற கண்கள், வளைந்த மூக்கு, சமமான காதுகள், அழகான புருவங்கள், சங்கு போன்ற கழுத்து, பரந்துயர்ந்த திருமார்பு, நீர்ச் சுழல் போன்ற தொப்புள் கொடி, மூன்று மடிப்புடைய வயிறு, எண்டிசைகளே ஆடை, திகமபரர், பரந்து விரிந்த சுருள் சுருளான கேசம், நாராயணன் போல் காந்தி, நீலமேக வர்ணம், நீண்ட கைகள், அழகான புன்சிரிப்பு, பெண்கள் அனைவரும் விரும்பும் அழகு, தன் ஒளியை மறைத்து உலா வருபவர் ஸ்ரீ சுகர். அவரைக் கண்டதும், முனிவர்கள் அனைவரும் சட்டென்று ஆசனத்திலிருந்து எழுந்தனர்.


இவ்வாறு எதேர்ச்சையாக அதிதியாக வந்த ஸ்ரீ சுகரை பரீக்ஷித் வணங்கி வரவேற்றான்.

எதேர்ச்சையாக என்பதற்கு பகவத் க்ருபையால் என்று பொருள் சொல்லப் படுகிறது. எனவே, ஸ்ரீ சுகர் அங்கு வந்தது இறைவனின் ஸங்கல்பமே. தானாக யாரும் குரு என்று கிளம்ப முடியாது. குரு என்பவர் நம்மை ஆட்கொள்ள இறைவனால் அனுப்பப்படுபவர் ஆவார்.

அனைவரும் கொண்டாட அமர்ந்தார் குருதேவர்.

சான்றோர்களுக்கெல்லாம் சான்றோராக விளங்கும் ஸ்ரீ சுகர் நக்ஷத்திரங்களால் சூழப்பட்டு சந்திரன் ஒளி வீசுவது போல், மஹரிஷிகளாலும், ராஜ ரிஷிகளாலும், ப்ரும்ம ரிஷிகளாலும் சூழப்பட்டு, ஒளிப் பிழம்பாகக் காட்சியளித்தார்.

பரீக்ஷித் பேசினான்.

“ப்ரும்மரிஷித் திலகமே! தங்கள் கருணையோடு இங்கு வந்து என்னைப் புனிதனாக்கினீர்கள். என் முன்னோர்களான பாண்டவர்களிடம் அன்பு கொண்ட ஸ்ரீ க்ருஷ்ணன் அவர்களது பேரனான என்னிடமும் அன்பு கொண்டார் போலும். இல்லையெனில் வெகு விரைவில் மரணிக்கப் போகும் எனக்கு, எவராலும் அறிய வொண்ணா நடையுடைய சித்த புருஷரான தங்களின் தரிசனம் எப்படிக் கிடைக்கும்? உங்களால் தான் மற்றவர்களுக்கு அநுஷ்டானங்களில் சித்தி ஏற்படுகிறது. மரணத் தருவாயில் இருக்கும் ஒருவன் எதைக் கேட்கவேண்டும்? எதை ஜபம் செய்ய வேண்டும்? என்ன செயல் செய்ய வேண்டும்? எதை நினைக்க வேண்டும்? என்ன பஜனை செய்ய வேண்டும்? எதையெல்லாம் செய்யக் கூடாது? என்பதைக் கூறுங்கள். ங்களைப் போன்ற சான்றோர் இல்லறத்தாரின் வீட்டு வாயிலில் மாடு கறக்கும் நேரம் கூடத் தாமதிப்பதில்லையே.”

ஸ்ரீ சுகர் மிகவும் இனிமையான குரலில் பதிலிறுக்கத் துவங்கினார்.

“மஹான்களுக்குக் கருணை செய்வது என்பது ஒரு அவஸ்தை. அவர்களிடமிருந்து எப்போதும் கருணை வழிந்து கொண்டே இருக்கும். அதை அவர்கள் யார் மீதாவது பொழிந்து கொண்டே இருப்பார்கள். கருணை செய்யாமல் அவர்களால் ஒரு கணம் கூட இருக்க இயலாது. 

பசு மாட்டை தினமும் ஒரு நேரத்தில் பால் கறப்பார்கள். ஒரு நாள் கோனாருக்கு ஏதோ வேலை வந்ததால் வர முடியாமல் போனால், மாடு பாலைக் கறந்து விட வேண்டும் என்று தவிக்கும். வருவோர் போவோரை அழைத்துப் பார்க்கும். நேரம் ஆக ஆக யாரும் வரவில்லையெனில், தானே மடி மீது கால்களைப் போட்டு பீய்ச்சி அடித்து விடும். 

அது போலத் தான் மஹான்களும். கருணை அவர்களது இயல்பு. எதிரில் இருப்பவரின் தகுதி முக்கியமில்லை. உத்தவனும் கண்ணனின் கண்களில் இருந்து வழியும் கருணை வீணாகக் கூடாதென்று அவனைத் தனியே விடாமல் எப்போதும் அவனுடனேயே இருந்து அதை வாங்கிக் கொள்வதாய்ச் சொல்கிறான்.”

ஸ்ரீ மத் பாகவதத்தை ஸ்ரீ சுகாசாரியார் தந்தையான வியாஸ பகவானிடமிருந்து பெற்றதிலிருந்து அவரது நிலைமை மாறி விட்டது. எப்போதும் நிர்விகல்பமான ப்ரும்மத்தில் லயித்திருந்த அவர் மனத்தில் ப்ரேமை பொங்கி வழிய ஆரம்பித்தது.

தான் பெற்ற ஆனந்தத்தை யாருக்கேனும் பகிர்ந்து கொடுக்கத் தவித்துக் கொண்டிருந்தார். மனிதர்களை வெறுத்து ஏகாந்தத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவர் ஸ்ரீ மத் பாகவதம் கிடைத்ததும் அதை உலகோர்க்குப் பகிர விழைந்து தகுந்த பாத்திரத்தைத் தேடினார்.

ஒவ்வொரு வீடாகச் சென்று வாயிலில் நின்றனர். கலியுகம் துவங்கி விட்டிருந்ததால், சில வீடுகளில் சண்டைச் சத்தம் கேட்டது. சில வீடுகளில் மக்கள் ஏதோ விளையாட்டில் மூழ்கி இருந்தனர். சில வீடுகளில் பிக்ஷைக்கு வந்திருக்கிறார் என்று நினைத்து ஏதும் சொல்லாமல் உள்ளே சென்றனர்.

இவர்களுக்கெல்லாம் பாகவதம் கேட்கத் தகுதியில்லை என்று நினைத்தவர், ஒரு கடாக்ஷம் செய்து விட்டுப் போனார். 

ஒருக்கால் அப்படி அவர் கண்களிலிருந்து விழுந்த ஒரு துளிக் கடாக்ஷம் நம் மீது பட்டிருக்குமோ என்னவோ. அதனால் தான் நமக்கும் ஸ்ரீ மத் பாகவதம் கிடைத்திருக்கிறது.

சீடன் குருவைத் தேடுவது போல், குருவும் தகுந்த சீடனை எதிர் நோக்குகிறார். அப்படி அவருக்குக் கிடைத்த பாகவத ரத்தினம் தான் பரீக்ஷித்.

முதல் ஸ்கந்தம் முற்றிற்று.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment