||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 6 - நரசிம்மனைப் பாடு
திருப்பல்லாண்டு - ஆறாம் பாசுரம்
எந்தை தந்தை தந்தை தந்தைத் தம் மூத்தப்பன்*
ஏழ் படிகால் தொடங்கி*
வந்து வழி வழி ஆட்செய்கின்றோம்*
திருவோணத் திருவிழவில்*
அந்தியம் போதில் அரியுருவாகி*
அரியை அழித்தவனைப்*
பந்தனை தீரப் பல்லாண்டு*
பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே|
இப்படி ஆழ்வார் மூன்று விதமான அதிகாரிகளையும் அழைத்த பிறகு, ஒவ்வொருவராக வரத் தொடங்குகின்றனர். இதில், வாழாட்பட்டு பாசுரத்தில் சொல்லப்பட்ட பகவத் கைங்கர்யார்த்திகள் தங்கள் தன்மைகளையும், செயல்களையும் சொல்லிக்கொண்டு வந்து புகுர, அவர்களை ஆழ்வார் உடன் அழைத்துக்கொள்கிறார்.
- எந்தை - நானும்
- தந்தை - என் பிதாவும்
- தந்தை தந்தை - அவருடைய பிதாவும் அவருடைய பிதாவும்
- தம் மூத்தப்பன் - அவருடைய பிதாவும் பாட்டனுமாகிய
- ஏழ்படிகால் தொடங்கி - ஏழு தலைமுறை தொடங்கி
- வந்து - உரிய காலங்களில் வந்து
- வழி வழி - முறை தப்பாமல்
- ஆள் செய்கின்றோம் - கைங்கரியம் பண்ணுகிறோம்
- திரு ஓணம் - ச்ரவண நக்ஷத்ரம் என்கிற
- திருவிழவில் - திரு நாளிலே
- அந்தியம் போதில் - அழகிய ஸரயம் ஸந்தியா காலத்தில்
- அரி உரு ஆகி - நரஸிம்ஹ மூர்த்தியாய்த் தோன்றி
- அரியை - ஆச்ரிதனான ப்ரஹலாதனுக்குப் சத்ருவான இரணியனை
- அழித்தவனை - கொன்றொழித்த பெருமானுக்கு
- பந்தனை தீர - அன்றைய ஆயாசம் தீரும்படி
- பல்லாண்டு - பல காலம்
- பல்லாயிரத்து ஆண்டு என்று - பல ஆயிரம் ஆண்டுகள் என்று
- பாடுதுமே - மங்களாசாசனம் செய்வோம்
ஆழ்வார் இப்பாசுரத்தில் தாம் தம் தந்தை முதல் ஏழு தலைமுறையாக பகவானுக்கே கைங்கர்யம் செய்து வருகிறோம் என பெருமையுடன் கூறுகிறார். திருவோணத் திருநாளில் மாலைப் பொழுதில் அழகியதான நரஸிம்ஹ உருவத்தைக் கொண்டு, தன் எதிரியான ஹிரண்யனை அழித்தவனுக்கு, தன்னுடைய அடியவனுக்காகச் செய்த அந்த செயலினால் ஏற்பட்ட சோர்வு தீரும்படியாக, காலம் உள்ளவரை பல்லாண்டு பாடுவோம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment