About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 3 December 2025

18. ஸ்ரீ அழகிய மணவாள மாமுநிகள்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ அழகிய மணவாள மாமுநிகள்
(பெரிய ஜீயர், ரம்யஜா மாத்ரு முனி)


திருவாய்மொழிப் பிள்ளையின் காலத்துக்குப் பின் சிதிலம் அடைந்திருந்த திருவரங்கம் கோயிலை சீர் செய்து, கைங்கர்யங்கள் சிறப்புற நடக்கும்படி செய்தவர். ஓராண் வழி ஆசார்யர்கள் வரிசை மணவாள மாமுநியுடன் முற்றுப் பெறுகிறது.

ரம்யஜாமாத்ரு முநி, வரவர முநி என்று கொண்டாடப்படக் கூடியவர் மணவாள மாமுநிகள். 

இவரது இயற்பெயர் ஸ்ரீரங்கநாதரின் உற்சவ மூர்த்தியின் பெயரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்பதாகும்.  இவரது தாயாரின் ஊரான சிக்கில் கிடாரத்தில் சிறு வயதில் வாழ்ந்திருந்தார்.  தனது தகப்பனாரிடம் அடிப்படை சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டார்.  திருவாய்மொழிப் பிள்ளையின் பெருமையைக் கேள்விப்பட்டு மீண்டும் ஆழ்வார் திருநகரி வந்தார்.   திருவாய்மொழிப் பிள்ளையிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு அவரை ஆசார்யராக ஆச்ரயித்தார்.  திருவாய்மொழிப் பிள்ளை சம்பிரதாயத்தின் அர்த்தங்கள், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள், வ்யாக்யானங்கள், முக்கியமாக நம்பிள்ளையின் திருவாய்மொழியின் முப்பத்தாறாயிரப்படி ஈடு (வடக்குத் திருவீதிப்பிள்ளை ஏடு படுத்தியது) வ்யாக்யானத்தை உபதேசித்தார்.

இவர் ஆதிசேஷனின் புனர் அவதாரம் என்று கருதப்படுகிறார்.  எம்பெருமானார் தமிழ் ப்ரபந்தங்களுக்கு விளக்கங்களோ,  வ்யாக்யானங்களோ அருளிச் செய்யவில்லை.  அந்தக் குறை தீரும்படி மணவாள மாமுநிகளாக மறு அவதாரம் எடுத்து தமிழ் ப்ரபந்தங்களில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு ஆழ்வார்களின் ப்ரபந்தங்களுக்குக் கைங்கர்யங்கள் செய்தார். 

எம்பெருமான் திருவுள்ளப்படி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றார்.  மணவாள மாமுநிகளின் பெருமையைக் கேள்விப்பட்டு பலரும் வந்து இவரை ஆசார்யராக ஆஸ்ரயித்தனர்.

ஒரு முறை நம்பெருமாள் பவித்ரோத்ஸவம் பூர்த்தியான பின், மணவாள மாமுநிகளை திருவாய்மொழியின் ஈடு வ்யாக்யானத்தை காலக்ஷேபமாக சாதிக்கச் சொல்லி எம்பெருமான் தனது பரிவாரங்களுடன் ஒரு வருட காலம் தனது உற்சவங்களை நிறுத்தி மிக விரிவாக மணவாள மாமுநிகளின் திருவாய்மொழியின் காலக்ஷேபத்தை அனுபவித்தான்.  காலக்ஷேபத்தின் முடிவில் (ஆனி மாதம் திருமூல நக்ஷத்ரத்தன்று) சிறுபிள்ளை வடிவில் வந்து மணவாள மாமுநிகளை ஆசார்யனாக ஏற்றுக் கொண்டு அவருக்கு “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” என்ற தனியனைச் சமர்ப்பித்து தன்னுடைய ஆதிசேஷ பர்யங்கத்தை மணவாள மாமுநிகளுக்கு சம்பாவனையாக சமர்ப்பித்து அவரை மிகவும் கொண்டாடினான்.  மேலும் அர்ச்சகர் மூலமாக எம்பெருமான் ஆவேசித்து மணவாள மாமுநிகளின் திருவிக்ரஹம் அனைத்து திவ்யதேசங்களிலும் ப்ரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்றும்,  “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” என்ற தனியனை சேவாகாலம் தொடக்கத்திலும், முடிவிலும் சேவிக்க வேண்டும் என்று ஸ்ரீமுகம் அருளினான்.  எம்பெருமானே ஆசார்யனாகக் கொண்டாடும் சிறப்புப் பெற்றவர் மணவாள மாமுநிகள்.

  • மாதம் - ஐப்பசி
  • திரு நக்ஷத்திரம் - மூலம்
  • அவதார ஸ்தலம் - ஆழ்வார் திருநகரி
  • ஆசார்யன் - திருவாய்மொழிப் பிள்ளை
  • ஸிஷ்யர்கள் - அஷ்ட திக் கஜங்கள் - பொன்னடிக்கால் ஜீயர், கோயில் அண்ணன் , பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், எறும்பியப்பா , அப்பிள்ளை , அப்பிள்ளார் , பிரதிவாதி பயங்கரம் அண்ணா. நவ ரத்னங்கள் - ஸேனை முதலியாண்டான் நாயனார், ஸடகோப தாஸர் (நாலூர் சிற்றாத்தான்), கந்தாடை போரேற்று நாயன், ஏட்டூர் சிங்கராசாரியார், கந்தாடை அண்ணப்பன், கந்தாடை திருகோபுரத்து நாயனார், கந்தாடை நாரணப்பை , கந்தாடை தோழப்பரப்பை, கந்தாடை அழைத்து வாழ்வித்த பெருமாள். மணவாள மாமுநிகளுக்கு பல திருவம்சங்களில் இருந்தும், திருமாளிகையில் இருந்தும் மற்றும் திவ்ய தேஸங்களில் இருந்தும் மேலும் பல ஸிஷ்யர்கள் இருந்தார்கள்.
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
  • அருளிச் செய்தவை - தேவராஜ மங்களம், யதிராஜ விம்ஸதி, உபதேஸ ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி பிரபந்தம், திருவாய்மொழி நூற்றந்தாதி தனியன்கள்
  • வ்யாக்யானங்கள் - முமுக்ஷுப்படி, தத்வத்ரயம், ஸ்ரீ வசனபூஷணம், ஆசார்ய ஹ்ருதயம், பெரியாழ்வார் திருமொழி (பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானங்களில் இருந்து கரையானுக்கு இரையான பகுதிக்கு மட்டும்), இராமானுச நூற்றந்தாதி. ப்ரமாண திரட்டு (ஒரு கிரந்தத்தைச் சார்ந்த அனைத்து ஸ்லோகங்கள் மற்றும் ஸாஸ்த்ர வாக்கியங்களைத் திரட்டுதல்): ஈடு 36000 படி, ஞான ஸாரம், ப்ரமேய ஸாரம், தத்வ த்ரயம், ஸ்ரீ வசன பூஷணம்

-----
தனியன்
ஸ்ரீ ஸை²லேஸ² தயா பாத்ரம் 
தீபக்த்யாதி குணார்ணவம்|
யதீந்த்ர ப்ரவணம் வந்தே 
ரம்ய ஜாமாதரம் முநிம்||
-----
வாழி திருநாமம்
1. செய்ய தாமரை தாளினை வாழியே|
சேலை வாழி திருநாபி வாழியே|
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே|
சுந்தரத் திருத்தோளிணை வாழியே|
கையுமேந்திய முக்கோலும் வாழியே|
கருணை பொங்கிய கண்ணினை வாழியே|
பொய்யிலாத மணவாள மாமுநி
புந்தி வாழி புகழ் வாழி வாழியே||

அப்பிள்ளை அருளிச் செய்தது
2. இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடு அளித்தான் வாழியே|
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணை அடியோன் வாழியே|
ஐப்பசியில் திருமூலத்து அவதரித்தான் வாழியே|
அரவரசப் பெருஞ்சோதி அநந்தன் என்றும் வாழியே|
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்த வந்தோன் வாழியே|
ஏராரும் எதிராசர் என உதித்தான் வாழியே|
முப்புரி நூல் மணி வடமும் முக்கோல் தரித்தான் வாழியே|
மூதறியும் மணவாள மாமுநிவன் வாழியே||

கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்தது
3. முந்தை மறைத் தமிழ் விரிக்கும் முத்திரைக் கை வாழியே| 
முந்நூலும் திருமார்பும் முக்கோலும் வாழியே| 
உந்தி அமை திருவரையும் உடை அழகும் வாழியே| 
ஒரு நாளும் மறக்க ஒண்ணா ஒளி முறுவல் வாழியே| 
சிந்தை தனை கொண்டு அருளும் திருமேனி வாழியே| 
செழும் கருணை குடி இருக்கும் திரு நயனம் வாழியே| 
வந்தருளி எனை எடுத்த மலர்த் தாள்கள் வாழியே|
மணவாள மாமுனிவன் வாக்கின்பம் வாழியே||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் அருளிச் செய்தது
4. திணைப் பொழுதும் தனை மறவா சிந்தை தந்தோன் வாழியே| 
சீர் திருவாய்மொழிப் பிள்ளை சேவடியோன் வாழியே|
நினைப்பவர்கள் தம் பிறவி தனை நீக்கும் அவன் வாழியே| 
நீள் புவியில் தன் புகழை நிறுத்தினான் வாழியே| 
அனைத்தாழ்வார் கலைப் பொருளை ஆய்ந்துரைத்தோன் வாழியே| 
அழகாரும் எதிராசர்க்கு அன்புடையோன் வாழியே| 
எனைப் போலும் பாவியர்கட்கு இரங்கும் அவன் வாழியே| 
என் அப்பன் மணவாள மாமுனிவன் வாழியே||

அப்புள்ளார் அருளிச் செய்தது
5. சீராரும் செங்கமலத் திருவடிகள் வாழியே|
திரு மருங்கும் துவராடை இடை அழகும் வாழியே| 
ஏராரும் திருமார்பும் புரிநூலும் வாழியே| 
எப்பொழுதும் சங்காழி இலங்கு புயம் வாழியே|
கார் போலும் செங்கை உறை முக்கோலும் வாழியே| 
கருணை குடி கொண்டு அருளும் கண் இணைகள் வாழியே|
வார்க் காதும் திருநாமம் அணி நுதலும் வாழியே| 
மணவாள மாமனி தன் வடிவழகும் வாழியே||

எறும்பியப்பா அருளிச் செய்தது
6. மல்லிகைகள் வகுள மலர் மண முடியில் நாறும்| 
வம்பவள வாய் அலரில் மொழிகள் மண நாறும்| 
நல்லிசை சேர்ப் பதின்மர் அருள் நற்கலைகள் எல்லாம்| 
நலமுடைய கருணை விழி நாடோறும் மணக்கும்| 
சொல்லரிய பாதம் அபிடேக மண நாறும்| 
தொல்லை எதிராசன் என இவ்வுலகில் வந்தோன்| 
செல்வ மணவாள மாமுனி லோக குரு எங்கோன்| 
திருவடிகள் அல்லதொரு தெய்வம் அறியேனே|

திருவேங்கட ராமாநுஜ ஜீயர் அருளிச் செய்தது
7. வாது செயவென்னு சில வாதியர்கள் வந்து தின மனமுறிய நிற்பர் ஒரு பால்|
வாழி எனவே பெரிய சாபம் அறவென்று சிலர் வந்தனைகள் செய்வர் ஒரு பால்|
போதும் இனி வாதம் உன பாதம் அருள் என்றனர் புகழ்ந்து நிற்பர் ஒரு பால்|
பொங்கி வரும் எங்கள் வினை மங்க அருள் என்று சிலர் போற்றி செய்து நிற்பர் ஒரு பால்|
ஈதிவை கிடக்க மறை நூல் தமிழ் தெரிந்தவர் ஏதமற வாழ்வர் ஒரு பால்|
ஏதமற வாதுலர்கள் பேதையர்கள் தாம் இறைஞ்சியே நிற்பர் ஒரு பால்|
மாதகையினால் உலகம் ஏழையும் அளிக்க வல்ல வந்த எதிராசன் அடி சேர்|
மாமுனிவர் தீபம் அருளான மணவாள மாமுனி மன்னும் இடம் வாழும் வளமே||

சீர் பாட்டு
வாழி திருவாய்மொழிப் பிள்ளை மாதகவால்
வாழும் மணவாள மாமுனிவன்
வாழியவன் மாறன் திருவாய்மொழிப் பொருளை 
மாநிலத்தோர் தேறும் படியுரைக்கும் சீர்|

திருநாள் பாட்டு
பொன்னடிக்கால் ஜீயர் அருளிச் செய்தது
1. செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்|
சீர் உலகாரியர் செய்தருள் நற்கலை தேசு பொலிந்திடு நாள்|
மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானில் உயர்த்திடு நாள்|
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள்|
கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு 
நாள்|
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள்|
அந்தமில் சீர் மணவாள முனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்|
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமது எனு நாளே||

பரவஸ்து பட்டர் பிரான் ஜியர் அருளிச் செய்தது
2. சதுமறையின் உபநிடதிவை ஆகிய நாரணன் 
தாளினை வணங்க வரு நாள் 
சகல குண ஸம்பன்னர் எதிராசர் பாஷியமும் 
சற்குறவர் போற்ற வரு நாள்| 
மதி தவழும் மணிமாட மதிள் அரங்கேசனார் மாறன் 
உரை கேட்க வரு நாள்| 
வரை ஆழி புரி சங்கம் ஆரியர்கள் தோளிசைய வைத்தவர் 
இறைஞ்ச வரு நாள்| 
பதிகள் நூற்றெட்டிலும் ஸ்ரீ சைல மந்திரம் பாகவதர் 
போற்ற வரு நாள்| 
பல்லாண்டு செப்பினப் பின் இன்னும் ஒரு நூற்றாண்டு பகருபவர் 
இறைஞ்ச வரு நாள்| 
அதி மதுரகவி எதிராசர் குருகை வண் சடகோபர் தாளினைகள் 
அணியும் அவர் நாள்| 
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமது எனு நாளே||

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ|
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ| 
கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ| 
மணவாள மாமுனியே! இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

17. ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை
(ஸ்ரீ சைலேசர்)


ஸ்ரீசைலம் என்பது திருமலையைக் குறிக்கும்.  அதனால் இவர் திருமலை ஆழ்வார் எனப்பட்டார்.  அவருக்கு ஸ்ரீஸைலேஸர் மற்றும் ஸடகோபதாஸர் என்ற திருநாமமும் உண்டு. எப்பொழுதுமே  இவருக்கு ஆழ்வார் மீதும், ஆழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி மீதும், இருந்த பற்றினாலும் அவர் திருவாய்மொழியைப் பரப்பின விதத்தினாலும் இவருக்கு திருவாய்மொழிப் பிள்ளை என்ற திருநாமமே இன்றளவும் மிகப் பிரசித்தமாக உள்ளது. 

இவர் சிறு வயதிலேயே பிள்ளை லோகாசார்யரிடம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்று அவரது சிஷ்யரானார்.  இவர் சிறு வயதிலேயே சிறந்த  ஞானியாக இருந்தமையால் மதுரையில் இருந்த அரசன் தனக்கு மந்திரியாக இருக்கும்படி ஸ்ரீசைலேசரை வேண்டினான்.  சிறிது காலத்தில் அரசன் இறந்து விட அடுத்து பட்டத்திற்கு வந்த இளவரசருக்கு சிறந்த ஆலோசகராக இருந்து ராஜ்ய பரிபாலனம் சிறப்பாக நடக்க வழி வகுத்தார்.

இவர் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்த காலத்தில் பிள்ளை லோகாசார்யரின் மற்றொரு சிஷ்யரான கூரகுலோத்தம தாசர் என்பவர் இவரைத் திருத்திப் பணி கொண்டு நம்முடைய சம்பிரதாயத்தில் சிறந்த ஆசார்யராக உருவாக்கினார்.  பிள்ளை லோகாசார்யர் திருநாட்டிற்கு எழுந்தருளும் முன்பு இந்த முக்கியமான பொறுப்பை கூரகுலோத்தம தாசரிடம் ஒப்படைத்தார்.  அதன்படி கூரகுலோத்தம தாசரும் எவ்வாறு மணக்கால் நம்பி ஆளவந்தாரை ஆசார்யராக உருவாக்கினாரோ அதே போன்று திருமலை ஆழ்வாரை சிறந்த ஆசார்யராக உருவாக்கும் பொறுப்பினை ஏற்று நடத்தினார்.  திருமலை ஆழ்வார் மந்திரியாக இருக்கும் காலத்தில் வீதி உலா வரும் இடங்களில் கூரகுலோத்தம தாசர் நின்று கொண்டு பாசுரங்களை அநுசந்தித்தார்.  திருமலை ஆழ்வாரும் பாசுரங்களால் ஈர்க்கப்பட்டு அவரைத் தொடர்பு கொண்டு சிறிது சிறிதாக சம்பிரதாய விஷயங்களில் ஈடுபட ஆரம்பித்தார்.  கூரகுலோத்தம தாசர் திருநாடு எய்தும் வரை அவருக்குக் கைங்கர்யங்கள் செய்தார்.

திருமலையாழ்வார் திருக்கண்ணங்குடிப் பிள்ளையைச் சந்தித்து திருவாய்மொழியினுடைய அர்த்த விஸேஷங்களைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். திருவய்மொழியினுடைய ஸாராம்ஸத்தைக் கற்றுக் கொடுக்கும் போது, திருமலையாழ்வார் பதவுரைக்கு (வார்த்தைக்கு வார்த்தை) அர்த்தம் கேட்க வேண்டும் என்று ஆசை உள்ளதாகக் கூறினார். அதனால் பிள்ளை திருமலையாழ்வரை திருப்புட்குழி ஜீயரிடம் சென்று இவ்வர்த்தத்தைக் கேட்குமாறு நியமித்தார். 

அவர் திருநாடு எய்திய பின், திருமலை ஆழ்வார் ராஜ்ய பதவியைத் துறந்து, நம்மாழ்வாரின் பெருமையை உணர்ந்து அவர் ஆழ்வார் திருநகரியை வந்தடைந்தார். பல ஆசார்யர்களிடம் இருந்து சம்பிரதாய விஷயங்களை கற்றுக் கொண்டார். நம்மாழ்வாருக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.  அதனால் இவர் திருவாய்மொழிப் பிள்ளை எனப்பட்டார்.  சடகோபருக்காக வாழ்ந்தவர் எனும் பொருள் படும்படி சடகோப தாசர் என்றும் அழைக்கப்பட்டார். 

  • மாதம் - வைகாசி
  • திரு நக்ஷத்திரம் - விசாகம்
  • அவதார ஸ்தலம் - குந்தீ நகரம் (கொந்தகை)
  • ஆசார்யன் - பிள்ளை லோகாசார்யர்
  • ஸிஷ்யர்கள் - அழகிய மணவாள மாமுனிகள், ஸடகோப ஜீயர் (பவிஷ்யதாசார்யன் சன்னிதி), தத்வேஸ ஜீயர் மற்றும் பலர்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - ஆழ்வார் திருநகரி
  • அருளிச் செய்தவை - பெரியாழ்வார் திருமொழி ஸ்வாபதேஸம்

-----
தனியன்
நம ஸ்ரீ ஸை²ல நாதாய 
குந்தீ நகர ஜந்மநே|
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய 
கைங்கர்ய ஸா²லிநே||
-----
வாழி திருநாமம்
வையகமெண் சடகோபன் மறை வளர்த்தோன் வாழியே|
வைகாசி விசாகத்தில் வந்து உதித்தான் வாழியே|
ஐயன் அருண் மாரி கலை ஆய்ந்து உரைப்போன் வாழியே|
அழகாரும் எதிராசர் அடி பணிவோன் வாழியே|
துய்ய உலகாரியன் தன் துணைப் பதத்தோன் வாழியே|
தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே|
தெய்வ நகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே|
திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகள் வாழியே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

16. ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார்
(வடக்குத் திருவீதிப்பிள்ளையின் திருக்குமாரர்)


ரஹஸ்ய க்ரந்தங்களை இயற்றியவர். திருவரங்கத்தின் உற்சவ விக்கிரகத்தை (நம்பெருமாள்) சுல்தான்கள் படையெடுப்பின் போது பாதுகாத்தவர்.

ஸம்ஸாரத்திலிருந்து பெரும் துயர் அனுபவிக்கும் ஜீவாத்மாக்களின் மீது தாம் கொண்ட பெரும் கருணையாலும் ஸ்வப்னத்தில் பெரிய பெருமாள் இட்ட கட்டளையின் பேரிலும், பிள்ளை லோகாசாரியர், ஸத் ஸம்ப்ரதாயத்தின் பொருட்களை விளக்கும் பல க்ரந்தங்களைப் பெரும்பாலும் ஆசார்யன் ஸிஷ்யனுக்கு உபதேஶிக்கும் பாங்கிலே வெளியிட்டார் .

பிள்ளை லோகாசாரியர் ஸம்ப்ரரதாய ப்ரவர்த்தகர் ஆகித் தன் ஸிஷ்யர்களுக்கு ஸம்ப்ரதாயத்தை திருவரங்கத்திலிருந்து உபதேஸித்து வந்தார். 

மணப்பாக்கத்து நம்பி எனும் ஸ்ரீ வைஷ்ணவர் தேவப் பெருமாளிடம் சென்று புக , தேவப்பெருமாள் தாமும் அவருக்கு ஸம்பிரதாயத்தின் மிக உயர்ந்த அர்த்தங்களைக் கற்பித்து வந்தார். இவ்வாறிருக்க ஓர் நாள், பாதியிலேயே உபதேஸங்களை நிறுத்தி , மணப்பாக்கத்து நம்பியை திருவரங்கத்திற்குச் செல்லுமாறும் தாம் அவருக்கு திருவரங்கத்திலே உபதேஸங்களைத் தொடருவதாகவும் தேவப் பெருமாள் ஸாதித்தார். இதனைத் தொடர்ந்து நம்பி, திருவரங்கம் நோக்கி பயணித்து காட்டழகிய சிங்கர் ஸன்னிதிக்கு வந்து சேர அங்கே பிள்ளை லோகாசாரியர் கோஷ்டியை கண்டார் . ஒரு தூணிற்குப் பின்னே நின்று , பிள்ளை லோகாசாரியரின் உபதேஸங்களைக் கேட்ட நம்பி, அவை தேவாதிராஜன் தமக்கு அளித்தவையாகவும் அவற்றின் தொடர்ச்சியாகவும் இருப்பதை கண்டு வியப்புற்று, மறைந்திருந்த இடத்திலிருந்தும் வெளியே வந்து பிள்ளை லோகாசாரியரின் திருவடிகளில் தெண்டனிட்டு “அவரோ நீர்” என்று கேட்க, பிள்ளை லோகாசாரியர் “ஆவது எது ? ” (அதாவது, ஆமாம் இப்பொழுது அதற்கு செய்ய வேண்டியது என்ன ? ) என்று ஸாதித்தார். இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில் தேவாதிராஜனே அன்றி பிள்ளைலோகாசாரியர் வேறாரும் இல்லை என்பதாம்.

  • மாதம் - ஐப்பசி
  • திரு நக்ஷத்திரம் - திருவோணம்
  • அவதார ஸ்தலம் - திருவரங்கம்
  • ஆசார்யன் - வடக்குத் திருவீதிப் பிள்ளை
  • ஸிஷ்யர்கள் - கூரகுலோத்தம தாஸர், விளாஞ்சோலைப் பிள்ளை, திருவாய்மொழிப் பிள்ளை, மணப்பாக்கத்து நம்பி ,கோட்டூர் அண்ணர், திருப்புட்குழி ஜீயர், திருக்கண்ணங்குடி பிள்ளை, கொல்லி காவல தாஸர் மற்றும் பலர்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - ஜ்யோதிஷ்குடி (மதுரை அருகிலே)
  • அருளிச் செய்தவை - யாத்ருச்சிக படி, ஸ்ரிய:பதி படி, முமுக்ஷுப்படி, பரந்த படி, தனி ப்ரணவம், தனி த்வயம், தனி சரமம், அர்த்த பஞ்சகம், தத்வ த்ரயம், தத்வ ஸேகரம், ஸார ஸங்க்ரஹம், அர்ச்சிராதி, ப்ரமேய ஸேகரம், ஸம்ஸார ஸாம்ராஜ்யம், ப்ரபன்ன பரித்ராணம், நவரத்ன மாலை, நவ வித ஸம்பந்தம், ஸ்ரீ வசன பூஷணம் மற்றும் பல

-----
தனியன்
லோகாசார்யாய குரவே 
க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே|
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட 
ஜீவ ஜீவாதவே நம:||
-----
வாழி திருநாமம்
அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே|
ஐப்பசியில் திருவோணத்து அவதரித்தான் வாழியே|
முத்தி நெறி மறைத் தமிழால் மொழிந்து அருள்வோன் வாழியே|
மூதரிய மணவாளன் முன்பு உதித்தான் வாழியே|
நித்தியம் நம்பிள்ளை பதம் நெஞ்சில் வைப்போன் வாழியே|
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே|
உத்தமமாம் முடும்பை நகர் உதித்த வள்ளல் வாழியே|
உலகாரியன் பதங்கள் ஊழி தொறும் வாழியே||

பிள்ளை லோகாசாரியார் மற்றும் அவர் கோஷ்டிக்கு 
மங்களாசாசனம்
வாழி உலகாசிரியன் வாழி அவன் மன்னு குலம்|    
வாழி முடும்பை என்னும் மாநகரம்|
வாழி மனம் சூழ்ந்த பேரின்ப மால்மிகு நல்லார்| 
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

15. ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை
(க்ருஷ்ண பாதர்)


ஸ்ரீ க்ருஷ்ண பாதர் அவருடைய இயற்பெயர். ஶ்ரீரங்கத்தின் வடக்கு திருவீதியில் வாழ்ந்ததால் அப்பெயர் பெற்றார். அவரது மகன்கள் வைணவ ஆசாரியர்களான பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். இருவரும் வடக்கு திருவீதிப் பிள்ளையிடம் கல்வி கற்றனர்.

நம்பிள்ளையிடம் பெரியவாச்சான் பிள்ளையின் திருவாய்மொழி 240000 படி உரையைப் பாடம் கேட்டவற்றைத் தன் குறிப்போடு பட்டோலையில் எழுதி வைத்தார். ஒரு நாள் அதைப் பார்வையிட்ட நம்பிள்ளை அது பெரியவாச்சான் பிள்ளையின் உரையை விட சிறப்பாக இருந்ததைக் கண்டு தன்னிடம் அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தார். ஈயுண்ணி மாதவப் பெருமாள் அவற்றை நம்பிள்ளையிடமிருந்து பெற்று தன் சீடர்களுக்குக் கற்பித்தார். மாதவப் பெருமாளின் குருபரம்பரையில் வந்த மணவாள மாமுனிகள் 36000 படி ஈட்டை ஶ்ரீரங்கம் பெரிய மண்டபத்தில் நம்பெருமாளின் முன் காலக்ஷேபம் செய்தார்.

வடக்கு திருவீதைப் பிள்ளை திருவாய்மொழிக்கு எழுதிய உரை 360000 படி ஈடு என வழங்கப்பட்டது. ஈடு என்றால் மூல செய்யுளுக்கு இணையான என்று பொருள்படும். 

  • மாதம் - ஆனி
  • திரு நக்ஷத்திரம் - ஸ்வாதி
  • அவதார ஸ்தலம் - திருவரங்கம்
  • ஆசார்யன் - நம்பிள்ளை
  • ஸிஷ்யர்கள் - பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் மற்றும் பலர்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
  • அருளிச் செய்தவை - ஈடு 36000 படி

-----
தனியன்
1. ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே 
நமாமி ஸி²ரஸா ஸதா|
யத் ப்ரஸாதப் ப்ரபா வேந 
ஸர்வ ஸித்திர பூந்மம||

2. மிதுநே ஸ்வாதி ஸம்பூதம் 
கலிவைரி பதாஸ்² ரிதம்|
உதக் ப்ரதோளீ நிலயம் 
க்ருஷ்ண பாத மஹம் பஜே||
-----
வாழி திருநாமம்
ஆனி தனில் சோதி நன்னாள் அவதரித்தான் வாழியே|
ஆழ்வார்கள் கலைப் பொருளை ஆய்ந்து உரைப்போன் வாழியே|
தான் உகந்த நம்பிள்ளை தாள் தொழுவோன் வாழியே|
சடகோபன் தமிழ்க்கு ஈடு சாற்றினான் வாழியே|
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே|
நல்ல உலகாரியனை நமக்கு அளித்தான் வாழியே|
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே|
எங்கள் வடவீதிப்பிள்ளை இணை அடிகள் வாழியே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

14. ஸ்ரீ நம்பிள்ளை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ நம்பிள்ளை
(வாத்ஸ்ய வரதாசார்யர், கலிவைரி தாஸர்)


நம்பூர் என்ற கிராமத்தில் வரதராஜன் என்ற திருநாமத்தோடே திருவவதாரம் செய்த இவரே பிற்காலத்தில் நம்பிள்ளை என்று பிரஸித்தர் ஆனார் . இவர் திருக்கலிக்கன்றி தாஸர், கலிவைரி தாஸர் , லோகாசார்யர், சூக்தி மஹார்ணவர், ஜகதாசார்யர் மற்றும் உலகாசிரியர் என்ற திருநாமங்களாலும் போற்றி வணங்கப்படுகிறார்.

நம்பிள்ளை தனித்துவம் பொருந்திய பல ஆத்ம குணங்களோடு கூடியவராய் அளவிலடங்கா பெருமைகளுக்குறைவிடமாய் எழுந்தருளி இருந்தார். தமிழ் மற்றும் வடமொழிகளில் மிகவும் தேர்ந்தவராய் நம்பிள்ளை விளங்கினார். 

இவருக்கு சென்னை திருவல்லிக்கேணியில் "கோமுட்டி பங்களா" என்று பொதுவாக அழைக்கப்படும் ஸ்ரீ பண்டாரம் கமிட்டியின் முன்புறம் ஒரு சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. 

  • மாதம் - கார்த்திகை
  • திரு நக்ஷத்திரம் - க்ருத்திகை
  • அவதார ஸ்தலம் - நம்பூர்
  • ஆசார்யன் - நஞ்சீயர்
  • ஸிஷ்யர்கள் - வடக்குத் திருவீதிப் பிள்ளை , பெரியவாச்சான் பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர் , ஈயுண்ணி மாதவப் பெருமாள், நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்  மற்றும் பலர்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
  • அருளிச் செய்தவை - திருவாய்மொழி 36000 படி ஈடு வியாக்யானம், கண்ணிநுண் சிறுத்தாம்பு வியாக்யானம், திருவந்தாதி வ்யாக்யானங்கள், திருவிருத்தம் வியாக்யானம்

-----
தனியன்
1. வேதாந்த வேத்ய அம்ருத வாரி ராஸேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமர்க்யம்|
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலி வைரி தாஸம்||

2. வ்ருச்சிகே கிருத்திகா ஜாதம் 
கலி வரி குரும் பஜே|
வேதாந்தி முனி பாதாப்ஜ 
ஸ்ரீ தம் ஸூக்தி மஹார்ணவம்||
-----
வாழி திருநாமம்
1. தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே|
திருவரையில் பட்டாடை சேர் மருங்கும் வாழியே|
தாம மணி வட மார்வும் புரி நூலும் வாழியே|
தாமரைக் கை இணை அழகும் தடம் புயமும் வாழியே|
பாமருவும் தமிழ் வேதம் பயில் பவளம் வாழியே|
பாடியத்தின் பொருள் தன்னைப் பகர் நாவும் வாழியே|
நாமநுதல் மதி முகமும் திருமுடியும் வாழியே|
நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே||

2. காதலுடன் நஞ்சீயர் கழல் தொழுவோன் வாழியே|
கார்த்திகைக் கார்த்திகை உதித்த கலிகன்றி வாழியே|
போதமுடன் ஆழ்வார் சொல் பொருள் உரைப்போன் வாழியே|
பூதூரான் பாடியத்தைப் புகழும் அவன் வாழியே|
மாதகவால் எவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே|
மதிள் அரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியே|
நாதமுனி ஆளவந்தார் நலம் புகழ்வோன் வாழியே|
நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

13. ஸ்ரீ நஞ்சீயர்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ நஞ்சீயர் 
(வேதாந்தி)


இவருடைய பெற்றோர்கள் ஸ்ரீமாதவர் என்ற திருநாமத்தை இவருக்குச்  சூட்டினார்கள். சிறிய வயதில் மிகப் பிரபலமான அத்வைத பண்டிதராக ஆனார். இறுதியில் பட்டர் இவருக்கு நஞ்சீயர் என்ற திருநாமத்தைச் சூட்டினார். இவருக்கு நிகமாந்த யோகி மற்றும் வேதாந்தி என்ற திருநாமங்களும் உண்டு.

மாதவாசார்யர் மிகப் பெரிய அத்வைத பண்டிதர். இவர் திருநாராயண புரத்தில் வாழ்ந்து வந்தார். எம்பெருமானார் இவரை திருத்திப்பணிகொண்டு நமது ஸம்பிரதாயத்திற்க்கு அழைத்து வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். எம்பெருமானார் மாதவாசார்யரை திருத்திப் பணிகொள்வதற்காக பட்டரை நியமித்தார். அத்வைதியாக இருந்த நஞ்சீயர் பராசர பட்டரால் வைணவ மரபுக்கு அழைத்து வரப்பட்டவர்.

பட்டர் ஒரு நாள் பகலெல்லாம் வழியில் நடந்து, களைப்பால் நஞ்சீயருடைய மடியில் தலையைச் சாய்த்து உறங்கினார். நஞ்சீயரும் இரவு முழுவதும் அசையாமல் இருந்தார். இதிலிருந்து அவருடைய குருபக்தியை நாம் அறிய முடிகிறது. நஞ்சீயர் இந்த பூவுலகத்திலே 100 ஆண்டு காலம் வாழ்ந்து பரமபதத்தை அடைந்தார்.

  • மாதம் - பங்குனி
  • திரு நக்ஷத்திரம் - உத்திரம்
  • அவதார ஸ்தலம் - திருநாராயண புரம்
  • ஆசார்யன் - பராசர பட்டர்
  • ஸிஷ்யர்கள் - நம்பிள்ளை, ஸ்ரீ ஸேனாதிபதி ஜீயர் மற்றும் பலர்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
  • அருளிச் செய்தவை - திருவாய்மொழி 9000 படி வ்யாக்யானம், கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானம், திருப்பாவை வ்யாக்யானம்,  திருவந்தாதிகளுக்கு வ்யாக்யானம், சரணாகதி கத்ய வ்யாக்யானம், திருப்பல்லாண்டு வ்யாக்யானம், நூற்றெட்டு (108) என்ற ரஹஸ்ய த்ரய விவரண க்ரந்தம் – இவற்றுள் பல தற்பொழுது இல்லை

-----
தனியன்
நமோ வேதாந்த வேத்யாய 
ஜகந் மங்கள ஹேதவே|
யஸ்ய வாகம் ருதஸார 
பூரிதம் புவந த்ரயம்||
-----
வாழி திருநாமம்
தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே|
சீமா தவன் என்னும் செல்வனார் வாழியே|
பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே|
பங்குனியில் உத்தர நாள் பார் உதித்தான் வாழியே|
ஒண்டொடியாள் கலவி தன்னை ஒழித்திட்டான் வாழியே|
ஒன்பதினாயிரப் பொருளை ஓதும் அவன் வாழியே|
எண் திசையும் சீர் பட்டர் இணை அடியோன் வாழியே|
எழில் பெருகும் நஞ்சீயர் இனிது ஊழி வாழியே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

12. ஸ்ரீ பராஸர பட்டர்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ பரார பட்டர்
(கூரத்தாழ்வானின் திருக்குமாரர்)


பன்னிரண்டாவது நூற்றாண்டின் முன்பாதியில் ஸ்ரீராமாநுசரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் காலத்திலேயே வைணவ ஆச்சாரியாராக ஆக்கப்பட்டவர் பராஸர பட்டர் என்ற சிறந்த வைணவர். 

எம்பெருமானார் ஆழ்வானை, பராஸர பட்டரை பெரிய பெருமாளின் ஸ்வீகார புத்திரராய்த் தரும்படி நியமிக்க, ஆழ்வானும் அவ்வண்ணமே செய்தார். ஸ்ரீரங்கநாச்சியார் தானே பட்டரைத் தமது ஸந்நிதியில் வைத்துப் பார்த்துக் கொண்டார். ஒரு முறை , பால ப்ராயத்திலே பட்டர் பெரிய பெருமாளை மங்களாஸாஸனம் செய்து வருகையில், எம்பெருமானார் அநந்தாழ்வான் உள்ளிட்ட ஸ்ரீவைஷ்ணவர்களிடம் பட்டரைத் தம்மைப் போலவே கொள்ளும் படிக் கூறினார். பட்டர்  தமது சிறு பிராயம் முதலாகவே மிகவும் விலக்ஷணராய்த் திகழ்ந்தார். 

நான்கு வயது சிறுவனாக இருக்கும் போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார் பராஸரர். ஸர்வக்ஞ பட்டர் என்ற முதிர்ந்த வைணவப் பெரியாரொருவர் பல்லக்கில் ஊர்வலமாகப் போய்க் கொண்டிருந்தார். கூட வந்தவர்கள் அவருடைய புலமையையும் எல்லாமறிந்த வல்லமையையும் புகழ்ந்து பேசிக் கொண்டே வந்தனர். இதையெல்லாம் பார்த்தும் கேட்டும் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பராஸரர் கையில் ஒரு பிடி மணலை எடுத்தான். பல்லக்கில் இருந்த பெரியார் முன் சென்று 'உமக்கு எல்லாம் தெரியுமாமே, இந்தப் பிடி மணலில் எவ்வளவு மண் இருக்கிறது என்று சொல்ல முடியுமா?' என்று கேட்டார். ஸர்வக்ஞப் பட்டர் திகைத்துப் போனார். அவரிடம் பதிலில்லை என்பதை உணர்ந்த பட்டர் 'கைப்பிடி மண்' என்று தன் கேள்விக்கான பதிலை உரைத்தார். தன் தவற்றை உணர்ந்த ஸர்வக்ஞ பட்டர் அந்த சிறுவனைக் கட்டித் தழுவி மனமார ஆசீர்வதித்து விட்டுச் சென்றார்.

  • மாதம் - வைகாசி
  • திரு நக்ஷத்திரம் - அநுஷம்
  • அவதார ஸ்தலம் - திருவரங்கம்
  • ஆசார்யன் - எம்பார்
  • ஸிஷ்யர்கள் - நஞ்சீயர்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
  • அருளிச் செய்தவைஅஷ்ட ஸ்லோகி, ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், ஸ்ரீ குணரத்ன கோஸம், பகவத் குண தர்ப்பணம், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் வியாக்யானம், ஸ்ரீ ரங்கராஜ ஸ்தோத்ரம், பொது தனியன் - ஆழ்வார்கள் உடையவர், திருப்பாவை தனியன், திருவாய்மொழி தனியன்கள், ரங்கநாத அஷ்டகம், த்வரத்னாகரம், நித்ய கிரந்தம், லக்ஷ்மீ கல்யாணம், அத்யாத்ம கண்ட த்வய விவரணம்,  பகவத் குணா தர்பணம், மைவண்ண நருங்குஞ்சி பாசுரம் வியாக்யானம், கைசிக புராண வியாக்யானம், நம்பெருமாள் மீது பல திருமஞ்சன கட்டியம், அர்ச்சாவதார அனுபவம்

-----
தனியன்
ஸ்ரீ பராஸ²ர பட்டார்ய: 
ஸ்ரீரங்கேஸ² புரோஹித:|
ஸ்ரீவத் ஸாங்க ஸுத: ஸ்ரீ
மான் ஸ்²ரேயஸே மேஸ்து பூயஸே||
-----
வாழி திருநாமம்
தென் அரங்கர் மைந்தன் எனச் சிறக்க வந்தோன் வாழியே|
திருநெடுந்தாண்டகப் பொருளைச் செப்பும் அவன் வாழியே|
அன்ன வயல் பூதூரன் அடி பணிந்தோன் வாழியே|
அந வரதம் எம்பாருக்கு ஆட்செய்வோன் வாழியே|
மன்னு திருக்கூரனார் வளம் உரைப்போன் வாழியே|
வைகாசி அனுடத்தில் வந்து உதித்தோன் வாழியே|
பன்னு கலை நால் வேதப் பயன் தெரிந்தோன் வாழியே|
பராசரனாம் சீர் பட்டர் பாருலகில் வாழியே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

11. ஸ்ரீ எம்பார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ எம்பார்
(கோவிந்தப் பெருமாள் - எம்பெருமானாரின் இளைய சகோதரர்)


மதுரமங்கலத்தில் கமலநயன பட்டர் ஸ்ரீதேவி அம்மாள் தம்பதியினருக்கு திருக்குமாரராய் திருவவதாரம் செய்தவர் கோவிந்தப்பெருமாள். இவர் கோவிந்த  தாஸர், கோவிந்த  பட்டர்  மற்றும் ராமானுஜ பதச்சாயையார் என்றும் அழைக்கப் படுகிறார். நாளடைவில் இவர் எம்பார் என்று மிகவும் பிரசித்தமாய் அறியப்பட்டார். இவர் எம்பெருமானாரின் சிரத்தியார் (சிறிய தாயார்) திருமகனாவார். இவர்  யாதவப்ரகாசரின் வாரணாஸி யாத்திரையில் இளையாழ்வாரின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து அவரைக் காப்பதில் முக்கியமான பங்கு வகித்தார். எம்பெருமானாரைக் காப்பாற்றிய பின்பு, இவர் தம் குருவான யாதவப்ரகாஶருடன் வாரணாசி யாத்திரையைத் தொடர்ந்தார் . இந்த யாத்திரையில் இவர் பரமசிவனாரின் பக்தராகி காளஹஸ்தியோடே இருந்து விட்டார்.

இவரைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளம் கொண்ட எம்பெருமானார், அப்பணியை செவ்வனே செய்து முடிக்கப் பெரிய திருமலை நம்பிகளை ப்ரார்த்தித்தார். பெரிய திருமலை நம்பிகளும் உடனே உகந்து , காளஹஸ்திக்குச் சென்று, கோவிந்தப்பெருமாள் நந்தவனத்திற்குப் பூக்களைப் பறிக்க வரும் வேளையிலே , “தேவன் எம்பெருமானுக்கல்லால் பூவும் பூசனையும் தகுமே ” (அதாவது ஸ்ரீமன் நாராயணனே பூக்களைக்கொண்டு ஆராதிக்கத்தக்கவன் தவிர வேறாரும் அல்லன்) என்னும் திருவாய்மொழிப் பாசுரத்தை அனுசந்தித்தார் . இதை கேட்ட கணமே, கோவிந்தப்பெருமாள்  தமது தவறை உணர்ந்து , பரமசிவனாரிடத்தே தாம் வைத்த பற்றையும் துறந்து, பெரிய திருமலை நம்பிகளை சரண் புகுந்தார். பெரிய திருமலை நம்பிகள் தானும் இவருக்கு பஞ்சசம்ஸ்காரங்களைச் செய்து வைத்து இவருக்கு அர்த்தங்களை உபதேசித்தார். 

ஸ்ரீ ராமாநுஜர் திருநாடு அலங்கரித்த பொழுது, அவர் பிரிவை தாங்காமல் முடியாமல் தானும் உடன் உயிர் நீத்தார்.

  • மாதம் - தை
  • திரு நக்ஷத்திரம் - புனர்பூசம்
  • அவதார ஸ்தலம் - மதுர மங்கலம்
  • ஆசார்யன் - பெரிய திருமலை நம்பிகள்
  • ஸிஷ்யர்கள் - பராஸர பட்டர் , வேத வ்யாஸ  பட்டர்
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
  • அருளிச் செய்தவை - விஞ்ஞான ஸ்துதி, எம்பெருமானார் வடிவழகு, பெரிய திருமொழித் தனியன்கள்

-----
தனியன்
1. ராமாநுஜ பதச் சாயா 
கோவிந்தாஹ் வந பாயிநீ|
ததா யத்த ஸ்வரூபா ஸா 
ஜீயாந் மத் விஸ்²ரமஸ் தலீ||

2. புஷ்யே புநர்வ ஸூதிதே 
ஜாதம் கோவிந்த தேசிகம்|
ராமானுஜ பதாம் போஜ 
த்வந்த்வ ப்ரவண மானஸம்||
-----
வாழி திருநாமம்
பூவளரும் திருமகளார் பொலிவு உற்றோன் வாழியே|
பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருள் உரைப்போன் வாழியே|
மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே|
மகரத்தில் புனர்பூசம் வந்து உதித்தோன் வாழியே|
தேவும் எப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே|
திருமலை நம்பிக்கு அடிமை செய்யும் அவன் வாழியே|
பாவையர்கள் கலவி இருள் பகல் என்றான் வாழியே|
பட்டர் தொழும் எம்பார் பொற்பதம் இரண்டும் வாழியே||

திருநாள் பாட்டு
மட்டெழு பூம்பொழில் மழலை நன்னகர் வாழ் வளம் ஓங்கிய நாள்| 
வட்ட மணிக்குல மாதவர் மனம் இசை வாழ்ச்சி வளர்ந்திடு நாள்| 
கட்டம் அகன்றொரு கால் இளையாழ்வார் கச்சி பொருந்திய நாள்| 
கட்டவிழும்படி காசினியோர்க்கு ஒரு கற்பகம் ஆகிய நாள்| 
பட்டர் இடர் கெட பாஷ்யக்காரர் தம் பார்வை பலித்திடு நாள்| 
பட்ட பராசரர் பாதுகை ஆக்கிய பரமன் உதித்திடு நாள்| 
பொட்டணி மாதர் தம் பொய்க் கலவிக்கு இருள் போந்தணியா| 
எம்பார் போந்து பிறந்திடும் தை அதனில் புனர்பூசம் அதெனு நாளே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

10. ஸ்ரீ ராமாநுஜர்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ ராமாநுஜர் 
(எம்பெருமானார்)


இவரது தந்தை பெயர் ஆருலகேசவ சோமயாகி, தாய் காந்திமதி அம்மையார். தனது தந்தையிடமே வேதங்களைக் கற்றுத் தேர்ந்தார். பின்னர் காஞ்சிபுரத்திற்கு அருகே யாதவப் பிரகாசரிடம் அத்வைத வேதாந்தம் பயின்றார், ஆனால் குருவின் சில கருத்துக்களுடன் உடன்படவில்லை.

ஆழ்வார் பாடல்களை கோயில்களில் இசையுடன் பாட வழிவகை செய்தார். தமிழ் மறைக்கு அவர் அளித்த முக்கியத்துவம் காரணமாக, தமிழ் வேதத்தின் "செவிலித்தாய்" என்று அழைக்கப்படுகிறார்.

விசிஷ்டாத்வைத தத்துவத்தை நிலைநாட்டினார். கடவுளின் பார்வையில் அனைத்து உயிரினங்களும் சமம் என்றும், அன்புடனும் அர்ப்பணிப்புடனும் வழிபடுவதன் மூலம் முக்தி கிடைக்கும் என்றும் போதித்தார்.  பிரம்ம சூத்திரத்திற்கு ஶ்ரீ பாஷ்யம் என்ற உரையெழுதினார். வைணவம் மக்கள் இயக்கமாக மலர்வதற்குக் காரணமாக இருந்தார்.

சமூகத்தில் சமத்துவம் மற்றும் ஜனநாயகம் போன்ற கொள்கைகளை வலியுறுத்தினார், இது அன்றைய காலத்திற்கு மிக முக்கியமானது. இவரது போதனைகள் இன்றுவரை செல்வாக்கு செலுத்தி வருகின்றன, மேலும் இவர் இந்தியாவிலும் உலகெங்கிலும் பலரை பாதித்துள்ளார்.

ராமானுஜர் தம் மனைவியிடம் கண்ட மூன்று குற்றங்களால் அவரை விலக்கித் துறவியானார். கூரத்தாழ்வார், முதலியாண்டான் முதலிய பலரும் சீடராயினர். பேரருளாளன் அருளிய ஆறு வார்த்தைகளின்படி பெரிய நம்பிகளிடம் (மதுராந்தகத்தில்) பஞ்ச சம்ஸ்காரங்களைப் பெற்றார். தம் அம்மான் பெரிய திருமலை நம்பிகளைக் கொண்டு கோவிந்தனைத் திருத்திப் பழையபடியே வைணவராக்கினார்.

  • மாதம் - சித்திரை
  • திரு நக்ஷத்திரம் - திருவாதிரை
  • அவதார ஸ்தலம் - ஸ்ரீ பெரும்பூதூர்
  • ஆசார்யன் - பெரிய நம்பி
  • ஸிஷ்யர்கள் - கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார், அருளாளப் பெருமாள் எம்பெருமானார், அனந்தாழ்வான், 74 ஸிம்ஹாஸநாதிபதிகள், 700 ஸந்யாசிகள், மற்றும் பல ஆயிரம் ஸிஷ்யர்கள் -12000 ஸ்ரீவைஷ்ணவர்கள்,  மற்றும் பல ஆயிரம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவருக்கு ஸிஷ்யர்களாக இருந்தார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
  • பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
  • அருளிச் செய்தவை - ஸ்ரீ பாஷ்யம், கீதா பாஷ்யம், வேதார்த்த ஸங்ரஹம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், ஸரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீ வைகுண்ட கத்யம், நித்ய க்ரந்தம், பெருமாள் திருமொழி தனியன், பெரிய திருமொழித் தனியன்கள், திருவெழுகூற்றிருக்கை தனியன்கள், பெரிய திருவந்தாதி தனியன்

-----
தனியன்
1. யோ நித்யம் அச்யுத பதா³ம் பு³ஜ யுக்³ம ருக்ம
வ்யாமோ ஹதஸ் ததி³ தராணி த்ருணாய மேநே|
அஸ்மத்³ கு³ரோர் ப⁴க³வ தோஸ்ய த³யைக ஸிந்தோ⁴:
ராமாநுஜஸ்ய சரணௌ ஸ²ரணம் ப்ரபத்³யே||

2. மேஷார்த்தா சம்பவம் விஷ்ணோர் 
தர்சன ஸ்தாபன உத் ஸூகம்|
துண்டீர மண்டலே சேஷ மூர்த்திம் 
ராமானுஜம் பஜே||
-----
வாழி திருநாமம்
1. அத்திகிரி அருளாளர் அடி பணிந்தோன் வாழியே|
அருட்கச்சி நம்பி உரை ஆறு பெற்றோன் வாழியே|
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே|
பதின்மர் கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே|
சுத்த மகிழ் மாறன் அடி தொழுது உய்ந்தோன் வாழியே|
தொல் பெரிய நம்பிகள் சரண் தோன்றினான் வாழியே|
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே|
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே||

2. எண் திசை எண் இளையாழ்வார் எதிராசன் வாழியே|
எழுபத்து நால்வருக்கும் எண் நான்கு உரைத்தான் வாழியே|
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே|
பரகாலன் அடி இணையைப் பரவும் அவன் வாழியே|
தண் தமிழ் நூல் நம்மாழ்வார் சரண் ஆனான் வாழியே|
தாரணியும் விண் உலகும் தான் உடையோன் வாழியே|
தெண்டிரை சூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே|
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே|| 

மாமுநிகள் ஆர்த்தி ப்ரபந்தத்தில் அருளியவை
3. சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி|
திருவரையில் சாத்திய செந்துவர் ஆடை வாழி|
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி|
இலங்கிய முந்நூல் வாழி இணைத் தோள்கள் வாழி|
சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி|
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி|
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி|
இனிது இருப்போடு எழில் ஞான முத்திரை வாழியே||

4. அறு சமயச் செடி அதனை அடி அறுத்தான் வாழியே|
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத் துறந்தான் வாழியே|
செறுகலியைச் சிறிது மறத் தீர்த்து விட்டான் வாழியே|
தென் அரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே|
மறை அதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே|
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே|
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே|
அழகாரும் எதிராசர் அடி இணைகள் வாழியே||

5. சீராரும் பெரும்பூதூர் சிறக்க வந்தோன் வாழியே| 
சித்திரையில் ஆதிரை நாள் செகத்து உதித்தான் வாழியே| 
ஆராத அருளாளர் அருள் உடையோன் வாழியே| 
அருமறை சொல் பெரிய நம்பிகள் அடி பணிந்தான் வாழியே| 
ஏராரும் பாஷியத்தை ஈன்ற பிரான் வாழியே| 
எழுபத்து நால்வரையும் எமக்கு அளித்தான் வாழியே| 
ஓராத பரசமயக் குறும்பு அறுத்தான் வாழியே| 
ஒளி திகழும் எதிராசர் இணை அடிகள் வாழியே||

திருநாள் பாட்டு
1. சங்கர பாற்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடு நாள்|
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்|
மேதினி நம் சுமை ஆறும் எனத் துயர் விட்டு விளங்கிய நாள்|
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்|
மன்னிய தென் அரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்|
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே||

2. இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள்|
என்றையினும் இதனுக்கு ஏற்றமென்றான்| 
என்றவர்க்குச் சாற்றுகின்றேன் கேண்மின்| 
எதிராசர் தம் பிறப்பால் நாற்றிசையும் கொண்டாடும் நாள்||
 
3. ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்|
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர்|
ஏழ்பாரும் உய்ய எதிராசர் உதித்தருளும்| 
சித்திரையில் செய்ய திருவாதிரை||
 
4. எந்தை எதிராசர் இவ்வுலகில் எந்தமக்கா|
வந்துதித்த நாள் என்னும் வாசியினால்| 
இந்தத் திருவாதிரை தன்னின் சீர்மை தன்னை நெஞ்சே|
ஒருவாமல் எப்பொழுதும் ஓர்||

எம்பார் அருளிய எம்பெருமானார் வடிவழகு பாசுரம்
பற்பம் எனத் திகழ் பைங்கழல் உந்தண் பல்லவமே விரலும்|
பாவனம் ஆகிய பைந்துவர் ஆடையும் பதிந்த நன் மருங்கழகும்|
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்|
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா அழகும்|
கற்பகமே விழிக் கருணை பொழிந்திடும் கமலக் கண் அழகும்|
காரிசுதன் கழல் சூடிய முடியும் ககனச் சிகை முடியும்|
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத் துளதால்|
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை| 
எனக்கெதிரே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||