||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்யமந்தக மணியின் கதை|
சத்ராஜித் என்ற ஓர் அரசர் இருந்தார், அவர் சிறந்த சூர்யபக்தர். அவருடைய பக்தியைக் கண்டு மெச்சிய சூரிய பகவான், இவருக்கு ஸ்யமந்தகம் என்ற மணியை பரிசாக அளித்தார். சூரியனைப் போலவே அந்த மணி பிரகாசித்தது. இந்த மணியை சத்ராஜித் கழுத்தில் கட்டிக் கொண்டு அவரும் சூரியனைப் போலவே பிரகாசித்தார். இந்த மணியின் புகழ் எங்கும் பரவியது. இந்த மணி உள்ள இடத்தில் வறுமையே இருக்காது என்ற சக்தியும் இதற்கு இருந்தது.
சூரிய பகவானுக்காகக் கட்டிய கோவிலில் இந்த மணியை வைத்து சத்ராஜித் பூஜை செய்து வந்தார். அது நாள்தோறும் எட்டுப் பாரம் தங்கம் தந்து வந்தது. இது காரணமாகச் சத்ராஜித் மிகுந்த பணக்காரர் ஆனதுடன் மிகவும் ஆணவம் உடையவராகவும் ஆகி விட்டார். ஒரு நாள் கிருஷ்ணர் சத்ராஜித்திடம் பேசிக் கொண்டு இருந்த போது, "தயவு செய்து இந்த மணியை உக்கரசேன மன்னருக்குக் கொடுங்கள். அது காரணமாகச் சூரிய பகவானின் அருள் பெற்று அந்த நாடு செழிப்படையும்" என்று சொன்னார். ஆனால் அதற்குச் சத்ராஜித் மறுத்து விட்டார்.
ஒரு நாள் சத்ராஜித்தின் தம்பியான பிரசேனன் கட்டுக்கு வேட்டையாடக் கிளம்பினான். ஒரு நாளைக்கு என்று சொல்லி அந்த மணியைத் அவன் அண்ணனிடம் இருந்து பெற்று, அதைக் கழுத்தில் அணிந்து, குதிரையேறி வேட்டைக்குச் சென்றான். காட்டில் ஒரு பெரிய சிங்கம் அவனைத் தாக்கியது, அது அவனையும் அவன் குதிரையையும் கொன்றது. ஆனால் அந்த மணிதான் அந்தச் சிங்கத்தை மிகவும் கவர்ந்தது. அதனால் அது மணியை வாயில் கவ்விக் கொண்டு அதன் குகைக்குள் நுழைந்தது.
கரடிகளின் அரசனான ஜாம்பவான் இதையெல்லாம் கவனித்துக் கொண்டு இருந்தார். அவர் குகைக்குள் நுழைந்து, சிங்கத்தோடு சண்டை போட்டு, அதைக் கொன்றார். அந்த மணியை அவர் எடுத்துக் கொண்டார். மணியைக் கண்ட அவருடைய மகன் அது தனக்கு வேண்டும் என்று கேட்க, அதை அவர் அந்தப் பையனுக்கு விளையாட்டுப் பொருளாகக் கொடுத்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment