||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 111 - அர்ஜுனனுக்காகத் தேரோட்டியவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம்
நாந்தகம் ஏந்திய* நம்பி சரண் என்று*
தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி* தரணியில்*
வேந்தர்கள் உட்க* விசயன் மணித் திண் தேர்*
ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான்*
உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்|
- நாந்தகம் - நந்தகம் என்னும் வாளை
- ஏந்திய - கையில் ஏந்தி உள்ள
- நம்பி - கண்ணனே!
- சரண் - நீயே எனக்கு ரக்ஷகன்
- என்று - என்று சொல்லி
- தாழ்ந்த - தன்னை வணங்கி நின்ற
- தனஞ்சயற்கு ஆகி - அர்ஜுநனுக்குப் பக்ஷபாதியாக இருந்து
- தரணியில் - இப் பூமியிலே
- வேந்தர்கள் - எதிரிகளான ராஜாக்கள்
- உட்க - அஞ்சிக் கலங்கும்படி
- விசயன்-அந்த அர்ஜுநனது
- மணி திண் தேர் - அழகிய வலிய தேரை
- ஊர்ந்தவன் - ஸாரதியாயிருந்து செலுத்தின இவன்
- என்னை - என்னுடைய
- புறம் - முதுகை
- புல்குவான் - கட்டிக் கொள்வான்
- உம்பர் - நித்ய ஸூரிகளுக்கு
- கோன் - நிர்வாஹகனான இவன்
- என்னை - என்னுடைய
- புறம் புல்குவான் - முதுகை கட்டிக் கொள்வான்
அர்ஜுநன் கண்ணனை நோக்கி, "நந்தகம் என்னும் வாளைக் கையில் ஏந்தியவனே! உன்னை சரண் அடைகிறேன். நீ தான் என்னை ரக்ஷிக்க வேணும்" என்று ப்ரார்த்தித்த நிமித்தம், தனஞ்சயனுக்காக இந்த பூமியில் எதிர்த்து வந்த அரசர்களை நடுங்கும்படி செய்து, அவனுடைய அழகிய தேரை ஒட்டிய கண்ணன் என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! விண்ணோர் தலைவன் என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்! அர்ஜுநனை குறிக்கும் தனஞ்சயன் என்ற சொல்லுக்கு வெற்றியையே செல்வமாக கொண்டவன் என்று பொருள் கொள்ளலாம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment