About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 6 September 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - முப்பத்தி ஒண்பதாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

039 அனுப்பி வைய்யும் என்றேனோ வசிஷ்டரைப் போலே|

வசிஷ்டர், பிரம்ம ரிஷி என புகழ்பெற்ற சப்தரிஷிகளுள் ஒருவர். வேத காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மாமுனிவர்களுள் இவரும் ஒருவர். வேதங்களின் பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவரது துணைவியாரின் பெயர் அருந்ததி. இராமாயணக் காவியத்தில் வசிஷ்டர், மன்னன் தசரதனின் அரசவை ராஜகுருவாக இருந்தார். ஸ்ரீ இராமனும் அவரது தம்பிமார்களும் வசிஷ்ட மகரிஷியிடமே கல்வி கற்றனர்.


ஒரு நாள், விஸ்வாமித்ரர் தசரத சக்ரவர்த்தியிடம், தன் யாகத்தை காக்கும் பொருட்டு ராமனை தன்னோடு அனுப்பும்படி கேட்க, தசரதர் மனம் கலங்குகிறார்.

தசரதருக்கு புத்திரப் பாசம் அதிகம். “இராமனை பிரிந்து எப்படி என்னால் இருக்க முடியும். தவமிருந்து பெற்ற பிள்ளை! மேலும், அவனோ இன்னும் சிறுபிள்ளை. எனது படையுடன் நானே வருகிறேன்!” என்று கூறிய தசரதனிடம், விஸ்வாமித்ரர், “என்ன வேண்டுமோ கேளுங்கள் செய்கிறேன் என்று கூறிவிட்டு, இப்படி பேச்சை மாற்றி பேசுகிறீர்களே, ரகு குலத்தில் பிறந்த உங்களுக்கு இது அழகா!?” என்று கோபம் கொண்டார்.

இந்நேரத்தில் அரசவையில் இருந்த வசிஷ்டருக்கு நடக்கப் போகும் சம்பவங்கள் ஞான திருஷ்டியால் தெரிந்தது. ஸ்ரீராமருக்கும், சீதா பிராட்டியாருக்கும் திருமணம் நடக்க வேண்டியது கட்டாயமல்லவா?

வசிஷ்டர், மன்னனிடம், “மன்னா! குடுத்த வார்த்தையை மறுத்தல் கூடாது. விஷ்வாமித்ரரின் அரவணைப்பில் இருக்கும் போது, குழந்தைகளுக்கு ஒரு ஆபத்தும் இல்லை, தாங்கள் கவலை கொள்ள வேண்டாம், குழந்தையை அனுப்பி வையுங்கள்! அவருடன் செல்வதால், நம் ராமனுக்கு தான் நல்லது. விஸ்வாமித்ர மகரிஷி, உலகில் உள்ள எல்லா அஸ்திரங்களையும் உபயோகிக்கும் ஆற்றலும் வல்லமையும் பெற்றவர். ஈசனிடம் இருந்து தாமே அவ்வாற்றலை தவமிருந்து பெற்றுள்ளார். அவை அனைத்தையும் ராமனுக்கு உபதேசிப்பார்! உமது புதல்வனுக்கு நல்லது ஒன்று நடந்தால் அதை நீ தடுப்பாயா? அத்துடன் இல்லாது, "வெள்ளம் பெருகு, நாடு நலம் பெறுவது போல, உன் புதல்வர்களால் நிறைய நல்ல செயல்கள் நடக்கப் போகின்றன. அதனை தடுத்து விடாதீர். எனவே பயம் கொள்ளாமல், இராமனை அனுப்புங்கள்!” என்று எடுத்து சொல்கிறார்.

விஸ்வாமித்ரரின் மகிமையை வசிஷ்டர் எடுத்துக் கூறிய பின், தசரதரும் மனம் மாறி, தன் புதல்வர்கள் ராம லக்ஷ்மணர்களை முனிவரோடு அனுப்பி வைத்தார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " “வசிஷ்ட மகரிஷி போல், பரம்பொருளுக்கு எது நன்மை தரும் என்று அறிந்து, பரம்பொருளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அவருக்காக உரையாடினேனா? வசிஷ்டர் சொன்னது போல "அனுப்பி வையும்" என்று சொல்லவில்லையே நான்!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment